ஒரு நாளினை மூன்றாக பிரித்து 8 மணிநேரம் வேலை, 8 மணிநேரம் பண்பாட்டு அல்லது சமூக நடவடிக்கை, 8 மணிநேரம் உறக்கம் என்ற கோரிக்கைக்கான போராட்டத்தை, உலகின் தொழிலாளி வர்க்கம் சுமார் இரு நூற்றாண்டுகளாக நடத்தி வருகிறது. 1820-களில் துவங்கி பிலெடெல்பியா நகரில் கட்டுமானத் தொழிலாளர்களும், பல்வேறு நகரங்களில் பஞ்சாலை மற்றும் இதர உற்பத்தி பிரிவு தொழிலாளர்களும் போராடிய வரலாறு இன்றைய தலைமுறைக்கு நினைவூட்டப்பட வேண்டியுள்ளது. 1886 ல் சிகாகோ வீதிகளில் போராடிய லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மீது, கொடிய அடக்குமுறையை காவல் துறை ஏவிவிட்டது. பலர் கொல்லப்பட்டனர். தலைவர்கள் எட்டு பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்தி, 4 பேர், தோழர்கள் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைசஸ், சாமுவேல், ஜார்ஜ் எங்கெல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். அன்றைய ஜனநாயக சக்திகள் போராட்டத்தின் நியாயத்தை வலியுறுத்திய அடிப்படையில், எட்டு மணி நேர உழைப்பு என்ற கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் சட்டமாக நிறைவேற்றப்படவில்லை. இதன் தொடர்ச்சியாக பிரடெரிக் ஏங்கெல்ஸ் தலைமையில், பாரீஸ் நகரில் நடந்த தொழிலாளர் மாநாட்டில், 8மணிநேர வேலை மற்றும் தியாகிகளின் நினைவை போற்றுவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதலில் 8 மணிநேர வேலை என்பதை சட்டமாக்கி, மே தினப் போராளிகளையும், தியாகிகளையும் அங்கீகரித்தது சோவியத் யூனியன் தான். லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றி, நிறைவேற்றிய சட்டங்களில் முக்கியமானதாக எட்டு மணி நேர வேலை அமைந்தது. அன்றைய தினத்தை தொழிலாளர் தினமாக, ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டது.
இன்று பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் மே தினத்தை பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளன. இந்தியாவில் அது மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜதானி, 1923ல் சிங்காரவேலர் மே தின கொடி ஏற்றிய பாரம்பரியம் காரணமாக கொண்டாடியது. பின்னர் உழைப்பாளர் சிலையும், 1959, ஜனவரி 25 அன்று காமராஜர் ஆட்சி காலத்தில், சென்னை மெரினாவில் நிறுவப்பட்டது. கேரளாவில் 1958லும், தமிழ்நாட்டில் 1959லும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் 1967 ல் ஐக்கிய முன்னணி அரசு அமைந்த போது, ஜோதிபாசு முயற்சியில் அறிவிக்கப்பட்டது. கர்நாடகா, ஆந்திரா, திரிபுரா, கர்நாடகா, கோவா, பீகார், அஸ்ஸாம், ஜார்கண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் மட்டுமே பொது விடுமுறையை கடைப்பிடிக்கின்றன. இதர மாநிலங்களில் இந்த நடைமுறை இல்லை.
நடைமுறையில் 8 மணிநேர வேலை அமலாகிறதா?
நடைமுறையில் பல சேவைத் தொழில்களிலும், உதிரிப் பாட்டாளிகளாக உள்ள இடங்களிலும் 8 மணிநேர வேலை என்பது அமலில் இல்லை. ஐ.டி, மருத்துவமனை, செக்யூரிட்டி மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைசெய்யும் நிறுவனங்கள், உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்யும் நிலை உள்ளது. உற்பத்தி துறையில், பஞ்சாலை, பனியன், ஃபாக்ஸ்கான், பி.ஒய்.டி போன்ற நிறுவனங்களில் தொழிலாளர்கள் 12 மணிநேரம் வேலை வாங்கப்படுவது நடந்து வருகிறது. இங்கு குடியிருப்பும் அருகிலேயே உள்ளது. ஃபாக்ஸ்கான் அண்மையில் பிரமாண்டமான விடுதியை கட்டமைத்துள்ளது. தொழிற்சங்கம் அமைக்கப்பட்டால், அங்கு புகார் அளிக்கப்பட்டு, 8 மணி நேரமாக வேலை நேரம் குறைக்கப்பட்டு, மூன்று ஷிப்ட்களாக மாற்றம் செய்யப்பட்ட அனுபவம் உண்டு. பி.ஒய்.டி என்ற தைவான் நாட்டு நிறுவனத்தில் சுமார் 3500 தொழிலாளர்கள் அதிக வேலை நேரத்தில் சுரண்டப்பட்டனர். சி.ஐ.டி.யு சங்கம் உருவான பின் அது தடுக்கப்பட்டது. வேலைநேரம் ஒருநாளைக்கு 8 மணி நேரம் என்றும், வாரம் 48 மணி நேரம் என்றும் சட்ட வழி காட்டுதல் இருப்பதால் இது சாத்தியமானது. இன்றைக்கும் புலம்பெயர் தொழிலாளர்களைக் கொண்டு இயக்கப்படும் பஞ்சாலை, பனியன் மற்றும் இதர கனரக உற்பத்தி தொழிற்சாலைகளில் இந்த கொடுமை அரங்கேறி வருகிறது. மேற்படித் தொழிலாளர்கள் புலம்பெயர்ந்த காரணத்தால், அந்நியப்பட்டு வாழ்வதாக உள்ள உணர்வு, பண்பாட்டு நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கி கொண்டுள்ளனர். எனவே அதிகநேரம் இருப்பதாக தாங்களாகவே முடிவு செய்து, வேலை மற்றும் தூக்கம் ஆகிய இரண்டில் மட்டும் அதிக கவனம் செலுத்துகின்றனர். பண்டிகைகளுக்கு தங்கள் ஊருக்கு சென்று திரும்ப மாதக் கணக்கில் எடுத்து கொள்கின்றனர். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தங்கள் சொந்த ஊர்களிலேயே தங்கியும் விடுகின்றனர். இது முதலாளித்துவத்தால், உலக அளவில் திட்டமிட்டு உருவாக்கப் படக் கூடிய ஒன்றாகும்.
குறைவான குறைந்த பட்ச கூலியும், வேலைநேரம் அதிகரிப்பும்
புலம்பெயர்தல் காரணமாக அமர்த்து பின் துரத்து வடிவிலான வேலை முறையை கார்ப்பரேட் நிறுவனங்கள் அதிகப்படுத்தி உள்ளன. கடந்த காலங்களில் போராடிப் பெற்ற வேலை நேரக் குறைப்பை, தகர்த்திடவும், சட்ட பாதுகாப்பு விதிகளை தளர்த்திடவும், இந்த சூழலை முதலாளித்துவ அரசுகள் மேற்கொள்கின்றன. மேலை நாடுகளில் ஒரு மணி நேரத்திற்கு 9.4 டாலர் முதல் 16 டாலர் வரை (ரூ770 முதல் ரூ1309 வரை) அல்லது 12 யூரோ (ரூ1083) என்ற கூலிச் சட்டத்தை அமலாக்கி வருகின்றன. இது அந்த நாடுகளில் தொழிலாளியின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதால், கூலி மற்றும் வேலைநேரம் சார்ந்த கோரிக்கைகளில் போராட்டங்கள் தொடர்ச்சியாக இல்லை. ஆனால் அண்மைக்காலத்தில் அமேசான், ஸ்டார் பக்ஸ், வால்மார்ட் போன்ற நிறுவனங்களில் நடைபெறும் போராட்டங்கள் வேலைநேரம், குறைந்த பட்ச ஊதியம் மற்றும் இதர உரிமைகள் ஆகியவற்றை வலியுறுத்துவதாக உள்ளன. நம் நாட்டில் குறிப்பாக தமிழ் நாட்டில் குறைந்த பட்ச ஊதியம், பெருநகரங்களான ‘ஏ’ மையங்களில் கூட மாதம் ரூ.14,000 என்ற அளவில் தான் உள்ளது. பிற மையங்களில் ரூ12 ஆயிரம் என்ற தன்மையில் தொழிலுக்கு ஏற்ப உள்ளது. மாவட்ட ஆட்சியர் நிர்ணயம் செய்யும் தொழில் வாரியான குறைந்த பட்ச கூலியும், குறைந்த பட்ச நுகர்வு தேவையை கூட ஈடுசெய்ய உதவவில்லை. எனவே தொழிலாளர் தனது அடிப்படைத் தேவைகளை எதிர்கொள்ள பண்பாட்டு நடவடிக்கைகளை குறைத்து, வேலை நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ள சம்மதிக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். அவசியமான கல்வி, சுகாதார செலவினங்களுக்கு கடனாளி ஆகும் நிலை உள்ளது. இது ஒரு கட்டத்தில், கடனைத் திருப்பி செலுத்துவதற்கும், அடிப்படைத் தேவைக்குமான உழைப்பை நேரம் காலமில்லாமல் செலுத்தும், கொத்தடிமைத் தனத்திற்கும் வழிவகுக்கிறது.
அமைப்புசார்ந்த துறைகளில் நிரந்தர வேலைவாய்ப்பு குறைந்து, காண்ட்ராக்ட், நீம் உள்ளிட்ட பல பெயர்களில் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுவதும், அதேபோல் உடலுழைப்பு தொழிலாளர்கள் சுமார் 94 சதம் அளவிற்கு அதிகரித்து, எந்தவிதமான சட்ட உரிமைகளும் இல்லாதவர்களாக மாறி இருப்பதும் சவாலாக உள்ளது. எனவே மாதந்திர சம்பளம் குறைந்த பட்சம் தற்போது ரூ 26 ஆயிரம் என சட்டமாக்குவதும், ஒரு நாளைக்கு ரூ 1000 என தீர்மானிப்பதும் அவசியம். இது பண்பாட்டு நடவடிக்கைகளை அதிகப்படுத்தி வேலை நேரம் குறைப்பு குறித்த கவனத்தை அதிகப்படுத்தும். இந்த தேவையை முதலாளித்துவ சமூக அமைப்பு செய்யாது. தொழிற்சங்கம் மற்றும் சமூக அமைப்புகளின் போராட்டமே இதற்கான வாய்ப்பை உருவாக்கும். மேலே வலியுறுத்திய குறைந்த பட்ச கூலியை உயர்த்தாமல், தமிழ்நாடு அரசு, ஒன்றிய பாஜக அரசு 2020 ல் அமலாக்கிய சட்டத் தொகுப்புகளின் அடியொற்றி, வேலைநேரம் குறித்த சட்ட விதிகளை தளர்த்தியுள்ளது. இது முதலாளி அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபத்தை அதிகப்படுத்தவும், தொழிலாளர் மீதான சுரண்டலை கொடூரமான முறையில் தீவிரப்படுத்தவுமே வழி செய்யும். பெண் உழைப்பாளர்கள் குடும்ப பராமரிப்பு பொறுப்பும் இல்லாமல், வேலை இழப்பிற்கு கடுமையாக ஆளாவர். கொரோனாவிற்கு பின், தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு அரசு தற்போது நிறுத்தி வைப்பதாக மட்டுமே கூறியுள்ள சட்ட திருத்தம், பெண் உழைப்பாளர்களின் சுய முன்னேற்றத்தை அழிக்கும் வகையில், வேலை இழப்பை அதிகரிக்கும்.
இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியில் மே தினம்
சோசலிச சோவியத் யூனியன், முதலில் எட்டுமணி வேலை நேரம் என்பதை சட்டமாக்கியது. அதன்பின்னர் தான் பிற நாடுகள் இவ்வாறு சட்டம் இயற்றின. அதன் பின் சோவியத் சோசலிச அரசு, வேலை நேரத்தை ஆறு மணிநேரமாக குறைத்தது. தற்போது ரஷ்யாவில், வாரம் 38.2 மணிநேரமாக உள்ளது. அதுவும் இதர முதலாளித்துவ நாடுகளுக்கு அழுத்தத்தை உருவாக்கியது. ஐ.எல்.ஓ என்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பு, வாரம் 48 மணிநேரம் வேலைநேரம் என வழி காட்டியது. இதைத் தொடர்ந்தே பெரும்பாலான நாடுகள் தங்கள் நாடுகளில் வேலைநேரத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் உருவானது. இன்று ஜெர்மன் 36 மணிநேரம், பிரான்ஸ் 35 மணிநேரம் என வார வேலை நேரங்களை பின்பற்ற காரணமாகவும் அமைந்தது. இந்த பின்னணியில் தான் சிஐடியு அகில இந்திய மாநாடு, நாள் ஒன்றுக்கு 7 மணிநேரம் வேலைநேரம், வாரம் இரு நாள்கள் விடுமுறை என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.
மேற்படி கோரிக்கை அதீதமானதல்ல. ஏனென்றால் முதலாளித்துவ வளர்ச்சியில், பிரமாண்டமான தொழில்நுட்ப வளர்ச்சி, மூலதனக் குவிப்பிற்கு பயன்படுகிறது. சமூக ஏற்றத் தாழ்வை அதிகப்படுத்த பயன்படுகிறது. வேலையில் இருக்கும் தொழிலாளர் எண்ணிக்கையை குறைத்து, வேலைப்பளுவை அதிகப் படுத்த பயன்படுகிறது. வேலைநேரம் குறைப்பு, மேற்படி ஏற்றத் தாழ்வை ஒழுங்கமைக்கவும், வேலையின்மையை கட்டுப்படுத்தவும் உதவும். இந்த கோரிக்கைகளுக்காக, போராட்டங்களை சலிப்பில்லாமல் தொடர்வதும், ஒன்றுபட்ட முயற்சிகளை தீவிரப்படுத்துவதும் இன்றைய தேவையாக உள்ளது. தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் நடந்துவரும் போராட்டங்கள் மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. இப்போராட்டங்களை மேலும் வலுப்படுத்துவதே, இந்த 137 வது மே தினத்தின் உறுதி ஏற்பாகவும், மே தின தியாகிகளுக்கான இருக்க முடியும்.