articles

img

“அரசுக்கு மதம் பிடித்தால்...” - கி.ஜெயபாலன்

எகிப்து சன்னி பிரிவு முஸ்லீம்களின் மத பீட தலைமையான “கிராண்ட் இமாம்” திடீரென மர்மமான முறையில் இறக்கிறார். தலைமை பதவி காலியாகிறது. அரசாங்கத்தின் ஏஜென்சி யான பாதுகாப்பு நிறுவனமும், மதபீடமும் இப்பதவிக்கு தங்களது ஆசி பெற்றவரை அமர்த்த நடத்தும் போட்டியும், சதியுமே, “கெய்ரோ கான்ஸ்பரசி”என்ற ஸ்வீடன்  நாட்டுத் திரைப்படம்.     காலியாக உள்ள “கிராண்ட் இமாம்” பதவிக்கு மதக்கமிட்டி யிலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கும் கட்டாய சூழல் உருவாகிறது. பார்வையற்ற சேக் நேமம், மதக்கட்டுப் பாடுகளுக்கு பெயர் போன சேக் துராணி ஆகிய இருவரும் இப்பதவிக்கு அடுத்து தயாராக உள்ளனர். ஆனால் நாட்டின் அதிபர் இவர்கள் அல்லாத சேக் ஓமர் பெப் லாவி என்பவரையே அமர்த்த விரும்பு கிறார். இதனை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு நாட்டின் பாதுகாப்பு ஏஜென்சி தள்ளப்படுகிறது. மதக்கமிட்டியிலுள்ள சேக்குகளுக்கு உதவிட பயிலும் மாணவர்களையே உதவியாளர்களாக வைத்துக் கொள்வது அங்குள்ள நடைமுறை.

பதவிக்கு தயாராக உள்ள சேக்கு களின் உதவியாளர்களை மட்டும் பாது காப்பு ஏஜென்சியின் கர்னல் இப்ராஹிம் தனித்தனியே பேசி, ஆசை வார்த்தை காட்டி தங்களுக்கான ஒற்றர்களாக மாற்றுகிறார். இந்த ஒற்றர்களில் கர்னல் இப்ராஹிம்-ன் நம்பிக்கைக்கு உரியவனாக மாறுகிறான் ஆதம். மீனவ சமூகத்தவனான ஆதம் அல் அஸ்ஸார் பல்கலைக்கழகத்தில் அரசின் உதவித்தொகையுடன் படிக்க வந்தவன். இந்நிலையில் சேக் நேமம்-ன் உதவியாளர் ஜிஜோ படுகொலை செய்யப்படுகிறார். இக்கொலையை விசாரிக்க கர்னல் இப்ராஹிம் களத்தில் இறங்குகிறார். கர்னலின் விசாரணையின் போதே, சேக் துராணிக்கு உதவியாளராக ஆதமை வஞ்சகமாக நியமிக்கிறார். சேக் துராணிக்கு, கள்ள உறவு மூலம் பிறந்த குழந்தை உள்ள விசயத்தை ஆதம் மூலம் அறிந்து அம்பலப்படுத்த, துராணியும் பதவி போட்டிக்கான தகுதியை இழக்கிறார். இதற்கிடையே பாதுகாப்பு ஏஜென் சியே, தனது உதவியாளர் ஜிஜோ-வை கொலை செய்ததை சேக் நேமம் உறுதி செய்கிறார். ஆனால் இதனை வெளியே சொன்னால், பாதுகாப்பு ஏஜன்ஸியால் தனது உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதை உணர்கிறார். எனவே தானே கொலைசெய்ததாக ஒப்புக்கொண்டு பாது காப்பு ஏஜென்சியிடம் சரணடைகிறார். நீதி மன்ற விசாரணையில் உண்மையைக் கூறி ஏஜென்சியின் கபட நாடகத்தை அம்பலப் படுத்தலாம் என்பதே நேமம்-ன் திட்டம். மேலும் கொலைப் பழிக்குள்ளானதால் சேக் நேமம் அவர்களும் பதவிக்கு தகுதி யற்றவராகிறார். இப்போது அரசாங்க விருப்பப்படி, சேக் ஓமர் பெப்லாவி “கிராண்ட் இமாம்” ஆகத் தேர்வாகிறார். இப்போது ஷேக் நேமம்-ன் ஒப்புதல் வாக்குமூலம் வாபஸ் பெறப்பட்டால், ஜிஜோ கொலையை விபத்தாக காட்டி கோப்பை முடிவு கட்ட பாதுகாப்பு ஏஜன்ஸி நினைக்கிறது. மதக்கோட்பாடு விசயத்தில் நேமம் உடன் தர்க்கம் செய்யக் கூடிய ஒரே மாணவன் ஆதம் மட்டுமே.  எனவே ஏஜென்சி, ஆதம்-ஐ தேர்ந்தெடுத்து, நேமமுடன் பேச்சு வார்த்தை நடத்தி, ஒப்புதல் வாக்குமூலத்தை திரும்பப் பெற சமாதானத் தூது அனுப்புகிறது. இத்திட்டம் வெற்றி பெற்றால் இருவருக்கும் விடு தலை. இல்லையேல் இருவரும் ஏஜென்சி யால் அழிக்கப்படுவார்கள். இது ஏஜன்சி யின் கட்டளை. ஆதம் இக்காரியத்தில் வெற்றி யடைந்தானா?

இதற்கான விடையை சிறப்பான திரைக்கதையின் மூலம்,படம் நெடுகிலும் ஆர்வத் தவிப்பை உருவாக்கி சிறப்பாக வெளிவந்துள்ள அரசியல் திகில் படம் “கெய்ரோ சதி”.                 சேக்குகள் தங்களின் உதவிக்கு வைத்துள்ள மாணவர்களையே,தேச பாதுகாப்பு ஏஜன்சி வேவு பார்க்கவும் பயன் படுத்துகிறது. ஒரே நேரத்தில் இரு நிறுவனங்களாலும் மாணவர்கள் ஈவிரக்க மற்று துன்புறுத்தப்படுகிறார்கள்.           

பார்வையற்ற சேக் நேமம், “கண்ணை மூடினால்தான், உண்மையை உங்களால் காணமுடியும். வாழ்க்கை ஒரு விளை யாட்டு”; என்ற அவரின் கருத்துக்களோடு, மார்க்ஸின் தத்துவங்களான” தேவையை உணரும் வரை தேவை குறித்து குருட்டுத் தனமாக எவ்வித பார்வையற்றும் இருப்போம். மேலும் தேவையின் உணர்வே சுதந்திரமாகும். மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாததையே, மன இயலாமை என்கிறோம். இந்நிலைக்கான சான்றே மதமாகும்” என்பதை மேற்கோள் காட்டி, மாணவர்களுக்குப் போதிப்பது; மார்க்ஸியத்தை எவ்வாறு லாவகமாக, மதக்கருத்துகளோடு இணைத்து திரிக் கிறார்கள் என்பதையும் யூகிக்கமுடிகிறது. “மதமும், அரசும் இணைந்தே செயல் பட வேண்டும். இதுவே “அல் அஸ்ஸார்க் கும்” அரசாங்கத்திற்கும் நல்லது” என பதவி ஏற்றவுடன் கிராண்ட் இமாம் சேக் ஓமர், ஆதமிடம் பேசுகிறார்; வெள்ளிக் கிழமை தொழுகையில், “நாடெங்கிலும் அரசாங்கத் திற்கு எதிராக உயரிய சுதந்திரம் கேட்டு மக்கள் போராட்டத்திற்கு தயாராகி, இணையதளம் மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். உள்நாட்டு கலகம் என்பது, ஒரு படுகொலையை விட மோசமானது” எனப் பிரசங்கம் செய்கிறார்; இது இவரது எடுபிடி அரசியலை உரித்து காட்டுகிறது. “மதம் என்பது இதயமற்ற உலகின் இதயம்” என்றார் மார்க்ஸ். அப்படிப்பட்ட மதமும், அரசியலும் கைகோர்த்தால் மனி தம் மரிக்கும் என்பதற்கு, பல்கலைகழக வளாகத்திலே தேசிய பாதுகாப்பு ஏஜன்சி யின் ஆட்களால் மாணவன் ஜிஜோ படு கொலை செய்யப்படுவதும்; பல்கலைக் கழகத்திலிருந்து, பாதி படிப்பிலேயே பலர் விரட்டப்படுவதும். பலர் சித்ரவதைக்கு உள்ளாகிக் காணாமல் ஆக்கப்படுவதும்; சான்றாகும். மதம் என்பது இறைத் தத்துவத்தையும் ஆன்மீகத்தையும், அடிப்படையாகக் கொண்ட அகநெறிமுறை. அரசாங்கம் என்பது மக்கள் நலனுக்கான அரசின் சட்டம், கொள்கை, மற்றும் கட்டுப்பாடு இவற்றை செயற்படுத்தும் ஏற்பாடு. இவை தனித்தனியே இயங்குவதே நாட்டிற்கு நல்லது.

ஆனால், மதம் அரசியலோடு  கலந்தால், என்ன நடக்கும் என்பதை பளிச் செனக் எடுத்துச் சொல்கிறது இப்படம். எகிப்து தேசத்து தந்தைக்கு பிறந்த, ஸ்வீடன் நாட்டவரான தாரிக் ஸாலா இயக்கி யுள்ளார். ஆதம் ஆக டௌபீக் பர்ஹாம், கர்னல் இப்ராஹிம் ஆக பார்ஸ் பார்ஸ், ஆகியோர் சிறப்பான நடிப்பை தந்துள்ள னர். கண்பார்வையற்ற சேக் நேமம் ஆக நடித்துள்ள மேஹ்ராம் ஹௌரி உண்மை யில் கண்பார்வையற்றவரா? என்ற சந்தேகம் எழும் வகையில் தத்ரூபமான நடிப்பைத் தந்துள்ளார். அல் அஸ்ஸார் வளாகம், மாணவ ஓற்றர்கள் மற்றும் கர்னல் இப்ராஹிம் அடிக் கடி சந்திக்கும் அமெரிக்கன் கபே, தேசிய பாதுகாப்பு அலுவலகம் என்ற மூன்று களங் களிலே பெரும்பாலான காட்சிகள் திரும்ப திரும்ப வந்தாலும், எவ்வித சோர்வும் தட்டா மல் படத்தொகுப்பு சிறப்பாக அமைக்கப் பட்டுள்ளது. பார்வையாளரின் ஆர்வத் துடிப்பை மிகுதியாக்குகிறது மேன்மை யான பின்னணி இசை. 2022ம் ஆண்டுக்கான சிறந்த திரைக் கதைக்காக கேன்ஸ் உலகத்திரைப் பட விழாவில் விருது பெற்றுள்ளது இப்படம்.