articles

img

ஸ்மார்ட் மீட்டர் வருகையால் ஏற்படும் பாதிப்புகளும், பறிபோகும் வேலை வாய்ப்புகளும்! - எஸ்.ராஜேந்திரன்

இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பெருமுதலாளிகளுக்கும் கார்ப்பரேட்களுக்கும் தாரைவார்க்க துடிக்கும் ஒன்றிய பாஜக அரசு, அனைத்து தொழில்களுக்கும் தாய்த் தொழிலான மின்சாரத் துறையையும் விட்டுவைக்க விரும்பவில்லை. மின்சார  சட்டம் 2003-ஐ நிறைவேற்றிய பாஜக அரசு இன்னும்  மாநில மின்வாரியங்களை துண்டாட வேண்டும் என்ற நோக்கில், மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவை 2010,2014,2018,2020,2021,2022 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற துடித்தது. ஆனால் இந்திய  விவசாயிகளின் எழுச்சியால் நிறைவேற்ற இயல வில்லை. எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாடாளுமன்ற நிலைக்குழு விற்கு அனுப்பி உள்ளது. ஆனால், எந்த நேரத்தில் வேண்டு மானாலும் அதாவது மழைக்காலக் கூட்டத்தொடரிலோ அல்லது குளிர்கால கூட்டத்தொடரிலோ மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற முயற்சிக்கலாம்.

மின்சார நுகர்வோர் உரிமை விதிகளில் திருத்தம்

இதனிடையே மின்சாரம் (நுகர்வோரின் உரிமைகள்) விதிகள் 2020-ஐ மின்சாரம் (நுகர்வோர் விதிகள்) திருத்த  விதிகள் 2023-என மாற்றி, சப்தம் இல்லாமல் ஒன்றிய  மின்சாரத்துறை அமைச்சகம் 2023 ஜூன் 14-ல் அரசி தழில் வெளியிட்டுள்ளது. இதன்படி அனைத்து மின் இணைப்புகளிலும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட வேண்டும். மேலும் TOD( Time of Day - Tariff) மீட்டர்  வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களில் 19 கிலோவாட்டுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துகின்ற நுகர்வோர்களுக்கு 2024 ஏப்ரல் 1-க்கு முன்பாக பொருத்தப்பட வேண்டும். விவசாய மின்நுகர்வோர்களைத் தவிர மற்ற அனைத்து மின்நுகர்வோரும் 01.04.2025-க்கு முன்பாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்த வேண்டும்.

ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதால்  ஏற்படும் பாதிப்பு

மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவது தனியார்மயத்தின் ஒரு பகுதியே. தனியார் பெருமுத லாளிகள் ஒப்பந்தம் மூலம் மின் இணைப்புகளில் ஸ்மார்ட்  மீட்டர் பொருத்துவார்களாம். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு தனியார் பெருமுதலாளிகளே பராமரிப்பு பணி செய்வார் களாம். மாநில மின்வாரிய நிர்வாகம் மாதந்தோறும் மீட்ட ருக்கான வாடகை கட்டணமாக ஒரு தொகை செலுத்த வேண்டும். நாளடைவில் இந்த தொகை நுகர்வோரிடம் வசூலிக்கப்படலாம். இதனால், ஏற்கனவே மின் இணைப்பில் நல்ல நிலையில் உள்ள தரமான மீட்டர்களை குப்பைத் தொட்டியில் வீச வேண்டிய நிலை ஏற்படும். மாநில மின்வாரியங்கள் நிதிச்சுமையில் சிக்கியுள்ள சூழலில் இது மேலும் கடன்  சுமையை அதிகரித்து, நஷ்டத்தை அதிகரிக்கின்ற நடவடிக்கை ஆகும். எதிர்காலத்தில் இந்த ஸ்மார்ட் மீட்டரை  பிரிபெய்டு மீட்டராக மாற்றும் திட்டமும் உள்ளது. அவ்வா றெனில் மின்சாரத்தை எவ்வளவு காசுக்கு வேண்டு மானாலும் (மொபைல் ரீசார்ஜ் செய்வது போல) வாங்கிக் கொள்ளலாம். முன் கூட்டியே பணம் செலுத்தும் திட்டம் அம லானால் மானிய விலையில் கிடைக்கும் மின்சாரம்பறிபோகும்.

நேரத்திற்கு ஏற்றவாறு கட்டணம்

உச்சபட்ச நேரத்தில் மின்சாரம் பயன்படுத்துபவர்களி டம் கூடுதல் மின் கட்டணம் 10 சதவீதம் முதல் 20 சதவீதம்  வரை வசூலிக்க ஏற்பாடு; அதாவது நேரத்திற்கேற்றவாறு மின் கட்டணம் வசூலிக்கின்ற நடவடிக்கை அமலுக்கு வரும். மின்சாரம் பயன்படுத்தும் நேரத்தை மூன்று ஒதுக்கீடு  நேரங்களாக பிரித்துள்ளனர். தமிழகத்தைப் பொறுத்த வரை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கீழ்கண்டவாறு நேரத்தை ஒதுக்கீடு செய்துள்ளது:   மின்சாரத்தை காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும்,  மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பயன்படுத்தும் நேரத்தை உச்சபட்ச நேரம் என்று சொல்லி வர்த்தக,  தொழிற்சாலை நுகர்வோரிடம் கூடுதல் மின் கட்டணம் வசூ லிப்பது; நாளடைவில் அனைத்து மின் நுகர்வோர்களுக்கும் உச்சபட்ச நேரத்தில் கூடுதல் மின் கட்டணத்தை நிர்ணயம்  செய்வது தான் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துதலின் நோக்கம்.  ஏனெனில் மக்கள் இந்த நேரத்தில் தான் குழந்தைகள் படிப்பு, சமையல், தொலைக்காட்சி என அதிக மின்சாரத்தை  பயன்படுத்துவார்கள். அதே போல  இரவு 10 மணி முதல் அதி காலை 5 மணி வரை அதிக அளவு பயன்பாடு இருக்காது.  இந்த நேரத்தில் சாதாரண கட்டணமும், 3வது நேரத்தில் அரை உச்சபட்ச நேரமாக கணக்கீடு செய்து கட்டணம் வசூலிக்கப்படும்.

TOD ஒதுக்கப்பட்ட நேரம்         ஒதுக்கப்பட்ட நேரத்திற்கான பணிகள்
மண்டலம் / ஒதுக்கீடு- 1         காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை

மண்டலம் / ஒதுக்கீடு -  2         இரவு 10மணி முதல் மறுநாள் காலை 5மணி வரை
மண்டலம் / ஒதுக்கீடு- 3         காலை 5 மணி முதல் காலை 6 மணி வரை
                                                      காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை

பறிபோகும் வேலை வாய்ப்புகள்

ஸ்மார்ட் மீட்டர் வருகையினால்  மின் அளவீடு செய்ய   பணியாளர்கள் வரமாட்டார்கள். ஏற்கனவே அந்த பணியை  செய்து வரும் கணக்கீட்டு பணியாளர்கள் வேறு பணிக்கு மாற்றப்படுவார்கள். களப்பிரிவு பணியாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். மின் அளவீடு எடுத்து 20 நாட்களுக்குள் பணம் செலுத்தவில்லை என்றால் மின் துண்டிப்பு கணினி மூலமே நடைபெறும். இதனால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் பறிபோவதோடு படித்த இளைஞர்களின் அரசு வேலை என்ற கனவு கானல் நீராய் மாறும். தனியார்மயத்தால் சமூகப் பாதுகாப்புடன் கூடிய அரசு வேலை வாய்ப்பு, சமூக நீதியை  உறுதிப்படுத்தும் இடஓதுக்கீடு ஆகியவை காலாவதியாகி படித்த இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கும். 

மின் நுகர்வோருக்கு ஏற்படும் பாதிப்புகளும் - பறிக்கப்படும் சலுகைகளும்

மின்சாரச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் மின்விநியோகத்தில் பல உரிமம் பெற்றவர்களை ஈடுபடுத்த  ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மின்வாரியக் கட்டமைப்பில் தற்போதுள்ள மின்பாதைகளில் தனியார் முதலாளிகள் தங்களுடைய விநியோக மின்சாரத்தையும் செலுத்துவார்கள். மின்நுகர்வோர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வா றெனில் தனியார் மின்சார விநியோகிப்பாளர்கள், யாரை  தேர்ந்தெடுப்பார்கள்?  அதிக மின் பயன்பாடு செய்பவர்களையே தேர்ந்தெடுப்பார்கள். இதன் மூலம் மின்சாரம் என்பது சந்தைப்பொருளாக மாறும். வசதி உள்ளவருக்கே மின்சாரம் என்ற நிலை ஏற்படும். தனியார்கள் மின் விதியோக உரிமையைப் பெறுவதால் மின் கட்டணம் விண்ணைத்தொடும். மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் மாநில அரசின் உரிமை பறிபோகும். மாநில அரசு தற்போது விவசாயத்திற்கு இலவச மின்சாரமும், கைத்தறி நெசவுத் தொழிலுக்கு மானிய மின்சாரமும், வீட்டு மின் இணைப்புக்கு வழங்கும் 100 யூனிட் மின்சாரமும் கேள்விக்குறியாய் மாறும். ஒன்றிய அரசின் நோக்கம் மானியம் பறிப்பது தான். பொது மக்கள் ஸ்மார்ட் மீட்டர் வருகையில், மின் அளவீடு துல்லியமாக இருக்கும் என கருதுவார்கள். 15 நிமிடத்திற்கு ஒருமுறை மின்சார பயன்பாடு தெரியும். ஆனால்  மேற்கண்ட ஆபத்துக்கள் மறைந்துள்ளன என்பதை மின் நுகர்வோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தான் தமிழக மின்நுகர்வோர்களும், மின்வாரிய பணியாளர்களும் இணைந்து நின்று மின்துறையை பொதுத்துறையை பாதுகாப்பதோடு, மக்களை, இளைஞர்களை மின்வாரிய பணியாளர்களை பாதிக்கின்ற இந்த நடவடிக்கைகளை முறியடிக்க முன்வரவேண்டும்.