articles

img

வனங்களும் கனிம வளங்களும் இனி கார்ப்பரேட்டுகளுக்கே!

மோடி அரசாங்கம், மக்களைப் பற்றியோ, சுற்றுச் சூழலைப் பற்றியோ சற்றும் கவலைப்படாமல், தனியார் மூலதனச் சுரண்ட லுக்கு நாட்டின் இயற்கை வளங்களை வாரி வழங்கும் தனது கார்ப்பரேட் ஆதரவு கொள்கையைத் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்ற வெறித்தனத்துடன் செயல்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில்  இரு சட்டமுன்வடிவுகளை அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது. ஒன்று, வனப் பாதுகாப்புச் சட்டத்தில் (FCA-Forest Conservation  Act) கொண்டுவரப்பட்டுள்ள திருத்தமாகும். மற்றொன்று, சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் (வளர்ச்சி மற்றும் முறைப்படுத்தல்) சட்டத்தில் (MMDR-Mines and Mineral (Development and Regulations) Act) கொண்டுவரப்பட்டுள்ள திருத்தமாகும்.

மோடி அரசாங்கம் தன்னுடைய பத்தாண்டு கால ஆட்சியில் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறைக் கட்டமைப்பைத் தகர்த்ததன் தொடர்ச்சியாகவே இந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.    சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் (Environmental Impact Assessment Rules), கடற்கரை மண்டல ஒழுங்குமுறைகள் (Coastal Zone Regulations) போன்ற விதிமுறைகளும் பல்வேறு திருத்தங்கள் மூலமாகவும், அலுவலகக் குறிப்பாணைகள் மூலமாகவும் இதற்கு முன் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுவிட்டன. இப்போது வனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவருவதுடன், இதே பாணியில்  உயிரியல் பன்முகத்தன்மை சட்டத்திலும் (Biological Diversity Act) திருத்தத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இந்தத் திருத்தங்கள் காரணமாக, இந்தச் சட்டத்தின்கீழ் எவரேனும் குற்றங்கள் புரிந்தால் அவர்கள் கிரிமினல்களாகக் கருதப்படமாட்டார்கள். இவை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள் காடுகளில் உள்ள தாவரங்களிலிருந்தும், விலங்குகளிடமிருந்தும் மருந்து தயாரிப்புக்குத் தேவையானவற்றை எவ்விதமான தங்குதடையுமின்றி பிரித்தெடுப்பதற்கு வழிவகை செய்து கொடுத்திருக்கின்றன.

1

1980இல் நிறைவேற்றப்பட்ட வனப் பாதுகாப்புச் சட்டத்தில், வனங்களை தான்தோன்றித்தனமாக அழிப்பதைத் தடுப்பதற் காகக் கடுமையான ஷரத்துக்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. பொறுப்பற்ற முறையில் காடுகளை அழிப்பதைத் தடுக்க வேண்டும் என்பதே இதன்  முக்கிய நோக்கமாக இருந்தது. வன உரிமைகள் சட்டம் (Forest Rights Act) என்று அழைக்கப்படுகிற ’பழங்குடியினர் மற்றும் இதர பாரம்பரிய வனவாசிகள்  (வன உரிமைகள் அங்கீகரித்தல்) சட்டத்தின்’ மூலமாக பழங்குடியினருக்கும் பாரம்பரிய வனவாசி களுக்கும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதற் காக 2006இல் இதற்குச் சில விதிவிலக்குகள் இணைக்கப்பட்டன. இப்போது, மோடி அரசாங்கத்தால் அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் இரண்டு சட்டமுன்வடிவுகளும்,  வனங்களுக்குள் சாலைகள் ரயில் பாதைகள் அமைப்பதற்கு, பாதுகாப்பு உட்கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு, ராணுவ முகாம்கள் அமைப்பதற்கு, வயர்லஸ் நிலையங்கள் அமைப்பதற்கு, பாலங்கள் கட்டுவதற்கு, ஆழமான பள்ளங்கள் தோண்டு வதற்கு, குழாய்கள் பதிப்பதற்கு, உயிரியல் பூங்காக்கள் அமைப்பதற்கும்கூட இருந்துவந்த விதிவிலக்குகளை நீக்குவதன் மூலம், வனங்கள் என்பதற்கான அனைத்து வரையறைகளையும் நீர்த்துப் போகச் செய்திருக்கிறது, பலவீனப்படுத்தி இருக்கிறது.  1996இல் உச்சநீதிமன்றத்தால் காடுகள்  குறித்து வரையறை செய்யப்பட்ட கருத்தாக்கத்தை மறுவரையறை செய்திருக்கிறது. அப்போது உச்சநீதி மன்றம், காடுகள் என்று வரையறை செய்யப்படாத பகுதிகளை “காடுகளுக்கு நிகரானவை” (“deemed forest”) என்றே கருத வேண்டும் எனக் கூறியிருந்தது.

இப்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டமுன்வடிவு, வனத்தில் ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமானால் கிராம சபைகள் மற்றும்  இதர கண்காணிப்புக் குழுக்களின் சம்மதம் பெற  வேண்டும் என்று வனப் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்த  ஷரத்துக்கள் அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டது. வன நிலங்கள் மற்றவர்களால் கையகப்படுத்தப் படும்போது அதற்கு எதிராகப் பழங்குடியினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாதவாறு அவர்களை  பாதுகாப்பற்றவர்களாக மாற்றுகிறது இந்த சட்ட முன்வடிவு. காடுகள் அழிக்கப்படுவதோடு மட்டு மல்லாமல், காட்டில் வசித்த பழங்குடியினரும் வெளி யேற்றப்படுவார்கள். வன நிலங்களைக் கையகப் படுத்துவதற்கு இதுநாள்வரையிலும் இருந்துவந்த சட்டங்களையும், உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஒழுங்குமுறைகளையும் ஒழித்துக்கட்டிவிட்டு, வன நிலங்களைக் கையகப்படுத்துவதற்காகவே இந்தச் சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டிருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது.  

2

இரண்டாவதாக, நாடாளுமன்ற மழைக் காலக் கூட்டத்தொடரில், சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் (வளர்ச்சி மற்றும் முறைப்படுத்தல்) சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தம் ஆகும். இந்தத் திருத்தங்கள் சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் முறைப்படுத்தல் விதிகளில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து நீர்த்துப்போகச் செய்திருக்கிறது.  முன்பிருந்த அசல் சட்டத்தின்கீழ் கனிம வளங்களை எடுக்கும்போது, தோண்டுதல் மற்றும் துளையிடுதல் போன்ற அழிவைத்தரத்தக்க செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால் இப்போது அவையெல்லாம் நீக்கப்பட்டுவிட்டன. தோண்டுதல், துளையிடுதல் முதலான அனைத்து வேலைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. வனப்பகுதிகளில் இதுபோன்ற ஆய்வுத் திட்டங் களைத் தொடங்க இனி கட்டாய வனவியல் அனுமதி தேவையில்லை. நாட்டிலுள்ள கனிம வளங்களில் பெரும்பகுதி வனப்பகுதிகளில்தான் இருக்கின்றன என்பது அனைவரும் நன்கு அறிந்த ஒன்றாகும். இப்போது ஆட்சியாளர்கள் கொண்டுவந்திருக்கும் திருத்தங்கள் காரணமாக, எந்தவொரு கார்ப்பரேட் நிறுவனமும் வனப்பகுதிகளுக்குள் சென்று அங்குள்ள மக்களைப்பற்றி சற்றும் கவலைப்படாமல்,  அழிவுகர மான ஆய்வுகளைத் தொடங்க முடியும். 

மேலும், பொதுவாக சுரங்கங்களை ஏலம் விடும் உரிமைகள் வழக்கமாக மாநில அரசாங்கங்களின் அதிகார வரம்பு எல்லைக்கு உட்பட்டுத்தான் இருந்திடும். ஒருசில குறிப்பிட்ட வழக்குகளுக்கு மட்டுமே ஒன்றிய அரசாங்கம் தலையிடும். ஆனால் இப்போது திருத்தப்பட்ட சட்டத்தின்படி, லித்தியம் (lithium), கோபால்ட்  (cobalt), நிக்கல் (nickel),   பொட்டாஷ் (potash), டின் (tin), பாஸ்பேட் (phosphate) போன்ற முக்கியமான கனிம வளங்கள் அனைத்துக்கு மான உரிமைகளும் ஒன்றிய அரசாங்கத்திற்கே அளிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் கூடுதலாக, புதிய சட்டத்தின் தங்கம், வெள்ளி, தாமிரம் உட்பட 29 கனிம வளங்களுக்கு சிறப்பு உரிமங்களை ஒன்றிய அரசுதான் வழங்கிட வேண்டும்.     லித்தியம் (lithium), பெரிலியம் (beryllium), நியோபியம் (niobium), டைட்டானியம்(titanium), டண்டாலும் (tantalum) மற்றும் சிர்கோனியம் (zirconium) ஆகிய ஆறு உலோகங்களும் அணு கனிமவளங்கள் என இதுவரையும் வகைப்படுத்தப்பட்டிருந்தன. இப்போது அந்த வரை யறைகள் நீக்கப்பட்டுவிட்டன. இதன் காரணமாக எவர் வேண்டுமானாலும் இவற்றின் மீது கனிம வள ஆய்வுகளை மேற்கொள்ளலாம். சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் (வளர்ச்சி  மற்றும் முறைப்படுத்தல்) சட்டத்தின் ஷரத்துக்களின் படி, கனிம வளங்களின் சராசரி விற்பனை விலையை  நிர்ணயம் செய்வதற்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டு விட்டன. தனியார் முதலீட்டை ஈர்ப்பதை குறியாகக் கொண்டே இந்த மாற்றங்கள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. லித்தியம் போன்ற உலோகத்திற்கு இப்போது கிராக்கி அதிகம். இதனை மனதிற்கொண்டே தனியார் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்துதரும் நோக்கத்துடனேயே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

3

மோடி அரசாங்கத்தின் அப்பட்டமான கார்ப்பரேட் சார்பு நிலைப்பாடு அதன் அனைத்துக் கொள்கைகளிலும் ஊடுருவி இருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் சுற்றுச்சூழல்  சட்டங்கள் மற்றும் விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள வகைதொகையற்ற மாற்றங்களைப் பார்த்திட வேண்டும். மோடி அரசாங்கம், தான் சுற்றுச்சூழலைப் பாதுகாத்துக் கொண்டிருப்பதாகவும், புவி வெப்ப மயமாதலுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருப்ப தாகவும் வாய்ச்சவடால் அடித்துக்கொண்டிருக்கக் கூடிய அதே சமயத்தில், உண்மையில் அது மக்களின் வாழ்வாதாரங்களைப் பலி கொடுத்து சுற்றுச்சூழல் அழிவை நோக்கி நாட்டை நகர்த்திக்கொண்டிருக்கிறது.

(ஆகஸ்ட் 9, 2023),  தமிழில்: ச. வீரமணி