articles

நமக்குந்தான் வேண்டும் மகளிர் தினம் - மதுக்கூர் இராமலிங்கம்

“நமக்கு எதற்கு மகளிர் தினம்?” என்ற தலைப்பில் கோதை ஜோதி லெட்சுமி எழு திய கட்டுரையை சர்வதேச மகளிர் தினத்திற்கு  முதல் நாள் வெளியிட்டு மகளிர் தினத்தை ‘சிறப்பித்துள்ளது’ தினமணி ஏடு. கோதை ஜோதி லெட்சுமி என்பவர் அவ்வப்போது தின மணி ஏட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்தி யல் அடிப்படையில் பழங்கால இந்தியாவில் எல்லாமே இருந்தது. பெண்கள் சுபிட்சமாக இருந்தார்கள் என்று பெரும் உருட்டாக உருட்டுகிறவர்தான். அதே பாணியில்தான் இப்போதும் உண்மைக்கு மாறாக உருட்டி யிருக்கிறார். இதே கட்டுரையாளர் முன்பு மனுஸ்மிருதியை ஆதரித்து இதே தினமணி யில் எழுதியிருந்தார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் மார்க்சியம், அந்நிய தத்துவம் என்றும், இந்தியாவை மார்க்சியம் தான் சிதைத்தது என்றும் உளறிக் கொட்டி வாங்கிக் கட்டிக் கொண்டார். அந்நியத் தத்துவமான பாசிசத்தை இந்தியாவில் கொண்டு வர முயலும் கூட்டத்தை சேர்ந்தவர்தான் மேற்படியார். ஆர்.என்.ரவி உளறலின் நீட்சிதான் கோதை ஜோதி லெட்சுமியின் கட்டுரையும்.

இந்தியாவில் மகளிர் தினத்தை கொண்  டாட வேண்டிய அவசியம் இல்லை. இங்கு பெண்களுக்கு குடும்பமே பாதுகாப்பு. ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் வாக்குரி மைக்காக போராடிக் கொண்டிருந்த காலத்தில்  வெள்ளையனை எதிர்த்து மகாராணியாக இருந்த பெண்கள் ராணுவத்திற்கு தலைமை யேற்று போராடினார்கள். ராணுவத்திலும் பெண்கள் படைப் பிரிவு இருந்தது. இங்கு பெண்கள் எப்போதும் நன்றாகவே இருந்து  வந்துள்ளார்கள். எனவே, கம்யூனிஸ்ட்டு களின் தலைமையில் பெண்கள் தங்கள் உரி மைக்காக போராடியதால் கொண்டாடப்படும் மகளிர் தினம் தேவையில்லை என்பதுதான் இந்தக் கட்டுரையின் சாராம்சம். ஆனால் அதே கட்டுரையில் சுவாமி விவே கானந்தரின் கருத்து ஒன்றை மேற்கோளாக காட்டியுள்ளார் கட்டுரையாளர். “பெண்களை நாம் மிகுந்த அடிமைத்தனத்தில் தள்ளி கொடுமைகள் இழைத்துவிட்டோம். நாம்  பெண்களை தாழ்ந்தவர்கள் என்று வசை பாடுகிறோம். விளைவு நாம் மிருகங்களாக,  அடிமைகளாக, முயற்சியற்றவர்களாக, ஏழைகளாக இருக்கிறோம்” என்று விவேகா னந்தர் குறிப்பிட்டுள்ளதாக கூறுகிறார். விவேகானந்தர் சாடியது இவர் வியந்தோதும் அன்றைய இந்தியா குறித்து தானே. ஐரோப்பிய நாடுகளைப் பற்றி அல்லவே!

வெள்ளையரை எதிர்த்து மகாராணிகள் போராடியதாக கூறுகிறார் கட்டுரையாளர். வீரமங்கை வேலுநாச்சியார், ஜான்சிராணி  போன்றவர்கள் போராடியது உண்மைதான்.  அதுவும் கூட கணவனுடைய அரசுரிமை  பெண்ணுக்கு கிடையாது என்று அந்நிய ஆட்சியாளர்கள் கூறியதை எதிர்த்துத் தான். போராடும் வாய்ப்பு எல்லா மகாராணி களுக்குமா கிடைத்தது? ஸதி என்ற பெயரில் கணவன் இறந்துவிட்டால் உடன்கட்டை ஏற வேண்டும் என்ற சனாதனத்தின் கொடிய கட்டளையால் எரித்து கொல்லப்பட்ட மகா ராணிகளின் எண்ணிக்கை எத்தனை தெரி யுமா? இந்த கொடுமையை பண்பாடு என்ற பெயரில் இன்றைக்கு கொண்டாட முடியுமா? ராஜா ராம் மோகன் ராய் போன்றவர்கள் பெரும் போராட்டத்தை நடத்தி இந்தக் கொடு மையை தடுக்க முயன்றனர். ஆனால் அன்றைய சனாதனிகள் ஸதியை நியா யப்படுத்தி பேசினர் என்பது மட்டுமல்ல,  அண்மையில் நாடாளுமன்றத்தில் பாஜக  எம்.பி. சந்திரபிரகாஷ் ஜோஷி என்பவர் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை புகழ்ந்து  பேசியதை கண்டு இந்தியாவே கொதித் தெழுந்தது. மேற்கத்திய கலாச்சாரத்தில் பெண் போகப்பொருள். ஆண் அனுபவிப்பதற்காக படைக்கப்பட்டவள். இதனால் அடிப்படை உரி மைகள் கூட இல்லாத பெண்கள் உரத்து கேட்க  வேண்டிய நிலை இருந்தது என்கிறார் கட்டு ரையாளர். இதே நிலவுடைமை ஆணாதிக்க கருத்தோட்டம் இந்த மண்ணிலும் வலுவாக இருந்தது. மதத்தின் பெயரால், சாதியின் பெயரால் அது நியாயப்படுத்தப்பட்டது. சொத்துடைமையின் பெயரால் பிஞ்சு பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. குழந்தை திருமணத்தை தடுக்கவும், பெண்ணின் திருமண வயதை உயர்த்தவும் பெரும் போராட்டத்தை இந்தியா வில் நடத்த வேண்டியிருந்தது.

விதவைகள் மறுமணம் செய்து கொள்  வது சனாதனத்தின் பெயரால் இன்றளவும் தடுக்கப்படும் நிலை உள்ளது. மனைவி இறந்துவிட்டால், கணவன் மறுமணம் செய்து  கொள்வது இயல்பான ஒன்றாகவும், ஆனால் கணவனை இழந்த பெண் மறுமணம் செய்து கொள்வது கனவிலும் நினைத்து பார்க்கக் கூடாத பெரும் பாவமாகவும் சனா தனத்தால் போதிக்கப்பட்டது. இந்தியாவில் பிரதமராக இருந்த இந்திரா காந்தி அம்மையார், காஞ்சி சங்கராச்சாரி யாரை சந்திக்க வந்தபோது, அவரை விதவை  என்று சொல்லி கிணற்றடிக்கு அப்பால் அமர வைத்து அவரின் முகத்தை கூட பார்க்காமல் பேசி அனுப்பிய விபரத்தை “தெய்வத்தின் குரலில்” படித்து தெரிந்து கொள்க! பிரதமராக இருந்த ஒருவருக்கே இந்த நிலை என்றால் சாதாரணப் பெண்களின் நிலை என்னவாக இருந்திருக்கும். பொட்டுக் கட்டுதல் என்ற பெயரில் பெண்  களுக்கு இழைக்கப்பட்ட உரிமைகள் கொஞ்சமா, நஞ்சமா? மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், முத்துலெட்சுமி அம்மையார், பெரியார் உள்பட இந்த இழிவை ஒழிக்க நடத்திய போராட்டங்கள் மகத்தானவை. தமி ழக சட்டமன்றத்தில் தேவதாசி முறையை ஒழிக்க மசோதா கொண்டு வந்த போது, அந்த  முறையை ஆதரித்துப் பேசிய பழமை பெருச்சாளிகள் இதே பண்பாடு, வெங்காயம் என்றெல்லாம் தான் பேசித் திரிந்தார்கள். 

புராணக் கதைகளிலும், மநு நூலிலும் பெண்கள் மிக இழிவாகவே சித்த ரிக்கப்பட்டுள்ளனர். சீதையை அக்னி பிர வேசம் செய்யச் சொன்னது எதனால்? கண வன் தர்மன் சூதாடி தோற்க, பாஞ்சாலியை சபையில் துகிலுரிய முயன்ற கொடுமை எதனால் நடந்தது? கணவனின் உடைமை தான் மனைவி என்ற அழுகிய சிந்தனை தானே? இதனை எதிர்த்துத் தானே மகாகவி பாரதி பாஞ்சாலி சபதம் பாடினார். இன்றைக்கும் வரதட்சணை கொலை கள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் நடக்காத நாள் உண்டா? பரமக்குடியில் ஒரு பள்ளி மாணவிக்கு நடந்  துள்ள கொடுமை மனதை பதற வைக்கிறதே! அமெரிக்காவின் கூலித் தொழிலா ளர்களாக இருந்த பெண்கள், வேலை நேரக்  குறைப்பு, நியாயமான கூலி ஆகியவற்றுக் காக நடத்திய போராட்ட நாளே அங்கு மக ளிர் தினம் எனக் குறிப்பிட்டனர் என கட்டுரை யாளர் சரியாகக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பஞ்சாலைகளில், பட்டாசு,  தீப்பெட்டி, பீடி சுற்றுதல் உள்ளிட்ட முறை சாராத் தொழில்களில் பெண்களின் உழைப்பு  ஈவிரக்கமின்றி இன்றைக்கும் சுரண்டப்படு கிறதே! நூற்பாலைகளில் சுமங்கலி, மகா லெட்சுமி திட்டம் என்று மங்களகரமாக பெயர் வைத்து சிறுமிகள் கொடூரமாக சுரண்டப்படும் கொடுமை கட்டுரையாளருக்கு தெரியாதா? தினமணிக்குத் தான் தெரியாதா?

மகளிர் தினம் என்பது கொண்டாட்டம் அல்ல, பெண்களின் உழைப்பைச் சுரண்டு வதற்கு எதிராகப் போராட உறுதியேற்க வேண்டிய தினம். பெண்கள் கல்வி பெற வேண்டும் என கட்டுரையாளர் கூறுவதில், யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் சனாதனம் பெண்கள் கல்வி பெறுவதைக் கூட மறுத்தது. பெண்ணாகப் பிறப்பதே பாவம்  என போதித்தது. இதையெல்லாம் அடித்து நொறுக்கியது ஜனநாயக எழுச்சிகள் தான். நமக்கு எதற்கு மகளிர் தினம் என்ற கேள்வி அபத்தமானது. நமக்குந்தான் வேண்டும் மகளிர் தினம். ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாய் வாழ்வோம் என்ற பாரதியின் கனவு நனவாக நமக்கு வேண்டும் மகளிர் தினம். கம்யூனிஸ்ட் இயக்கத்தினால் உருவாக் கப்பட்டது என்பதால் மகளிர் தினத்தை இவர் மறுக்கலாம். ஆனால் பெண்ணுரிமை என்பது பொதுவுடைமை இயக்கத்தினால் வளர்க்கப்பட்டது. அது தொடர்ந்து அந்தப் பணியில் ஈடுபடும்.