மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை 23 அன்று மதுரையில் மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு வருகை தந்த கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தீக்கதிருக்கு அளித்த சிறப்பு நேர்காணல். சந்திப்பு : எஸ்.பி.ராஜேந்திரன்
கேள்வி : எதிர்க்கட்சிகளின் அணிக்கு ‘இந்தியா’ எனப் பெயரிட்டது குறித்து...
சீத்தாராம் யெச்சூரி : பெங்களூரில் 26 எதிர்க்கட்சி கள் கூடி ‘இந்தியா’ என்ற மாபெரும் அணி சேர்க்கை யை இறுதி செய்து அறிவித்துள்ளன. அந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நான் பங்கேற்றேன். எதிர்க்கட்சிகளின் இந்த விரிவான கூட்டு மேடைக்கு என்ன பெயர் வைப்பது என்று அந்தக் கூட்டத்தில் விவாதம் நடந்தது. நான் ‘வி பார் இந்தியா (We for India)’ என்று பெயரிட லாம் எனக் கூறினேன். அனைவரும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டார்கள். ஒட்டுமொத்த இந்தியா வின் நலனுக்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு போராடுகிறோம் என்ற கருத்தை இது பிரதி பலிக்கிறது என ஒப்புக் கொண்டார்கள். எனினும் இது முழக்கத்திற்கு பொருத்தமாக இருக்கும்; அணி சேர்க்கையின் பெயரை இன்னும் வீச்சுடன் மக்கள் மனங்களில், கொண்டுபோய் சேர்க்கும் விதமாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை வந்தது. அந்த அடிப்படையில் விவாதித்து, ‘இந்தியா’ (I-N-D-I-A) என்ற பெயரை இறுதி செய்தோம். இந்தப் பெய ரிலேயே எதிர்வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்து வதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பணியாற்றுவதில் உறுதியோடு செயல்பட வேண்டுமெனவும் இறுதி செய்தோம்.
இது, நாடு முழுவதற்குமான தேர்தல் அணியா?
இந்த மாபெரும் கூட்டு மேடையானது அகில இந்திய அளவிலான ஒரு தேர்தல் புரிந்துணர்வு மட்டுமே ஆகும். இதை மாநில அளவில் வலுப்படுத்து வது, மாநிலங்களில் திட்டவட்டமான முறையில் விவாதித்து தொகுதிப் பங்கீடு செய்து கொள்வது உள்பட அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் அணி சேர்க்கையை இறுதி செய்வது என முடிவு செய்தோம். எனவே ‘இந்தியா’ என்ற பெயர், இந்த ஒட்டு மொத்த அணி சேர்க்கைக்கான பெயராக இருக்கும்; இந்தப் பெயரின் அடிப்படையில் தேர்தல் கூட்டணி கள் மாநில அளவில் இருக்கும். இது நாடு முழு வதற்குமான ஒற்றை அணியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திலும் ‘இந்தியா’ என்ற பெயரிலான அணியாக இருக்கும். சில மாநிலங்களில் சில பிரச்சனைகள் உள்ளன. குறிப்பாக மேற்குவங்கம், கேரளாவில் இந்த அணி சேர்க்கையில் சிக்கல்கள் உள்ளன. தமிழ்நாடு, பீகார், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஏற்கெனவே வலுவான அணி சேர்க்கையும் தேர்தல் புரிந்துணர்வும் இருக்கிறது. அங்கே பொருத்தமான முறையில் தொகுதிப் பங்கீடும் நடக்கிறது.
மேற்குவங்கத்தில் என்ன நிலைபாடு மேற்கொள்வீர்கள்?
மேற்குவங்கத்தில் இன்றைக்கு காங்கிரஸ் கட்சியும் இதர மதச்சார்பற்ற கட்சிகளும் இடதுமுன்னணி யோடு அணிசேர்ந்துள்ளன. இந்த அணி சேர்க்கை, எங்களைப் பொறுத்தவரை மேற்குவங்கத்திற்கு முக்கியமானது. இந்த அணி, வங்கத்தில் பாஜகவை தனிமைப்படுத்துவது; திரிணாமுல் காங்கிரசை வீழ்த்துவது என்ற அரசியல் இலக்குடன் செயல்பட்டு வருகிறது. ஏனென்றால் இங்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அந்த அதிகாரத்தை முற்றிலுமாக துஷ்பிரயோகம் செய்து கொண்டிருக்கிறது. வங்கத்தில் ஜனநாயகத்தைப் படுகொலை செய்து கொண்டிருக்கின்றது. சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தலில் கூட திரிணாமுல் கட்சியின் வன்முறை, வெறியாட்டத்தை நாடே கண்டது. எனவே மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசுடன் கைகோர்த்துச் செல்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. திரிணா முல் தனது வன்முறை அரசியலை இப்போதும் கூட கைவிடவில்லை. தாக்குதல்கள் தொடர்கின்றன. மற்றொரு முக்கிய அம்சம், மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும் இதர மதச்சார்பற்ற சக்தி களும் ஒன்றிணைந்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்து, பொதுவாக முன்வைக்கப்படு கிறது. இதை ஏற்றுக்கொண்டோமானால், கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிற திரிணா முல் காங்கிரசின் ஆட்சிக்கு எதிராக தற்போது வங்கத்தில் எழுந்துள்ள ஒட்டுமொத்த எதிர்ப்புணர்வும் அப்படியே பாஜகவுக்கு சாதகமாக மாறிவிடக்கூடிய ஆபத்தும் உள்ளது. எனவே இது, பாஜகவை தனிமைப்படுத்துவதற்கு பதிலாக பாஜகவை வலுப்படுத்துவதற்கே உதவி செய்யும். இன்றைக்கு நாடாளுமன்றத்தில் வங்கத்திலிருந்து பாஜகவுக்கு 18 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் திரிணாமுல்லும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் உட்பட அனைவரும் ஒன்றிணைந் தால், ஒற்றை எதிர்க்கட்சி என்கிற அந்தஸ்து பாஜக வுக்கே கிடைக்கும். கணிசமான வாக்குகள் பாஜகவுக்கு செல்லும் ஆபத்து ஏற்படும். எனவே அரசியல் ரீதியாகவும் சரி, தேர்தல் ரீதியாகவும் சரி, வங்கத்தில் திரிணாமுல்லுடன் இணைந்து செல்வது சாத்தியமற்றது.
இந்த பிரச்சனையையும், வங்கத்தில் பாஜகவை வீழ்த்துவதும் மிக முக்கியமானது என்பதையும் பெங்களூரு கூட்டத்தில் முன்வைத்தோம். பல கட்சி களின் தலைவர்களும் இதை ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி நீங்கள் யாரும் தேர்தலில் போட்டியிட வேண்டிய தில்லை, பாஜகவை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார். வங்கத்திற்கு வெளியே உங்களுக்கு, அதாவது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகளுக்கு நான் ஆதரவு தருகிறேன் என்று குறிப்பிட்டார். ஆனால் வங்கத்திற்கு வெளியே திரிணாமுல் காங்கிரஸ் எங்கே இருக்கிறது? அந்தக் கட்சி வங்கத்தில் மட்டும் தானே உள்ளது! பிறகு எப்படி வங்கத்திற்கு வெளியே அவரால் எங்களுக்கு ஆதரவு தர முடியும்? எனவே, யாருமே போட்டியிடவில்லை என்றாலும் கூட அதுவும் பாஜகவுக்கு சாதகமாகத்தான் முடியும் அபாயம் உள் ளது. எனவே இதுதான் வங்கத்தின் உண்மையான அரசியல் நிலை. அதற்கு ஏற்றவாறு, இடதுமுன்னணி - காங்கிரஸ் - இதர மதச்சார்பற்ற சக்திகள் இணைந்து ஏற்படுத்தியுள்ள அணி சேர்க்கை உறுதி யான முறையில் வங்கத்தில் போராடும்.
கேரளாவில் என்ன நிலைபாடு?
மேற்குவங்கத்திற்கு மேற்கொண்ட நிலைபாடு கேரளாவிற்கும் பொருந்தும். கேரளாவைப் பொறுத்த வரை இடதுஜனநாயக முன்னணிக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே நீண்டகால மாகவே கூர்மையான அரசியல் மோதல் என்பது நீடித்துக் கொண்டிருக்கின்றது. இந்த மோதலின் ஒரு முக்கிய அம்சம், அந்த மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியால் ஒரு சட்டமன்ற இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை என்பதுதான். ஒருவேளை, இடது சாரிகளுக்கும் காங்கிரசுக்கும் இங்கு ஏதேனும் ஒரு விதத்தில் புரிந்துணர்வு ஏற்பட்டால் அது, வங்கத்தைப் போலவே இங்கும் பாஜகவுக்குத் தான் சாதகமாக முடியும். அரசியல் ரீதியாக அப்படி ஒரு புரிந்துணர்வு ஏற்பட வாய்ப்பில்லை. கேரளாவில் காங்கிரசுடன் இடதுசாரிகளால் செல்ல முடியாது. தேர்தல் ரீதியாகவும் அதற்கு வாய்ப்பு இல்லை.
‘இந்தியா’ அணியில் மார்க்சிஸ்ட் கட்சியின் செயல்பாடு, கண்ணூர் மாநாடு வகுத்த நடைமுறை உத்தியோடு எந்தவகையில் ஒத்துப் போகிறது?
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கண்ணூர் அகில இந்திய மாநாடு மேற்கொண்ட தீர்மான மும் முடிவும் மிகத் தெளிவாக உள்ளது. பாஜகவை தனிமைப்படுத்துவது, வீழ்த்துவது என்பதே மாநாட்டின் அறைகூவல். எனவே மேற்குவங்கத்திலும் கேரளாவிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எடுத்துள்ள நிலைபாடு, கட்சியின் அகில இந்திய மாநாட்டு தீர்மானத்தின் அடிப்படையில் அமைந்ததே; பாஜகவை தனிமைப்படுத்தி வீழ்த்துவதற்கு இந்த மாநிலங்களில் இத்தகைய நிலைப்பாடே பொருத்தமானதாகும். கண்ணூரில் கட்சி தன்னுடைய அரசியல் நடை முறை உத்தியில், முதன்மைக் கடமை என்பது பாஜக வைத் தனிமைப்படுத்தி, தோற்கடிக்க வேண்டும் என்று வரையறை செய்துள்ளது. கண்ணூர் மாநாட்டின் அரசியல் நிலைப்பாட்டில் கடைசியாகச் சொல்லப்பட்ட விஷயம், இந்த அரசியல் நடைமுறை உத்தியின் அடிப்படையில் மாநிலங்களில் பொருத்தமான தேர்தல் உத்திகள் வகுக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்த அரசியல் நடைமுறை உத்தியுடன் ஒத்துப்போகக்கூடிய விதத்தில்தான் கட்சி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
‘இந்தியா’ எனும் மாபெரும் அரசியல் அணிவகுப்பின் இலக்கு என்ன?
இந்த அணியின் சார்பில் மிக முக்கியமான பிரச்ச னைகளில் நாம் பிரச்சாரத்தை மேற்கொள்வோம். மேலும் மேலும் மதவெறி கூர்மைப்படுத்தப்படுவதற்கு எதிராக, பாஜக ஆட்சியாளர்களின் புல்டோசர் அரசி யலுக்கு எதிராக, இன அழிப்புக் கொள்கைக்கு எதிராக மக்களை கசக்கிப்பிழியும் பொருளாதாரக் கொள்கை க்கு எதிராக, சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டுமென்ற கோரிக்கைக்காக - இப்படி ஏராள மான பிரச்சனைகள் உள்ளன. இவற்றை அரசியல் பிரச்சாரத்தில் கொண்டு செல்வோம். பாஜக அர சுக்கு எதிராக மக்களைத் திரட்டுவோம். பெங்களூரு கூட்டத்திற்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி கலக்கமடைந்திருக்கிறது என்பதே உண்மை. இப்போது வரை ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் எதிர்கொள்வதற்கு மோடி ஒருவரே போதும் என்று கூறி வந்தார்கள். ஆனால் பெங்களூரு கூட்டம் நடந்த அதே நாளில் பாஜக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி யை கூட்டியுள்ளது. பாஜகவால் கைவிடப்பட்ட, துரத்தப் பட்ட, பிளக்கப்பட்ட அரசியல் கட்சிகளையும் குழுக்களையும் மீண்டும் அவர்கள் கூட்டியுள்ளார்கள். இது, அவர்கள் கலக்கமடைந்திருப்பதை தெளி வாகக் காட்டுகிறது.
26 கட்சிகளில் சில கட்சிகளுக்கிடையே சில முரண்பாடுகள் உள்ளன. அவர்கள் எப்படி ஒன்றுபட்டு நின்று போராட முடியும் என பாஜக விமர்சிக்கிறதே!
இவை ஒன்றும் இந்தியாவுக்குப் புதிதல்ல. 2004இல், இடதுசாரிகள் மக்களவையில் 61 எம்.பி.க்கள் இடங்களில் வெற்றி பெற்றிருந்தோம். இந்த 61 பேரில், 57 பேர் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான். பின்னர் இவர்கள் அனைவரும் நாட்டின் நலன் கருதி மன்மோகன் சிங் தலைமையிலான ஐமுகூ அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தார்கள். நாம் இல்லாவிட்டால், ஐமுகூ அரசாங்கம் அமைந்திருக்காது. இதில் முரண்பாடு ஏதுமில்லை. மாநில அளவில், மாநில மட்டத்திலான நலன்கள் முதன்மை பெறுகின்றன. தேசிய அளவில், நாட்டின் நலன் மற்றும் இந்தியாவின் ஒட்டு மொத்த நலன்கள் முதன்மை பெறுகின்றன.
சந்திரசேகர ராவ், காங்கிரஸ் தான் முதன்மை எதிரி என்று இப்போது சொல்கிறாரே!
தெலுங்கானாவில் ஆளும் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிரிய சமிதி, இந்தியா கூட்டணியில் தற்சமயம் இடம்பெறவில்லை. சமீபத்தில் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ள பின்னணியில், இவரது நகர்வு களைப் பார்க்க வேண்டியுள்ளது. கர்நாடக தேர்தல் முடிவுகள் காரணமாக காங்கிரஸ் கட்சியில் மீண்டும் ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இது அண்டை மாநிலங்களில் பிரதிபலித்துள்ளது. குறிப்பாக தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசத்தில். கர்நாடகம் போல் தெலுங்கானாவிலும் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட முடியும் என்று காங்கிரஸ் நம்பு கிறது. துவக்கக் கட்டத்தில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ், ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றுபடுத்த வேண்டும் என்ற முனைப்போடு செயல்படத் துவங்கி னார் என்பது உண்மைதான். அந்த அணி சேர்க்கை யில் இணைந்துகொள்ளுமாறு இடதுசாரிகளுக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
அங்கு இடைத்தேர்தல் நடந்த போது, இடதுசாரி களின் ஆதரவு இல்லாமல் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று அவர் வெளிப்படை யாகவே அறிவித்தார். பிஆர்எஸ் கட்சியுடனான இடதுசாரிகளின் அந்த உறவு தொடர்கிறது. ஆனால் அதே வேளையில் மாநில அளவிலான அவரது இலக்கும் எதிர்ப்பும் பாஜக என்ற இடத்தி லிருந்து காங்கிரசைக் குறி வைத்து மாறியிருக் கிறது என்பது கவனிக்கத்தக்கது. ஏனென்றால் அவரது ஆட்சிக்கு இப்போது காங்கிரஸ்தான் முதன்மையான அச்சுறுத்தல் என்று அவர் கருதுகிறார். இதேபோன்ற நிலைதான் ஆந்திராவிலும் உள்ளது. எனவே இந்த இரண்டு மாநிலங்களிலும் நிலைமை இன்னும் தெளி வாக இல்லை. நம்மைப் பொறுத்தவரை பிஆர்எஸ் கட்சியுடன் செல்வது என்று முடிவு எடுத்து அறிவித்துள்ளோம். தெலுங்கானாவில் பாஜகவை வீழ்த்துவதற்கு இந்த அணிசேர்க்கை உதவும் என்றும் நம்புகிறோம். தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் பாஜகவை தனிமைப்படுத்துவதற்கு பொருத்தமான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் முயற்சிக்கிறோம்.
மகாராஷ்டிராவில் சிவசேனா, இந்தியா அணியில் உள்ளதே? அதை எப்படி பார்க்கிறீர்கள்?
மகாராஷ்டிராவில் சிவசேனா (உத்தவ்தாக்கரே), ‘இந்தியா’ அணியில் இடம்பெற்றுள்ளது. சிவசேனா வைப் பொறுத்தவரை அக்கட்சி இந்து பெரும்பான்மை வாதத்தை முன்வைக்கக்கூடிய கட்சிதான். இன்னும் சொல்லப்போனால் மகாராஷ்டிராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சிவசேனாவுக்கும் இடையே நேரடி மோதல் நடந்து வந்தது என்பது உண்மைதான். பாஜகவுடன் சிவசேனா கூட்டணியிலும் இருந்தது. ஆனால் இருகட்சிகளுக்கும் இடையே வலுவான மோதல் எழுந்து கூட்டணி உடைந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தற்போதும் பாஜகவின் தோல்விக்காக சிவசேனா பணியாற்றிக் கொண்டிருக்கிறது. நமது முதன்மை எதிரி பாஜக என தீர்மானகரமாக முடிவு செய்துள்ள அடிப்படையில் இதைப் பார்க்க வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் சிவசேனா வும் இடம்பெற்றுள்ள அணி சேர்க்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்படுகிறது. ஆனால் அதேவேளையில் தத்துவார்த்த அடிப்படையில் சிவசேனாவின் கருத்துக்களை நாம் எந்தவிதத்திலும் ஏற்கவில்லை. சிவசேனாவைப் பொறுத்தவரை முன்பிருந்த வலுவோடு அது இல்லை. முன்பிருந்த அளவிற்கு இந்து மதப்பெரும்பான்மை வாதக் கருத்துக்களை மையமாக வைத்து இப்போது அது செயல்படவில்லை. முன்பு, பாபர் மசூதி யையே நாங்கள்தான் இடித்தோம் என்று பெருமை கொண்டாடிய கட்சியாக அது இருந்தது. மக்களை யும் இந்துத்துவா கருத்துக்களின் அடிப்படையில் அணிதிரட்டியது. ஆனால் இப்போது உத்தவ் தாக்கரே அந்தப் பாதையில் செல்லவில்லை. தற்போது அவர் சிவசேனாவை, ஒரு கட்சி என்கிற முறையில் பாதுகாக்க விரும்புகிறார். மக்களின் ஆதரவை மீண்டும் பெறுவதற்கு முயற்சிக்கிறார். அந்த அடிப்படையில் காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் இணைந்த மகாராஷ்டிரா விகாஸ் அகாதி கூட்டணி யில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அந்த மாநிலத்தில் அந்த அணி தற்போதைய நிலையில் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டி உள்ளது.
தற்சமயம் சிவசேனா தனது பழைய தீவிர இந்துத்துவா முகத்தை காட்டவில்லை என்ற போதி லும் அந்த சிந்தனையை முற்றாக கைவிட்டுவிட வில்லை என்பதை நாம் அறிவோம். அதைப் பொறுத்த வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக இருக்கிறது. சித்தாந்த ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அத்தகைய மதவாதக் கருத்துக்களை மார்க்சிஸ்ட் கட்சி வலுவாக எதிர்க்கிறது. பின்னாட் களில் அப்படிப்பட்ட நிலைக்கு அக்கட்சி திரும்பு மானால் அப்போது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்து வோம்.
இந்தியா அணியில் காங்கிரஸ் தான் பெரிய கட்சி. அதற்குரிய முக்கியத்துவத்தை, அக்கட்சி உணர்ந்து செயல்படுகிறதா?
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பல பிரச்சனைகள் உள்ளன. இந்தியா கூட்டணியில் பெரிய கட்சி என்கிற முறையில் அக்கட்சிக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஆனால் பல மாநிலங்களில் பிரச்சனைகள் உள்ளன. எனவேதான், இந்தக் கூட்ட ணியை மாநில அளவில் வலுப்படுத்த வேண்டும் என்று நாம் குறிப்பிடுகிறோம். மாநில அளவில் இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை களை துவக்க வேண்டும் என்று கூறியுள்ளோம். சில மாநிலங்களில் தேர்தல் போட்டி என்பது காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் நேரடியாக நடக்கப் போகிறது. இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், குஜ ராத், சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேசம், உத்தரகண்ட் போன்ற மாநிலங்களைக் குறிப்பிடலாம். பல மாநி லங்களில் மாநிலக் கட்சிகள் பிரதானமாக உள்ளன. எனவே மாநிலக் கட்சிகளுக்கும் தேசியக் கட்சி களுக்கும் இடையிலான புரிந்துணர்வு இப்போது அவசியமாகிறது. அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்தும் நாங்கள் விவாதித்துள்ளோம். உத்தரப்பிரதேசத்தைத் தவிர கிட்டத்தட்ட பிற மாநிலங்களில் ஓரளவுக்கு நிலைமை தெளிவாகவே உள்ளது. மாநிலங்களில் இருக்கக்கூடிய கட்சிகளில் பிரதானக் கட்சியின் தலைமையில் தேர்தல் உடன்பாடு, தொகுதிகள் பங்கீடு மேற்கொள்ளலாம் என்ற யோசனை கிட்டத்தட்ட எட்டப்பட்டுள்ளது.
‘இந்தியா’ அணிக்கு குறைந்தபட்ச செயல் திட்டம் எதுவும் உருவாக்கப்படுகிறதா?
பெங்களூரு கூட்டத்தில் குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. நான் அந்தக் கூட்டத்தில் குறிப்பிட்டேன், குறைந்தபட்ச செயல்திட்டம் என்பது எப்போதுமே மத்தியில் அரசு அமைந்த பின்னர் உருவாக்கப்படக்கூடியதுதான். ஏனென்றால் அது செயலாக்கம் பெறுவதற்கான ஒரு திட்டம் ஆகும். அந்தத் திட்டத்தை வரக்கூடிய அரசு நிறைவேற்ற வேண்டும். இப்போது, குறைந்தபட்ச செயல்திட்டம் உருவாக்க வேண்டும் என்பது ஒரு தேர்தல் புரிந்துணர்வு என்ற அடிப்படையில் எட்டப் பட்டுள்ளது. எனவே தற்போது ஒரு குறைந்தபட்ச செயல்திட்டம் என்பதை உருவாக்க முடியாது. மாறாக, குறைந்தபட்ச செயல் இலக்கு என்பதை உருவாக்கிக் கொள்ள முடியும். தேர்தல் பிரச்சாரத்தில் நாட்டு மக்களின் பல்வேறு பிரச்சனைகளை இந்த அணி முன்னெடுத்துச் செல்லும் என்று கூட்டாக அறிவிக்க முடியும். எங்களை தேர்ந்தெடுத்தால் இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்போம், நிறை வேற்றுவோம் என்ற பிரச்சாரத்தை தேர்தலின் போது முன்னெடுத்துச் செல்ல முடியும்.
உ.பி.யில் மாயாவதி, பீகாரில் சிராக் பஸ்வான், கர்நாடகாவில் குமாரசாமி போன்றவர்களின் நிலைப்பாடு பொருத்தமாக இல்லையே!
இன்றைக்கு இந்திய அரசியலில் அரசியல் கட்சிகளின் நிலைபாடு என்ன என்பதை பொதுவாக கேட்பது வழக்கமாக இருக்கிறது. இன்றைக்கு ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நிரந்தரமாக இரண்டு கட்சிகள் உள்ளன; ஆனால் அவை அரசியல் கட்சிகள் அல்ல. ஒன்று மத்திய குற்றப்புலனாய்வுக் கழகம்(சிபிஐ) மற்றொன்று அமலாக்கப் பிரிவு(ஈ.டி.) இந்த இரண்டும் அந்தக் கூட்டணியிலும் வெளியிலும் உள்ள இதர கட்சிகள் மீது கடும் அழுத்தத்தையும் நிர்ப்பந்தத்தையும் உருவாக்குகின்றன. பல கட்சிகள் இந்தப் பின்னணியிலேயே முடிவுகளை எடுக்கின்றன. அப்படி அவர்கள் எடுப்பது உண்மை யிலேயே அவர்களது அரசியல் முடிவல்ல; மாறாக அவர்களது இருத்தலுக்கான முடிவே. எனவே இதனடிப்படையில் அந்தக் கட்சிகளைப் பற்றி நாம் ஓர் அரசியல் மதிப்பீட்டிற்கு வர முடியாது. மாயாவதி, குமாரசாமி போன்றவர்கள் மேற்கொள்ளும் முடிவு களை அப்படித்தான் பார்க்க வேண்டும்.
உண்மையில் இன்றைக்கு நாட்டிலேயே மிக மோசமான தலித் விரோத, பழங்குடி மக்கள் விரோதக் கட்சி ஒன்று இருக்குமானால் அது பாரதிய ஜனதா கட்சிதான். அவர்கள் நம்புகிற இந்துத்துவா ராஜ்ஜி யம் என்பது முழுக்க முழுக்க மனுஸ்மிருதியில் கூறப் பட்டுள்ள வர்ணாசிரம ஆட்சி முறைதான். சாதிய கட்டமைப்பு மேலும் வலுவடைந்த ஓர் ஆட்சி முறை தான். எனவே இதை மாயாவதி போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைக்கும் பல சம்பவங்களைப் பார்க்க முடியும். பீம் சேனாவின் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தை படுகொலை செய்ய பாஜக ஆட்சி யாளர்கள் முயற்சிக்கிறார்கள். அவர் மீது பட்டப்பக லில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள். தில்லியில் மிகப்பெரும் போராட்டத்தை அவர் நடத்தினார். நான் அங்கு சென்றிருந்தேன். இவரைப் போன்ற புதிய சக்திகள் எழுந்து வருகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.