articles

img

பெட்ரோல் விலை மாற்றமில்லையா? ஏமாற்றப்பட்ட விலையா? - எஸ்.ஏ.மாணிக்கம்

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று ஓராண்டு காலமாக பெட்ரோல். டீசல் விலைகளில் மாற்றமில்லாமல் இருந்ததை சாதனையாக சுட்டிக்காட்டி செய்தியை வெளியிட்டது. நாளுக்கு நாள் பழக்கப்பட்டு போன விலை உயர்வு செய்திகளுக்கு மத்தியில் ஓராண்டு காலமாக பெட்ரோல் டீசல் விலைகள் உயராமல் இருந்துள்ளது என்பது அறுதலான செய்தியாக இருக்கலாம். ஆனால் உண்மை அதுவா? பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலைகளை நிர்ணயிப்பதில் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, மற்றது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் பரிவர்த்தனை மதிப்பு ஆகி யவை முக்கிய காரணிகளாக உள்ளன. பெட்ரோ லிய நிறுவனங்கள் இவ்விரண்டின் அடிப்படையி லேயே தினசரி பெட்ரோல்,டீசல் விலைகள் நிர்ணயிக்கின்றன. இவையல்லாமல் அவ்வப்போது நிலவுகிற சர்வதேச புவிஅரசியல் நிலைமைகளும் இவற்றின் மீது தாக்கங்களை ஏற்படுத்தும்.

இனி ஓராண்டு காலத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு விபரங்களை பார்க்கலாம்.   (கச்சா எண்ணெய் விலையாக ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் இந்திய தொகுப்பு விலையையே இங்கு எடுக்கப்பட்டுள்ளது.) 2022 மேமாதத்தில் ஓரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை இந்திய மதிப்பில் அடக்க விலை 56.89 இதன் பிறகு சுத்திகரிப்பு செலவு, ஒன்றிய, மாநில அரசுக ளின் வரிகள், விற்பனையாளர் கமிசன் ஆகியவை சேர்த்து பெட்ரோல் விலை லிட்டருக்கு 110.85 என விற்பனைக்குவந்தது. விலை உச்சத்தைத் தொட்ட வுடன் ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையில் தலா 8ரூபாய் குறைத்தது. 

அதனைத் தொடர்ந்தே பெட்ரோல் விலை 102.85 என நிர்ணயிக்கப்பட்டது. 12.6.2023 அன்று பெட்ரோல் விலை ரூ. 102.83 பைசா என விற்கப்படுவதையொட்டி ஓராண்டு காலமாக விலை மாற்றமில்லை என்பதை அறிய முடியும். மேற்கண்ட பட்டியலை மேலோட்டமாகப் பார்க்கும் போதே ஒரு வெளிப்படையான விபரத்தை தெரிந்து கொள்ளலாம். 2022 மே மாதம் கச்சா எண்ணெய் பேரல் விலை ரூ. 118.31. ரூபாயின் மதிப்பு 77.50 எனில் ரூ. 110.85க்கு பெட்ரோல் விற்கப்பட்டது என்ற உண்மையை ஒருபுறம் ஏற்றுக்கொண் டால்; மறுபுறம் அதே ஓராண்டுக்கு பின்னர் 2023 மே மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் டாலருக்கு 82.38 ரூபாய் என சிறிய உயர்வு பரிமாற்ற மதிப்பில் ஏற்பட்ட நிலை யிலும் ரூபாய் 102.63 பைசாவிற்கு விற்பது ஏன்?   

30 ரூபாய் குறைத்திருக்க முடியும்

கச்சா எண்ணெய் கொள்முதலில் 39 சதவிகிதம் சரிவு ஏற்பட்டு மறுபுறம் ரூபாய் பரிமாற்ற மதிப்பில் 6.2 சதவிகிதம் மட்டும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் விலையில் மட்டும் 7.38 சதவிகிதம் மட்டும் குறைக்கப்பட்டுள்ளது. இதில் ஓராண்டு காலத்தில் இடையிடையே ஏற்பட்ட சரிவுகளின் பலன் எங்கே சென்றது? ஓராண்டில் எண்ணெய் நிறுவனங்களும் ஒன்றிய அரசும் சேர்ந்து ஒரு லிட்டருக்கு ரூபாய் 25.42 சதவிகிதத் தொகையை இந்திய மக்களிடமிருந்து பறித்துக்கொண்டன.  பெட்ரோலிய அமைச்சகத்தின் கீழ் உள்ள பெட்ரோலிய திட்டம்  மற்றும் ஆராய்ச்சி செல்  செயல் படுகிறது. இந்த அமைப்பின் விபரப்படி கடந்த 2022 மே மாதம் துவங்கி 2023 ஏப்ரல் மாதம் வரை யில் சராசரியாக மாதத்திற்கு 2.8 மில்லியன் டன் பெட்ரோல் நுகர்வு இருந்துள்ளது. மொத்தமாக 35.1 மில்லியன் மெட்ரிக் டன் பெட்ரோல் உபயோகிக் கப்பட்டுள்ளது. ஒரு மெட்ரிக் டன்னிற்கு 2831.6லிட்டர் சமமாகும். அப்படியெனில் சராசரியாக லிட்டருக்கு சுமார் ரூபாய் 24.00 என ஒரு டன் பெட்ரோலுக்கே 67,958 ரூபாய் பறிக்கப்பட்டதெனில், 351 லட்சம் டன்னுக்கு பறிக்கப்பட்டது 2,38,181.58 கோடி ரூபாய். இது பெட்ரோலுக்கு மட்டும். இது இல்லாமல் டீசல் கணக்கு தனி. 

டீசல் கணக்கை எடுத்துக்கொண்டால் கச்சா எண்ணெய் கொள்முதலில் 39 சதவிகிதம் சரிவு ஏற்பட்டு மறுபுறம் ரூபாய் பரிமாற்ற மதிப்பில் 6.2 சதவிகிதம் மட்டும் சரிவு ஏற்பட்ட நிலையில் டீசல் விலையில் மாற்றமில்லை. அவ்வாறெனில் 32.8 சதவிகித சரிவின் பலன் டீசல் நுகர்வோருக்கு போய் சேரவில்லை. அதாவது லிட்டருக்கு சுமாராக 30.09 பைசா குறைத்திருக்க வேண்டும்.

தட்டிப்பறித்த ஒன்றிய அரசு

பெட்ரோலிய அமைச்சகத்தின் தகவல்படி மாதத்திற்கு சராசரியாக 2022 மே முதல் 2023 மே வரை 7.2 மில்லியன் மெட்ரிக் டன் டீசல் நுகர்வாக ஓராண்டில் 85.9மில்லியன் மெட்ரிக் டன் பயன் படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டுள்ள அளவுகளின்படி ஒரு டன் டீசலுக்கு ரூ 92,876.00 மிச்சமாகியுள்ளது. 859 லட்சம் டன்னிற்கு  சுமார் 7,97,804.84 கோடி ரூபாய் பறிக்கப்பட்டுள்ளது.  நேரடியாக பறிபோன இந்த இழப்பீடு இல்லாமல் இன்னும் பல வழிகளில் இந்திய மக்களுக்கு சேர வேண்டிய பலன்களையும் ஒன்றிய அரசு தட்டிப் பறித்துக்கொண்டது. 2021ஆம் ஆண்டு துவக்கத்திலிருந்தே சர்வதேச கச்சா எண்ணெய் விலை 100 டாலர்களுக்கும் அதிகமாகவே இருந்து வந்தது. ரஷ்ய உக்ரைனுக்கும் இடையேயான மோதல் போக்குகளும், ஒபெக் நாடுகளின் உற்பத்தி குறைப்பு நடவடிக்கைகளும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு வழிவகுத்தது. குறிப்பாக 2022 பிப்ரவரி மாதத்தில் ரஷ்யா -உக்ரைன் நாடுகளின் நேரடி போர் கச்சா எண்ணெய் விலையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. 

அமெரிக்காவைப் பொறுத்தளவிலும் தன்னுடைய பொருளாதாரச் சரிவிலிருந்து மீண்டு வரவும் ஐரோப்பிய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் ரஷ்யா மற்றும் சீனாவை அப்புறப்படுத்தி அந்த இடத்தில் அமெரிக்கா நுழையவும் செய்த ஏற்பாடே உக்ரைன் போரை துவக்கி வைத்தது. எதிர்பார்த்தபடியே போரைக் காரணம் காட்டி ஐரோப்பியா முழுவதும் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை அறிவிக்கப்பட்டு  ரஷ்யாவின் எரிசக்தி விநியோகத்தை தடுத்தது. இதன் மூலம் அமெரிக்க எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வர்த்தகம் ஐரோப்பா பக்கம் திருப்பி விடப்பட்டது. ரஷ்யாவின் மலிவு விலை எரிவாயு வர்த்தகம் பறிக்கப்பட்டு அமெரிக்காவின் கொள்ளை லாபத் திற்கான பகுதியாக ஐரோப்பிய யூனியன் மாற்றப் பட்டு விட்டது.

குறைந்த விலைக்கு தர  ரஷ்யா முன்வந்தது

போரினால் ஒரு பக்கம் நெருக்கடியை சந்தித்த ரஷ்யா மறுபுறம் பொருளாதாத் தடை காரணமாக ஐரோப்பிய எரிசக்தி வர்த்தகமும் பாதிக்கப்பட்ட நிலையில் தன்னுடைய வர்த்தகத்தை ஆசியா பக்கம்  கவனத்தை திருப்பியது. குறிப்பாக கச்சா எண்ணெய் இறக்குமதியில் சீனாவிற்கு அடுத்து உள்ள இந்தி யாவை நெருங்கியது. சர்வதேச விலையை காட்டி லும் குறைத்து தர முன்வந்தது. இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி நாடுகளில் சவூதி அரேபியா, இராக் நாடுகளே ஆதிக்கம் வகித்தன. 2022 அக்டோபரில் இந்த நாடுகளை பின்னு க்குத் தள்ளி நாளொன்றுக்கு ஒரு மில்லியன் பேரல் எண்ணெய் இறக்குமதி செய்து முதல் இடத்தை ரஷ்யா பிடித்தது. கடந்த 2022 மார்ச்சில் ரஷ்யாவின் இறக்குமதி பங்கு 0.2 சதவிகிதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்ய எண்ணெய் 6 சதவிகிதத்திலிருந்து இவ்வாண்டு மே மாதம் வரையில் 14 சதவிகிதம் வரை யில் குறைத்து வாங்கப்பட்டுள்ளது. சராசரியாக 15 முதல் 20 சதவிகிதம் வரை தள்ளுபடியை கேட்டுப் பெற முடியும் எனவும் இதன் மூலம் 15 முதல் 20 டாலர்கள் வரை ஓரு பேரலுக்கு குறைக்க முடியும் என்றும் எரி சக்தி துறை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைத் தொடர்ந்து ஒபேக் நாடுகளிடமிருந்து இறக்குமதியாகும் எண்ணெய் 46 சதவிகிதம் அளவிற்கு குறைந்துள்ளது. ஏப்ரல் 2022இல் மொத்த இறக்குமதியில் 72 சதவிகி தமாக இருந்தது 2023 ஏப்ரலில் 46 சதவிகிதமாக குறைந்துள்ளது. போர் நடவடிக்கை துவங்கியவுடன் சர்வதேச கச்சா  எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 123.70 டாலர்க ளாக உயர்ந்தது. இந்தியா மற்றும் சீனாவின் மாற்று ஏற்பாடுகளினால் ரஷ்ய இறக்குமதிக்கு சென்றதால் எண்ணெய் விலை சரியத் தொடங்கியது. தற்போது 75 டாலர் வரை குறைந்தது. 

டாலர் தேவையை குறைத்து ரூபாய் மதிப்பை தக்க வைக்க முடியும்

இதே காலத்தில் ரஷ்யாவின் எண்ணெய் இறக்கு மதியை சீனாவும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. போருக்கு முன்பு பாகிஸ்தான்  வழியாக குழாய் மூலம் நாளொன்றுக்கு 8 லட்சம் பேரல் எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. கடந்த 2022 ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கப்பல் மூலம் நாளொன்று க்கு 1.5மில்லியன் பேரல் இறக்குமதி செய்கிறது. இங்கே குறிப்பிட வேண்டிய விசயம் என்னவென்றால் சீனா தன்னுடைய நாட்டு நாணயமான யுவான் மதிப்பி லேயே இறக்குமதி செய்து வருகிறது. ஆனால் இந்திய  டாலர் மூலம் பரிமாற்றம் செய்து வருகிறது. இதுபோல  அமெரிக்க டாலரை நம்பி இருப்பதன் காரணமாக டாலரின் மதிப்பு கூடுவதும், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதும் நடக்கிறது.  கடந்த  ஓராண்டு கால ரஷ்யாவின் எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை ஒப்பிடு கையில் 27 சதவிகித வருவாய் இழப்பை ரஷ்யா சந்தித்துள்ளது. எனவே தன்னுடைய சரிவை ஈடுகட்ட இந்தியாவின் இறக்குமதியை பெரிதும் சார்ந்து நிற்க வேண்டியதை கவனத்தில் கொண்டு மேலும் பேரம் பேசி குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். ரஷ்யாவைத் தொடர்ந்து இராக்கும் ஒரு பேரலுக்கு 7 முதல் 9 டாலர்கள் வரை குறைத்து தரவும் முன் வந்துள்ளது.

மக்களைப் பற்றி  கவலைப்படாத மோடி

சீனாவைப் போல இந்தியாவும் ரூபாய் மதிப்பில் ரஷ்யாவுடன் வர்த்தக பேரத்தை பேசுவதன் மூலமும், டாலரின் தேவையினை குறைப்பதன் மூலமும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை தடுத்த நிறுத்த முடியும். இந்திய மக்களுக்கும் பெட்ரோல் டீசல் விலையினை குறைத்துத் தர முடியும். ஆனால் மோடி ஒருபோதும் செய்யமாட்டார். கொரோனா பெருந் தொற்றுக் காலத்தில் கூட, சர்வதேச எண்ணெய் விலை கடுமையாக சரிந்த நிலையிலும் கூட, உள்நாட்டு விலையினை அதற்கேற்ப மாற்ற வில்லை. 2020-21ஆம் ஆண்டில் எண்ணெய் நிறு வனங்கள் ஒன்றிய அரசிற்கு வரியாக செலுத்திய தொகை ரூ.4,19,884.00கோடி. 2021-22ஆம் ஆண்டு ரூ.4,31,609,00கோடி. ஆனால் கொரோனாவிற்கு முந்தைய ஆண்டான 2019-20ஆம் ஆண்டு 2,87,450,00 கோடி தான் வரி வகையில் வழங்கப்பட்டுள்ளது.ஆகவே மக்களுக்கான கஷ்டங்களைப் பற்றி கவலைப் படாதவர் மோடி.

பெரு நிறுவனங்களின்  வரிகள் ரத்து

இங்கே இன்னொரு தகவலையும் பாருங்கள். கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்திக்கும், பெட்ரோல், டீசல்,  விமானத்திற்கான பெட்ரோல் ஆகியவற்றின் ஏற்று மதிக்கும் வரி விதித்தது. இதன் மூலமாக சுமார் ஒரு லட்சம் கோடி ருபாய் வரை ஒன்றிய அரசிற்கு வருவாய் வரும் என தெரிவிக்கப்பட்டது. இதன் பிரதான வருவாய் பகுதி ரிலையன்ஸ், நாயரா, வேதாந்தா நிறுவனங்களிடமிருந்தும், சிறு பகுதி ஒஎன்ஜிசி நிறு வனத்திடமிருந்தும் வர வேண்டியவை. இவ்வாண்டு மே மாதத்தில் மோடி அரசு மேற்கண்ட வரியினை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவின் மலிவு எண்ணெய்யை பெற்று ஏற்றுமதி செய்து லாபம் கொழிக்கும் ரிலையன்ஸ்க்கு அரசின் வரி வருவாயை விட்டுக்கொடுத்து மேலும் கொழுக்க வைக்கிறது. மறுபுறத்தில் கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய விலை குறைப்புப் பலன்களை தர மறுக்கிறது. கூட்டுக் களவாணி முதலாளித்துவம் என்பதன் பொருள் இதுவே.