articles

img

பெட்ரோல் - டீசல் விலைக் குறைப்பு நாடகம் - பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா,பொருளாதார அறிஞர்

அண்மையில் ஒன்றிய அரசின் நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைப்பதாக அறிவித்திருக்கிறார். பெட்ரோல் மீது ரூ.8, டீசல் மீது ரூ.6 கலால் வரியைக் குறைப்பதன் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுவதாகக் கூறியுள்ளார். மாநில அரசுகளும் தங்கள் பங்கிற்கு மதிப்புக் கூட்டு வரி யைக் குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி யுள்ளார். 

நியாயமான கோரிக்கையா?

இங்கு, ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை திடீரெனக் குறைத்துள்ளதன் பின்னணி என்ன என்பதே முக்கியமான கேள்வி. பா.ஜ.க.  தலைமையி லான ஒன்றிய அரசு, 2014இல் ஆட்சிக்கு வந்தது. இந்த எட்டு ஆண்டுகளில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் சரி, மற்ற நேரங்களிலும் சரி, தொடர்ந்து இந்த அரசு, பெட் ரோல்- டீசல் மீதான கலால் வரிகளை அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இதன்மூலம், கணிசமான தொகையை மக்களிடமிருந்து உறிஞ்சியுள்ளனர்.  

ஒன்றிய அரசின் தந்திரம்

அண்மைக்காலமாக மற்றொரு தந்திரத்தையும் ஒன்றிய ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கின்றனர். அது என்னவென்றால், அடிப்படைக் கலால் வரியைக் குறைத்து விட்டு அதன் மீதான செஸ் அல்லது சர்சார்ஜை அதிகரிப்பது. இதன் சூட்சுமம் என்ன வென்றால், பொதுவாகக் கலால் வரியாக வசூலிக்கும் தொகையில் மாநிலங்களுக்குப் பங்கு உண்டு. ஆனால் செஸ் அல்லது சர்சார்ஜ் என்ற வகையில் வசூலிக்கப்படும் தொகையில் மாநிலங்களுக்குப் பங்கு கிடையாது. நாட்டின் ஒட்டுமொத்த வரி வரு வாயில், நேர்முகவரி எனப்படும் தனிநபர் வருமா னத்தின் மீதான வரி அல்லது நிறுவனங்களின் லாபத்தின் மீதான கார்ப்பரேட் வரி ஆகியவையும், கலால் வரி, ஜி.எஸ்.டி. போன்ற மறைமுகவரிகளும் மாநிலங்களோடு குறிப்பிட்ட கணக்கீட்டின் அடிப்படை யில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இந்தக் கணக்கீடு, ஒன்றிய அரசால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிய மிக்கப்படும் நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்ப டையில் ஒன்றிய அரசின் ஒப்புதலோடு அமலுக்கு வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில், ஒன்றிய அரசின் வரிக் கொள்கை சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரியும் போதும்கூட கலால் வரியை உயர்த்தி மக்க ளைத் தொடர்ந்து துன்பத்திற்கு உள்ளாக்குவது என்பதாகவே உள்ளது. பெருந்தொற்றுக் காலத்திலும் இதே கொள்கையைக் கடைப்பிடித்துள்ளனர் என்பது நாம் கவனத்தில் கொள்ளவேண்டியதாகும். 

ஓட்டு அரசியல்

2021 நவம்பரில், பெட்ரோலுக்கு ரூ.5-ம் டீசலுக்கு ரூ.10-ம் கலால் வரி குறைக்கப்பட்டது. அது, ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடந்த சமயம். ஒன்றிய அரசு, தேர்தல் முடிந்த பிறகு தொடர்ச்சியாக தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலையை உயர்த்திக் கொண்டே வந்தது. அப்படிக் கடுமையாக உயர்த்தப்பட்ட வரியிலி ருந்து ஒரு சிறு பகுதி இப்போது குறைக்கப்பட்டுள்ளது. பொதி சுமக்கும் கழுதையின் மீது தாங்க முடியாத அளவிற்கு பாரத்தை சுமத்தி விட்டு அதிலிருந்து ஒரு மிகச்சிறு பகுதியை எடுப்பது போல் இது உள்ளது. இப்போது மாநில  அரசுகளையும் அதேபோல் குறைக்க வேண்டும் என்று கூறுவது எவ்விதத்திலும் நியாயம் இல்லை. 

மக்கள் நல அரசுகளும் வரிக்குறைப்பும்

சில மாநில அரசுகள் இதற்கு முன்னரே வரியைக் குறைத்துள்ளன. ஒன்றிய அரசு கேட்டுக்கொண்ட தற்காகவோ நிதியமைச்சரின் கோரிக்கையை ஏற்றோ  அவர்கள் வரியைக் குறைக்கவில்லை; மாறாக, தங்கள் மாநில மக்கள் மீதான சுமையைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கையை கேரளா உள்ளிட்ட சில மாநில அரசுகள் எடுத்தன. இப்போது தமிழ்நாடு அரசு ஏன்  குறைக்கவில்லை என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சென்ற ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைத்து தனது முதல் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தது. தமிழக நிதிய மைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கூறியது போல, அப்போது வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கை யின்படி, மிகப்பெரிய கடன்சுமை காரணமாகக் கடுமை யான நிதி நெருக்கடியை சந்தித்தபோதும் பெட்ரோல்  மீதான வரியை அப்போது தமிழக அரசு ரூ.3 குறைத்தது. தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதியை நிறை வேற்றும் வகையில் அது செய்யப்பட்டது. அந்த சம யத்தில் கேரள அரசு வரிக் குறைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை. 

கடும் பாதிப்புக்குள்ளான மாநிலங்களின் வரிவருவாய்

தற்போது, ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒரு சிறு வரிக் குறைப்பை செய்துவிட்டு, மாநில அரசுகளை நெருக்கு வதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியைச் செய்கிறது. உண்மை என்னவெனில் கடந்த எட்டு ஆண்டு காலகட்டத்தில் மாநிலங்களின் வரி வருவாய் என்பது கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.  முதலாவதாக, ஒன்றிய அரசு, செஸ் மற்றும் சர்சார்ஜை கணிசமாக அதிகரித்து அதைத் தானே முழுமையாக எடுத்துக் கொள்கிறது. இரண்டாவதாக, 2017 ஜி.எஸ்.டி. அமலாக்கத்திற்குப் பின் உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும், அதன் மூலம் வரிச்சுமை குறையும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், அதற்கு நேர்மாறாக, இது மாநிலங்களுக்குப் பெரும் சிரமங்களைக் கொடுத்துள்ளது. நிரப்ப வேண்டிய படிவங்கள் மற்றும் ஒரு ஆண்டிற்கான வணிக வருவாய் ஒன்றரை கோடிக்கு மேல் இருந்தால்  வரி செலுத்த வேண்டும் என்று இருந்ததை 20 லட்சம் என மாற்றியது என்ற காரணங்களினால் சிறு - குறு உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் சிறு வியாபாரிகள் மிகுந்த தொல்லைக்கு உள்ளாக்கப் பட்டுள்ளனர். 2016ல் அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பு நீக்கம் போலவே இதுவும் அவர்களை நெருக்க டிக்குத் தள்ளியது. எனவே மக்கள் மீதான மறைமுக வரி அதிகரித்துள்ளது.

மூன்றாவது, மிக முக்கியமான அம்சம் என்ன வென்றால், நம் நாட்டில் 7 அல்லது 8 கோடிக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கும் மாநிலங்கள் உள்ளன. இம்மாநி லங்கள் ஒரு ஐரோப்பிய நாட்டை விட மிகப் பெரியவை. ஒரே தேசிய இனத்தைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் இம்மாநிலங்கள் தனி நாடுகளாகக் கருதப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்திய ஒன்றியம் என்பது பல மாநிலங்களின் கூட்டமைப்பு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை உடைய இம்மாநிலங்கள், வரி விதிக்கும்  அதிகா ரத்தைப் பெற்றுள்ளன. அப்படிப்பட்ட ஒரு முக்கியமான அதிகாரமாக இருந்த சரக்குகள் மற்றும் சேவை மீதான வரி விதிக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசு பறித்துக் கொண்டது. 

ஒரே நாடு – ஒரே வரி

நாடு முழுவதும் ஒரே வரி என்ற முழக்கத்தை முன் வைத்து பா.ஜ.க. தற்பொழுது ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலம் முடிவெடுக்கிறது. முந்தைய காங்கிரஸ் அரசி லும் ஜி.எஸ்.டி. குறித்து பேசப்பட்டாலும், கூடுதலாக, ஒரே நாடு - ஒரே வரி, ஒரே மொழி, ஒரே மதம் என்று அதி காரங்களை மையத்தில் குவிக்கும் பா.ஜ.க.வின் அர சியல் நிலைப்பாட்டுடன் இணைக்கப்பட்டு ஜி.எஸ்.டி. முன்மொழியப்பட்டது. இது நடைமுறை சாத்திய மற்றது. ஒரு பொருளுக்கு நாடு முழுவதும் ஒரே வரியாக இருக்கலாம். ஆனால் பொருளுக்குப் பொருள் வரி வேறுபடும்.

மாநிலங்களுக்கான  வரிவிதிப்பு அதிகாரம்

நான்கு பொருட்களுக்கு மட்டும் மதிப்புக்கூட்டு வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகள் கையில் உள்ளது. பெட்ரோல், டீசல், புகையிலை,  சாராயம் ஆகிய நான்கு பொருட்கள் தவிர மற்ற அத்தனை சரக்கு கள் மீதான வரியும் ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலமாகவே முடிவு எடுக்கப்படமுடியும். எனவே மாநில அரசுக ளுக்கு, தனிப்பட்ட முறையில் ஒரு சரக்கின் மீதான வரியை மாற்றும் அதிகாரம் இல்லை. ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஓட்டெடுப்பு வரும்பொழுது, மூன்றில் ஒரு பங்கு வாக்குகள் ஒன்றிய அரசின் கையில் உள்ளது.  எந்தத்  திருத்தத்தை முன்மொழிந்தாலும், நான்கில்  மூன்று பங்கு வாக்குகள் பெற்றால் மட்டுமே அது அம லுக்கு வரும். மூன்றில் ஒரு பங்கு வாக்குகளை கையில் வைத்துள்ள ஒன்றிய அரசு மனம் வைத்தால் மட்டுமே இது சாத்தியம். மேலும், பாஜக தலைமையிலான மாநில அரசுகள் ஓட்டெடுப்பின்போது என்ன நிலைப்பாட்டை எடுக்கும் என்பதும் தெரிந்ததே. ஆக ஒட்டுமொத்தமாக மாநில உரிமைகளுக்கு இடமில்லை என்ற அமைப்பா கவே ஜி.எஸ்.டி. கவுன்சில் உள்ளது. 

மாநில உரிமைகள்/அதிகாரங்கள்

சமீபத்தில், உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜி.எஸ்.டி. கவுன்சில் முன் வைக்கும் பரிந்துரை என்பது வெறும் பரிந்துரை மட்டுமே. அது ஒன்றியத்தையோ  மாநிலங்களையோ கட்டுப்படுத்தாது என்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி மாநில சட்ட மன்றங்களுக்கும் ஒன்றிய அரசுக்கு சமமான அதிகா ரங்கள் உள்ளன என்ற அருமையான தீர்ப்பு அது. 

ஆனால், தற்போதுள்ள வரிவிதிப்பு முறைப்படி மாநிலங்களின் வரி அதிகாரங்கள் கடுமையாகச் சுருக்கப்பட்டுள்ளன. ஒன்றிய அரசு மறைமுக வரிகள் மூலமாகவே பெருவாரியான வரி வருவாயைத் திரட்டு கிறது. பெரும் செல்வந்தர்கள் மற்றும் கார்ப்பரேட்டு கள் மீதான வரி விகிதங்களைக் குறைத்துக்கொண்டே வருகிறது. இதனால் ஏற்படும் வரி இழப்பு, 145000 கோடி ரூபாய் என்று 2019ல் ஒன்றிய நிதியமைச்சரால் சொல்லப்பட்டது. இது ஒன்றிய அரசிற்கு மட்டுமான இழப்பு மட்டுமல்ல. மாநிலங்களுக்குக் கிடைக்க வேண்டிய பங்கும் இதனால் குறைகிறது. ஏனென் றால், கலால் வரி, வருமான வரி, சொத்து வரி, ஜி.எஸ்.டி. ஆகிய அனைத்துமே மாநிலங்களோடு பகிர்ந்து கொள்ளப்படவேண்டிய வரி வருவாய்களாகும். ஆனால் மாநிலங்களிடம் எந்தக் கருத்தும் கேட்கப் படாமல் இந்த வரிக் குறைப்பு செய்யப்பட்டது.

கார்ப்பரேட்டுகளுக்கான அரசு

வரி விகிதங்களை நிர்ணயிப்பதில் மாநில அரசுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஆனால் ஒன்றிய அரசிற்குத் தன் விருப்பப்படி வரி விகிதங்களை மாற்றுவ தற்கு முழு உரிமையும் உள்ளது. எனவே அவர்கள் தேர்தலில் தங்களுக்குப் பெரும் நிதியைத் தரக்கூடிய கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக சலுகைகளை அளிக் கின்றனர். மாநிலங்களுக்கோ வரி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த அடிப்படையில், தற்போதுள்ள நகர்வை நாம் பார்க்க வேண்டியுள்ளது. தற்போது வந்துள்ள இந்த வரிக் குறைப்பிற்குப் பின்னும் பெட்ரோல் டீசல் விலை, அவர்கள் ஆட்சிக்கு வந்த போது இருந்ததை விட மிக மிக அதிகமாகும்.  தற்போது சர்வதேச அரங்கில் கச்சா எண்ணெய் விலை ஏறி வருகிறது. ஏழை மக்கள் மீது இதன் தாக்கம் குறையவேண்டுமெனில், வரியைக் குறைத்து மக்கள்  மீதான சுமையைக் குறைப்பது ஒன்றிய அரசின் கடமை யாகும். ஆனால், இக்கடுமையான காலகட்டத்தில் ஏராளமான சலுகைகள் பணக்காரர்களுக்கே வாரி வழங்கப்பட்டுள்ளன. அதானி உலகின் பணக்காரர்க ளில் முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளார். அம்பானி அவரைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். 

அதிகரிக்கும் பணவீக்கம்

பெரும்தொற்றுக் காலத்தில் சாதாரண மக்களின் வாழ்க்கை வசதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டு வேலை யின்மை பெருகி, கடுமையான நெருக்கடியில் தள்ளப் பட்டுள்ளனர். வேளாண்மை உட்பட அனைத்துத் துறை களும் பாதிக்கப்பட்டுள்ளன.  கடுமையான பணவீக் கத்தின் பின்புலத்தில், ஒன்றிய அரசின் இந்நடவடிக்கை அமைந்துள்ளது. இதற்கு உக்ரைன்-ரஷ்யா போர் மட்டுமே முக்கிய காரணம் என்று கூறிவிட முடியாது. இதற்கு முன்னரே இந்த வரி உயர்வு தொடர்ந்து இருந்து வந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில், உற்பத்தி மற்றும் போக்குவரத்து பாதிப்பு போன்றவற்றின்  காரணமாக பெரும் நெருக்கடி ஏற்பட்டதை மறுக்க இயலாது. இவற் றோடு சேர்ந்து ஒன்றிய அரசின் கொள்கைகளும் விலை வாசி உயர்வுக்குக் காரணமாக அமைந்தன. ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. பொது வாக உலக அளவில் பணவீக்கம் அதிகமாக உள்ள சூழலில் இந்தியாவின் பணவீக்கம் மேலும் உயர்ந்து வருவதானது, ஏழை மக்களின் வாழ்க்கைக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத சூழலுக்கு அவர்களைத் தள்ளி யுள்ளது. மிகவும் குறைவான உழைப்பாளர் பகுதி மக்களுக்கே இதைத் தாங்கக் கூடிய பஞ்சப்படி போன்ற பாதுகாப்பு உள்ளது. 

முறைசாராத் தொழிலாளர்கள், விவசாயத் தொழி லாளிகள், கிராமப்புற உடலுழைப்புத் தொழிலாளர் கள்,  சிறு குறு உற்பத்தியாளர்கள், தொழில்முனை வோர் ஆகிய சாதாரண மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த பண வீக்கம் மிகப்பெரிய சுமையாக மாறியுள்ளது. 

கண்துடைப்பு நாடகம்

இந்த எட்டு ஆண்டு காலத்தில் பாஜக அரசானது, சாதாரண மக்களுக்கான சலுகைகள்-மானியங்க ளை வெட்டிக் குறைத்து,  நலத்திட்டங்கள் பெறுவதற் கான தகுதிகளை மறுவரையறை செய்துள்ளது. மாநி லங்களுக்குத் தரவேண்டிய வரிவிகிதத்தையும் கணிச மாகக் குறைத்துள்ளனர். ஒன்றிய - மாநில அரசுத் திட்டங்களில் ஒன்றிய அரசு தங்கள் பங்கைக் குறைப்ப தன் காரணமாக, செலவுகளை மாநில அரசே ஏற்க வேண்டியுள்ளது.  இத்தகைய சூழ்நிலையில், பெட்ரோல் டீசல் மீதான  தற்போதைய வரிக் குறைப்பு என்பது வெறும் கண் துடைப்பே. இதையொட்டி மாநிலங்கள் தங்கள் மதிப்புக்கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என்று கூறுவது ஏற்புடையதல்ல. மாறாக கடந்த  எட்டு ஆண்டு களாக வரிவசூல் ஏற்பாடுகள், வருமானப் பகிர்வு,  வரியின் தன்மைகளை ஒன்றிய அரசுக்கு சாதகமாக மாற்றுவது என்ற கொள்கைகளின் பின்புலத்தில் ஆராய்கையில்,  மாநிலங்களுடன் வளங்களைப் பகிர்ந்து கொள்வதில் ஒன்றிய அரசு இன்னும் மனமு வந்து முன்வர வேண்டும் என்பதோடு பெரும் சுமை மக்கள் மீது மேலும் விழாமல் பாதுகாக்கும் கடமையும் பொறுப்பும் முக்கியமாக ஒன்றிய அரசுக்கு உள்ளது. மாநில அரசுகள் ஒரு எல்லைக்குட்பட்டே அதைச் செய்ய முடியும். ஒன்றிய அரசின் கொள்கைகள் மாறாதவரை மக்களின் கஷ்டங்கள் தீராது என்பதே உண்மை.

காணொலி வழி தொகுப்பு: ஷோபனா, சேலம்