articles

img

உக்ரைன் - ரஷ்யா போர் முடியுமா? - அ.அன்வர் உசேன்

ரஷ்யா உக்ரைன் போர் 50 நாட்களை நெருங்கு கிறது. போர் எந்த காரணத்துக்காக இருந்தாலும் அது அழிவுப்பூர்வமானதே! மனித உயிர்களும் கடும் உழைப்பால் உருவான வளங்களும் உற்பத்தி சாதனங்களும் அழிகின்றன. எனவே போர் உட னடியாக நிற்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்து. எனினும் கள நிலவரங்களின்படி, போர் நிறுத்தம் எப்பொ ழுது என்பது தெரியவில்லை. அமெரிக்க தலைமை யிலான நேட்டோ, ரஷ்யாவுக்கு எதிராக தூண்டிய இந்தப் போரில் உக்ரைன் பகடைக்காயாக மாறிப்போனது. போரின் திசைவழி என்ன என்பதில் இரு கருத்தாக் கங்கள் முன்வைக்கப்படுகின்றன. ரஷ்யா பின்னடை வை சந்தித்து வருகிறது எனும் கருத்தை மேற்கத்திய  ஊடகங்கள் வலுவாக முன்வைக்கின்றன. தமது இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டுள்ளோம் என ரஷ்ய ராணுவம் கூறுகிறது. களத்தில் நடக்கும் ஆயு தப்போர் மட்டுமல்லாது பொருளாதாரப் போரையும் தகவல் பிரச்சார போரையும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது திணித்துள்ளன. 

வெற்றியா? பின்னடைவா?

உக்ரைனின் தலைநகரான கீவ் நகரை நோக்கி 60 கி.மீ நீளமுள்ள ரஷ்யப் படைகள் அணி வகுத்து நின்றதை பல மேற்கத்திய நாடுகள் புகைப்படங்களாக வெளியிட்டன. ஆனால் இப்பொழுது அதில்  மிக கணிசமான படைகள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு விட்டன. உக்ரைனின் கடும் தாக்குதல் காரணமாகவே ரஷ்யா பின்வாங்கிவிட்டது எனவும் ரஷ்யாவின் இயலா மையை இது வெளிப்படுத்துகிறது எனவும் மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.

ரஷ்ய ராணுவம் முற்றிலும் மாறு பட்ட மதிப்பீட்டை முன்வைக்கிறது. நவீன போர் முறை களில் ஒன்று Feint என்பதாகும். இந்த போர் முறை யின்படி ஒரு ராணுவம் தனது இலக்கை தாக்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் செய்வது; அந்த இலக்கை நோக்கி படைகளை நகர்த்துவது. இதன் மூலம் எதிர் ராணுவத்தை அந்த இலக்கை காப்பதற்கு தனது முழு பலத்தையும் குவிக்க வைப்பது. எதிர் ராணுவம் தனது படைகளை குவித்தவுடன் அந்த இலக்கை சுற்றி வளைத்து ராணுவ வேலி அமைத்து விட்டு, இன்னொரு இலக்கை- தனது உண்மையான இலக்கை நோக்கி படைகளை நகர்த்துவது. அதாவது எதிர் ராணுவத்தை ஒரு இலக்கை தாக்கப்போவதாக நம்பவைத்து பின்னர் உண்மையான இலக்கை தாக்குவது என்பது இந்த போர் உத்தியாகும். இதனை முதலில் பயன்படுத்தியது அமெரிக்க ராணுவம். வளை குடா போரில் இராக் ராணுவத்தை இப்படி சுற்றி வளைத்துவிட்டு தனது இலக்கை அமெரிக்கா தாக்கி ‘வென்றது’. அதே உத்தியை ரஷ்ய ராணு வம் இப்போது  பயன்படுத்துகிறது. போரின் முதல் கட்டத்தில் கீவ் நகரம் ரஷ்யாவின் உண்மையான இலக்கு அல்ல; டோன்பாஸ் பகுதிதான் ரஷ்யாவின் உண்மையான இலக்கு. ஆனால் கீவ் நகரை தாக்கப் போவதாக உக்ரைன் ராணுவத்தை நம்பவைத்து அதன் படைகளில் பாதிக்கும் அதிகமாக கீவ் நகருக்குள் தள்ளி விட்டு, டோன்பாஸை சுற்றி வளைத்து விட்டது. இப்பொழுது டோன்பாஸ் பகுதி மீது முழு தாக்கு தலையும் ரஷ்ய ராணுவம் நடத்தும் பொழுது கீவ் நகரில் உள்ள உக்ரைன் ராணுவம் டோன்பாஸ் பகுதியில் சிக்கி யுள்ள தனது ராணுவத்துக்கு உதவிட முன்வர முடிய வில்லை.

டோன்பாஸ் பகுதி என்பது கிழக்கு உக்ரைனில் ரஷ்ய மொழி பேசும் மக்கள் வாழும் பகுதி ஆகும். உக்ரை னின் மக்கள் தொகையான 4 கோடிப் பேரில் சுமார் 85 முதல் 90 லட்சம் பேர் வரை டோன்பாஸ் பகுதியில் வசிக்கின்றனர். இங்கு லுகான்ஸ்க் மற்றும் டோனட்ஸ்க் எனும் இரு மாநிலங்கள் உள்ளன. அவை இரண்டும் 2014ஆம் ஆண்டு உக்ரைனில் அமெரிக்காவால் தூண்டப் பட்ட “மைதான் புரட்சி” என அழைக்கப்பட்ட நாஜிக்க ளின் கலகங்கள் காரணமாக, அதை எதிர்த்து,  தம்மை  சுதந்திர பகுதிகளாக அறிவித்துக் கொண்டன. கடந்த 7 ஆண்டுகளில் இந்த மக்கள் கடும் துன்பங்களை சந்தித்தது மட்டுமல்ல; சுமார் 15,000 பேர் உக்ரைன் படைகளால் - குறிப்பாக அசோவ் பட்டாலியன் எனப் படும் நாஜிக்களால் படுகொலை செய்யப்பட்டனர். டோன்பாஸ் மக்களை ஒடுக்கும் பொறுப்பை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, நாஜிக்கள் வசம் ஒப்படைத்துவிட்டதாகவே தெரிகிறது. நாஜிக்களை மீறி ஜெலன்ஸ்கியால் எதுவும் செய்ய இயலவில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன. எனவேதான் இந்த பகுதியை விடுவிப்பது என்பது  ரஷ்ய ராணுவத்தின் முக்கிய இலக்காக அமைந்தது. தற்சமயம் 2015க்கு முன்பு  இருந்த டோன்பாஸ் பகுதியில் சுமார் 80% விடு விக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள பகுதிகளில் கடும் போர் நடக்கிறது. 

உக்ரைனின் இழப்புகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன. சுமார் 21,000 வீரர்கள் உயிரி ழந்துள்ளனர். 14,000 பேர் வாழ்வு முடங்கும் அளவுக்கு காயமடைந்துள்ளனர். ஏராளமான டாங்கிகளும் ஏவு கணை செலுத்தும் வாகனங்களும் அழிக்கப்பட்டுள் ளன. கப்பற்படை முற்றிலும் முடங்கிவிட்டது. விமானப் படையும் செயலில் இல்லை. உக்ரைனின் பெரும் பகுதி வான் எல்லைகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த அளவுக்கு இல்லையெனினும் ரஷ்யா வும் கணிசமான இழப்புகளை சந்தித்துவருகிறது. எனினும் ரஷ்யாவின் கை மேலோங்கியுள்ளது என்பதே இன்றைய நிலை. போரை நீட்டிக்க வைக்க உக்ரை னுக்கு மேற்கத்திய நாடுகள் ஏராளமான ஆயுதங்க ளை தருவதற்கு முயல்கின்றன.  ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. நேட்டோவில் சேருவது இல்லை என உக்ரைன் தெரி வித்துள்ளது. ஆனால் கிரிமீயா/டோன்பாஸ் பகுதிகள் குறித்து கருத்தொற்றுமை ஏற்படவில்லை.  எனவே பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லை.

பொருளாதாரப் போர்

இன்றைய உலகில் போர் என்பது ஆயுதங்களை பயன்படுத்துவது மட்டுமல்ல; பொருளாதாரப் போர்/ தகவல் போர் ஆகியவையும் திணிக்கப்படுகின்றன. ரஷ்யா மீது வரலாறு காணாத வர்த்தக தடைகளும் அர சியல் தடைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இது வரை சுமார் 8000க்கும் அதிகமான தடைகள் ரஷ்யா மீது பாய்ந்துள்ளன. ரஷ்யாவின் சுமார் 600 பில்லியன் டாலர்கள் அதாவது ரூ.45 லட்சம் கோடி நிதியை மேற் கத்திய நாடுகள் முடக்கியுள்ளன. ரஷ்ய நிறுவனங் கள் உலகம் முழுவதும் வங்கி முறையை பயன்படுத்த இயலாத அளவுக்கு தடைகள் அமல்படுத்தப்பட்டுள் ளன. ரஷ்யாவின் பூனைகளும் மரங்களும் கூட தடை களுக்கு உள்ளாகியுள்ளன எனில் மேற்கத்திய நாடு களின் வன்மத்தை நாம் புரிந்து கொள்ளலாம். ஆப்பிள் அலைபேசி நிறுவனம்/மெக்கனால்டு போன்ற ஏராள மான நுகர்வுப் பொருள் நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறிவிட்டன. ஆனால் இவை ரஷ்யாவை பாதிக்காது. ஏனெனில் சீன/இந்திய நிறுவனங்கள் இந்த இடத்தை நிரப்ப முடியும். ஆனால் சில உற்பத்தி நிறுவ னங்களும் வெளியேறி உள்ளன. இவை ரஷ்யாவின் தொழில் முன்னேற்றத்தை பாதிக்கும்.

ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள் இரு முனை கத்தியாக மாறிவிட்டன. ரஷ்யாவை பாதிக்கும் அதே சமயத்தில் பல மேற்கத்திய நாடுகளும் கடும் துன்பங்களை சந்திக்கின்றன. ஐரோப்பாவின் எரிசக்தி தேவையில் 40% ரஷ்யாதான் தருகிறது. ஹங்கேரி/பின்லாந்து போன்ற தேசங்கள் 75 முதல் 90% வரை ரஷ்யாவை சார்ந்துள்ளன. எனவே ரஷ்யா மீதான தடைகள் மேற்கத்திய நாடுகளையும் பதம் பார்த்து வருகின்றன. அனைத்து தேசங்களிலும் எண்ணெய் விலையும் உணவுப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளன. பூமிக்கடியில் அவசரத் தேவைக்காக சேமித்து வைத்திருக்கும் எண்ணெய்யை வெளியே எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம்  அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. தான் மிகவும் வன்மத்துடன் அழிக்க முயன்ற அதே வெனிசூலா விடம் எண்ணெய்க்கு கெஞ்ச வேண்டிய நிலை அமெ ரிக்காவுக்கு உருவாகியுள்ளது. மேற்கத்திய நாடுகளின் உழைக்கும் மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள் ளனர். அவர்களின் பொறுமைக்கு எல்லைக்கோடு என்ன என்பது வரும் நாட்களில் தெரியும்.

அதே சமயத்தில் அமெரிக்காவின் டாலருக்கு முதல் முறையாக பெரிய சவால் எழுந்துள்ளது. சீனாவும் ரஷ்யாவும் டாலருக்கு மாற்றாக ரூபிள்-யுவான் நாண யங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளன. சவூதி/ அமீரகம் போன்ற தேசங்களும் டாலரை மட்டும் நம்பி யிருக்காமல் ரூபிள் அல்லது யுவான் பக்கம் சாய தொ டங்கியுள்ளன. அமெரிக்காவின் மிரட்டலையும் மீறி இந்தியா ரஷ்யாவின் எண்ணெய்யை ரூபாய் – ரூபிள் மூலம் வாங்க முடிவு செய்துள்ளது. இவையெல்லாம் எதிர்காலத்தில் டாலரின் ஆதிக்கத்தை சிதைக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த பொருளாதாரப் போரில் ரஷ்யா பாதிக்கப்படும் என்றாலும் மேற்கத்திய நாடுகள் முழு வெற்றி அடைந்துவிட்டன என கூற இயலாது.

தகவல் போர்

ஐரோப்பிய நாடுகளில் ரஷ்ய மக்கள் மற்றும் ரஷ்ய சின்னங்கள் மீது கடும் தாக்குதல்கள் நடந்து வரு கின்றன. இரண்டாம் உலகப் போரில் பல ஐரோப்பிய நாடுகளை பாசிசத்தின் பிடியிலிருந்து விடுவிக்க செஞ்சேனை பெரிய தியாகங்களை செய்தது. அதற் காக பல நாடுகளில் செஞ்சேனைக்கு நினைவுச் சின்னங் கள் உருவாக்கப்பட்டன. அவையெல்லாம் இன்று அவ மானப்படுத்தப்படுகின்றன. ரஷ்ய ஆயுதங்களில் ‘Z’ எனும் எழுத்து உள்ளதால் இந்த எழுத்தையே பல ஐரோப்பிய நாடுகள் அகற்றி வருகின்றன.  ரஷ்யா மீது ஏராளமான அவதூறுகளை மேற் கத்திய ஊடகங்கள் திட்டமிட்டு பரப்புகின்றன. ஒருபுறம் ரஷ்ய ஊடகங்கள் அனைத்தும் தடை செய்யப் பட்டுள்ளன. மறுபுறம் பொய்ச் செய்திகள், அவதூறு கள் என மேற்கத்திய மக்கள் தமது அரசாங்கங்களின் கருத்துகளை மட்டுமே கவனிக்க வேண்டும் எனும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அவதூறு பிரச்சா ரத்தில் டுவிட்டர்/ முகநூல்/ வாட்சப்/ இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்கள் மேற்கத்திய அரசாங்கங்க ளின் ஊதுகுழல்களாகவே மாறிப்போயுள்ளன. ரஷ்யக் கணக்குகளை மட்டுமல்ல; மாற்று கருத்துகளை முன் வைக்கும் மேற்கத்திய கணக்குகளையும் மேற்கண்ட சமூக ஊடகங்கள் முடக்குகின்றன.  இதுவரை இதற்கு  விதிவிலக்காக டெலிகிராம் எனும் சமூக ஊடகம் மட்டும் உள்ளது. டெலிகிராமும் மிரட்டலுக்கு அடிபணியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். துரதிர்ஷ்ட வசமாக பெரும்பாலான மேற்கத்திய நாடுகளின் மக்கள் இந்த பொய்களை நம்புகின்றனர். தமது ஜனநாயக வடிவம்தான் ஈடிணை இல்லாதது என அம்மக்கள் நம்புவதன் விளைவு இது!

முன்னாள் சோசலிச - இந்நாள் முதலாளித்துவ ரஷ்யாவுக்கும் மேற்கத்திய முதலாளித்துவ உல குக்கும் இடையே நடைபெறும் இந்த போரில் அனைத்து தேசங்களின் உழைக்கும் மக்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படும் நிலை உரு வாகியுள்ளது. நேரடி மோதலில் ஈடுபட மேற்கத்திய நாடுகள் அஞ்சுவதற்கு ஒரே காரணம் ரஷ்யாவிடம் உள்ள அணு ஆயுதங்கள்தான்! உக்ரைன் பிரச்சனை க்கு லெனின் மற்றும் ஸ்டாலின்தான் காரணம் என புடின் வெறுப்பு உமிழ்கிறார். ஆனால் ஸ்டாலினும் பின்னர் சோவியத் யூனியன் பொறுப்பில் இருந்த பிரஷ்னேவ்/ “சமாதானத்துக்கு சமாதானம்- ஏவு கணைக்கு ஏவுகணை” என முழங்கிய ஆன்ட்ரபோவ் ஆகியோர் உருவாக்கிய அணு ஆயுதங்கள்தான் புடி னுக்கு பாதுகாப்பைத் தந்துள்ளன. எனினும் ரஷ்யா செய்யும் சிறு தவறு கூட போரின் திசைவழியை விபரீத மான திசையில் செலுத்திவிடும் ஆபத்து உள்ளது. எனவேதான் இந்த போர் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்பது முதன்மை முழக்கமாக மாறி யுள்ளது.