நீதிக்கான நீண்ட பயணம் - ஒரு வரலாற்றுத் தீர்ப்பு! பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை
மேற்குத் தொடர்ச்சி மலையின் அடி வாரத்தில், தென்னை மரங்களின் பசுமையும், ரம்மியமான தட்பவெப்பமும் சூழ்ந்த பொள்ளாச்சி, தென் தமிழகத்தின் பெரிய மாட்டுச் சந்தை, கருப்பட்டி வெல்லம் மற்றும் அதன் கிராமிய அழகுக்கு பெயர் பெற்ற ஒரு நகரம். பல தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்று, தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருந்த இந்நகரம், 2019-ஆம் ஆண்டு தமிழகத்தையே உலுக்கிய “பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை” சம்பவத்தால் தன் அமைதியை இழந்தது. சுமார் ஆறு ஆண்டுகால நீதிக்கான நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, இந்த வழக்கில் குற்ற வாளிகள் ஒன்பது பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது. தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி கொடூரம் கல்லூரி மாணவிகள் மற்றும் திருமணமான பெண்கள் எனப் பலரையும் பின் தொடர்ந்து, அவர்களை ஏமாற்றி பண்ணை வீடுகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அதை வீடியோ பதிவு செய்து மிரட்டிய ஒரு கொடூர கும்பலின் அட்டூழியம் வெளிச்சத்து க்கு வந்தது. இச்சம்பவம் வெளியானவுடன், அன்றைய ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் மகன் கள் சிலரது பெயரும் அடிபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வழக்கில் முக்கிய குற்றவாளி களாகப் பேசப்பட்ட திருநாவுக்கரசு, பார் நாக ராஜன் ஆகியோர் அன்றைய பொள்ளாச்சி நகர அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கியப் பிரமுகர்களாக இருந்தனர். நீதிக்கான முதல் போராட்டங்கள் குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஆளும்கட்சிப் பின்னணியைக் கொண்டிருந்ததால், காவல்துறையினர் அவர்களை உடனடியாகக் கைது செய்யவில்லை. குறிப்பாக, திருநாவுக் கரசை கைது செய்ய மிக நீண்ட போராட்டத்தை நடத்திட வேண்டியிருந்தது. 2019 மார்ச் 7 அன்று, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை சந்தித்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும், வழக்கில் பெண் அதிகாரியை விசாரணை அதிகாரியாக நிய மிக்க வேண்டும், மற்றும் பிணை கோரும் மனு வில் காவல்துறை ஆட்சேபணை தெரிவிக்க வேண்டும் என மனு அளித்தனர். இந்த வழக்கில் தற்போது குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஹெரோம் பால் என்ப வரை வழக்கிலிருந்து விடுவிக்க பல்வேறு முயற்சி கள் நடந்தன. அன்றைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “ஆதாரம் இருந்தால் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்” என்று பத்திரிகையாளர்களிடம் கூறியது, மக்கள் மனதில் கசப்பான நினைவாகப் பதிந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் அடையாளத்தை வெளிப்படுத்திய அத்துமீறல் வழக்கின் துவக்க நிலையில், கோவை காவல்துறை ஆணையராக இருந்த பாண்டிய ராஜன், பத்திரிகையாளர் சந்திப்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தியது தமிழக மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. அரசின் எழுத்துப்பூர்வமான ஆணை, இவ்வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டபோதுகூட, பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளங்களை வெளியிட்டது. அரசு குற்றவாளிகளைக் காப்பாற்ற அனைத்து விதமான உத்திகளையும் பயன்படுத்தியது வெளிப் படையாகத் தெரிந்தது. எஸ்.பி. பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அணுகிய பின்னரே, அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ஒன்றுபட்ட போராட்டங்கள்: மக்கள் சக்தி நீதிக்கு துணை நின்றது 2019 மார்ச் 11 அன்று, வழக்கில் துரித விசார ணை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு உயர் அதிகாரிகளுக்கும், அமைப்புகளுக்கும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. பார் நாக ராஜன் பெயரும் இந்த மனுவில் இணைக்கப் பட்டிருந்தது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட போதும், சிபிஐயிடம் விசாரணை ஒப்படைக்கப்பட்ட போதும், விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டன. காவல்துறையின் மெத்தனப்போக்கைக் கண்டித்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மும், பொள்ளாச்சி நகர அனைத்துக் கட்சிகளும் இணைந்து நடத்திய பெரும் போராட்டத்திற்குப் பின்னரே திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டார். பொள்ளாச்சி வழக்கின் குற்றவாளிகள் மீதான குண்டர் சட்டம், போதிய ஆதாரங்கள் அளிக்காத தால் ரத்தானதைக் கண்டித்து, 2019 நவம்பர் 15 அன்று பொள்ளாச்சியில் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அராஜகமான முறையில் நடந்துகொண்ட துடன், அவர்களை இரவு 11 மணி வரை மண்ட பத்தில் அடைத்து வைத்தது. தமிழகத்தின் எதிர்ப்புக்குரல் பொள்ளாச்சி நகரத்தில் இதுவரை கண்டிராத ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய மனித சங்கிலி இயக்கம், அனைத்துக் கட்சி கள் இணைந்து ஜனநாயக மாதர் சங்க தலைமை யில் நடைபெற்றது. பொள்ளாச்சி நகரத்தைச் சுற்றி யுள்ள பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள், கல்லூரி மாணவிகள், மற்றும் அண்டை மாவட்டங் களான திருப்பூர், திண்டுக்கல்லில் இருந்தும் பெண்கள் இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மனித சங்கிலி இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்து கலை ஞர்கள், எழுத்தாளர்கள் இப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். சென்னையில் அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு சார்பாக திரைத்துறை யினர், கலைஞர்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து மாபெரும் மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது. வழக்கில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி, பொள்ளாச்சி நகரத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. கடை யடைப்பு சுவரொட்டிகளை ஒட்டியபோது, காவல்துறையினர் அன்றைய பொள்ளாச்சி நகர மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் தோழர் மகாலிங்கம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகி தோழர் பிரகாஷ் ஆகியோரைக் கைதுசெய்தனர். காவல்துறையின் வற்புறுத்தலையும் மீறி, பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்புடன் முழு கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தது. தமிழகத்தில் பெருந்தலைவர்கள் மறைந்தபோது கூட கடையை அடைக்காத ஒரு வியாபாரி, இச்சம்பவத்தைக் கண்டித்து கடையை அடைத்த தகவலைப் பகிர்ந்து கொண்டது, இந்த நிகழ்வின் வீரியத்தை உணர்த்தியது. நீதி நிலைநாட்டப்பட்டது: துணிச்சலான தீர்ப்பு இந்த வழக்கில் தமிழகம் முழுவதும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சி கள், பொதுமக்கள், பெண்கள், மாணவர்கள் எனத் தன்னெழுச்சியாக ஆயிரக்கணக்கானோர் ஒன்றி ணைந்து, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி வலுமிக்க போராட்டங்களை நடத்தினர். வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களின் உறுதி யான போராட்டம் மற்றும் மன உறுதி மிக முக்கிய மானது. எந்தவிதமான அழுத்தங்களுக்கும், மிரட்டல்களுக்கும் அடிபணியாமல், துணிச்ச லோடு செயல்பட்டனர். குற்றவாளிகள் தப்பித்து விடாமல், அநீதிக்கு எதிராக நீதி வழங்கிய மரி யாதைக்குரிய நீதிபதி நந்தினி தேவி பாராட்டுக் குரியவர். சம்பவம் வெளிவந்த பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் (திமுக அரசு) குற்றவாளிகளை தப்ப விடாமல் எடுத்த முயற்சி, வழக்கின் சிறப்பு மிக்க இத்தீர்ப்புக்கு பலம் சேர்த்துள்ளது. தமிழக முதலமைச்சர் அறிவித்த ரூ.25 லட்சம் நிவார ணம், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட பெண் களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி வழக்கு கடந்து வந்த பாதையும், அதற்காக முன் னெடுக்கப்பட்ட போராட்ட வரலாறும் தமிழகத்தின் எட்டுத் திக்கும் கொண்டு செல்லப்படும். அடுத்த டுத்த இத்தகைய அநீதிக்கு எதிரான போராட்டக் களத்தில் அனைவரையும் ஒன்றிணைத்து வெற்றி பெறுவோம்.
வழக்கில் ஒரு முன்னுதாரணமான விசாரணை
இந்த வழக்கு நடைபெற்ற முறை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையிலும், எதிர்காலத்தில் இதே போன்ற நடைமுறைகளை பாலியல் பலாத்கார வழக்குகளில் பின்பற்ற உதாரணமாகவும் உள்ளது. இந்த வழக்கில், அடையாளம் காண்பிக்கும் நடைமுறை உட்பட, வழக்கின் எந்தக் கட்டத்திலும் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை நேரில் சந்திப்பதற்கான சூழ்நிலையை நீதித்துறை ஏற்படுத்தவில்லை. 2018-ஆம் ஆண்டில் பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகு, பாதிக்கப்பட்ட பெண்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போதும், மற்ற சமயங்களிலும் அவர்களுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஒருபுறம் இருப்பவர், மறுபுறம் தெரியாதது போன்று நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. குற்றவாளிகளை அடையாளம் காண்பிக்கும்போது சேலம் மத்திய சிறையில் இருந்த அவர்களை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அடையாளம் காட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வழக்கு விசாரணை நடக்கும்போது பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை மீண்டும் பார்த்தால் அவர்களுக்கு அச்சமும், உளவியல் ரீதியான பாதிப்பும் ஏற்படும் என்பதால், அனைத்து வாக்குமூலமும் பெறப்பட்ட பிறகே ஒவ்வொரு பெண்ணிடமும் அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த குற்றவாளிகளை அடையாளம் காட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டது சிறப்பு அம்சமாகும். இவ்வழக்கின் குற்றவாளிகள் நீதிமன்றத்தில் ஒருமுறை ஆஜர்படுத்தப்பட்டபோது, சேலம் நெடுஞ்சாலையில் குற்றவாளிகள் கொண்டு செல்லப்பட்ட வாகனம் நிறுத்தப்பட்டு, அவர்களை உறவினர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், உணவு பரிமாறிய காட்சி ஊடகங்களில் வெளியானது. உடனடியாக கோவை நீதிமன்றத்தின் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தது. அதன் பிறகு, அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை போலீசார் 17 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்தப் பின்னணியில், சேலம் மத்திய சிறையில் இருந்தே குற்றவாளிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.