மலையாள மொழியின் முதல் பேசும்படமான ‘பாலன்’ (1938) திரைப்படத்தை உருவாக்கியவர் எஸ்.நோட்டானி. அவர் இந்தியத் திரைப்படத்துறையில் முக்கியமானவர். அவர் இயக்கிய அந்த மலையாளத்தின் முதல் பேசும்படமே மற்ற மொழிகளின் படங்களைப்போல புராணப் படமாக அல்லாமல் ஒரு சமூகப் படமாக இருந்தது. அதன்பின் நோட்டானி 1940இல் மலையாளத்தில் ஞானாம்பிகா என்ற படத்தையும் இயக்கினார். ஆனால், தமிழ் சினிமாவில் அதிக கவனம் செலுத்திய அவர் 1949இல் இயக்கிய படம் ‘இன்பவல்லி’. இதில் டி.ஆர்.மகாலிங்கம், பி.எஸ்.சரோஜா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், பி.கே.சரஸ்வதி, எம்.ஆர்.சுவாமிநாதன், ஈ.ஆர்.சகாதேவன், கே.எஸ்.அங்கமுத்து, டி.வி.சேதுராமன், சி.வி.வேலப்பா, பி.சுந்தர் ராவ், ஏ.வி.ராம்குமார், ஆர்.விநாயகம், எஸ்.மேனகா, எம்.டி.கிருஷ்ணாபாய், எம்.லட்சுமணன், எம்.சரோஜா, சேதுலட்சுமி, கே.ஜெயலட்சுமி, பாக்யலட்சுமி, கே.எஸ்.ஹரிஹர ஐயர், ‘காகா’ ராதாகிருஷ்ணன், எம்.சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். இன்பவல்லியின் கதையை அந்த நாளில் பிரபலமாக இருந்த பி.ஏ.குமார் எழுதினார்.
தமிழின் முதல் திரைக்கதை எழுத்தாளர் என்று புகழ்பெற்ற இளங்கோவனும் அவருடன் இணைந்து எம்.லட்சுமணனும் அதன் வசனங்களை எழுதினார்கள். பாடல்களைப் பாபநாசம் ராஜகோபால ஐயரும் கே.பி.மீனாட்சி சுந்தரமும் எழுதியிருந்தார்கள். அந்த நாளின் பிரபல இசைமேதை ஜி.ராமநாதன் இசையமைத்தார். படத்தில் பல நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் நாட்டுப்புற மற்றும் பிற நடனக் காட்சிகள் இடம்பெற்றன. நட்டுவனார் வைத்தீஸ்வரன் கோயில் முத்துசுவாமி பிள்ளை சிறந்தமுறையில் அந்த நடனக் கலைஞர்களுக்குப் பயிற்சியளித்திருந்தார். பழங்கால ராஜ்ஜியமொன்றின் இளவரசியைக் காதலிக்கும் அந்நாட்டின் அமைச்சரின் மகனாக கதையின் நாயகன் டி.ஆர்.மகாலிங்கமும், அவரைக் காதலிக்கும் இளவரசியாக பி.எஸ்.சரோஜாவும் நடித்தார்கள். இன்பவல்லியின் கதை ஒரு நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதில் மனிதர்கள் கரடியாகவும், குரங்காகவும் மாறுவார்கள். ஒருவரின் கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் கதையில் வரும் மாயாஜாலக் கண்ணாடி காட்டும். இப்படியான நம்புவதற்கு இயலாத காட்சிகளோடான இந்த இன்பவல்லி கதை பொதுவான இந்தியத் தன்மையோடு இருந்தாலும் அது அரேபிய இரவுகளின் செவ்வியல் கதைகளின் சாயலையும் கொண்டிருந்தது என்று கூறப்பட்டது. சேலத்திலிருந்த ரத்னா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்ட இன்பவல்லியை ஷியாமளா பிக்சர்ஸ் தயாரித்தது.
இதனை இயக்கிய நோட்டானி எடிட்டிங் பணிகளையும் மேற்கொண்டார். கதைப்படி இளவரசியும் அமைச்சரின் மகனும் சிறுவயது முதலே ஒன்றாக வளர்கிறார்கள். நட்போடு பழகுகிறார்கள். அது அவர்களின் இளமையின்போது காதலாக மலர்கிறது. திருமணம் செய்துகொள்ள முடிவு செய்கிறபோது அரசிக்கு தனது மகளை ஒரு அரசனுக்கே திருமணம் செய்துவைக்க விருப்பம் இருப்பதை அறிந்து அவர்கள் இருவரும் வீட்டைவிட்டே ஓடிப்போகிறார்கள். அவர்களைத் தேடும் படலம் தொடங்குகிறது. இதனிடையே இளவரசியின்மீது ஒரு மந்திரவாதிக்கு விருப்பமேற்படுகிறது. அவன் அரசனைச் சிறைப்பிடிக்கிறான். கதாநாயகன் ஒரு கிளியாக மாற்றப்படுகிறான். அரண்மனைக்குப் பறந்துவரும் அந்தக் கிளியை நடனப்பெண் ஒருவர் காப்பாற்றுகிறார். இப்படியாகச் செல்லும் கதை பல்வேறு திருப்பங்களும் விறுவிறுப்புகளுமாகச் சென்று, காதலர்களின் இணைவில் சுபத்தில் முடிகிறது. படத்தில் மொத்தம் 20 பாடல்கள். அவற்றின் பெரும்பாலானவற்றை டி.ஆர்.மகாலிங்கம், பி.ஏ.பெரியநாயகி, டி.வி.ரத்னம், பி.லீலா பாடியிருந்தார்கள். கலைவாணர் நிகழ்த்திய பொய்க்கால் குதிரை ஆட்டம் ரசிகர்களைக் கவர்ந்தது. அத்துடன் டி.ஆர்.மகாலிங்கம் பாடிய பாடல்கள், நடனக் காட்சிகள் படத்தை நினைவில் நிறுத்தின.