court

img

குடிமராமத்துப் பணி ரகசியம் அல்ல.... பகிரங்கமாக வெளியிட நீதிமன்றம் உத்தரவு....

மதுரை:
தமிழகத்தில் நடைபெறக்கூடிய குடிமராமத்துப் பணிகளை அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் விதமாக இணையதளத்தில் வெளியிடசென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்  அன்புநிதி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்காக தாக்கல் செய்த மனுவில், “ஆறு, ஏரி, குளங்களை ஆழப்படுத்துவது, கரைகளை பலப்படுத்துவது, தூர்வாருவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக குடிமராமத்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த 2019-ஆம் ஆண்டு 110- விதியின் கீழ் ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிப்பதற்காக 1,250 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதல்வர் அறிவித்திருந்தார். தற்போது போதுமான அளவு மழை பெய்திருப்பினும், தமிழகத்தின் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பவில்லை. இதற்கு வாய்க்கால்கள், வரத்துக் கால்வாய்கள், கண்மாய்கள் போன்றவை முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததே காரணம். தமிழகத்தின் அனைத்து நீர் நிலைப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படும் குடிமராமத்துப் பணிகளை, அவற்றின் சர்வே எண்,  ஒதுக்கப்படும் நிதி, பணிக்கான காரணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடவேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், ஆனந்திஅமர்வு முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “குடிமராமத்துப் பணி  ரகசியப் பணி அல்ல. ஒரு பணியில் வெளிப்படைத்தன்மை இருந்தால் அங்கு ஊழல்  குறைக்கப்படும். மனுதாரரின் கோரிக்கையை  குடிமராமத்துப் பணிகள் குறித்த விவரங்களை அனைத்து மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளம் தொடங்கி அதில், குடிமராமத்துப் பணி நடைபெறக்கூடிய இடம் பணியின் விவரம், கால அளவு,அதற்காக செலவழிக்கக் கூடிய தொகை, அதில்நடைபெற்றுள்ள பணிகள் உள்ளிட்ட முழு விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த உத்தரவை 12 வார காலத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும்என உத்தரவு பிறப்பித்தனர்.

;