articles

img

அடக்குமுறையை சட்டப்பூர்வமாக்குவதே புதிய மூன்று சட்டங்கள்!-என்.முத்து அமுதநாதன்

இந்திய நாட்டின் நீதிபரிபாலன முறை யில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள் ளன. தேவையான சட்டங்கள் இயற்றப்படுவதும், நடைமுறையில் உள்ள சட்டங்களில் திருத்தங் கள் மேற்கொள்ளப்படுவதும் நடந்துள்ளன. ஆனால் மோடி அரசு தனது கடந்த பதவிக் காலத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நாகரிக்சுரக்ஷா சன்ஹிதா(BNSS), பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பாரதிய சாக் ஷிய அதினியம் ஆகிய புதிய சட்டங்களை, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி  உறுப்பினர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்து விட்டு எவ்வித விவாதமுமின்றி நிறை வேற்றிக் கொண்டது.

இந்திய நாட்டின் நீதிபரிபாலன முறை யில் பல்வேறு மாற்றங்கள் நடந்துள் ளன. தேவையான சட்டங்கள் இயற்றப்படுவதும், நடைமுறையில் உள்ள சட்டங்களில் திருத்தங் கள் மேற்கொள்ளப்படுவதும் நடந்துள்ளன. ஆனால் மோடி அரசு தனது கடந்த பதவிக் காலத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களுக்கு பதிலாக பாரதிய நாகரிக்சுரக்ஷா சன்ஹிதா(BNSS), பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் பாரதிய சாக் ஷிய அதினியம் ஆகிய புதிய சட்டங்களை, நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி  உறுப்பினர்கள் அனைவரையும் இடைநீக்கம் செய்து விட்டு எவ்வித விவாதமுமின்றி நிறை வேற்றிக் கொண்டது.

இச்சட்டங்களால் குடிமக்களுக்கு நீதிகிடைக் காது என அகில இந்திய வழக்கறிஞர் சங்கம்  ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறது. தமிழ் நாட்டின் முதலமைச்சர், மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் இந்த சட்டங்களுக்கு எதிர்ப்பு  தெரிவித்து அமல்படுத்துவதை நிறுத்தி வைக்கும்படி ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். நாடு முழுவதும் வழக்கறிஞர் கள் போராடி வருகின்றனர்.  ஜூலை 1 திங்க ளன்று தமிழகம் உட்பட ஆவேசமிக்க உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

கொடிய சட்டங்கள்

இம்மூன்று சட்டங்களும் அரசியலமைப் பிற்கு விரோதமானவை. மொழி உரிமை, மாநில அரசுகளின் உரிமை, கூட்டாட்சித் தத்துவம், மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானவை. நீதிமன்றங்களின் அதிகாரத்தை குறைக்கின்றன. ஆளும் வர்க்கத்திற்கு உத விடும் வகையில் அரசின் அடக்குமுறை கருவி களுக்கு மிருகபலத்தை வழங்குகின்றன. மத வெறியர்களுக்கு சாதகமாகவும் உருவாக்கப் பட்டுள்ளன.

ரிமாண்ட் செய்யும் அதிகாரம்

பழைய சட்டத்தில் குற்ற வழக்கில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவரை ரிமாண்ட் செய்யும் அதிகாரம் நீதித்துறை நடு வருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய புதிய சட்டம் (BNSS) பிரிவு 187ன் படி நிர்வாகத்துறை நடுவருக்கும் (தாசில்தார்) கைது செய்யப்பட்ட நபரை ரிமாண்ட் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் பணி அரசின் நிர்வாகத்துறைக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தப்பிரிவின்படி ஒருவரை சட்டவிரோதமாக காவலில் வைக்க  அரசோ அல்லது காவல்துறையோ அல்லது வேறு துறையினரோ தவறாக பயன்படுத்தக் கூடிய அபாயம் உள்ளது. சட்ட விரோத காவல், சட்டப்படியான காவலாக மாற்றம் செய்யப்படும். ஏற்கனவே இயங்கிக்கொண்டிருக்கின்ற பெரு  நகர நீதிமன்றங்கள், மாவட்ட உதவி அமர்வு நீதிமன்றங்கள் புதிய சட்டத்தில் நீக்கப் பட்டுள்ளன. இதனால் நீதிமன்றங்களின் அதி காரம் மற்றும் மாண்பு சிதைக்கப்படுகிறது.

ஒன்றிய அரசால் நிறைவேற்றப்படும் சட்டங்கள் அனைத்தும் ஆங்கில மொழியில் தான் இருக்கவேண்டும் என்பது இந்திய அர சியலமைப்புச் சட்டப் பிரிவு 348ன் விதிஆகும். ஆனால் மூன்று சட்டங்களும் சமஸ்கிருத ஒலி யமைப்பில் இந்தி மொழியில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது ஆகும். மேலும் பல்வேறு மொழிகள் பேசும் மாநில மக்களின் மொழி உரிமைக்கு எதிரானது.

ஜனநாயக உரிமைகளைக் காவு கேட்கும் பிரிவுகள்

குற்ற வழக்கில் எதிரிக்கு 14 நாட்கள் மட்டுமே நீதித்துறை நடுவரால் நீதிமன்றக்காவல் வழங்கி உத்தரவிடமுடியும் என்ற பழைய விதி புதிய சட்டத்தின்படி 90 நாட்கள் வரை நீதிமன்றக் காவலுக்கு ஆணையிடலாம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய (BNSS )சட்டம் பிரிவு  151ன்படி மாநில அரசின் காவல்துறை மற்றும்  ஒன்றிய அரசின் காவல் துறை அதிகாரி களின் அத்துமீறல்கள், சட்டவிரோத நடவடிக்கை களுக்கு எதிராக அரசின் அனுமதியில்லாமல் குற்றவியல் வழக்குகள் தொடுக்க முடி யாது. ஜனநாயக ரீதியில் நடக்கும் தர்ணா,  மறியல், ஆர்ப்பாட்ட நிகழ்வின்போது காவல்து றையுடன் ஏற்படும் தள்ளுமுள்ளுகளுக்கு புதிய தண்டனைச்சட்டம் பிரிவு 131ன்படி வழக்கு போட்டு இரண்டு ஆண்டுவரை சிறைத்  தண்டனை வழங்க வகை செய்கிறது. இது போன்ற பல்வேறு சட்டப்பிரிவுகள் மனித உரிமை, ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக வும் ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கு ஆதரவாகவும் உள்ளன. புதிய சட்டப்பிரிவு 172ன்படி காவல்துறை அதிகாரியின் வழி காட்டுதலை மீறுகின்றவரை அடைத்து வைக்க லாம், சிறைபடுத்தலாம், வெளியேற்றலாம் என எல்லையில்லா அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் போலீஸ் அடக்குமுறை ராஜ்ஜி யத்திற்கு வழிவகை செய்துள்ளது.

மாநில அரசின் உரிமை பறிப்பு

நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்  பட்ட கைதியை, அவரது நன்னடத்தை கருதி  தண்டனையை குறைத்து பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருந்ததை புதிய சட்டம் அனுமதிக்கவில்லை. புதிய சட்டவிதி 478ன்படி மாநில அரசின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மாநில அரசு ஒன்றிய அரசின் அனுமதி பெற்ற  பின்பே கைதிகளுக்கு தண்டனை குறைப்பு தரவேண்டும் என கூறுகிறது. இது மாநில அரசின் உரிமையை பறித்து கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது ஆகும்.

சட்டவிரோதப் பிரிவுகள்

அரசுக்கு எதிராக சதி செய்தல் என்ற ஆங்கிலேய காலத்து சட்டப்பிரிவை (124- A IPC) உச்சநீதிமன்றம் ரத்து செய்து விட்டது. ஆனால் அதைவிட கொடுமையான சட்டப்பிரிவு புதிய தண்டனைச்சட்டத்தில் 150வது பிரிவாக சேர்க்கப்பட்டுள்ளது. காலனி ஆதிக்க சட்டத்தை  ஒழிப்பதாக கூறிக்கொண்டு அதைவிட கொடூரமான மக்கள் விரோத சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது மோடி அரசு. எந்த தனி மனிதரையும் காவல்துறை அதிகாரி அடைத்து  வைக்கவோ, சிறைபடுத்தவோ வெளி யேற்றவோ அதிகாரம் வழங்கியுள்ளது. உச்சநீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தேசவிரோத சட்டப்பிரிவை மீண்டும் புதிய சட்டத்தில் சேர்த்திருப்பது முற்றிலும் சட்டவிரோதம் ஆகும். ஆளும் கட்சிகள் தங்களது அரசியல் பகையை தீர்த்துக்கொள்ளவே இந்த பிரிவு பயன்படுத்தப்படும். காவல்நிலைய மரணங்கள் மற்றும் காவல்நிலைய சித்ரவதைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குரிய சட்டப்பிரிவுகள் சேர்க்கப்படவில்லை.

மதவெறியர்களுக்கு ஆதரவாக...

ஆயுதங்களுடன் ஊர்வலம் செல்லுதல், பயிற்சி செய்தல் பழைய சட்டத்தால் (144A CrPC) தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது புதிய சட்டத்தில் அந்தப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. மதவெறி சக்திகளுக்கு ஆதரவாகவே இந்தப்பிரிவு நீக்கப்பட்டுள்ளது. புதிய BNSS சட்டப்பிரிவு 349ன்படி வழக்கில் கைது செய்யப்படாத எவரிடமிருந்தும் கட்டாயப்படுத்தி அவரது கையெழுத்து, கைரேகை, குரல்மாதிரி ஆகியவற்றைப் பெறமுடியும். இது தனிமனித சுதந்திரத்திற்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

முறைகேடுகள் அதிகரிக்கும்

டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளாமல் அதை சாட்சிய மாக ஏற்றுக் கொள்ள புதிய சட்டம் அனு மதிக்கிறது. இது குற்றவழக்கிலும், சிவில் வழக்கி லும் பல்வேறு முறைகேடுகளுக்கே வழி வகுக்கும். புதிய தொழில்நுட்பத்தை வழக்கின் விசாரணைக்கு பயன்படுத்த புதிய சட்டம் அனுமதிக்கிறது. போதிய வழிகாட்டு முறைகள், கட்டமைப்பு மற்றும் பயிற்சி இல்லாமல் பயன்படுத்தும்போது சரியான நீதி வழங்க முடியாது. 

மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை

காவல்துறை, வழக்கறிஞர்கள், நீதிபதிகள் ஆகியோருக்கு போதிய பயிற்சி இல்லாமல் புதிய சட்டங்களை அமல்படுத்தினால் வழக்கின் விசாரணை தாமதமாகி நீதிபரிபாலன முறை யில் பாதகம் ஏற்படும். வழக்கின் விசாரணை பாதிக்கப்பட்டு வழக்குகள் நீதிமன்றத்தில் தேங்கும் நிலை ஏற்படும். வழக்கு விசாரணை யின்போது புதிய சட்டம், பழைய சட்டம் என குழப்பம் ஏற்பட்டு வழக்கின் விசாரணை பாதிக்கப்பட்டு மக்களுக்கு நிவாரணம் கிடைப்ப தில் காலதாமதம் ஏற்படும். எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் அவசர அவசரமாக சட்டங்களை இயற்றி அமல்படுத்த ஒன்றிய அரசு துடிக்கிறது. இச்சட்டங்களால் மக்களுக்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை. மாறாக நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு துயரத்திற்கு ஆளாகும் நிலையை ஒன்றிய அரசு ஏற்படுத்துகிறது.

எனவே, மேற்கண்ட மூன்று சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்திவைத்து முறையாக விவாதித்து பலதரப்பினரிடமும் ஆலோசனை பெற்று முறையான நீதிபரிபாலனத்திற்கு உத வக்கூடிய சட்டங்களாக உருவாக்கி அமல் படுத்துவதே சாலச்சிறந்தது ஆகும். 

என்.முத்து அமுதநாதன்

தேசிய இணைச் செயலாளர். 
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் 









 

;