அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படத்தின் பெயர் கனெக்ட். நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நாஃபீசா முதலானோர் நடித்துள்ள இந்தப் படம் கொரோனா காலகட்டத்தில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டதாம். கதைப்படி தன் மகளுக்குப் பிடிக்கிற பேயை நயன்தாரா விரட்டுகிறாராம். 99 நிமிடங்கள் ஓடுகிற இந்தப் படத்தில் ஒரு புதுமையும் உண்டாம். அது வேறொன்றுமில்லை... எல்லா சினிமாக்களின் நடுவேயும் விடப்படும் இடைவேளை என்பதே இந்தப் படத்தில் இல்லையாம். இதனால் கேண்டீன் வியாபாரம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்று கூறி திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்களாம். இடைவேளை இல்லாத படத்திற்கு அவர்களே இடைவேளை விட்டுக்கொள்ளப்போவதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு இடைவேளை கிடையாது என்பதைக் கேள்விப்படுகிற ரசிகர்கள் சிலர் வடிவேலு பாணியில் இதென்னப்பா புதுப் புரளியா இருக்கு என்று வியக்கிறார்களாம்.
இது ஒருபுறமிருக்க, இதன் நாயகி நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் (இப்படியொரு பெயரில் தயாரிப்பு நிறுவனமா?) சார்பில் தயாராகியிருக்கும் இந்த கனெக்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நயன் பங்கேற்கவில்லை. படத்தின் விளம்பர நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாது என்று சொல்லித்தான் கதையையே கேட்க சம்மதிப்பாராம். இது ஏன் என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்ன பதில் இதுதான்: தான் நடிக்கத் தொடங்கிய காலத்தில் பெண்ணுக்கு முக்கியத்துவமில்லாத படங்கள்தான் வந்துகொண்டிருந்தன. அதனால் பெண் கலைஞர்களை ஏதோவொரு மூலையில் ஓரமாகத்தான் நிற்க வைப்பார்கள். நாயகிகளுக்குப் பெரியளவு மதிப்பு இருக்காது. அதனால்தான் அப்படியான விழாக்களுக்குப் போவதைத் தவிர்க்கத் தொடங்கினேன். இப்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அதிகமாகி இருக்கின்றன. அப்படியான படங்களில்தான் நானும் நடிக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் நயன்தாரா. நியாயம்தானே?