பாரதிப் பாடலைப் பாடிடு - அவன்
பாட்டின் சுவையை நாடிடு!
பாரத விடுதலைப் பேசிடு - அவன்
பாட்டால் வெற்றிப் போரிடு!
ஓடிவி ளையாடச் சொன்னான்-நீ
ஓதா திருக்காதே என்றான்!
கூடி மகிழ்ந்திடச் சொன்னான் -அதில்
குவலய வேற்றுமை வென்றான்!
பூனை பாட்டைப் பாடினான்-நாட்டில்
பூணும் ஒற்றுமை நாடினான்!
தேன்சுவைத் ததும்பப் பாடினான்-அதில்
தேள்போல் பகையதைச் சாடினான்!
அன்பே சிவமெனப் பாடினான் -வீணில்
ஆயிரம் தெய்வம் சாடினான்!
துன்புறும் அடிமைப் போக்கினான்-விடுதலைத்
தூணினை நாட்டில் ஆக்கினான்!
இயற்கை தன்னை நேசித்தான்-அதை
இனிய பாடலால் பூசித்தான்!
செயற்கை சாதியை வெறுத்தான்-அதைச்
சேராது இருக்க உரைத்தான்!
எண்ணருங் கனவுகள் தாங்கினான்-இந்தியா
ஏற்றம் பெற்றிட ஏங்கினான்!
கண்ட கனவுகள் ஓங்கிட-நீ
காட்டிடு செயலால் தாங்கிட!