கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நண்பர்களோடு ஒருநாள் அமர்ந்திருந் தார். எல்லோரும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்த சமயம்தான் அந்தப் பெண் அங்கே வந்தாள்.
நேரே என்.எஸ். கிருஷ்ணன் அருகில் வந்த அவள் அழும் தொனியில் பேசினாள்:
“ஐயா, நான் எந்த வசதியுமில்லாத ஏழை. நிறை மாத கர்ப்பிணியான எனக்கு ஏதாவது உதவி செய்யுங்களேன்...”
- என்று நா தழுதழுக்கக் கேட்டாள். கலை வாணரின் கண்கள் கலங்கின. அவளிடம் எதுவும் பேசாமல் உடனே தனது சட்டைப் பைக்குள் கையை விட்டார். கையில் சிக்கிய ரூபாய் நோட்டுகளை அப்படியே எடுத்து அவளிடம் நீட்டினார். அவள் அதை பணிந்து வாங்கிக்கொண்டாள். கிருஷ்ணன் அவளைப் பார்த்துச் சொன்னார்:
“இந்தப் பணத்தில் நல்ல பழங்களை வாங்கிச் சாப்பிடும்மா. சத்தான உணவைச் சாப்பிடு. கவலைப்படாதே. சீக்கிரமே உனக்கு நல்லபடியாகக் குழந்தை பிறக்கும். சந்தோசமா போய்வாம்மா...”
- இப்படி அவளுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தார். அவள் போனதுதான் தாமதம். உடன் இருந்த கிருஷ்ணனின் நண்பர்கள் அவருடன் சண்டை போடத் தொடங்கிவிட்டார்கள். அது எதற்குத் தெரியுமா?
நண்பர்களில் ஒருவர் கிருஷ்ணனிடம் சொன்னார்:
“என்னண்ணே, இப்படி ஏமாந்து ஏமாந்து போறியே... அவள் உண்மையில் கர்ப்பிணியே இல்லை. நல்லா கவனிச்சா அவள் வயிற்றில் தலை யணையைக் கட்டிக்கொண்டு வந்தது தெரியும். அவளைப்போய் கர்ப்பிணினு நம்பி பணம் தந்து, பிரசவமும் நல்லபடியா நடக்கும்னு வாழ்த்துறி யேண்ணே... இப்படியா ஏமாறுவாங்க?”
புன்னகைத்தபடியே இதனைக் கேட்டுக் கொண்டிருந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பேசத் தொடங்கினார்:
“அவள் கர்ப்பிணி இல்லை என்பதும், வயிற்றில் தலையணையைக் கட்டிக்கொண்டு ஒரு கர்ப்பிணியைபோல நடித்தாள் என்பதும் எனக்கு அவள் வந்தவுடனேயே தெரிந்துவிட்டது. தேவைதானே அவளை இதுபோலப் பொய் சொல்ல வைத்திருக்கிறது. பாவம், அவள் என்ன செய்வாள்? தவிரவும் ஒரு நடிகனிடமே எவ்வளவு திறமையாக நடித்திருக்கிறாள் அவள். அந்த அற்புதமான நடிப்பைப் பாராட்டி நான் கொடுத்த வெகுமதிதான் நான் அவளுக்குச் செய்த இந்தப் பண உதவி, நான் ஒன்றும் ஏமாறவில்லை...”
- என்று சொல்லிச் சிரித்தார் அவர். எல்லோ ரும் வியந்து வாயடைத்து நின்றார்கள். மாறுபட்ட இந்த அருங்குணம்தான் அவரது சிறப்பு.
தான் கலைத்துறையில் சம்பாதிப்பதெல்லாம் இல்லை என்று வருகிறவர்களுக்குக் கொடுப்ப தற்காக மட்டும்தான் என்று அறிவித்துவிட்டு அள்ளித் தந்தவர் கலைவாணர். வறுமையான தொரு குடும்பத்திலிருந்து நாடக உலகம் வந்து சேர்ந்தவர் கிருஷ்ணன். அவரைப்போல அள்ளி அள்ளி வழங்கிய இன்னொரு கலைஞனை திரையுலகம் இன்றுவரையில் கண்டதில்லை.
ஒருமுறை பத்திரிகையொன்றின் நிருபர் கலைவாணரிடம் கேட்டார்:
“மிகவும் ஏழ்மையான பின்னணியிலிருந்து கலையுலகிற்கு வந்தவர் நீங்கள். நீங்கள் மிகப்பெரிய திரைப்பட நட்சத்திரம் ஆகிவிட்டீர்கள். இப்போது நீங்களும் ஒரு பணக்காரர்தானே?” கலைவாணர் அதற்கு இப்படி பதில் சொன்னார்:
“ஆமாம், இப்போது நான் ஒரு பணக்காரன் தான். மற்ற பணக்காரர்களைப்பற்றி எனக்குத் தெரி யாது. ஆனால், நான் பணம் சம்பாதிப்பதற்கு ஒரே யொரு காரணம்தான். இல்லை என்று வருகிறவர் களுக்குக் கொடுப்பதற்காக மட்டும்தான்!”
- என்றார். இதை அவர் தன் மரணம் வரை யிலும் தொய்வில்லாமல் தொடர்ந்தார்.
இன்னொரு நாள் நாதஸ்வரக் கலைஞன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு ஒருவர் வந்தார். தான் மிகவும் நன்றாக நாதஸ்வரம் வாசிப்பேன் என்றும் அதைக் கேட்டுவிட்டு ஏதாவது உதவ வேண்டும் என்றும் அந்த நபர் கலை வாணரை வேண்டினார். கலைவாணரும் அதற்குச் சம்மதித்து அவரை வாசித்துக்காட்டு மாறு வேண்டினார். வந்தவர் நாயனத்தை வாசிக்கத் தொடங்கினார். அனைவர் முகங்களிலும் அதிருப்தி ரேகைகள். ஆனால், கலைவாணரோ அந்த நாயனத்திலிருந்து வந்த ஒலியைக் கேட்டு ஆகா, சபாஷ், அருமை என்று சொல்லிக் கொண்டிருந்தார். உடனிருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
நாயனத்தைச் சிறிது நேரம் அந்த நபர் வாசித்து முடித்தபோது கலைவாணர் அவரை வெகு வாகப் பாராட்டினார். வழக்கம்போல தன் கைக்கு வந்த பணத்தை எடுத்து அவரிடம் தந்துவிட்டு அவரை இன்முகத்தோடு அனுப்பி வைத்தார். உடனிருந்த நண்பர் ஒருவர் கேட்டார்:
“இவ்வளவு அபசுரமாக வேறு எவரும் வாசிக்க முடியாது. அத்தனை மோசமாக வாசித்தவனை ஆகா, ஓகோவெனப் பாராட்டிப் பணம் தருவது நியாயமா?”
கலைவாணர் சொன்னார்:
“அவன் அபசுரமாகத்தான் வாசித்தான். சொல்லப்போனால் அவனுக்கு வாசிக்கவே தெரிய வில்லை. இருந்தாலும் நான் ஏன் பணம் கொடுத்தேன் தெரியுமா? அபசுரமாக அவன் வாசித்தாலும் அதிலிருந்து வெளிவந்த ஓசை யானது என் காதுகளில் பசி... பசி... பசி... என்றே விழுந்தது. அதனால்தான் அவனுக்குப் பணம் தந்தேன். அவன் மன மகிழ்ச்சியோடு போக வேண்டும் என்பதற்காகவே அவன் வாசித்ததைப் பாராட்டிவைத்தேன்!”
உதவி செய்கிற இயல்பு என்பது கலைவாண ருக்கு விருப்பச் செயல்களில் ஒன்றாகவே ஆகி விட்டிருந்தது. அவரால் பிறருக்கு உதவாமல் இருக்கவே முடியாது என்கிற நிலைகூட வந்தது. எப்போதும் காலையில் அவர் வீட்டிலிருந்து வெளி யேறுகிறபோது வாசலில் பத்துப்பேர் அவரிடம் தர்மம் வாங்கும்பொருட்டு நிற்பார்கள். போகிற போது அவர்களுக்கு பணஉதவிகளைச் செய்து விட்டுச் செல்வார் கலைவாணர். சொந்தமாகப் படமெடுத்ததாலும், கொலை வழக்கொன்றை எதிர்கொள்ள நேர்ந்ததாலும் வறுமைநிலையைக் கலைவாணர் மீண்டும் அடைய நேர்ந்தது. அந்தச் சமயத்தில் அப்படித்தான் ஒருநாள் காலை வாசலில் நின்றுகொண்டிருந்தவர்களுக்குத் தருவதற்கு அவரிடம் பணமில்லை. என்ன செய்யலாம்? யோசித்தார் அவர்.
கார் ஓட்டுனரை வீட்டின் பின்சாலைக்கு ஓட்டிச் செல்லுமாறு கூறிவிட்டு, புழக்கடை வழியாகப் பின்சாலைக்குச் சென்ற கலைவாணர் யார் கண்ணிலும் படாமல் காரில் ஏறிக் கிளம்பினார். தர்மம் வாங்க வந்தவர்களை ஏமாற்றிவிட்டுச் செல்லத்தான் இப்படிச் செய்தாரா என்றால் அது தான் இல்லை. தயாரிப்பாளர் லேனா செட்டியாரின் வீட்டிற்கு வாகனத்தை விரைவாக ஓட்டிச்செல்லு மாறு ஓட்டுநரைப் பணித்தார். காலையிலேயே கலைவாணரை எதிர்பாராத லேனா செட்டியார் வந்த காரணம் கேட்டார். கலைவாணரோ ஒரு நூறு ரூபாய் கடனாகத் தேவை என்று அவசரப்படுத்த, செட்டியாரும் உடனே அவர் கேட்ட பணத்தை எடுத்துக் கொடுத்தார்.
வேறேதும் பேசாமல் வாகனத்தை நேராக தனது வீட்டின் வாசலுக்கு ஓட்டிச்செல்லுமாறு கூறினார் கலைவாணர். வீடு வந்துசேருமுன்னரே வழியில் தருமம் வாங்க வந்தவர்கள் ஏமாற்றத் தோடு திரும்பிப் போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் அருகே காரை நிறுத்தச்சொன்னார் கலைவாணர். கீழே இறங்கியவர் அவர்களிடம் அந்த நூறு ரூபாயைக் கொடுத்து எல்லோரும் பிரித்து எடுத்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். வறுமையினால் கூட அவரின் உதவும் கரங்களைக் கட்டிப்போட்டு விட இயலவில்லை.
நாடகத்துறையில் அனுபவம் பெற்றபின் ஏறக்குறைய 125 படங்களில் நடித்தவர் கலை வாணர். அவற்றுள் தனது காதல் மனைவி டி.ஏ. மதுரத்துடன் ஜோடியாக சுமார் 100 படங்கள். உலகில் வேறொரு நகைச்சுவை இணை எவரும் இத்தகையதொரு சாதனையைச் செய்திட வில்லை. கணவனும் மனைவியும் இணைந்து கலைக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையை - கௌ ரவத்தை உண்டாக்கிவிட்டார்கள். பாமர ரசி கர்கள் மனங்களில் அறிவியல் சிந்தனைகளை நகைச்சுவை என்ற பெயரில் நன்கு விதைத்த மா கலைஞர் கலைவாணர். மக்களிடையே மண்டிக் கிடந்த மூடத்தனங்களை அகற்றுவதற்காகவே நடிப்புக் கலையைக் கருவியாக்கிய அறிவுக் கலை ஞர் அவர். நகைச்சுவைக் காட்சிகளின் வாயிலாக வும், கருத்துள்ள பாடல்களின் வழியேயும் பகுத்த றிவுக் கருத்துக்களை மக்கள் நெஞ்சங்களில் வெள்ளமெனப் பாய்ச்சி மகிழ்ந்தார் அவர்.
பொதுவுடமை இயக்கத் தலைவர் ஜீவாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். சோவியத் ரஷ்யா சென்று வந்த பின் கம்யூனிசத்தின் மேன்மையைப் பிரச்சாரம் செய்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு நிதி திரட்டியும் தந்தார்.
மகாத்மா காந்தி மீதும் தேசிய இயக்கத்தின் மீதும் பெருமதிப்புக் கொண்டவராய்த் திகழ்ந்தார்.
தேசிய, திராவிட, கம்யூனிச இயக்கங்களின் கலவையாக காலத்தின் கலைஞராக மிளிர்ந்தார். மக்கள் உள்ளங்களில் நிறைந்தார்.
தம் கலைப்பணி ஈட்டித்தந்த செல்வங்களை யும் அதைத் தாம் அடையக் காரணமாக இருந்த எளிய மக்களிடத்திலேயே திருப்பித் தந்த வள்ளல் பெருந்தகையாகவே அவர் வாழ்ந்தார். வெறும் 49 ஆண்டுகால வாழ்க்கைதான் அவருக்கு வாய்த்தது. அதிலும் ஒரு நூற்றாண்டுகால நிறை வாழ்வை வாழ்ந்துவிட்டுப்போன ஒப்பாரும் மிக்கா ருமில்லாத கலைமேதை அவர். அருள் உள்ளத் தால் நெடிதுயர்ந்து நின்ற பெருங்கலைஞரான அவர் தமிழ் மக்களின் பெருமைகளுள் முதன்மை யானவராவார். என்றென்றும் நினைந்து போற்றுதலுக்குரியர் கலைவாணர்!
நவம்பர் 29: கலைவாணர்
என்.எஸ்.கிருஷ்ணனின் 115ஆவது பிறந்தநாள்!