தமிழ் சினிமாவுக்கு ரொம்ப காலத்திற்குப் பிறகு இத்தனை தேசிய விருதுகளை ஒன்றிய அரசு வழங்கியிருக்கிறது. அதிலும் குறிப்பாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப்போற்று மிகச் சிறந்த முறையில் அதிக விருதுகளைப் பெற்றுள்ளது கவனிக்கத் தக்கது. தமிழ் சினிமாவின் தரமும் நேர்த்தியும் பொறுப்பும் உயர்ந்துவருகிற நிலையில்தான் ஒரு லெஜண்ட் தன் கலைச் ‘சேவை’யைத் தொடங்க இன்று புறப்பட்டிருக்கிறார். சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் ஆரம்பத்தில் தங்கள் நிறுவனத்தின் விளம்பரப்படங்களில் நடித்ததன் தொடர்ச்சியாக அவருக்கு இப்படியொரு ஆசை. முன்னணி நாயக நடிகர்களுக்கு இணையாக உலகமெங்கும் சுமார் 2500 திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது அவர் நடித்திருக்கும் தி லெஜண்ட். முதலீட்டுக்குப் பிரச்சனை இல்லை என்பதால் கோடிக்கணக்கில் கொட்டப்பட்டு பிரம்மாண்டங்களே அசரும் வண்ணம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.
தமிழ் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளிவந்திருக்கிறது இந்தப் படம். படத்தை முதல் நாளே அதிகாலைக் காட்சியில் பார்த்த நெட்டிசன்கள் படம் சுமார் என்றும், உணர்ச்சிமயமாக இருக்க வேண்டிய காட்சிகள்கூட நகைச்சுவையாக உள்ளதாகவும், நாயகனாக நடிக்கிற சரவணனின் நடிப்பும் அனுபவமில்லாத காரணத்தால் சிரிப்பை வரவழைப்பதாகவும் கலாய்க்கத் தொடங்கி விட்டார்கள். கலைத்துறைக்கு எவரும் வரலாம், தங்கள் திறனை வெளிப்படுத்தலாம் என்பதெல்லாம் சரிதான். பணபலம் ஒன்றையே நம்பி இப்படி யொரு ஆசையால் சரவணனுக்கு இந்த நிலை தேவையா என்கிறார்கள் சமூகவலைஞர்கள். முன்பு இப்படித்தான் ஒரு மகேந்திரனும், பாலு மகேந்திராவும், பாரதிராஜாவும் கிளம்பிவந்து தமிழ்த் திரைப்படச் சூழலை ஆரோக்கிய திசையில் நகர்த்திட முயன்றபோதே மக்களின் ரசனையைத் தாழ்த்திடும் வகையில் அதிகப்படியான மசாலா நெடியோடு ஒரு சகலகலாவல்லவனை இறக்கினார்கள். அப்படியாகிவிடக்கூடாது இப்போதும்.