குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள் உருவாக்கியதாகக் கூறி கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர் தீஸ்தா சிதல்வாட்டுக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
குஜராத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி மற்றும் உயரதிகாரிகள் பலர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த எஸ்ஐடி, மோடி உட்பட 64 பேருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி வழக்கை முடித்துக் கொண்டது. இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா ஜாப்ரி தொடர்ந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தக் கலவரத்தில் மிகப் பெரிய சதி உள்ளதாகவும், மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் ஜகியா ஜாப்ரி மற்றும் தீஸ்தாவும் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
கடந்த ஜூன் 24-ஆம், மோடி உள்ளிட்டோரை இந்த வழக்கிலிருந்து விடுவித்துத் தீர்ப்பு வழங்கியது உச்ச நீதிமன்றம். அதற்கு மறுநாளே (ஜூன் 25) அன்று குஜராத் வன்முறையில் மோடியை தொடர்புப்படுத்திப் பொய் ஆதாரங்கள் உருவாக்கியதாகக் கூறி சிறப்புப் புலனாய்வுக் குழு தீஸ்தா சிதல்வாட் கைது செய்தது. சஞ்சீவ் பாட், ஸ்ரீகுமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து ஜாமீன் கோரி தீஸ்தா மற்றும் ஸ்ரீகுமார் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டது. குஜராத் அரசு பதில் மனுத் தாக்கல் செய்த நிலையில், சமூக செயல்பாட்டாளர் தீஸ்தா சிதல்வாட்டுக்கு, உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.