articles

img

அறிவியல் - அறிவியல்

கழிவு நீரில்  மின்சாரம் தயாரிக்கும் நுண்ணுயிரிகள்

நுண்ணுயிரிகளை பயன்படுத்தி கழிவு நீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறையை சுவிட்சர்லாந்து நாட்டு விஞ்ஞானி ஆர்டெமிஸ் போகோஷியன் குழுவினர் கண்டறிந்துள்ளார்கள். பல நுண்ணுயிரிகள் குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் இருக்கும்போது மட்டுமே மின்சாரம் தயாரிக்கின்றன. ஆனால் இ.கோலி எனும் கிருமி பலவித ஆதாரங்களில் வளர்வதால் அவற்றின் மூலம் கழிவு நீர் உட்பட பல சூழல்களிலும் மின்சாரத்தை தயாரிக்க முடியும். எக்ஸ்டரா செல்லுலார் எலெக்ட்ரான் மாற்றம்(EET) எனும் முறையில் இவை மின்சாரத்தை உண்டாக்குகின்றன. இந்த ஆய்வாளர்கள் இ.கோலியை அதிகப்படியான EET வெளியிடுமாறு கட்டமைப்பு மாற்றம் செய்து அவற்றை அதிக திறனுள்ள ‘மின் நுண்ணுயிரி’யாக மாற்றியுள்ளனர். அருகிலுள்ள ஒரு மதுபான ஆலையின் கழிவு நீரைக்  கொண்டு இந்த பரிசோதனையை செய்துள்ளனர். மற்ற நுண்ணுயிரிகள் இந்த நீரில் பிழைத்திருக்கவே இயலாத நிலையில் உயிரி மாற்றம் செய்யப்பட இ.கோலி இந்தக் கழிவு நீரையே உண்டு வளர்ந்தது. கழிவு நீரை சுத்தம் செய்ய மின்சாரத்தை பயன்படுத்துவதற்குப் பதிலாக அதை சுத்தம் செய்வதிலிருந்தே மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்கிறார் போகோஷியான். இந்த பரிசோதனையின் தாக்கம் கழிவு நீரை சுத்தம் செய்வதோடு அல்லாமல் நுண்ணுயிர் பேட்டரிகள், மின்பகுப்பு, உயிரி உணர்வியல் போன்றவற்றிலும் பயன்படும். இந்த நுண்ணுயிரியின் மரபணு மாற்றத்தக்கதாக உள்ளதால் அதை குறிப்பிட்ட சூழல் மற்றும் ஆதாரங்களில் இயங்குமாறு மாற்றிக்கொள்ளலாம். எனவே நிலைத்த தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற சிறந்த கருவியாக உள்ளது.

ராக்கெட் ஏவுதளம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்கப்பட்டது ஏன்?

இந்தியாவில் ராக்கெட்களை ஏவுவதற்கு ஸ்ரீஹரிகோட்டாவை தேர்ந்தெடுத்தது ஏன் என்கிற கேள்விக்கு 1960களுக்கு செல்ல வேண்டும். அப்போதுதான்  செயற்கைகோள்களையும் ஏவுகலம்களையும் சுயேச்சையாக தயாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இந்திய விண்வெளி திட்டங்களுக்கு அடித்தளமிட்ட விக்ரம் சாராபாய் தனது சக விஞ்ஞானியான இ.வி.சிட்னிசிடம் ஏவுதளம் அமைக்க நாட்டின் கிழக்கு கடற்கரையில் தகுந்த இடம் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக்கொண்டார் என முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகளால் மார்ச் 1968இல் எழுதப்பட்ட ‘மீன்பிடி கிராமத்திலிருந்து செவ்வாய் கிரகம் நோக்கி, இந்தியாவின் விண்வெளிப் பயணம்’ என்கிற நூல் கூறுகிறது. சிட்னிஸ் அப்போதைய ஆந்திர அரசின் தொழில்துறை இயக்குனரான அபிட் ஹுசைனை  தொடர்புகொண்டார். அவரும் ஸ்ரீஹரிகோட்டா உட்பட வாய்ப்புள்ள இடங்கள், வரைபடம் ஆகியவை குறித்த தகவல்கள் அளித்து உதவினார். விக்ரம் சாராபாய் ‘இந்து’ பத்திரிகையின் டகோடா விமானத்தில் சென்று அந்த இடத்தை ஆய்வு செய்தார். இரண்டே மாதத்தில் 40000 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தினார்.’எவ்வளவு விரைவாக இயங்கி காரியங்களை செய்து முடித்தோம் என்பது வியப்பாக உள்ளது’ என்று ஒரு நேர்கானலில் சிட்னிஸ் கூறுகிறார் ஸ்ரீஹரிகோட்டாவை ஏவுதளமாக தேர்ந்தெடுத்ததற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. ஒன்று அது கிழக்கு கடற் கரையில் இருப்பதால் விண்கலங்களை கிழக்கு திசையில் செலுத்துவதற்கு உதவிகரமாக இருக்கும். இரண்டாவது அது பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ளது. “ கிழக்கு முகமாக ராக்கெட்டுகளை செலுத்துவதன் மூலம் பூமியின் சுழற்சியை நாம் சாதகமாக பயன்படுத்தலாம். ஏவுதளம் நிலநடுக்கோட்டிற்கு அருகில் இருப்பதால் பூமியின் சுழற்சியின் மூலம் விண்கலங்களுக்கு 450 மை/செ என்கிற உந்துவிசை கிடைக்கும். இதன் மூலம் ஒரு ஏவுகலத்தில் அதிக சுமை ஏற்ற இயலும். நிலைநிறுத்தமான செயற்கைக்கோள்கள் நிலநடுக்கோட்டின் தளத்திலேயே இருக்க வேண்டும். எனவே அப்படிப்பட்ட கலங்களுக்கு ஏவுதளம் நிலநடுக்கூட்டின் அருகில் இருப்பதே சிறந்தது.” என்று அந்த புத்தகம் மேலும் கூறுகிறது.  வேறு சில காரணங்களும் உள்ளன. அந்தப் பகுதி பெரும்பாலும் மக்கள் வசிக்காத பகுதியாகவும் கடலுக்கு அருகிலும் உள்ளது.  இதன் மூலம் ஏவுகலத்தின் பாதை கடலுக்கு மேலே இருக்கும். இதனால் அதிலிருந்து பிரிந்து கீழே விழும் கருவிகளின் தாக்கம் எந்த வித தடங்கலும்  இல்லாமல் ஆழமான கடல் பகுதியிலேயே நடைபெறும்.