articles

img

புலியூர்க்கேசிகன் நூற்றாண்டின் அடையாளம்! - முனைவர் அ.செல்வராசு

க.சொக்கலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட புலியூர்க்கேசிகன், திருநெல்வேலி மாவட்டம் புலியூர்க்குறிச்சியில் 1923ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் நாள் பிறந்தவர். தம் ஊருக்கு அருகில் உள்ள டோணா வூரில் தொடக்கக் கல்வியையும் பின்னர் திருநெல்வேலி யிலுள்ள மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியையும் முடித்தவர். படிப்பு முடித்து வடுகச்சி மலைப்பள்ளியில் மூன்று ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார். நீலாம்பிகை அம்மையாரின் பரிந்துரையின் வழி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தில் மேலாளராகப் பத்தாண்டுகள் பணியாற்றினார். பின்னர் அந்நிறுவனத்திலிருந்து வெளியேறிச் சென்னைக்கு குடிபெயர்ந்து இலக்கிய நூல்களுக்கு உரை எழுதும் பணியைத் தொடங்கினார். 1957 தொடங்கி 1992 இல் இறக்கும் காலம் வரை எழுத்துப் பணியைத் தொடர்ந்த அவர், நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிக் குவித்துள்ளார். அவரது நூற்றாண்டு இந்த அக்டோபர் மாதத்தோடு நிறைவடைகிறது.

உரையாசிரியர்

புலியூர்க்கேசிகன் உரையாசிரியர், திறனாய்வாளர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், மெய்ப்புத் திருத்துநர் எனப் பன்முக ஆளுமை பெற்றவராக விளங்கினாலும் ‘உரையாசிரியர்’ என்றே அடையாளப்படுத்தப் பெற்றுள் ளார். ஐம்பதுக்கும் மேற்பட்ட இலக்கியங்களுக்கு உரை எழுதியவர் என்பதால் அதில் தவறொன்றுமில்லை. புலியூர்க்கேசிகன் எழுதிய முதல் உரை நூலாக நமக்குக் கிடைக்கப்பெறுவது ‘ஏரெழுபது’ என்ற கம்பரின் நூலுக்கான உரையாகும். வேளாண்மையைச் சிறப்பித்துப் பேசும் இந்நூலுக்கு ‘ஏர் பிடித்தவர் ஏற்றம்’ எனப் பெயரிட்டு விளக்கம் எழுதியுள்ளார். ‘கம்பரின் ஏரெழுபது மிகவும் இனியதொரு நூலேயெனினும், செய்யு ளாதலால் அதனை நூற்கல்வி கற்றவரன்றி மற்றையவர் எளிதிற் பொருளுணர்ந்து படித்துப் பயன் பெற வியலாது. எனவே, தெளிவான விளக்கத்துடன் இந்நூல் இப்போது வெளிவருகின்றது’ என அந்நூலின் முன்னுரையில் புலியூர்க் கேசிகன் குறிப்பிட்டுள்ளார். இந்நூல் வெளிவந்தது 4.11.1957 ஆகும். எட்டுத் தொகை நூல்கள் அடுத்து 15.01.1957 இல் ‘புற நானூற்று’ உரை வெளிவந்தது. அதே ஆண்டில் கலித் தொகை. பரிபாடல் ஆகிய நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். தொடர்ந்து, சங்க இலக்கியங் களான அகநானூறு (1960,1962), குறுந்தொகை (1965), நற்றிணை (1967), பதிற்றுப்பத்து (1974), ஐங்குறுநூறு (1982,1983) என அனைத்து எட்டுத்தொகை நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார். பத்துப்பாட்டில் உள்ள திருமுரு காற்றுப் படைக்கு 1960-ல் ‘உதய சூரியன்’ என்ற பெயரில் உரை எழுதியிருப்பதும் சுட்டிக்காட்டத் தக்கதாகும். இலக்கண நூல்களான தொல்காப்பியம், புறப் பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், நன்னூல், யாப்பருங்கலக் காரிகை ஆகிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, நளவெண்பா ஆகியவற்றிற்கு உரை எழுதியுள்ளதோடு உதயணன் கதை, சூளாமணி கதை, வளையாபதி கதை எனப்பிற காப்பியக்கதைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

திருக்குறளின் சிறப்பு

பதினென் கீழ்க்கணக்கிலுள்ள திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு ஆகிய நூல்களுக்கும் உரை எழுதியுள்ள புலியூர்க் கேசிகனின் திருக்குறள் புதிய உரை 1976ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. அந்நூலின் முன்னுரையில் ‘பள்ளிப்பருவத்திலும் திருக்குறள் பழக்கப்படுகின்றது. பருவம் வளர வளர அதுவும் நுட்பமாகக் கற்கப்படுகின்றது. அதற்குள்ள சிறப்பே அதுதான். அது எல்லாப் பருவத்தாருக்கும் வேண்டிய விழுமிய நூல்.... திருக்குறளில்லாத தமிழர் வீடு இருக்கக் கூடாது, திருக்குறள் படியாத தமிழனும் இருக்கக்கூடாது எனக் குறிப்பிட்டு உரை எழுதத் தொடங்கியுள்ளார். திருவாசகம், திருப்பாவை உள்ளிட்ட பக்தி இலக்கியங்கள், குற்றாலக்குறவஞ்சி, முக்கூடற்பள்ளு உள்ளிட்ட சிற்றிலக்கியங்கள் எனப் பயிற்சியில் உள்ள பெரும்பாலான இலக்கியங்களுக்கு உரை எழுதியுள்ள புலியூர்க்கேசிகன் ஆய்வு நூல்களையும் எழுதத் தவறவில்லை.

ஆய்வு நூல்கள்

ஐந்திணை வளம், சிலம்பும் வாழ்வும், முத்தமிழ் மதுரை, அறநெறிச் செல்வர், புகழ்பெற்ற பேரூர்கள், பெண்மை, பூலித்தேவனா புலித்தேவனா?, திருக்குறளும் நட்புக்கலையும், திருக்குறளும் குடும்ப வாழ்க்கையும், திருக்குறளும் பேச்சுத் திறனும், வள்ளுவனும் பகுத்தறிவும், குறள் தந்த இல்லற இன்பம், குறள் தந்த காதல் இன்பம், குறள் தந்த கற்பு நெறி, தீர்க்கதரிசி பாரதியார், புறநானூறும் தமிழர் நீதியும், புறநானூறும் தமிழர் சமுதாயமும் எனப் பல ஆய்வு நூல்களையும் எழுதியுள்ளார். இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் என்பது திராவிட இயக்கம் தமிழகத்தில் வீறு கொண்டு எழுந்த கால கட்டமாகும். திராவிட இயக்கம் சங்க இலக்கியங்க களைத் தமிழர்களின் சொத்தாகக் கருதி, அவற்றுள் இடம் பெற்றுள்ள பழந்தமிழரின் ஆளுமைகளை மக்களிடம் கொண்டு செல்லும் பணியைத் தீவிரமாக செய்து வந்தது. அந்தக் காலகட்டத்தில்தான் புலியூர்க்கேசிகனும் சங்க இலக்கிய நூல்களுக்கு உரை எழுதத் தொடங்கியுள் ளார். மாணவர்களுக்கு மிக எளிமையாகப் புரிய வேண்டும் என்ற நோக்கிலேயே அவரது உரைகள் எழுதப் பெற்றுள்ளன. பண்டிதர்கள் மட்டுமே படித்துப் புரிந்து கொள்ளும் நிலையிலிருந்த இலக்கிய, இலக்கணங் களைப் படிப்பறிவு இருப்போர் அனைவருமே புரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலேயே அவரது உரைகள் எழுதப்பெற்றுள்ளன.

எழுத்தில் நேர்மை

உரை நூல்களின் முன்னுரைகளில் அவர் சுட்டிக்காட்டி யிருப்பன எல்லாம் ‘எளிமை’ தான். ஒவ்வொரு நூலின் முன்னுரையிலும்,குறிப்பிட்ட அந்நூலுக்கு யார் யாரெல்லாம் உரை எழுதியுள்ளார்களோ அவர்களை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்திருப்பது அவரது நேர்மைக்குச் சான்றாக இருக்கின்றது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதுகிறபோது, ‘பெரும்பாலும் எழுத்திற்கு நச்சினார்க்கினியரின் உரையினையும்  சொல்லிற்குச் சேனாவரையரின் உரை யினையும் சிறப்பாகக் கொள்வது தமிழாசிரியன்மாரின் மரபாகும். அதனை ஒட்டியே, இந்தத் தெளிவுரை அமைப்பும் அவ்விரண்டு பகுதிகளுக்கும் அவற்றைத் தழுவியும் பொருளதிகாரத்திற்கு இளம்பூரணாரின் உரை யைத் தழுவியும் அமைக்கப் பெறுவதாயிற்று’ எனக் குறிப்பிட்டிருப்பது உண்மையை உரைக்கும் புலியூர்க் கேசிகனின் மனநிலையைக் காட்டுவதாக உள்ளது. இதே போன்று நன்னூலுக்கு உரை எழுதுகிற போதும் ‘குந்நூல் ஆறுமுக நாவலரின் பதிப்பை அடிப்படை யாகக் கொண்ட காண்டிகை உரை. ஒரு சில குறிப்பு களை மட்டுமே நான் சேர்த்துள்ளேன்.’ எனச் சுட்டிக்காட்டி யுள்ளார். இந்நூலில் புலியூர்க்கேசிகனின் பெயர், பதிப்பாசிரியராகக் குறிப்பிடப்பெற்றிருப்பதும் சுட்டிக் காட்டத் தக்கதாகும். காளமேகப் புலவர், ஔவையார், கம்பர் ஆகியோரின் தனிப்பாடல்களுக்கும் புலியூர்க்கேசிகன் உரை எழுதியுள்ளார். தகடூர் யாத்திரைக்கும் உரை எழுதி யுள்ளார். கொக்கோகத்தையும் விட்டுவைக்கவில்லை.

புலியூர் உரை எளிய உரையே

ஆக, தமிழிலக்கியங்கள் பெரும்பாலானவற்றிற்கு உரை எழுதிய புலியூர்க்கேசிகனின் உரைகளைப் பழித்துப் பேசும் போக்கும் தமிழ்ச்சமூகத்து அறிஞர்களிடம் இருந்துள் ளது. புலியூர்க்கேசிகன் உரையைப் படிக்கிறேன் என்று யாராவது மாணவர்கள் சொன்னால் அந்த மாணவரைக் கேலி செய்த அறிஞர்கள் உண்டு. ஆய்வு நூல்களில் மேற்கோள்காட்டினால் புலியூர்க்கேசிகனை மேற்கோள் காட்டக்கூடாது என்று சொல்லும் நெறியாளர்களும் இருந்துள்ளனர். இதனால் புலியூர்க்கேசிகனின் உரைகள் பற்றிய தவறான புரிதல் மாணவர்கள் மத்தியில் இருந்துள் ளது. இருந்து வருகிறது. ஆனால் இவற்றையெல்லாம் கடந்து அவரது உரைநூல்கள் ஆயிரக்கணக்கில் விற் பனையாகியிருப்பதை அறியும் போது அறிஞர்களின் புறக் கணிப்பு, புறக்கணிக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது. 1976-ல் வெளிவந்த அவரது திருக்குறள் புதிய உரை 2010ஆம் ஆண்டு வரை 27 பதிப்புகளைக் கண்டுள்ளது என்பதை எளிதாகக் கடந்து போய்விட முடியாது. அவரது ஒவ்வொரு உரைநூலுமே 15க்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டுள்ளன. ஆக, அறிஞர்களால் ‘படிக்க க்கூடாத உரை’ என ஒதுக்கப்பட்டாலும் அவற்றை யெல்லாம் கடந்து படிப்பாளிகள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் சென்று சேர்ந்துள்ளது என்பதே உண்மை யான வராலாறாகும். புரியம் படியான ‘எளிய உரை என்றால் அது புலியூர்க்கேசிகன் உரையே’ என்பதுதான் அவர் வாழ்ந்த காலத்து அடையாளமாகும். இலக்கியங்களுக்கு உரை எழுதியிருப்பது மட்டுமின்றி ஞாபகசக்தியை வளர்ப்பது எப்படி? மாணவர்களுக்கு ஞாபகசக்தி பயிற்சிகள், மனிதனின் மகத்தான சக்திகள், குருபார்வையும் குபேர வாழ்க்கையும், ராஜயோகம், எண்களின் ரசசியம், எண்களும் எதிர்காலமும், ஜாதகமும் குடும்ப வாழ்க்கையும், முன்னேற்றத்துக்கு 32 தியானங்கள், நல்வாழ்க்கைக்கு 40 தியானங்கள், பிறந்த நட்சத்திரமும் உங்கள் அதிர்ஷ்டமும், சித்தி யளிக்கும் சிவநெறி, சௌபாக்கியத்திற்கு சிவசக்தி வழிபாட்டு முறைகள், மாங்காடு காமாட்சியம்மன் வரலாறு உள்ளிட்ட நூல்களையும் புலியூர்க்கேசிகன் எழுதியுள்ளார். எவ்வாறாயினும் அவரது உரைகளே உணர்த்தும் அவரது சிறப்பை.