cinema

img

சந்திரலேகா 75 இந்தியத் திரைப்பட வரலாற்றில் பிரம்மாண்ட சினிமாவுக்கு அச்சாரமிட்ட படம்...

இந்தியத் திரைப்பட வரலாற்றில் அநேகமாக அதுதான் முதல் பிரம்மாண்ட சினிமா. பிரம்மாண்ட அரண்மனை, அச்சமூட்டும் அகழி, அரண்மனைக்குள் நுழைய இழுவைப் பாலம் என்று வியக்க வைக்கும் அரங்கமைப்புகள். அவை மட்டுமா? மனிதக்கூட்டம், குதிரைகள் என்று படம் பார்ப்போரை அசத்திப்போடும் விதமாய்க் காட்சிகள். அதற்குமுன் சினிமாவில்  எப்போதும் கண்டிராத வகையில் பிரம்மாண்ட நடனம். அதுதான் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனர் எஸ்.எஸ். வாசன் உருவாக்கிய சந்திரலேகா திரைப்படம். வாசனுக்கு அதுவொரு கனவுத் திட்டம்.  1948 ஆம் ஆண்டு வெளிவந்த சந்திரலேகாவுக்கு 1944 ஆம் ஆண்டிலேயே முதல் அறிவிப்பை வெளியிட்டார் வாசன். அந்த ஆண்டில் வெளிவந்த தாசி அபரஞ்சி படத்தின் பாட்டுப் புத்தகத்தின் பின்அட்டையில் சந்திரலேகா படம் குறித்து வாசன் விளம்பரம் செய்திருந்தார். அத்துடன் ஜெமினியின் ஓளவையார் பட விளம்பரத்தையும் அதில் வெளியிட்டிருந்தார் வாசன். ஆனால், ஓளவையார் 1953 ஆம் ஆண்டில்தான் வெளிவந்தது. 

அந்த சந்திரலேகா விளம்பரத்தில் நாயகியாகக் காட்சி தந்தவர் கே.எல்.வி. வசந்தா. ஆனால், உண்மையில் அந்தப் படத்தின் நாயகியாக நடித்தவர் டி.ஆர்.ராஜகுமாரி. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தயாரிப்பில் இருந்தது இந்தப் படம். அத்தனை நிதானத்தையும் உழைப்பையும் கோரியிருந்தது சந்திரலேகா. சந்திரலேகாவின் வியக்கவைக்கும் பிரம்மாண்டத்திற்கு கலை இயக்குநர் ஏ.கே.சேகரின் பங்களிப்பு முக்கிய காரணமாக அமைந்தது. ரசிகர்களை ஈர்த்த நடனத்திற்கு நடன இயக்குநர் ஜெயசங்கர் சிறப்பாகப் பங்களித்திருந்தார். இந்த இருவருடன் கலைஞர்கள் டி.ஆர்.ராஜகுமாரி, ரஞ்சன், எம்.கே. ராதா உள்ளிட்ட கலைஞர்களின் ஈடுபாடுமிக்க நடிப்பும் இணைந்துகொண்டது. விக்ரமாதித்தியன் கதைக் களத்திலிருந்து ஜெமினியின் ஆஸ்தான திரைக்கதாசிரியர்கள் உருவாக்கியதுதான் இந்த சந்திரலேகா. முதலில் வாசனுக்கு இதன் கதை பிடிக்கவே இல்லை. ஆனால், அந்தக் கதையில் நாயகியான சந்திரலேகா என்ற பெயர்மட்டும் வாசனுக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. திறமையும் உறுதியும் மிக்கவள் சந்திரலேகா. அவளைப் பற்றிய விளம்பரங்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தென்னிந்தியா முழுவதும் பத்திரிகைகளில் வண்ணங்களில் செய்திருந்தார் வாசன். அப்போது அவரிடத்தில் சந்திரலேகா என்ற பெயர் மட்டுமே இருந்தது. அதற்கானதொரு கதையோ, திரைக்கதையோ, வசனங்களோ அவரிடத்தில் இல்லை. ஆனாலும் அதுபற்றி வாசனுக்குக் கவலையுமில்லை. 

ஒரு காலகட்டத்தைப் பேசியபோதிலும் சந்திரலேகா வரலாற்று உண்மை எதையும் அடிப்படையாகக் கொண்ட படமல்ல. ராபர்ட் மெக்காயர் அல்லது இங்கிலாந்தின் பிரஞ்சுக் கொள்ளையனின் கதையை அடிப்படையாகக் கொண்டதுதான் இந்தப் படம். இந்த நாவலை எழுதியவர் ஜி.டபிள்யூ.எம். ரெனால்ட்ஸ். அதன் பெயர் ராபர்ட் மெக்காயர் (1848). இதனைத் தமிழுக்கு இப்படியொரு சினிமாவாக ஆக்கியவர் ஜெமினியின் ஊழியர், எழுத்தாளரும் உதவி இயக்குநருமான வேப்பத்தூர் கிட்டு. இந்தக் கிட்டுதான் வாசனுக்கு இந்தக் கதையைச் சொல்லி அதையொரு திரைப்படமாக்க அவரைத் தூண்டினார். இதுவொரு பெண் நடனக் கலைஞரின் கதையை அடிப்படையாகக் கொண்டதுதான் என்கிறார் பிரபல திரைப்பட வரலாற்றாசிரியர் பி.டி.கர்கா. 

மங்கம்மா சபதம் (1943) படத்தை இயக்கிய டி.ஜி.ராகவாச்சாரிதான் முதலில் இந்த சந்திரலேகாவை இயக்குவதாக இருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இதனை வாசனே இயக்கும்படி ஆனது. முதலில் இந்தப் படத்தில் சர்க்கஸ் காட்சிகள் இல்லை. படம் உருவாகிக்கொண்டிருந்தபோது இடையில் அந்தக் காட்சிகள் அதில் சேர்க்கப்பட்டன. அதனால் திரைக்கதையையும் அதற்கேற்ப மாற்றியமைத்தார்கள். பிரபல தென்னிந்திய சினிமா மேதை கே.ராம்நாத் அந்த சர்க்கஸ் காட்சிகளைப் படமாக்கினார். படத்தின் ஊழியர்களையும், அவர்களது குடும்பத்தினரையும், படப்பிடிப்பைப் பார்க்கவந்த வழிப்போக்கர்களையும்கூட சர்க்கஸ் காட்சியில் பார்வையாளர்களாக அமர வைத்தார்களாம்.  அந்த சமயத்தில்தான் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் சிறை சென்ற கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் 1947இல் விடுதலையாகி வெளியே வந்திருந்தார். வாசன் அவர்களைச் சந்தித்தார். தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். உடனே கலைவாணரையும் அவரது காதல் மனைவி மதுரத்தையும் சந்திரலேகாவில் நடிக்கும்படி கேட்டுக்கொண்டார். அவர்களும் அதற்குச் சம்மதித்தார்கள். மறுபடியும் அவர்களுக்காகக் கதையை மாற்றியமைத்தார் வாசன். அந்த நகைச்சுவை இணையர்களுக்காக புதிய காட்சிகள் உருவாக்கப்பட்டன. நகைச்சுவையில் கலைவாணர் புகுந்து விளையாடினார்.  டி.ஆர்.ராஜகுமாரியின் உன்னத நடிப்பால் படம் பேசப்பட்டது. ராஜகுமாரியின் திரை வாழ்க்கையில் சந்திரலேகா புதியதொரு அத்தியாயமாக முத்திரை பதித்தது. எம்.டி.பார்த்தசாரதியும் எஸ்.ராஜேஸ்வர ராவும் இணைந்து மேற்கொண்ட இசையமைப்பால் படத்தின் வெற்றி மேலும் உறுதியானது. பிரம்மாண்டமும், அழுத்தமான திரைக்கதையும், கூடவே அந்த டிரம் நடனமும் இப்படி எல்லாமுமாகச் சேர்ந்து மிகப்பெரிய வெற்றிக் கனியைப் பறிக்கும்படி சந்திரலேகாவுக்குத் துணை நின்றன.