court

img

5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பயன்படுத்திய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விடுவித்திடுக.... உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு....

புதுதில்லி:
தமிழகம் உட்பட 5 மாநில சட்ட மன்றத் தேர்தலில் பயன்படுத்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை விடுவிக்க கோரி உச்சநீதி மன்றத்தில் தேர்தல் ஆணையம் மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம்  ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. 5 மாநில தேர்தலில் 4.48 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3.96 லட்சம் விவி பேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.சட்ட விதிகளின்படி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு 45 நாட்களுக்குள் தேர்தல் வழக்குகளை தாக்கல் செய்யலாம். ஆனால் கொரோனா தொற்றால் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் வழக்குகளை பதிவு செய்வதற்கான அவகாசத்தை உச்ச நீதிமன்றம் காலவரையின்றி நீட்டித்தது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை விடுவிப்பது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகம் உட்பட 5 மாநில தேர்தல் தொடர்பான வழக்குகளை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் காலவரையின்றி நீட்டித்திருக்கிறது. இதனால்5 மாநில தேர்தலில் பயன்படுத்தப் பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் இயந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை.அடுத்த ஆண்டு உத்தரப்பிர தேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா பரவலை தடுக்ககூடுதல் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதன்படி 4.6 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களும் 4 லட்சம் விவி பேட் இயந்திரங்களும் தேவைப்படும். தேர்தல் ஆணையத்திடம் தற்போது 1.4 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஒரு லட்சம் விவி பேட் இயந்திரங்கள் மட்டுமே கையிருப்பில் உள்ளன.தேர்தலுக்கு முன்பாக இயந்திரங் களை பரிசோதிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். எனவே தமிழகம்உள்ளிட்ட மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவுஇயந்திரங்கள், விவி பேட் இயந்தி ரங்களை விடுவிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையத்தின் மனு மீது செப்டம்பர் 7 ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என்று தலைமை நீதிபதி அறிவித்தார்.

;