அண்மையில், சோனி லைவ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகி, பரவலான பாராட்டுகளை பெற்ற ‘விட்னஸ்’ திரைப்படத்தை நானும் பார்த்தேன். இந்தப் படத்தில் அற்புதமான நடிகர்கள் நடித்துள்ளார்கள். இருப்பினும், கதையையே நாயகராக கொண்டு, கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்திருப்பதுதான் இயக்குநரின் வெற்றி என்று சொல்ல வேண்டும். விடுதலை பவளவிழா கொண்டாடிய இந்தியாவில், இன்றும் தொடரக்கூடிய அவலமாக, மலக்குழி மரணங்கள் உள்ளன. சட்டப்படியாக தடை செய்துவிட்டோம். உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் ஏராளமான தீர்ப்புகள் வந்துள்ளன. ஆனாலும் இந்தக் கொடுமைக்கு இதுவரை முடிவு காணப்படவில்லை. சமூகத்திலும் போதுமான எதிர்ப்புணர்வோ, விழிப்புணர்வோ உருவாகிடவில்லை. சினிமா என்ற வலிமையான ஆயுதத்தை பயன்படுத்தி, சமூக அவலத்தின் மீது ஒரு சம்மட்டி அடியை கொடுக்க வேண்டும் என்று இயக்குநர் முயற்சி செய்திருக்கிறார். மிகச் சரியான புரிதலோடு அந்த பிரச்சனையை கையாண்டிருக்கும் பொறுப்புணர்வு வெளிப்படுகிறது.
சென்னை மாநகரில் நாம் சந்திக்கும் ஏராளமான துப்புரவுத் தொழிலாளர்களில் ஒருவராக இந்திராணி (ரோகிணி) வாழ்ந்து காட்டியுள்ளார். அவருடைய மகனாக தமிழரசனும், கட்டுமான பொறியாளராக நடிகை ஷ்ரத்தாவும், சண்முகராஜன் (வழக்கறிஞர்), பரிசல் செந்தில்நாதன், ஜி.செல்வா என அனைவருமே சிறப்பாக தங்களுக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நடிப்பிலும், சமூக அக்கறை கொண்ட செயல்பாடுகளிலும் தனக்கென்று முத்திரை பதித்த திருமிகு ரோகிணி, இந்தப் படத்தை தனது தனித்திறன் மிகுந்த பங்களிப்பின் வழியாக மெருகேற்றியுள்ளார் என்பதை சுட்டிக்காட்டிச் சொல்ல வேண்டும். அடுக்குமாடி குடியிருப்பில் வாழும் மக்கள், தங்களுடைய வீட்டில் ஏற்பட்ட மலக்குழி அடைப்பை நீக்குவதற்காக வந்து உயிர் இழக்க நேர்ந்த தொழிலாளியை குறித்து காட்டும் எதிர்வினை மனதை உறுத்துகிறது. சட்டத்தை மீறிய ஒரு குற்றச் சம்பவத்தில் பங்குதாரராக இருக்கிறோம் என்ற குற்ற உணர்வு கொஞ்சமும் இல்லாமல், சாதி ஒடுக்குமுறையும், வர்க்கச் சுரண்டலும் மிக இயல்பாக ஏற்றுக்கொண்ட மனநிலையில் இருப்பது - சமூகத்தின் மனசாட்சிக்கு முன் வைக்கப்பட்ட கேள்வியாகும். மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது தாய் போராடுவதும், அவருக்கு ஆதரவாக தொழிற்சங்கம் உதவிக்கரம் நீட்டுவதும், நீதி கேட்டு நீதிமன்றத்திற்கு செல்வதும், நீதிக்காக வழக்கறிஞர் வாதிடுவதும், இறுதியாக இவ்வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு - இதுதான் படத்தின் போக்கு. நீதியை மறுக்கிறது ஆளும் வர்க்கம். காவல்துறை, அரசு நிர்வாகத்துறை என அனைத்தும், போராடும்
இந்திராணியை பழிவாங்க முயற்சிக்கிறது. பாதிப்பை ஏற்படுத்திய அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து, ஒரு பொறியாளர் பாதிக்கப்பட்ட இந்திராணிக்கு உதவியாக நிற்கிறார். நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையில் அதிகார வர்க்கம் மலக்குழி மரணத்திற்கு காரணம் மலக்குழியில் மரணமானவர்களே என சாட்சியம் அளிப்பது அரசும், அதிகார வர்க்கமும், காண்ட்ராக்டர்களும் இன்னமும் மலக்குழி மரணத்திற்கு முடிவு கட்டவோ, மனிதர்களுக்கு பதிலாக இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியோ சிந்திக்கவில்லை என்பது தெளிவாகிறது. மார்க்சிய மொழியில் சொல்வதென்றால் உழைக்கும் வர்க்கப் பார்வையில் திரைக்கதையை இயக்குநர் வடிவமைத்துள்ளார். நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின் வழியாகவும், படத்தின் ஒவ்வொரு காட்சிகளின் வழியாகவும் இயக்குநர் நடத்துகிற விசாரணைக்கு, பார்வையாளர்கள் சாட்சியாக அமர்ந்திருக்கிறோம். இறுதியில் தீர்ப்பை ஒவ்வொருவர் மனங்களிலும் வலிமையாக எழுதக்கூடிய விதத்தில் படத்தின் இறுதிக் காட்சி உள்ளது. நிச்சயம் ஒவ்வொருவரும் அந்த உச்சகட்டக் காட்சியை பார்த்து உணர வேண்டும். இப்படத்தில் ஈடுபட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும், தயாரிப்புக்கு உதவிய அனைவரும் மெச்சத்தக்க பங்களிப்பை செய்துள்ளார்கள். இதுபோன்ற படங்களை ஆதரிப்பது நமது கடமை.