செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3,000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, ஆவணங்கள் செந்தில் பாலாஜிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டன. இதற்கிடையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி இருப்பார் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதனை ஏற்காத ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீட்டிப்பதற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் நீட்டிப்பது குறித்து முதல்வரே முடிவு செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ஆளுநர் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதிக்கப்பட்டது.
இதை அடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், ஒரு அமைச்சரை பதவியிலிருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை; செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது; அவர் இலாகா இல்லாத அமைச்சராக தொடர தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.