cinema

img

மருதநாட்டு இளவரசி நடிக்கவந்த இடத்தில் பிறந்த நிஜமான காதல்...

எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் இந்த மருதநாட்டு இளவரசி (1950) ரசிகர்களின் மனங்களில் ஒரு தனி முத்திரை பதித்தது. இந்தப் படத்தில் அவரது இணை வி.என்.ஜானகி. இந்தப் படம் உருவாகிக்கொண்டிருந்தபோதுதான் அவர்களிடையே காதலானது தீவிரமடைந்தது. அந்தக் காதலானது அப்போதே திருமணத்தில் போய் நிறைவுற்றது. எனவே, இந்த மருதநாட்டு இளவரசி  திரைப்படப் பெயரும் ரசிகர்களுக்கு மறக்கமுடியாத அந்த மகிழ்ச்சித் தருணத்தை நினைவூட்டுகிற ஒரு அடையாளப் பெயராகவே ஆகிப்போனது. முன்னணி நடிகர்களாகத் திகழ்ந்த அவர்கள் விரைவிலேயே சிறந்த நட்சத்திரங்களானார்கள்.  1948இல் தான் முதன்முதலாக  எம்.ஜி.ராமச்சந்திரனும் வி.என்.ஜானகியும் சந்தித்துக்கொண்டார்கள். அந்த ஆண்டில்தான் லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் 30 மாதங்கள் சிறை சென்றிருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர் விடுதலையாகி வந்திருந்தார். அவர் மறுபிரவேசம் செய்த ராஜமுக்தி படத்தில் நடித்தபோது சந்தித்துக்கொண்ட  எம்.ஜி.ஆருக்கும் ஜானகிக்கும் இடையே காதல் மலர்ந்தது. ராஜமுக்தி படம் பூனாவில் படமாக்கப்பட்டது. அங்கேதான் அந்த அமரத்துவக் காதல் ஆரம்பமானது. காலங்கள் நகர்ந்து நகர்ந்து மலர்ந்த அந்தக் காதலும் வளர்ந்தது.  கோவை சென்டிரல் ஸ்டூடியோவை நீண்டகாலத்திற்குக் குத்தகைக்கு எடுத்திருந்த ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த மோகினி (1948)  படத்தில் இருவரையும் காதலர்களாக நடிக்க வைத்தார்கள். அந்த வாய்ப்பினால் மறுபடியும் அந்தக் காதல் ஜோடி ஒன்று சேர்ந்தது. மோகினியின் திரைக்கதையை ஏ.எஸ்.ஏ. சாமி எழுதிட, தெலுங்கு சினிமாவின் நகைச்சுவை நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான லங்கா சத்யம் அதனை இயக்கினார். படத்தின் பிரதான பாத்திரங்களாக டி.எஸ்.பாலையாவும் மாதுரிதேவியும்தான் இருந்தார்கள்.

எம்.ஜி.ஆர். - வி.என்.ஜானகி ஜோடியின் பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லை. ஆனாலும், அந்தப் படத்தில் கிடைத்த சந்தர்ப்பம் அவர்களுக்குக் காதலை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாகிப் போனது.  அதனைத் தொடர்ந்துதான் மருதநாட்டு இளவரசி வந்தது. அதன் கதையை எழுதியவர் கலைஞர் மு.கருணாநிதி. அவருக்குத் திரைக்கதாசிரியர் என்ற பெருமைமிக்க பெயரை முதன்முதலாகப் பெற்றுத்தந்த படமும் இந்த மருதநாட்டு இளவரசிதான். நவஜோதி ஸ்டூடியோவில் இந்தப் படம் படமாக்கப்பட்டது. நவஜோதி ஸ்டூடியோ மைசூரில் இருந்தது. ஜி.கோவிந்தன் அண்ட் கம்பெனி இந்தப் படத்தைத் தயாரித்தது. பாடல்களை சி.ஏ. லட்சுமணதாஸ் மற்றும் கே.பி.காமாட்சி ஆகியோர் எழுதியிருந்தார்கள். எம்.எஸ். ஞானமணி இசையமைத்தார். ஜி. துரை மாறுபட்டமுறையில் கேமராவைக் கையாண்டு ஒளிப்பதிவை மேற்கொண்டார். ஏ. காசிலிங்கம் படத்தொகுப்பை மேற்கொண்டார்.  ஒரு அரசன், அவனது இரண்டு மனைவிகள், கெட்ட எண்ணமுள்ள அமைச்சர் ஆகிய நான்கு நபர்களைச் சுற்றிப் பின்னப்பட்ட கதைதான் இந்த மருதநாட்டு இளவரசி. எம்.ஜி.ஆர். வி.என்.ஜானகி காதல் காட்சிகள் சிறப்பாக அமைந்திருந்தன. அருமையாகப் படமாக்கப்பட்டன. அவர்களோடு எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ். வீரப்பா, புளிமூட்டை ராமசாமி, சி.கே. நாகரத்தினம், சி.கே. சரஸ்வதி, கோட்டப்புலி ஜெயராமன், என்.எஸ். நாராயண பிள்ளை, எம்.எஸ். திருப்பதிசாமி, விஷ்ணு ராமசாமி, சி.எஸ்.டி. சிங், டி.எம். ராமசாமி பிள்ளை,  கே. மீனாட்சி ஆகியோரும் நடித்திருந்தார்கள்.  தொடர்ந்து ஜானகிக்கு வேலைக்காரி, தேவகி என்று பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. மிகப்பெரிய வெற்றியையும் வசூலையும் பெற்றுத்தந்த இந்த மருதநாட்டு இளவரசியால் எம்.ஜி.ஆர். - வி.என்.ஜானகி ஜோடி நட்சத்திர ஜோடியானது.