இந்தியாவிற்கு வகுப்புவாத வன்முறை என்பது புதிதல்ல. ஆனால் சமீப காலமாக அதன் வடிவம், வீரியம் அதிகரித்து வருவது குறித்து சமூகவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர். மோடி அரசு மத்தியில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியதிலிருந்து முஸ்லிம்கள் மீதான வெறுப்பு அரசியலை பாஜக அரசு கட்டவிழ்த்து வருகிறது. இந்தியா வகுப்புவாத பிரச்சனைகளை அதிக அளவில் சந்தித்து வருகிறது. இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்மமான பேச்சுக்களை அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-சின் பரிவாரங்களும் இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிரான கருத்தி யலை கட்டமைப்பதில் முனைப்புக் காட்டி வரு கின்றன. குறிப்பாக பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்றுள்ள மாநிலங்களில் முஸ்லிம்கள் மீதான தாக்கு தல்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த ஆண்டு தில்லியில் நடந்த கலவரம் குறித்து தில்லி சிறுபான்மையினர் ஆணையம், ஆளுநர் அனில் பைஜால் மற்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரி வால் ஆகியோரிடம் சமர்ப்பித்த உண்மை கண்டறியும் குழு அறிக்கையில், இந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அமைந்துள்ள 18 முஸ்லிம் தளங்கள் கலவரக்காரர்களால் குறி வைக்கப்பட்டதாகவும், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் உள்ள இந்து கோவில்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 மசூதி கள், 5 மதரசாக்கள், ஒரு கல்லறை அழித்தொழிக் கப்பட்டதாக அந்த அறிக்கை கூறுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 100 ஆண்டு கள் பழமையான கரீப் நவாஸ் அல் மரூஃப் மசூதி, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாகக் கூறி போலீசாரின் பாதுகாப்போடு உள்ளூர் நிர்வாகத்தின் மேற்பார்வையில் இடித்து நொறுக்கப்பட்டது. குஜராத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தின் போது 500 மசூதிகள், தர்காக்கள் அழித்தொழிக்கப்பட்டு அந்த இடங்களில் பெரும் பான்மையினரின் மத தளங்கள் நிறுவப்பட்டிருப்பதாக மனித உரிமை அமைப்பு மற்றும் மனித உரிமைக ளுக்கான மக்கள் ஒன்றியம் அறிக்கை தெரிவிக்கிறது.
ஊர்வலங்களே வரலாற்று ரீதியாகவே வகுப்புவாத கலவரங்களுக்கு மிகப்பெரிய தூண்டுதலாக இருந்து வந்துள்ளது. ராமநவமி ஊர்வலங்களுக்கு இஸ்லாமி யர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் தேர்வு செய்யப் பட்டு ஊர்வலங்களின் போது முஸ்லிம்களுக்கு எதிரான கோசங்களை எழுப்பி இஸ்லாமியர்கள் மீது வன்முறையை நிகழ்த்தி அவர்களின் சொத்துகளை சேதப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை நிர்மூல மாக்குகிற செயலை சங்பரிவார அமைப்பு தொடர்ந்து செய்து வருகிறது. குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்க ளில் ராமநவமி ஊர்வலங்களின் போது அதிக அளவில் வன்முறைகள் நடந்ததாக பதிவாகி இருக்கிறது. இவை யாவும் பாஜக ஆளும் மாநிலங்கள் என்று குறிப்பிட்டு சொல்ல வேண்டியதில்லை. ஹலால் ஜிகாத், லவ் ஜிகாத், பொருளாதார ஜிஹாத், பிரியாணி ஜிஹாத், மாட்டிறைச்சிக்கு தடை, முஸ்லிம் கடைகளில் பொருள்கள் வாங்கத் தடை, மசூதிகளை இடிக்க வேண்டும். (ஏனெனில் இந்து கோவில்களை அழித்துவிட்டு மசூதிகளை கட்டி உள்ளனர்) இந்துக்கள் சிறுபான்மையினர் ஆகி வரு கின்றனர்; முஸ்லிம்களின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. பாங்குச் சத்தம் ஒலி மாசுபாட்டை ஏற்படுத்து கிறது, இந்துக்களின் இனப்பெருக்கத்தை தடுக்க சதித்திட்டம் நடந்து வருகிறது என்பது போன்ற தவறான பிரச்சாரங்கள் மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ந்து சமூக வலை தளங்களில் பாஜகவின் ஐடி விங் செய்துவருகிறது.
முஸ்லிம்களை தீவிரவாதிகளாக, தேசவிரோதி களாக மக்கள் மனங்களில் கட்டமைக்கும் செயலை மிகவும் தீவிரமாக அரசியல் தலைவர்களே வெளிப்படையாக பேசிவருவதை பார்க்க முடிகிறது. நடந்து முடிந்த உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தல் பரப்புரையின் போது முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சா ரங்கள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டதையும் பார்க்க முடிகிறது. “வன்முறையை உருவாக்குபவர்களை அவர்க ளின் ஆடையை வைத்து அடையாளம் காண முடியும்’’ என்று மதச்சார்பற்ற நாட்டின் பிரதமர் மோடி பேசி வருவதையும், முஸ்லிம்களுக்கு எதிராக புனை யப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்திற்கு நாட்டின் பிரதமரான மோடி இலவச பிரச்சாரம் செய்து வருவதை யும் எளிதாகப் புறந்தள்ளி விட முடியாது. சமீப காலமாக விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை களில் ஒன்று “மசூதிகள் இடிப்பு.” சங்பரிவார அமைப்பு கள் முன்னெடுத்துவரும் இஸ்லாமிய வெறுப்பு அரசி யலில் முக்கியமானது மசூதிகள் இடிப்பு. இதற்கு அவர்கள் முன்வைக்கும் வாதம்; மசூதிகள் இருக்கிற இடங்கள் யாவும் முன்னதாக கோவில்களாக இருந்தன. முகலாயர்கள் கோவில்களை இடித்து மசூதி கள் கட்டிக்கொண்டனர் என்பதே.
பாபர் மசூதியும் வழக்கு பின்னணியும்
1528இல் முகலாயர் மன்னர் முஹமத் பாபர் காலத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது. பாபர் மசூதி தொடர்பான முதல் வழக்கு 1853இல் தான் தொடரப் பட்டது. அப்போதிலிருந்தே பாபர் மசூதி பிரச்சனை தொடங்கியது. 1857இல் பாபர் மசூதியின் நுழைவு வாயிலின் ஒரு பகுதியை மகந்த் ரகுபர்தாஸ் மற்றும் சிலர் ஆக்கிரமித்து திண்ணை அமைக்கின்றனர். 1931இல் அயோத்தியில் நடந்த கலவரத்தில் பாபர் மசூதி தொடர்பான கல்வெட்டு அழித்தொழிக்கப்படு கிறது. அதன்பின் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை யின்போது நடந்த கலவரங்களாலும், காந்தி படுகொலை செய்யப்பட்டதாலும் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் தடைசெய்யப்படுகிறது. அன்றைய பிரதமர் நேருவின் காங்கிரஸ் அமைச்சர வையில் இருந்தவர்கள் இந்துத்துவ கருத்தியலை அடிப்படையாகக்கொண்ட, மதச்சார்பின்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தவர்கள். பசுவதைச்சட்டம் இயற்றப்பட வேண்டும், அம்பேத்கரின் இந்து திருமண சட்டத்தை ஏற்கக் கூடாது முதலான கொள்கைகளை ஆட்சியிலிருந்து வலியுறுத்தியவர்களே.
இந்தப் பின்னணியிலிருந்துதான் பாபர் மசூதி பிரச்சனையைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை அ.மார்க்ஸ் தனது கட்டுரைகளில் தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறார். பாபர் மசூதி பிரச்சனை ஏதோ மசூதி இடிப்பிற்கு பின்னர்தான் உருவானது என்பது போல காட்டப்படு கிறது. ஆனால் இதன் வேர் இந்துத்துவ அமைப்புகள் இங்கு வேரூன்றியதிலிருந்தே தொடங்கிவிட்டது. தீவிர மாகச் செயல்பட்டு வந்த இந்து மகாசபா பாபர் மசூதி, கட்டடத்தை “ஆக்கிரமிப்பு கட்டடம்” என பிரச்சா ரங்கள் மேற்கொண்டது.1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி அபிராம்தாஸ் என்பவர் ராமர் சிலையை மசூதிக்குள் வைத்தார். அதன் பின் பல்வேறு சர்ச்சை கள் எழுந்தன. இதை சங்பரிவாரங்களின் பிரச்சாரத்தின் விளைவு என்றே பார்க்க வேண்டும். “இந்த நிகழ்வு நமது ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் ஆபத்தாக முடியும்” என்று கடிதத்தின் வழி வருத்தம் தெரிவித்தார் நேரு. சங்பரிவாரங்களால் ஆக்கிரமிப்பு கட்டடம் என அழைக்கப்பட்ட பாபர் மசூதி பின்நாட்க ளில் சர்ச்சைக்குரிய பகுதியாக அரசாலும், ஊடகங்க ளாலும் பெயர் மாற்றம் பெற்றது.
1949இல் இருதரப்பினரும் நீதிமன்றத்தை நாடு கின்றனர். ஆனால் 1950இல் இந்துக்கள் தரப்பில் இருந்து போடப்பட்ட “ராமருக்கு பூசைகள் செய்ய அனுமதி வழங்கக் கோரிய” மனு மட்டும் ஏற்றுக்கொள் ளப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது. 1961 ஆம் ஆண்டு இறுதியில் தான் “சன்னி வக்பு வாரியம்’’ வழக்கில் இணைகிறது. 1984இல் ‘விஸ்வ இந்து பரிஷத்’ பாபர் மசூதியைத் தகர்த்து அங்கு ராமர் கோவில் கட்டுவது என வெளிப்படையாக அறிவிக்கிறது. இதன் பின் 1986இல் மாவட்ட நீதிபதி பாபர் மசூதியில் சட்ட விரோதமாக வைக்கப்பட்ட சிலைக்கு பூசைகள் செய்ய அனுமதிக்கிறார். அதன் பின்னரே 1990இல் “ராமஜென்ம பூமி மீட்பு” என்கிற பெயரில் அத்வானி நடத்திய ரதயாத்திரையும், அதன் தொடர்ச்சியான பாபர்மசூதி இடிப்பும் பாரதிய ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் அமர வைத்தது. “1984இல் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நாங்கள் 1991இல் 117 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். அயோத்திப் பிரச்சனையை பாஜக கையில் எடுத்ததாலேயே இந்த வெற்றி சாத்திய மாகி இருக்கிறது” என்று அத்வானி தனது நாடாளு மன்ற உரையில் கூறியிருப்பது இந்துத்துவத்தின் வெற்றியாகவே பார்க்க வேண்டும்.
2019 நவம்பர் 09் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு மசூதி இருந்த தற்கு முன்னர் அங்கு ஏதேனும் கோவில் இருந்த தற்கான சாட்சியம் இல்லை என்ற போதும் அரசாங் கத்தின் மேற்பார்வையின் கீழ் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. ஆனால் முஸ்லிம்கள் அங்கே தொழுகை நடத்தியதற்கான எந்த சாட்சியமும் இல்லை என்றும் அந்த தீர்ப்பில் சொல்லியிருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நோய் பரவிய நிலையிலும் அயோத்தியில் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார் பிரதமர் மோடி. இது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு (2024) முன் திறக்கப்பட உள்ளது. இந்த பின்னணியிலிருந்து, சாட்சியங்களும் அடிப்படையும் இல்லாமல் இவ் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பதற்கான நோக்கத்தை தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.
ஏன் பாபர் மசூதி வழக்கு குறித்து மட்டும் விரிவாக பேசப்பட வேண்டிருக்கிறது என்றால்? சமீபகாலமாக மசூதிகள் தொடர்பான வழக்குகள் அதிகம் நீதி மன்றங்களுக்கு வரும் செய்திகள் நாளிதழ்களை நிரப்பி வருகின்றன. அரிதான செய்திகள் எல்லாம் இப்போது வாடிக்கையான செய்திகளாகிவிட்டன. அப்படித்தான் தற்போது வந்துள்ள உ.பி.யின் வார ணாசியில் உள்ள கியான்வாபி மசூதி வழக்கு. இது வாரணாசி நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது. இதே போன்றே மதுராவின் கிருஷ்ண ஜென்ம பூமி என்று சொல்லப்படுகிற பகுதிக்கு அருகில் உள்ள ஷாயி ஈத்கா மசூதி தொடர்பான வழக்கும் மதுரா சிவில் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்விரண்டு வழக்கின் தன்மையும் பாபர் மசூதி வழக்கின் தன்மையுடன் ஒன்றிப் போவதா கவே உள்ளது. பாபர் மசூதி தீர்ப்பே இவ்விரண்டு வழக்குகளுக்கும் வரலாம் என்பதாகவே யூகிக்க முடி கிறது. பாபர் மசூதியின் தீர்ப்பே இனிவரும் மசூதிகள் ஆக்கிரமிப்பு, அழித்தொழிப்பு வழக்குகளுக்கும் அடிப்படையாக்கப்படலாம் என்பதே. அவுரங்கசீப் தன் ஆட்சியில் கோயில்களை உடைத்தது உண்மைதான். ஆனால் வாரணாசியில் உடைக்கப்பட்டது சிவன் கோயில் என்பது உறுதி இல்லை,வேறு கடவுள்களின் கோயிலாகவும் இருக்கலாம், கியான் வாபி மசூதியை அவுரங்கசீப் தான் கட்டினாரா என்பது உறுதியாகவில்லை என்றும் அக்காலங்களில் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் மசூதிகளில் புத்த விஹாரங்களின் சிற்பங்களும், கற்க ளும் கிடைக்கின்றன. இதற்காக அவை மீண்டும் உடைக்கப்படுமா என்ற கேள்வியை எழுப்புகிறார் வரலாற்றுப் பேராசிரியர் இர்பான் ஹபீப்.
இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் வேராக இருப்பது “இந்துத்துவம்”. இந்துத்துவம் தனது வர்ணாசிரம கோட்பாட்டை வலியுறுத்த, இந்தியாவை இந்து நாடாக, இந்துக்களின் நாடாக மாற்றும் முயற்சிக்கு தடையாக இருப்பது இந்தியாவின் பன்முகத் தன்மையும், மதச்சார்பின்மையும் தான். எனவே மதச்சிறுபான்மையினரை எதிரிகளாக கட்டமைத்து அவர்களின் உணவு, உடை, வாழ்விடம், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் என எல்லாவற்றையும் குறிவைத்து பண்பாட்டு ரீதியாக அழித்தொழிக்கிற வேலையினை பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-சின் பரிவார அமைப்புகளும் செய்து வருகின்றன. இப்படியாக இந்துத்துவத்தின் அணி திரட்டல்கள் அனைத்திலும் “பாபரின் பிள்ளைகளே பாகிஸ்தானுக்கு ஓடுங்கள்”, நீங்கள் இந்துஸ்தானில் வாழ விரும்பினால் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று சொல்ல வேண்டும். பாஜகவின் பல்வேறு கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும், பேரணிகளிலும் நேரடியாகவே இஸ்லாமியர்களைக் கொல்ல அழைப்புவிடுக்கும் முழக்கங்களே அதிகம். பாஜக மதங்களை வைத்து மக்களை பிளவு படுத்தி பாசிச அதிகார பலத்தை நிறுவ முயல்கிறது. வரலாற்று ரீதியாக இந்துத்துவ, பார்ப்பனிய மேலா திக்கத்திற்கு எதிரான அணி திரட்டலை உருவாக்கிய மாநிலம் தமிழகம்தான். இங்கு பார்ப்பனர் அல்லாதோர் இயக்கத்தை உருவாக்கி பார்ப்பனர்க ளின் மேலாதிக்கத்திற்கு எதிராக கேள்வி எழுப்பியவர் ‘பெரியார்’. அதனால் தான் இங்கு பெரியார் என்கிற பெயரை கேட்டாலே அவர்களுக்கு வயிற்றெரிச்சலாக இருக்கிறது. எனவே பெரியார் முன்னெடுத்த, இந்துத் துவா எதிர்ப்புச் செயல்பாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டி இருக்கிறது.
இந்தியா முழுக்க சிறுபான்மையினரின் பண் பாட்டின்மீது பல்வேறு தாக்குதல்கள் நடந்து கொண்டி ருக்கின்றன. ஆனால் இத்தகைய செயல்கள் தமிழ கத்தில் இல்லை என்று கூறிவிட முடியாது. இன்னும் மாட்டிறைச்சியை சாப்பிடுவதை கெளரவக் குறைச்ச லாகவும், அப்படி சாப்பிட்டாலும் அதை அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளும் குடும்பங்கள் தான் அதிகம். சமீபத்தில் ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி வைக்க மாவட்ட ஆட்சிதலைவர் தடை விதித்ததையும்,அதற்கு எதிராக அரசியல் கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்த பின்பு மழையின் காரணமாக திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக அரசு தரப்பு தெரி வித்ததையும் வேறு எப்படி பார்க்க முடியும்? அனை வரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் திராவிட மாடல் என்று சொல்லிவருவதை செயலிலும் காண்பிக்க வேண்டியது கட்டாயம். அரசியல் அதிகாரத்தை கைப் பற்றுவது மட்டும் போதாது. பெரியாரின் பண்பாட்டுச் சீர்திருத்தத்தையும் முன்னெடுப்பது முக்கியம். அப்போதுதான் தமிழகம் இந்துத்துவத்தின் பாசிசப் பிடியிலிருந்து தப்பிப் பிழைக்கும். தமிழகம் பேசுகிற சமத்துவம் சமூக நீதி நிலைபெறும்.
கட்டுரையாளர் : சென்னை பல்கலைக்கழக
ஆராய்ச்சி மாணவி