cinema

img

இது நிஜமா? நவீனத்திலும் நவீனம் என்று பெருமை கொண்ட படம்...

கமல்ஹாசன் - ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்து, வசூலில் மிகப்பெரிய சாதனை செய்த படம் கல்யாணராமன். கமலுக்கு அதில் இரட்டை வேடம். அந்த வேடங்களில் ஒன்று இறந்துபோனவரின் ஆவி. இது நாம் அறிந்ததுதானே, இப்போது என்ன என்கிறீர்களா? இன்றைக்கு 75 ஆண்டுகளுக்கு முன்னால், 1948 ஆண்டு தமிழில் வெளிவந்த படம்தான் “இது நிஜமா?”. வீ. சீதாராமன் எழுதிய கதைக்கு, வீணை எஸ்.பாலசந்தர் வசனமெழுத, அந்த நாளின் பிரபலமான ஒளிப்பதிவாளர் கிருஷ்ண கோபால் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய இந்தப் படம்தான் கல்யாணராமனுக்கு மூலம். இந்தப்படத்திற்கு வசனமெழுதிய எஸ்.பாலசந்தரே நாயகனாகவும் இரட்டை வேடமேற்று நடித்தார். அவரேதான் இந்தப் படத்தின் இசையமைப்பாளரும்கூட.  இன்றைக்கு மறந்துபோனாலும் அது வெளிவந்த சமயத்தில் அதன் நுட்பமான கதையமைப்பால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய படம் இது. திறமைவாய்ந்த எழுத்தாளர்,

நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், பின்னாளில் பிரபலமான வீணை இசைக் கலைஞர் என்று பன்முகங்களைக் கொண்ட இந்தப் படத்தின் நாயகன் வீணை எஸ்.பாலசந்தர் அப்போது பாலச்சந்திரன் என்றே அறியப்பட்டிருந்தார். வீணை மட்டுமல்ல. அவருக்கு பல்வேறு இசைக் கருவிகளையும் நன்றாக வாசிக்கத் தெரியும். இந்தப் படத்தில் அதற்கொரு வாய்ப்பு இருந்தது. படத்தின் நாயகன் இசைக் கருவிகளைப் பழுது பார்க்கும் கடை வைத்திருப்பார். இதைப் பயன்படுத்திக்கொண்ட பாலசந்தர் இந்தப் படத்தில் பல கருவிகளையும் மீட்டிக்கொண்டே பாடினார். பாலசந்தர் அப்போதே ஒரு புதுமையைச் செய்தார். அது என்ன தெரியுமா? ஒரு காட்சியில் உயிரோடிருக்கும் நாயகன் மாரு பல்க என்று தொடங்கும் ஸ்ரீரஞ்சனி ராகத்தில் அமைந்த தியாகராஜரின் தெலுங்குக் கிருதி ஒன்றைப் பாடுகிறார். லண்டனில் கொலையுண்டு, ஆவியாக அலையும் இன்னொரு நாயகன் அதற்கு எசப்பாட்டுப்பாடி  மறுமொழி உரைக்கிறார் அதே ராகத்தில் ரோமியோ பசனியோ தயிர் வடையோ... என்று. உடனே உயிருடன் இங்கிருக்கிற நாயகன் பழையபடி அந்தக் கிருதியை மீண்டும் எடுத்துவிடுவார். இப்படியொரு நகைச்சுவை கலந்த போட்டிப்பாடல் போன்ற காலத்தை மீறிய  இந்தப் புதுமை உத்தியை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். ஆனாலும், கர்நாடக இசைப் பிரியர்களுக்கு இது உவப்பாக இல்லையாம்.  படத்தொகுப்பை மேற்கொண்ட ஏ.எஸ். நாகராஜன் சிறிய பாத்திரமொன்றிலும் நடித்தார். பின்னாளில் அவர் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான இயக்குநராகி பாசவலை படத்தை இயக்கினார். வசனமெழுதிய வி.சீதாராமன் ஜெமினி ஸ்டூடியோவின் ஊழியராகி, சந்திரலேகாவிலும் நடித்தார். பின்னாளில் கே.ஜி. என்று அறியப்பட்ட இந்தப் படத்தின் இயக்குநர் கிருஷ்ண கோபால் மும்பை சென்று இந்திப் படவுலகில் ஈடுபட்டு  காமிராவுடன் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் வலம் வந்தார். இந்த கே.ஜி. தான் சென்னையில் ஜெமினி கலர் லேப்பை உருவாக்கியவர்.  வீணை பாலசந்தர் இரட்டை வேடங்களில் மிகவும் சிறப்பாக நடித்தார். அவருக்கு இணையாக நடித்த சரோஜினி ஒன்றிரண்டு படங்களோடு தனது சினிமா வாழ்க்கையை நிறைவு செய்துகொண்டார். அந்நாளில் லக்ஸ் சோப் விளம்பரத்தில் தோன்றிய மாடல் குமாரி என்.ராஜம் இந்தப் படத்தில் துணைப் பாத்திரமொன்றில் தோன்றி ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்தார்.

லண்டன் மாநகரத்தை அப்படியே தத்ரூபமாகக் காட்டும் விதத்தில் செட் போட்டிருந்தார்கள். குறிப்பாக வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தைக் கண்டு ரசிகர்கள் வியந்தார்கள். அந்தக் காட்சிகளை லண்டனிலேயே படமெடுத்திருப்பார்கள் போலும் என்றே பலரும் பேசிக்கொண்டார்கள். மும்பையின் புகழ்மிக்க ரஞ்சித் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்ட இந்த ‘இது நிஜமா?’வை தமிழ்நாடு டாக்கீஸ் எஸ்.சௌந்தரராஜன் தயாரித்தார். ‘நவீனத்திலும் நவீனம்’ - என்ற வாசகம் சுவரொட்டிகளில் படத்தைப் பற்றிப் பெருமையோடு சொல்லி ரசிகர்களை ஈர்த்தன. விமர்சகர்கள் பாராட்டி எழுதியிருந்தாலும் படம் அத்தனை பெரிய வெற்றியைப் பெறவில்லை என்பது சோகம்தான். அதுசரி, கல்யாணராமனுக்கு இந்த ‘இது நிஜமா’? முன்னோடி என்று பார்த்தோம். இந்தப் படத்துக்கும் ஒரு ஆங்கிலப்படம்தான் முன்னோடி தெரியுமா? புகழ்பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை நடிகர் டேனி காயே இரட்டை வேடங்களில் நடித்த ஒன்டர் மேன் (1945) என்ற ஆங்கிலப்படம். அது சென்னையிலும் வெற்றிகரமாக ஓடியது. அதன் அப்பட்டமான தழுவல்தான் இந்த இது நிஜமா? ஒன்டர் மேனை மறுபடியும் பிரேசிலில் டோனா ஃப்ளோரா அண்ட் ஹர் டூ ஹஸ்பன்ட்ஸ் (1976) என்ற பெயரில் எடுத்தார்கள். இந்தப் படம் சென்னை சர்வதேசப் படவிழாவில் திரையிடப்பட்டபோது இதில் ஆபாசக் காட்சிகள் இருக்கின்றன என்று பரபரப்பை உண்டுபண்ணியது.