articles

img

ஒரு நூற்றாண்டுக்குப் பின்னும் அவர் வாழ்கிறார் நமது உணர்வுகளில்! - க.கனகராஜ்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் ஏ.நல்லசிவன் அவர்கள் மரணித்து 25ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்று (ஜூலை 20) தோழர் நல்லசிவன் அவர்களது நினைவு நாள் ஆகும். 25 ஆண்டுகள் என்பது ஒரு நீண்டகாலம். கட்சி உறுப்பினர்களில் பெரும்பாலானோர் இரண்டாயிரத்திற்கு பின்பாக கட்சிக்கு வந்தவர்கள். பொதுமக்களில் பலருக்கு ஏ.நல்லசிவன் நினைவிருக்க வாய்ப்பில்லை. கட்சித் தோழர்களுக்கும் நல்லசிவன் என்கிற அந்தப் பெயர் நினைவிருக்கும், ஆனால் அவரை உணர்ந்து கொள்வது சாத்தியமற்று இருக்கும். நெல்லை மாவட்டக்குழு இதை கணக்கில் எடுத்துக் கொண்டு அவரது நூற்றாண்டு நிறைவு விழாவை விரிவாக  திட்டமிட்டது. மெல்ல மெல்ல வேலைகள் ஆரம்பித்தது.  ஜூன் 25ம் தேதியன்று இதற்கென ஒரு இலச்சினை வெளியிடப்பட்டது. பகுதி அளவில் இயங்கும் 164 கிளைகளில் 140 கிளைகள் ஜூலை 2 அன்று மதச்சார்பின்மை  பாதுகாப்பு உறுதியேற்பு, தோழர் நல்லசிவன் பற்றிய அறிமுகம் நிகழ்வுகளை, அவரது புகைப்படத்தை வைத்து  செய்து காட்டினர். தோழர் நல்லசிவனை புதிய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவது என்கிற நோக்கத்தோடு, ஜூலை 5 அன்று ஒரு புத்தகம் வெளியிடப்பட்டது. ‘கனவுகள் ஒருநாள்  கைகூடும்’ என்ற நல்லசிவனின் வரிகளையே தலைப்பாக்கி,  அந்த புத்தகத்தை மிகச்சிறப்பாக கட்சியின்  மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன் உருவாக்கி யிருந்தார். இப்போது பார்க்கிற போது பல தோழர்களும், நல்லசிவன் குறித்து அந்தப் புத்தகத்தில் இருக்கக்கூடிய சில வாசகங்களை, வார்த்தைகளை எடுத்துப் பேசினர் என்பதைப் பார்க்கிற போது, அந்தப் புத்தகம் தன்னுடைய நோக்கத்தை நிறைவு செய்திருக்கிறது என்று சொல்ல வேண்டும். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் ஆர்.கிருஷ்ணன் அந்த புத்தகத்தை வெளியிட்டார். முன்னாள்  மாவட்டச் செயலாளர் வீ.பழனி நல்ல உரையை நிகழ்த்தினார். 

ஜூலை எட்டாம் தேதி ‘தூரிகையில் நல்லசிவன்’ என்கிற  ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நெல்லை மாவட்டக்குழு இதுபோன்ற விஷயங்களில் தங்கள் சிறப்பான முயற்சியை கடந்த காலத்தில் வெளிப்படுத்தியிருக்கிறது. திரிபுராவில் லெனின் சிலையை காவிகாலிகள் கீழே இழுத்துப் போட்ட போது தெற்கிலிருந்து லெனின் எழுகிறார்  என்கிற முழக்கத்தோடு ஒரு சிலையை வடித்தனர். இந்த சிலையை வடிவமைத்த சிற்பியும், ஓவியருமான, சென்னை கவின் கலைக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்ரு நிகழ்ச்சிக்கு வந்திருந்து ‘தூரிகையில் நல்ல சிவன்’ என்கிற நிகழ்வை துவக்கி வைத்தார். மிகச்சிறப்பான அரசியல் உரையை ஆற்றினார். அவர் துவக்கி வைக்க,  நெல்லை மாவட்டத்தின் ஓவியர்கள் ஒன்பது பேர் தோழர் நல்லசிவனை வரைந்தனர். அது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. தோழர்களுக்கு எல்லாம் நெகிழ்ச்சி.  ஓவியர்கள் போட்டி போட்டுக் கொண்டு நல்லசிவனை வரைந்தனர்.  அதற்கு அடுத்தபடியாக ஜூலை 9 அன்று கலை இலக்கியப் போட்டிகள், அறிவிக்கப்பட்டபடி மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. ஓவியம், கவிதை, கட்டுரை, போலச்செய்தல் என்கிற மைமிங்  என்பது உள்ளிட்ட ஏராளமான போட்டிகள். இது தவிர்த்து  கட்டுரைப்போட்டி, கவிதைப் போட்டிகளில் எழுதி அனுப்பி இருந்தனர். ஒட்டுமொத்தமாக 340 பேர் கலந்து கொண்டார்கள். இவர்களோடு பள்ளியில் இருந்து வந்திருந்த ஆசிரியர்கள், அந்த குழந்தைகளோடு வந்திருந்த பெற்றோர்கள் என்று அந்தப் பள்ளி வளாகம் களைகட்டி இருந்தது. நெல்லை மாநகர மேயர் சரவணன் அந்த நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ஏறக்குறைய 500க்கும் மேற்பட்டோர் அந்த நிகழ்வில் பங்கேற்றார்கள். அந்த நிகழ்ச்சியை நடத்திய தோழர்கள் ஒவ்வொரு வரிடமும் உற்சாகம் தொற்றிக் கொண்டது. நேரடியாக வந்த வர்கள், தபாலில் தங்கள் படைப்புகளை அனுப்பியவர்கள் என்று ஒட்டுமொத்தமாக 960 பேர் பங்கேற்றனர். 63 பள்ளி கள், 17 கல்லூரிகள் என பங்கேற்பு இருந்தது. 

ஜூலை 11, 12 தேதிகளில் ஏற்கனவே வெளியிடப் பட்டிருந்த புத்தக வாசிப்பு நடைபெற்றது. இதற்கிடையில் ஜூலை 9 அன்று அம்பாசமுத்திரத்தில் 25 பேர் ரத்த தானம் செய்தார்கள். இந்த மலரை தயாரித்ததில், நல்ல சிவனின் மகள் வழி பேத்தியின் கணவரான சங்கர நாராயணன் பங்களிப்பு மிகச்சிறப்பு. இந்த மலரில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத்,  ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் எழுதிய கட்டுரைகள் இருக்கின்றன. நல்லசிவனுடன் ஏதாவது ஒரு வழியில் தொடர்பு கொண்ட- கட்சியில் பெரும் பொறுப்பு களில் இல்லாத பல தோழர்களுடைய பதிவுகள் இடம் பெற்றிருக்கின்றன. அலுவலக கணக்காளராக இருக்கும் சாமு, கார் டிரைவர் சம்பத், அந்த காலத்தில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் இருந்த எஸ்.நம்புராஜன் என சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு தலைவர், தான் இயங்குகிற தளம் மட்டுமல்ல, தன்னோடு தொடர்புடைய அத்தனை பேரையும் ஈர்த்திருக்கிறார், அவர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை அந்த மலரில் இடம் பெற்றுள்ள பலருடைய பதிவுகள் உணர்த்தும். 

இதைத்தாண்டி, தோழர் நல்லசிவனின் குடும்ப உறுப்பினர்கள், மகள்கள், மகன்கள் எழுதியது உண்மை யில் மிகச்சிறப்பான கட்டுரைகளாக வந்திருக்கின்றன. ஒரு குடும்ப உறுப்பினராக அந்தக் கடமைகளை செய்வ தற்கு முயற்சி செய்து, ஆனால் கட்சிக்கு முன்னுரிமை என்று வருகிற போது அவற்றை நிறைவேற்றிய ஒரு தலைவர் அதற்குள் இருக்கிறார். அவர் சமூகத்திற்காக தியாகங்களை செய்த போது, அவரது குடும்பம் எவ்வ ளவு பெரிய இழப்புகளை சந்தித்து இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால் இந்த இழப்புகளை ஈடுகட்ட அந்த குடும்பத்தை இழுத்து வந்திருக்கிற பலர், மறக்க முடியாதவர்கள். நல்லசிவனின் மகள் அதற்கு ஒரு  வடிவம் கொடுத்திருக்கிறார். ‘‘ஆயிரம் பேர் எங்கள் அப்பா வை பற்றி எழுதலாம்,

ஆனால் எங்கள் அம்மாவை பற்றி நான் மட்டும் தானே எழுதமுடியும்’’ என்று சொல்லி, எங்கள் குடும்பத்தை அவர்தான் நகர்த்திச் சென்றார் என்று சொல்லி இருக்கிறார்.  நிறைவாக ஜூலை 16 பொதுக்கூட்டம். அந்த பொதுக்கூட்டத்தில் இந்த மலர் வெளியிடப்பட்டது. தோழர் நல்லசிவன் பிறந்த ஊரில் இருந்து எடுத்து வரப்பட்ட ஜோதி. அந்த ஜோதியை எடுத்துக்கொண்டு வந்தவர்களில் அனேகமாக இருவரைத் தவிர மீதி அத்தனை பேரும் 15 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகள். ஆறாம் வகுப்பு படிக்கிறேன், ஏழாம் வகுப்பு படிக்கிறேன் என்று  தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அந்த மேடை யில் தலைவர்களோடு நல்லசிவன் அவர்களின் இரண்டு மகள்களும் அமர்ந்திருந்தார்கள். மிக நெகிழ்ச்சியான தரு ணங்கள். அவர்களை அறிமுகப்படுத்துகிற போது கூட்டத்தில் ஏற்பட்ட அந்த நெகழ்ச்சியை உணரமுடிந்தது. தோழர் நல்லசிவனை முன்வைத்து 31 வயதுக்கு கீழ் இருக்கக்கூடிய நூறு இளைஞர்களை ஆதரவாளர்களாக இணைக்க வேண்டும், அவர்களை மேடை ஏற்ற வேண்டும் என மாவட்டக்குழு முடிவெடுத்திருந்தது. 62 பேர்  மேடையேறினர். அது ஒரு கண்கொள்ளாக்காட்சி. 85 ஆண்டு களுக்கு முன்பாக அரசியலில் அடியெடுத்து வைத்த ஒரு தலைவர் இறந்துபோய் 25 வருடம் கழித்து அவருடைய பெயரால், அவருடைய தியாகத்தால் ஆகர்ஷிக்கப்பட்டு தங்களை கம்யூனிஸ்ட்டாக இணைத்துக்கொண்ட 62 பேர்  மேடையில் மொத்தமாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இப்பொதுக் கூட்டத்தின் நடுவே, ரத்ததானம் செய்தவர்களுக்கு ஒரு சின்ன சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதில் 10 முதல்  15 முறை, 20 முறை என்று இருந்தது. இருபத்தி ஏழு முறை ரத்த தானம் செய்த ஒருவர் மேலே ஏறினார். அவர்  ஒரு பெண். அவர், கட்சியின் அம்பாசமுத்திரம் இடைக் கமிட்டிச் செயலாளர் தோழர் ஜெகதீஷன் இணையர். எல்லோரையும் அறிமுகப்படுத்தி விட்டு ஜெகதீஷன் சொன்னார், நான் முப்பது நான்கு முறை ரத்ததானம் செய்திருக்கிறேன் என்று. கூட்டத்தில் மகிழ்ச்சிக்கும் பாராட்டு ஒலிகளுக்கும் குறைவு இருந்திருக்குமா என்ன!  மிகுந்த மகிழ்ச்சியோடு நிறைவோடு தோழர் நல்ல சிவனுடைய பெயரை அறிமுகப்படுத்தினோம். உச்சரிக்க வைத்தோம். அவருடைய கம்யூனிஸ்ட் குணநலன்களில் ஒரு பகுதியை  நம்மால் மட்டுமின்றி, மற்றவர்களையும் உணர வைக்க முடிந்திருக்கிறது. கட்சியின் நெல்லை மாவட் டத் தோழர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!