court

img

செக் மோசடி வழக்குகளை விரைந்து விசாரிக்க நடவடிக்கை.... புதிய விதிகளை அறிவித்தது உச்சநீதிமன்றம் ....

புதுதில்லி:
செக் மோசடி வழக்குகளை விரைந்து விசாரிக்க புதிய விதிகளை உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

செக் மோசடி வழக்குகள் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தாமாக முன்வந்துவழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.கடந்த மார்ச் 10 ஆம்  தேதி நடைபெற்ற விசாரணையில், செக் மோசடி போன்ற வழக்குகளை விரைவில் விசாரிக்க பரிந்துரைகளை வழங்க மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.சி.சவுகான் தலைமையில் குழுவை அமைக்கிறோம். நாடு முழுவதும் நிலுவையில் உள்ள செக் மோசடிவழக்குகளை விரைவில் விசாரிப்பதற்கான பரிந்துரைகளை இக்குழு 3 மாதத்துக்குள் அளிக்கும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.

நாடு முழுவதும் அனைத்து நீதிமன்றங்களிலும் மொத்தம் 35 லட்சம்செக் மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இந்த வழக்குகளை விரைவில் விசாரிக்க கூடுதல் நீதிமன்றங்களை  அமைக்க முடியுமா என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.இந்த நிலையில், இதுதொடர்பான வழக்கின் விசாரணை வெள்ளியன்று மீண்டும் நடைபெற்றது.  அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், செக் மோசடி வழக்குகளில் உடனடியாக விசாரணையைத் தொடங்காமல், குற்றம்சாட்டப்பட்டவருக்கு முதலில்சம்மன் அனுப்ப வேண்டும். சம்மனுக்கு கிடைக்கும் பதிலை வைத்து விசாரணையை தொடங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும்.  விசாரணை நீதிமன்றங்களுக்கு  நடைமுறை உத்தரவுகளை உயர்நீதிமன்றங்கள் பிறப்பிக்க வேண்டும்.

செக் மோசடி வழக்குகளில் குற்றம்சாட்டப்படும் நபர் நீதிமன்றத்தின் அதிகார எல்லைக்கு அப்பால் வசிக்கும்போது, போதுமான முகாந்திரங்கள் இருக்கும்பட்சத்தில் மட்டுமே வழக்கு விசாரணையை நடத்த வேண்டும்.செக் மோசடி வழக்குகளில் சாட்சியாக உள்ள புகார்தாரர் அளிக்கும் பிரமாண பத்திரத்தையே சாட்சியாக கொள்ள வேண்டும். புகார்தாரரை நீதிமன்றத்திற்கு  அழைக்கவேண்டிய அவசியமில்லை.ஓராண்டுக்குள் ஒரே பணப் பரிமாற்றம் தொடர்பாக ஒரே நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் செக்மோசடி வழக்குகள் அனைத்தையும் இணைத்து ஒரே வழக்காக விசாரிக்கும் வகையில் சட்டத்திருத்தம் இருத்தல் வேண்டும் என பரிந்துரைக்கிறோம்.செக் மோசடி வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக அளிக்கப்படும் ஒரு சம்மனை, அவர் தொடர்புடைய அனைத்து செக் மோசடி வழக்குகளுக்கும் சம்மனாக கருத வேண்டும் என தெரிவித்து விசாரணை நீதிமன்றங்களுக்கு நடைமுறை உத்தரவுகளை உயர்நீதிமன்றங்கள்  பிறப்பிக்க வேண்டும். இந்த விவகாரத்தை 8 வாரங்கள் கழித்து, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் பட்டியலிட வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;