சில திரைப்படங்களைப் பார்க்க வாய்ப்பில்லாத வர்களுக்குக்கூட அவற்றின் பெயர்கள் மனதில் பதிந்துபோயிருக்கும். இப்படியானதொரு பெயருடைய திரைப்படம்தான் தமிழில் வெளிவந்து தடம்பதித்த 1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி. பெயர் சொன்னாலே போதும் என்பதுபோல மிகவும் மாறுபட்ட தனித்துவமான படம் இது. தமிழ் சினிமா வரலாற்றில் மிகவும் நீளமான படம் என்ற பெயரைப் பெற்ற முதல் படம். ஆமாம், மொத்தம் 214 நிமிடங்கள் ஓடியது இந்தப் படம். அதாவது, 3 மணி நேரமும், 34 நிமிடங்களும் ரசிகர்களைக் கட்டிப்போட்டுக் கதை சொன்ன இந்தப் படத்தை ஆசை ஆசையாக உருவாக்கியவர் டி.ஆர்.சுந்தரம். சேலத்தில் செயல்பட்டுவந்த தனது கனவுத் தொழிற்சாலையான மாடர்ன் தியேட்டர்ஸில் இந்தப் படத்தைத் தயாரித்தார் அவர். அந்த நாளில் மாடர்ன் தியேட்டர்ஸ் 100 க்கும் அதிகமான படங்களைத் தயாரித்துப் புகழ் பெற்ற திரைப்பட நிறுவனமாகத் திகழ்ந்தது. இயக்குநர், கதாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல்துறை வித்தகரான டி.ஆர்.சுந்தரம் தனக்குச் சொந்தமான அந்த நிறு வனத்தை ஹாலிவுட் பாணியில் 26 ஆண்டுகள் நடத்தி னார். மிகவும் கண்டிப்பானவரான அவர் தன்னிடம் பணி யாற்றிய கலைஞர்கள், தொழில்நுட்பத்துறையினர் எல்லோருக்கும் தாராளமான ஊதியத்தை வழங்கினார். அதனை முறையாகவும் தாமதமின்றியும் கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
இப்படியானதொரு படப்பிடிப்புத் தளத்தில் உருவான இந்த 1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படத்தின் கதை புராணவகைப்பட்ட மாயாஜால மந்திரவாதியின் பேராசையால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பேசுவதாக இருந்தது. இது கற்பனைக் கதைதான் என்றா லும் நாட்டார் செவிவழிக் கதையொன்றை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப் பட்டது. அனைத்துவிதமான சக்திகளையும் பெறத்தக்க அஷ்டமாசித்தி பெற விரும்பும் மந்திரவாதி சாமியார் தவம் செய்கிறான். 1000 பேர் உயிர்த்தியாகம் செய்தால் அவனுக்கு அந்த சக்தி கிடைக்கும் என்று தெரியவரு கிறது. மன்னன் நீதி கேதுவின் மகள் இளவரசி சிந்தாமணி அறிவிற் சிறந்தவள். கலைகள் பலவற்றை யும் கற்கும் ஆர்வமுள்ளவள். பல்கலை வித்தகியாகத் திக ழும் அவளை அபூர்வ சிந்தாமணி என்று அழைக் கிறார்கள். அந்த மந்திரவாதி இளவரசிக்குக் கலைகள் கற்பிக்கும் குருவாகப் போய்ச் சேருகிறான். தந்திரமாக அவளை வசியப்படுத்தித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரு கிறான். அவளுக்குச் சமமான அறிவுடைய ஒருவனே அவளது கணவனாக வர இயலும் என்று கூறி, அதற்கு மூன்று விசித்திரமான கேள்விகளைக் கேட்டு அவற்றிற்குப் பதில் சொல்பவனுக்கே இளவரசியை மணமுடித்துத் தருவோம் என்று அறிவிக்கச் செய்கிறான். பதில் சொல்லத் தவறும் இளை ஞர்களின் தலை துண்டிக்கப்படும் என்பதே நிபந்தனை. மன்னரும் சம்மதிக்க வைக்கப்படு கிறார். போட்டி துவங்குகிறது. மந்திரச் சாமி யாருக்கு மட்டுமே பதில்கள் தெரியும் என்ற நிலை. இளவரசன் மெய்யழகனின் ஆறு சகோதரர்கள் உட்பட 999 பேர் பலியாகிறார்கள். இளவரசன் மெய்யழகன் சிந்தாமணியைப் பழி தீர்க்க தனது நண்பன் காளியுடன் கிளம்புகிறான்.
அதற்கு முன் அந்தக் கேள்விகளுக்கு பதிலைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறான். இளவரசியின் தோழியான செங்கமலத்தின் மூலமாக அந்தக் கேள்விகளை அறிந்துகொள்கிறான். பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து அவற்றிற்கான பதில்களைக் கண்டு பிடிக்கிறான். அரண்மனை வந்துசேர்ந்து அந்த மந்திரவாதியைத் தன் பதில்களால் வென்று, அவனின் தந்திரத்தை அம்பலப்படுத்துகிறான். இளவரசியின் தோழி செங்கமலத்தை மணக்கிறான். இளவரசிக்கும் தனது உறவினர் ஒருவரை மணமுடித்துவைக்கிறான். இதுதான் படத்தின் கதைச் சுருக்கம். இப்படியொரு கதைக்கருவை மூன்றரை மணி நேரத்திற்கு மேல் ஓடும் ஒரு சினிமாவாகத் திரைக்கதை அமைத்து அதை வெற்றிகரமானதாகவும் உருவாக்கினார் டி.ஆர்.சுந்தரம். எம்.ஆர்.சுவாமிநாதன், வி.என்.ஜானகி, எஸ்.வரலட்சுமி, பி.எஸ்.கோவிந்தன், மாதுரிதேவி, பி.கே. சரஸ்வதி, ஆர்.பத்மா, காளி என்.ரத்தினம், சி.ராஜகாந்தம், ஆர்.பாலசுப்பிரமணியம், டி.எஸ்.துரைராஜ், கே.கே.பெருமாள் முதலானவர்கள் நடித்தார்கள்.
இந்தப் படத்தைப் பொருத்து இன்னொரு வியப்புக்குரிய செய்தி என்னவென்றால், இதுபோன்ற நம்பத்தகாத கதைகளை அதிகம் விரும்பாத, ஏற்காத புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் இந்தப் படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதி யதுதான். இசைமேதை ஜி.ராமனாதன் இசையில் படத்தில் மொத்தம் 12 பாடல்கள். 20050 அடி நீளம் கொண்ட படமானாலும் சுந்தரத்தின் திறன்மிக்க உருவாக்கத்தால் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து, 100 நாட்களைத் தாண்டி ஓடியது இந்தப் படம். வசூலையும் அள்ளித்தந்தது. 1947-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8 அன்று வெளியான இந்த 1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பரில் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. தமிழில் வெளிவந்து 13 ஆண்டுகளுக்குப்பின் இதே படத்தைத் தெலுங்கில் சஹஸ்ர சிரச்சேத சிந்தாமணி என்ற பெயரில் காந்தாராவ் - தேவிகா ஜோடியை வைத்து டி.ஆர்.சுந்தரம் எடுத்த ரீ மேக் முயற்சியும் பெருவெற்றி பெற்றது கூடுதல் தகவல். நம்ப இயலாத கற்பனைக் கதையானாலும் சொல்லுகிற விதத்தில் ரசிகர்களைக் குழந்தைகளாக்கிவிடும் இதுபோன்ற திரைமுயற்சிகள் இன்றுவரையில் தொடரத்தானே செய்கின்றன!