cinema

img

உலகம் பார்த்த சினிமா - சர்வதேச திரைப்பட விழாவில் முதல்பரிசு பெற்ற குறும்படம்

சந்திப்பு சி.ஸ்ரீராமுலு

தென்னிந்தியாவின் மிகப்பெரிய திரைப்பட விழா என்றால் அது இன்னோவேட்டிவ் சர்வதேச திரைப்பட விழாவாகும். பெங்களூரைச் சேர்ந்த இன்னோவேட்டிவ் பிலிம் அகாடமி ஆண்டுதோறும் குறும்படப் போட்டிகளை நடத்தி வருகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்பிரமணிய பாரதியின் திரைக்கதை இயக்கி, ராமநாதபுரம் கலையரசன் கதை வசனம் எழுதிய ’பாஞ்சாலி’ குறும்படம் முதல் இடத்தைப் பிடித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது. பெங்களூருவில் நான்கு நாட்கள் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ள திரைப்பட திறமையாளர்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்றனர். தொழில்துறையைச் சார்ந்த வல்லுநர்கள் தலைமையில் ஒரு சுவாரஸ்யமான அமர்வு நடந்தது. இது ஆர்வமுள்ள திறமையாளர்களுக்கு கலையின் நுணுக்கங் களை கற்றுக்கொள்ளவும் தங்களது அறிவையும் திறமை யும் வெளிப்படுத்தவும் ஒரு தளமாக அமைந்திருக்கிறது. கலை மற்றும் திரைப்பட தயாரிப்பின் உணர்வை கொண்டாடும் வகையில் அக்டோபர் 6 முதல் 9 வரை இந்த  திரைப்பட விழா நடைபெற்றது. பிராந்திய, தேசிய, சர்வதேச திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்களுக்கு இடையே ஒரு பரஸ்பர ஒத்துழைப்புக் கான சர்வதேச தளத்தை அமைத்துக் கொடுப்பது இந்த விழாவின் நோக்கமாக அமைந்திருந்தது.

அதுமட்டுமல்ல, சர்வதேச ஒத்துழைப்பை சாத்திய மாக்குவதற்கும் திரைப்படத்தின் உள்ளடக்கத்தை கூட்டு தயாரிப்பில் பங்கேற்கும் நாடுகள், திரைப்படம், கலாச்சாரம் ஆகிய துறைகளில் தங்கள் சாதனைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. சிறப்புமிக்க இந்த திரைப்பட விழாவில் மதம், மொழி, இனங்களை கடந்து ரஷ்யா, கனடா, ஆஸ்திரியா, செக் குடியரசு, ஈரான், போலந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இஸ்ரேல், டொமினிகன் குடியரசு, மெக்சிகோ, துருக்கி, இந்தியா உள்ளிட்ட 40 நாடுகளைச் சேர்ந்த 30 மொழிகளில் இருந்து 150 திரைப்படங்கள் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டன. தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துடன் இணைந்து இன்னோவேட்டிவ் ஃபிலிம் அகாடமி (ஐஎப்ஏ) நடத்திய குறும்பட போட்டியும் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது இந்த விழாவின் சிறப்பம்சமாகும். இந்த விழாவில் திரைப்பட தயாரிப்பு செயல்முறை யில் தங்களின் நுண்ணறிவு குறித்து பிரபல திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம் அளித்தார். அபுதாபி, இஸ்ரேல், கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் முக்கிய பிரமுகர்களும் தமிழ்நாடு திரைப்பட இயக்கு நர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, இன்னோவேட்டிவ் ஃபிலிம் அகாடமி நிறுவனர் மற்றும் இயக்குநர் சரவண பிரசாத், ஒன்றிய அரசின் தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் அபூர்வ சந்திரா, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த சர்வதேச திரைப்பட விழாவில் ராமநாத புரம் மாவட்டத்தை கதைக் களமாக கொண்டு எடுக்கப்பட்ட “பாஞ்சாலி” குறும்படம் சிறந்த படத்திற்கான முதல் பரிசை வென்றது.

சர்வதேச திரைப்பட விழாவில் ஒட்டுமொத்த விருதையும் அள்ளிய  இயக்குநர் ஆர்.சுப்பிரமணிய பாரதி சேலத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். பி.ஏ, இளங்கலை பட்டம் படித்தவர். தனது மானசீக குருவான இயக்குநர் சத்ய ஜித்ரே, கே. பாலச்சந்தர், பாரதிராஜாவின் கனவுகளோடு திரைப்படத்துறையில் 15 ஆண்டு காலமாக பணியாற்றி வருகிறார். கள்வனின் காதலி, மச்சக்காரன், உயர்ந்த மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவத்துடன் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வ மணியின் வழிகாட்டுதலில் இயக்கிய “பாஞ்சாலி” குறும்படம் உலக அளவில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்ட சுப்பிரமணிய பாரதி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். “வாழ்க்கையின் யதார்த்தத்தைப் போல் கற்பனை மனத்தைத் தொடாமல் ஒரு கிராமத்து இளைஞனையும் அவனுடைய சகோதரியையும் மையமாக வைத்து பின்னப்பட்டது ‘பதேர் பாஞ் சாலி’. இயற்கைப் பின்னணியில் நடைமுறை வாழ்க்கையை படமாக்கிய சத்ய ஜித்ரே மிகப்பெரிய வெற்றி பெற்றார். அந்தப் படம் உலக அளவில் மகத்தான வெற்றியைத் தேடிக் கொடுத்தது. “குலக் கல்வியை மீண்டும் கொண்டுவர முயற்சிக்கும் இந்த காலகட்டத்தில், அவரது வழித்தோன்றலான நாங்கள்,” ஒரு கிராமத்து மாணவனுக்கு கல்வி எவ்வளவு முக்கியம்” என்பதை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதையே ‘பாஞ்சாலி’. ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் ஒரு ஏழை விவசாயிக் குடும்பத்தின் பிள்ளைகள் தாத்தா, தந்தை என முன்னோர் வழியில் செல்வதை தவிர்க்க கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்பதையும் பாஞ்சாலி படத்தில் உணர்த்தினோம்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள தாதனேந்தல் கிராமத்தில் அந்த மண்ணின் மைந்தன், வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் பரோட்டா புகழ் சக்கரை முருகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.கலையரசன் கதை வசனத்தில் அமர்ஜித் இசைய மைக்க, கோகுல் ஒளிப்பதிவு செய்ய, இணை இயக்கு நர்கள் மூர்த்தி நடராஜன், அகிலன், உதயகுமாரின் மேற்பார்வையில் ஐந்து நாட்களில் படப்பிடிப்பை முடித்தோம். இந்தப் படத்தை தயாரிக்க ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி செய்த தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம்தான்,சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் வாய்ப்பையும் கொடுத்தது சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியாவிலிருந்து பல மாநிலங்களைச் சேர்ந்த படங்கள் வெளிநாட்டுப் படங்கள் என 650 படங்கள் போட்டியிட்டன. இதில் திரைக்கதை, வசனம், இயக்கம் உள்ளிட்ட அனைத்து வகை யிலும் மிகச்சிறந்த படமாக முதலிடத்தை பிடித்தது “பாஞ்சாலி”. ஒன்றரை லட்ச ரூபாய் பரிசுத் தொகையும் கொடுத்தனர். சிறந்த படங்களை தேர்வு செய்யும் குழுவில் தமிழ் நாட்டைச் சேர்ந்த எடிட்டர் லெனின், திரை கலைஞர்கள் நாசர், அர்ச்சனா, எழுத்தாளர் சுபா, ஒளிப்பதிவாளர் ரத்தினவேல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இந்த வெற்றிக்கு முக்கியக் காரணம் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, தயாரிப்பாளர் சரவண பிரசாத், ராமநாதபுரம் நண்பர்கள்.

திரைப்படத்துறையில் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்கு வந்தேன். தமிழ்வாணன் இயக்கிய ‘நந்தி’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினேன். அப்போது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தைச் சார்ந்தவரும் ராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடி கிராமத்தின் கலையரசனுடன் அறிமுகம். சிறந்த எழுத்தாளரான அவர் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தின் உண்மை வரலாற்றையும் அதன் பின்னணிகளையும் அறிந்து கொண்ட நான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் இணைந்தேன்‌‌. இயக்குநர்கள் சங்கம் கொடுத்த உந்துதலால் கலையரசன் எழுதிய மூளைச் சாவு சிறு கதையை “பாஞ்சாலி” என்ற பெயரில் குறும்படமாக இயக்கினேன். இந்த குறும்பட வெற்றியின் மூலம் மிகப்பெரிய படம் எடுக்கும் வாய்ப்பு கிடைக்க உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நிலவி வரும் சாதி பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லும் வகையில் ஏற்கனவே தொடங்கி ஒரு சில காரணங்களால் நிறுத்தப்பட்ட ‘தொப்புள் கொடி’ திரைப்படத்தை மீண்டும் எடுக்க உள்ளேன் என்றார். மாங்கனிக்கு புகழ் பெற்ற சேலத்தில் இருந்து வந்து வறண்ட பூமியில் கதைக்களத்தை உருவாக்கி உலக அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமை தேடிக்கொடுத்த இந்த திரைக்கலைஞருக்கு வாழ்த்துக் கூறி விடை பெற்றோம்.