articles

img

படுகொலை ஆகாது பாலஸ்தீனக் கனவு! - நவகவி

நாற்புறமும் சிறைச்சுவர்கள்; நடுவில் ஒரு திருநாடு!
காற்றுக்கும் கடிவாளம்! சுவாசிக்கப் பெரும்பாடு!
மணல் வீடு போல மாளிகைகள் சரியுதடா!
மழலை ரத்தம் பீரங்கிக் குழாய்களை நிரப்புதடா!

பாலஸ்தீ னத்தில் பசும்புல் நுனி யாவும்
பனித்துளியை அல்ல; பச்சை ரத்தத் துளி ஏந்தும்!
கை கழுவி அல்லாவை துதிக்கும் அடியாரை
கைகழுவி விட்டதடா பென்டகன் மதயானை!

ராக்கெட்டு விவசாயம் ; ரத்தரணம் அறுவடைகள்!
பாக்கெட்டை டாலருக்கே குத்தகைக்கு விட்டவர்கள்!
தானியத்தை அல்ல எங்கள் தாய் தந்தை எலும்பினையே
கோணிப்பை யில் நிரப்பிக் கொடுப்பார் நன் கொடைஎனவே!

கொடுவாளை இஸ்ரேலின் கொலைக்கரத்துக் குக் கொடுத்து,
சவப்பெட்டியை எமக்கு “சன்மானம்” தருவது போல்
“மனிதாபிமான!” உதவி செய்யும் மாய்மாலம்!
வெள்ளை மாளிகையின் வெற்று உபச்சாரம்!

பாலஸ்தீ னத்தில் பற்றிஎரி யும் நெருப்பில்
சொக்கப்பனை கொளுத்துவதே சுகமகிழ்வாய் நினைப்பவரை -
ஐ நா மன்றத்தை அமெரிக்க எருமைகளின்
கட்டுத் தறியாக்கிக் களிப்படையும் கொடியவரை -

அரேபியத்தின் எண்ணைப் பெருவளத்தை
ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுதல் போல் குழாய் போட்டுக் குடிப்பவரை -
பாலைவன மண்ணில் பேரீச்சைக் குலைக்குப் பதில்
தோட்டா, ரவைக் குலைகள் தொங்கினால் மகிழ்பவரை -

கண்டு கொள்க உலகமே !கண்டு கொள்க கயமையை!
குலோப் ஜாமுன் என்று குண்டு தரும் கொடுமையை!

மாகவிஞன் ஷேக்ஸ்பியரின் மேக்பத் மனைவியின்கை 
“அரபுத் தை லம்யாவும் பூசியும் ரத்த நெடி
அகலவில்லை யே “என்று அழுதாள்! அதுபோலே....

அரேபிய வாசனைத் தைலங்கள் அனைத்தையுமே
பாலஸ்தீ னத் தரையின் பரப்பெங்கும் நிரவியுமே....
வெறிநாயாம் இஸ்ரேலின் வெடி மருந்து நாற்றம்
சிறிதேனும் குறைதல் அரிதான  தாகும்!

மருத்துவ நிலையம் பார் மரண நிலையம் என !
கல்விக்கூ டம் பாரீர் கசாப்புக் கூடம் என!
பாடையை பரிசளித்தார் மழலைகளின் தொட்டில் என!
பீரங்கி ஓசை தந்தார் தாலாட்டு ஓசை என!

பாலஸ்தீன வானத்தில் பறவைக்குத் தடை விதித்தார்!
கார்முகிலை அந்நாட்டின் வான்விட்டு விரட்டிவிட்டார்!
குண்டு விமா னத்தை மட்டும் குதூகலமாய் அனுப்பி வைத்தார்!
கந்தகப் புகைக்கிடங்காய் காசாவை மாற்றி வைத்தார்!

தினை அளவாய் பாலஸ்தீன தேசத்தைக் குறுக்கி வைத்தார்!
மலை அளவாய் வெடிச்சரக்கை இஸ்ரேலுக் கனுப்பி வைத்தார்!
சுடர் ஏந்தும் நியூயார்க் சுதந்திரச் சிலை நகம் பார்!
நகப்பூச்சாய் பாலஸ்தீன மழலை ரத்தம் சேகரித்தார்!

மழலையைக் கொன்றால் பின் போராளி கள் ஏது?
மகளிரைக் கொன்றால் பின் பிரசவமே கிடையாது!
அதனால்தான் கொல்லுகிறார் அன்னையரை மழலையரை!
ஆக்கிரமிப் பாளருக்கு கொலைத் தொழிலே வாழ்க்கை முறை!

பாலஸ்தீன மே உனது பரிதவிப்பை எதிரொலிக்க,
வெள்ளை மா ளிகைச்சுவர்கள் விரும்பாது செவிமடுக்க!
ஆனாலும் ஐரோப்பா அதிர்கிறது கண்டாயா?
அட்லாண்டிக் அலைகளுக்குன் ஆவேசம் தந்தாயா?

அராபத்தின் தேசமே அஞ்சற்க அஞ்சற்க!
“சுறாமுன்நான் அயிரைமீன்!” என நெஞ்சில் எண்ணற்க!
உன்னுடைய வீரத்தை தியாகத்தி னைக் கற்க 
முனைந்திடில் புல்நுனியும் வேல்முனையாய் எழும் அறிக!

படுகளத்தில் ஒப்பாரி வைக்காத குரல் உனக்கு!
பகைமுன் தலைகுனியப் பழகாத சிரம் உனக்கு! 
அராபத் கனவுகளை அடைகாக்கும் விழி உனக்கு! 
தளைஅறுப்பாய் நிச்சயமாய்! தவறாது என் கணக்கு!

உன் கனவு மட்டும் அல்ல! உலகத்தின் கனவிதுவே!
உன்னதத்தாய் நா(டு)டடைவாய்! சூள் உரைக்கும் என் கவியே!