நள்ளிரவு படை திரட்டி உறக்கத்தில் தாக்குவதும் அப்பாவி மனிதர்களை வழிமறித்து ரணப்படுத்துதலும் சாதிப் பெருமை என்று சிலர் சந்தைப்படுத்துவதை அறியாமல் அதிகாரம் பெற்றவரிடம் உன்னை பணயம் வைத்து தன்னைவிற்றுக்கொள்ளும் தறுதலைகள் பேச்சை நம்பி தோள்களை உயர்த்தி வீதியில் உறுமித் திரிகிறாய்
உன் சாதிக்கு மட்டுமே
வீரம் உண்டென
எவன் சொன்னதுனக்கு
மதுரை வீரனும்
மணிக் குறவனும்
எரிஅம்பாய் வாழ்ந்ததை
என்னவென்று சொல்வாய்?
பலருடன் சென்று
சிக்கிய சிலரை
அடித்து அம்மணமாக்கி
என்ன தேடுகிறாய்?
உன்னிடத்தில் இருப்பதில்
வேறுபட்டது ஏதாவது தென்பட்டதா ..
அடித்து புண்படுத்தி
கதற விட்டு
என்ன கண்டறிந்தாய்
வேதனை வேறுபட்டிருந்ததா..
அவனில் சிதறிய
சிறுநீரிலும்
தெறித்து சிதறிய
குருதியிலும்
என்ன புரிந்து கொண்டாய்
புதிதாக...
உன் கீழ் புத்தியையும்
சீழ் பிடித்த போக்கும்
நீ நாகரீகம் தொடாதவன்
என்பதை நாடறிந்து
திகைக்கிறது
மனிதனை மனிதன் தின்ற
காட்டுமிராண்டிக்குணம்
இது என
நாகரிக சமூகம்
நையாண்டி செய்கிறது
தீ வைத்தால் உன் வீடும் எரியும் உடைத்தால் உன்வீட்டுப் பொருள்களும் உடையும் ..
அரிவாள் உன் மீது பட்டாலும்
ரத்தமும் காயமும் வரும்
அவனைப் போலவே
கையறு நிலையில்
கவர்மெண்ட்டை எதிர்பார்த்து காத்திருப்பாய் ...எனில்
நீ தாக்கிக் கொண்டது
உன்னைத் தான்.
நீ அவமானப்படுத்திக் கொண்டதும் உன்னைத்தான்
அவன் உன்னில்வேறுபட்டவனல்ல
புரிந்து கொள்..
வெறியை உடைத்தெறி
நெறியை படித்தறி
சரி எதுவெனும்பகுத்தறி
தூண்டியவனை தூக்கி எறி
யாவரும் கேளிர் எனும் அறம் அறி...