cinema

img

திரைக்கதிர் - சோழ. நாகராஜன்

‘கலைஞர்  100’  விழாவில் கமல், ரஜினி

தமிழ்த் திரைப்பட வளர்ச்சியில் கலைஞரின் பங்களிப்பைப் போற்றும் விதமாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100’  விழா நடைபெற உள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன் ரஜினிகாந்த் ஆகியோர்  பங்கேற்பார்கள் என்றும் கூறப்பட்டது. சங்க நிர்வாகிகள் அவர்கள் இருவரையும் கடந்த நவம்பர் மாதம் நேரில் சந்தித்து இவ் விழாவுக்கான அழைப்பிதழ் வழங்கினர். சென்னையில் கடந்த டிசம்பரில் பெய்த கனமழையால் விழா 2024 ஜனவரி 6 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் விழாவுக்கான புதிய அழைப்பிதழ் மீண்டும் கமல் மற்றும் ரஜினி இருவருக்கும் நேரில் வழங்கப்பட்டது. இருவரும் இந்த விழாவில் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ள தாக கூறப்படுகிறது. 

வடசென்னை பின்னணியில்... ‘காத்து வாக்குல ஒரு காதல்’   

சென்னை புரொடக்சன் சார்பில் எழில் இனியன் தயாரிக்கும் படம் ‘காத்து வாக்குல ஒரு காதல்’. இந்தப் படத்தை மாஸ் ரவி பூபதி இயக்கியுள்ளார். அத்துடன் இதன் கதை, திரைக்கதை, பாடல்களை எழுதி, கதையின் நாயகனாகவும் அவரே நடித்துள்ளார். இதில் நாயகிகளாக லட்சுமி பிரியாவும், மஞ்சுளாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சூப்பர் சுப்பராயன், சாய் தீனா, சத்யா, கல்லூரி வினோத், ஆதித்யா கதிர், தங்கதுரை உட்பட பலரும்  நடித்துள்ளனர். ராஜதுரை, சுபாஷ் என் மணியன் ஒளிப்பதிவு. ஜி.கே.வி இசை. இருவருக்குள் நடக்கும் உண்மைக் காதலைச் சுற்றிய கதையாம். வடசென்னையைப் பின்னணியாகக் கொண்ட படமாம். சமூக வலைதளங்களால் இளம் பெண்களின் வாழ்வு எப்படிச் சீரழிகிறது என்பதைக் காட்டும் வகையில் படமாக்குவதாகவும்; காதல், காமெடி, ஆக்சன், திரில்லர் போன்ற வணிக அம்சங்களுடனும் படம் உருவாகி வருகிறது என்றும் கூறுகிறார்கள். படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர்.

“இரு நண்பர்கள்” என்ற அந்நாளின் குறும்படம்

1960 ஆம் ஆண்டுகளில் வந்த படம்தான் இரு நண்பர்கள். கதம்பம் என்ற படத்துடன் இணைத்துக் காட்டப்பட்ட படம் இது. அந்நாளில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துண்டுப் படங்களைச் சேர்த்து ஒரே காட்சியில் காட்டும் முறை இருந்தது. அவை இப்போதைய குறும்படங்கள் போன்றவைதாம். நகைச்சுவைத் துண்டுப்படங்கள் அப்போது பிரபலமாக ஓடின. அப்படி வந்த இந்த இரு நண்பர்கள் சுவாரஸ்யமானதொரு தயாரிப்பாக அந்நாளில் பார்க்கப்பட்டது. இதுவும் ஒரு நகைச்சுவைப் படம்தான். இதன் கதைக்கு உரையாடல்களை அப்போதைய முன்னணி வசனகர்த்தா இளங்கோவன் எழுதியிருந்தார்.  இதன் கதைச் சுருக்கம் இதுதான். பணக்காரவீட்டு இளம் பெண் பார்வதியை ஒரு கொள்ளைக்கூட்டத் தலைவன் கடத்திச் சென்றுவிடுகிறான். அவளின் தந்தை மிகவும் மனம் வருந்துகிறார். அவரின் வேலையாட்களான முனியனும் அவனது நண்பனான கண்ணனும் அவளைக் கண்டுபிடிக்கப் புறப்படுகிறார்கள். வழியில் திருடர்கள் இவர்களின் பொருட்களைக் கொள்ளையடிக்க, வேறு வழியில்லாமல் ஒரு மோடிவித்தைக்காரனிடம் வேலை செய்கிறார்கள்.  அந்த வித்தைக்காரன் முனியனை ஒரு பள்ளத்தில் இறக்கிவிட்டு, உள்ளிருந்து ஒரு நாயை வெளியே தூக்குகிறான். மனிதனை நாயாக்கிவிட்டதாக வேடிக்கை பார்ப்போர் வியந்து கை தட்டுகிறார்கள். அந்த நாய் ஓடுகிறது. அதைத் துரத்திக்கொண்டு கண்ணனும் அதன் பின்னே முனியா முனியா என்று கத்திக்கொண்டே ஓடுகிறான். பள்ளத்துக்குள் பதுங்கியிருந்த முனியன் கண்ணனின் பின்னே ஓடுகிறான். அவர்களைத் துரத்திக்கொண்டு மோடிவித்தைக்காரன் ஓடுகிறான்.  நாயைத் துரத்திச்சென்ற  கண்ணன் தற்செயலாக ஒரு குகையினுள் நுழைய அங்கே பார்வதியைக் காண்கிறான். பின்னே ஓடிவந்த முனியனும் அவளுடன் பேசுகிறான். மோடிவித்தைக்காரன் தன்னிடமிருந்த ஒரு பொடியைத் தூவி அந்தக் கொள்ளையர்களை மயங்கச் செய்கிறான். முனியனும் கண்ணனும் பார்வதியை அவள் தந்தையிடம் ஒப்படைத்து பரிசுப் பொருட்களைப் பெறுகிறார்கள். இதில் கண்ணனாக நடித்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், முனியனாக டி.எஸ்.துரைராஜ், பார்வதியாக டி.ஏ.மதுரம், மந்திரவாதியாக எம்.ஆர்.சுவாமிநாதன் முதலானோர் நடித்தார்கள். படத்தை கே.எஸ். மணி இயக்கியிருந்தார். இதில் மூன்று பாடல்கள்இடம்பெற்றன. இதற்கு இசையமைத்ததும்  கலை வாணரேதான். நகைச்சுவையோடு விறுவிறுப்பான கதை ஓட்டத்தால் படம் ரசிகர்களைக் கவர்ந்தது.

ஐந்து  மொழிகளில் வரப்போகிற திரை அனுபவம்

பிரபல மலையாள நாயகன் மம்முட்டி நடிப்பில், நைட் ஷிப்ட் ஸ்டூடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘பிரம்மயுகம்’. இது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதை ராகுல் சதாசிவன் இயக்குகிறார். இதில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். சேஹ்னாத் ஜலால் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து பின்தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றனவாம். “இது கேரள மண் சார்ந்த கதையைக் கொண்ட படம். இதுவொரு திகில் படம் என்றாலும் மம்முட்டியின் ரசிகர்கள்  மட்டுமல்லாமல் எல்லாருக்கும் இது  பெரிய விருந்தாக அமையும். அற்புதமான திரை அனுபவமாக இதனை மாற்று வதற்காகத் தயாரிப்பாளர்களும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்” - என்கிறார் இதன்  இயக்குநர். இந்தப் ‘பிரம்மயுகம்’ பிப்ரவரி யில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.