ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அதானி குழுமத்தின் மோசடி தொடர்பாக விசாரணை நடத்த செபிக்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ‘ஹிண்டன்பர்க் ரிசர்ச்’ (Hindenburg Research) நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், அதானி குழுமத்தின் கீழ் உள்ள நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வைக் காட்டி மிக அதிக அளவில் கடன் பெற்றதாகவும், பங்குச் சந்தை வர்த்தகத்தில் ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் செய்துள்ளதாகவும், அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டுமென எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதானி குழும முறைகேடு புகார் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மார்ச் 2-ஆம் தேதி வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இது குறித்து விசாரணை நடத்த செபிக்கு உத்தரவிட்டனர்.
மேலும் இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடத்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சாப்ரே தலைமையில் 6 சிறப்பு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இதனிடையே 6 மாதங்கள் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் செபி முறையிட்டது.
இந்த நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அதானி குழுமத்தின் மோசடி தொடர்பாக விசாரணை நடத்த செபிக்கு மேலும் 3 மாதங்கள் அவகாசம் அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று செபிக்கு உச்ச நீதிம்னரம் உத்தரவிட்டுள்ளது.