புதுதில்லி, ஏப்.8- ஒன்றிய அரசாங்கம், ‘மலையாள நியூஸ் சேனல் மீடியா ஒன்’ மீதான தடை விதித்திருந்ததை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு பல பத்திரிகையாளர் சங்கங்கள் வரவேற்பு அளித்துள்ளன. இது தொடர்பாக தேசிய பத்திரிகையாளர்கள் கூட்டணி (NUJ-National Alliance of Journalists), தில்லி பத்திரிகையாளர்கள் சங்கம் (DUJ-Delhi Union of Journalists) மற்றும் ஆந்திரப் பிரதேச உழைக்கும் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (Andhra Pradesh Working Journalists’ Federation) முதலானவை, இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு வரவேற்றுள்ளன. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: மேற்படி மலையாள சேனல் சார்பாக அவர்களுடைய பழைய உரிமம் பத்தாண்டுகள் கழித்து, புதுப்பிக்கப்படுவதற்காக, 2022 ஜனவரி அன்று ஒன்றிய அரசாங்கத்தின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால், உள்துறை அமைச்சகத்தின் ஆட்சேபணைகளை மேற்கோள்காட்டி மறுக்கப்பட்டிருந்தது. இதன்பின்னர் அந்த சேனல் இரண்டு மாத காலத்திற்கு ஒளிபரப்பு எதையும் செய்திடவில்லை. இது தொடர்பாக கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், மீடியா ஒன் எடிட்டர், மற்றும் சில சேனல்களின் ஊழியர்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் இந்த முடிவால் தங்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருப்பதையும், பத்திரிகைச் சுதந்திரம் பறிக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி அவற்றுக்கு எதிராக மேல்முறையீடு செய்தார்கள். கெடு வாய்ப்பாக கேரள உயர்நீதிமன்ற அமர்வாயம் (டிவிஷன் பெஞ்ச்), ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் அனுப்பப்பட்ட ‘மூடிய உறை’ (‘sealed cover’)யில் வந்த வாதங்களை ஏற்றுக்கொண்டு, அந்த சேனல் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஒன்றிய அரசாங்கத்தின் முடிவு சரி என்று உயர்த்திப்பிடித்தது. எனினும் 2022 மார்ச் 15 அன்று உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தும், மேற்படி சேனல் தன் செயல்பாடுகளைத் தொடர்வதற்கு அனுமதி அளித்தும் உத்தரவிட்டது.
சுதந்திர ஊடகம் குடியரசின் ஜீவநாடி
2023 ஏப்ரல் 5 அன்று உச்ச நீதிமன்றம், வரலாறு படைத்திடும் தன்னுடைய தீர்ப்புரையில், அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான உரிமை பத்திரிகைகளுக்கு உண்டு எனக்கூறி பத்திரிகை சுதந்திரத்தை உயர்த்திப்பிடித்திருக்கிறது. இது தொடர்பாக நீதிமன்றம் கூறியிருப்பதாவது: “ஓர் ஊடக, ஒரு செய்தி ஊடகத்திற்கு, தடை விதித்திருப்பது, என்பது பத்திரிகை சுதந்திரத்தின்மீது கட்டுப்பாடுகளை விதித்திருப்பதைப் போன்றதாகும். இவ்வாறு அரசமைப்புச்சட்டத்தின் 19(2)ஆவது பிரிவின்கீழ் நிர்ணயிக்கப்பட்ட காரணிகளுக்காக மட்டுமே தடை விதித்திட முடியும். சுதந்திரமான ஊடகம் (independent press) என்பது, ஜனநாயகக் குடியரசு இயங்குவதற்கு மிகவும் ஜீவநாடியான ஒன்றாகும். ஒரு ஜனநாயக சமூகத்தில் அதன் பங்களிப்பு மிகவும் முக்கியமானதாகும். அது, அரசின் செயல்பாடுகள் மீது வெளிச்சத்தை ஒளிரச் செய்கிறது. பத்திரிகை (press) என்பது உண்மையைப் பேசுவதற்கான கடமையைப் பெற்றிருக்கிறது. உண்மைகளை ஆட்சிபுரிபவர்களுக்கும், நாட்டின் குடிமக்களுக்கும் அளித்து, கசப்பான உண்மைகளை அவர்கள் தெரிந்துகொண்டு, சரியான திசைவழியில் ஜனநாயகத்தை இயக்கிட அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கிறது.”
பாதுகாப்புக்கு ஆபத்து என்பதை ஏற்க முடியாது
மேலும் உச்சநீதிமன்றம், ‘மூடி முத்திரையிடப்பட்ட உறை’ (‘sealed cover’) அளிப்பதையும் அரசாங்கம் அவ்வாறு அளித்திட்ட உறையை ஏற்று கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்ததையும் விமர்சித்திருக்கிறது. இது தொடர்பாக அது கூறியிருப்பதாவது: “தேசியப் பாதுகாப்பை இவ்வாறு மேலான போக்கில் பார்க்க முடியாது. இதுபோன்று கூறுவதற்கு உரிய சான்றுகள் அளிக்கப்பட வேண்டும்.( “…national security claims cannot be made out of thin air. There must be material backing such inference…”) மேலும் உச்சநீதிமன்றம், மேற்படி சேனலின் முனைவோர்களுக்கும், ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் என்னும் அமைப்புக்கும் இடையே தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுவதைச் சுட்டிக்காட்டி இதுவெல்லாம் ஒரு சேனலைத் தடை செய்வதற்கான காரணம் அல்ல என்றும் கூறியிருக்கிறது. ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் என்னும் அமைப்பு தடை செய்யப்படாத ஓர் அமைப்பாக இருக்கும் சமயத்தில், அத்தகையதொரு அமைப்புடன் தொடர்பு இருப்பதால், அது தேசப் பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும் என்று அரசு கூறுவதையெல்லாம் ஏற்க முடியாது என்றும் கூறியிருக்கிறது. மீடியா ஒன் சேனலானது தில்லியில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களையும், குடியுரிமைத் திருத்தச் சட்டமுன்வடிவுக்கு (சிஏஏ) எதிராக நடைபெற்ற போராட்டங்களையும் மிகவும் விரிவான அளவில் ஒளிபரப்பிய ஒன்றாகும். இந்தப் பின்னணியில்தான் டியுஜேஇ, என்ஏஜே மற்றும் ஆந்திரப்பிரதேச உழைக்கும் பத்திரிகையாளர் கூட்டமைப்பு ஆகியவை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை வரவேற்கின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. (ந.நி.)