articles

img

மங்காத ஒளி வீசும் பொன்மலைத் தியாகிகள்! -ஆர்.ராஜா

ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்த வாக்கெடுப்பு 1946 ஆம் ஆண்டு மே மாதம் பெரும் எழுச்சியுடனும், ஒற்றுமையுடனும் நடை பெற்றது. 

வேலைநிறுத்த வாக்கெடுப்பு நடத்துவது என்பது ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் உரிமையாகும். ஆனால் 9 ஆண்டுகள் போராடிப் பெற்ற உரிமை யைப் பறிக்கும் வகையில் ஜுலை 22 ஆம் தேதி அற்ப காரணங்க ளைக் கூறி பொன்மலை பெயிண்டிங் பிரிவின் ஏழு தொழிலாளர்களை தற்காலிகமாக பணி நீக்கம்  செய்தது. இதை எதிர்த்து அப்பிரிவின் தொழிலா ளர்கள் அனைவரும் காலவரையற்ற உள்ளிருப்பு வேலை நிறுத்தத்தை துவங்கினர். 

எஸ்ஐஆர்யு சங்கத்தின் தலைவர் எம்.கல்யாண சுந்தரமும், பொதுச் செயலாளர் அனந்தன்நம்பியா ரும் தென்னிந்திய ரயில்வேயின் பொது மேலாளரான எப்.சி.ரெனால்ட்ஸ் உடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. 

வேறு வழியின்றி ஜூலை 31 ஆம் தேதி கூடிய சங்கத்தின் மத்திய நிர்வாகக் குழு ஒரு கோரிக்கைப் பட்டியலை முன்வைத்தது. ரயில்வே நிர்வாகம் அதைத் தீர்த்து வைக்கவில்லையென்றால் ஆகஸ்ட் 24 அன்று முதல் பொது வேலைநிறுத்தம் செய்வது என்று முடிவு செய்தது. 

தேச பக்த உணர்வும், வர்க்க உணர்வும் கொண்ட தொழிலாளர்களின் இந்தப் போராட்டமானது ஆங்கிலேய ரயில்வே நிர்வாகத்தை எதிர்த்து நடை பெறும் போராட்டமே தவிர, புதிதாக அமைந்துள்ள இடைக்கால காங்கிரஸ் அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல என்று சங்கத் தலைவர்கள் மாகாண காங்கிரஸ் அமைச்சரவைக்கு தெரிவித்தனர். ஆனால் அதி காரத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர்களோ இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தங்களுக்கு எதிரான தென்றும், அரசியல் நோக்கமுடையதென்றும் கருதிக் கொண்டு ஒடுக்குமுறையில் இறங்கியது. ஆயினும் வேலைநிறுத்தம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 24 ஆம் தேதி துவங்கியது. தென்னக ரயில்வேக்கு உட்பட்ட 430 ரயில் நிலையங்களில், 300 நிலையங்கள் இழுத்து மூடப்பட்டன. வாரக்கணக்கில் ஒரு வண்டிகூட நகரவில்லை. பொன்மலை பணிமனை முகப்பில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், அவர்தம் குடும்பத்தினரும் அமைதியாக மறியல் செய்தனர்.

வேலைநிறுத்தத்தை உடைத்திட ஆங்கிலேய ரயில்வே நிர்வாகம் 100 சதவீத ஊதிய உயர்வு உள்பட பல்வேறு ஆசைவார்த்தைகள் கூறியது. 

இத்தகைய முயற்சிகள் அனைத்தையும் தொழி லாளிகள் துச்சமாகக் கருதி நிராகரித்தனர். இது நிர்வாகத்தை மேலும் ஆத்திரமூட்டியது. எப்படியாவது ரயிலை ஓட்டிக் காண்பிக்க வேண்டுமென்ற வீம்புக்காக பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுத்து அழைத்து வந்து ரயில் பெட்டிகளில் உட்கார வைத்து, ஓரிரு ரயிலை ஓட்டினர். அதுவும் கேலிக்கூத்தாக முடிந்தது. 

செப்டம்பர் 5 காலை 9 மணிக்கு பொன்மலை சங்கத் திடலில் வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலா ளிகளும் அவர்தம் குடும்பத்தினருமாக ஆயிரக்க ணக்கானோர் கூடியிருந்து தலைவர்களின் உரைகளை கேட்டுக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் மலபார்  சிறப்புக் காவல் படை சங்கத் திடலுக்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. தங்கவேலு (26 வயது), தியாகராசன்(28), ராஜூ(26), ராமச்சந்தி ரன்(25), கிருஷ்ணமூர்த்தி(24) ஆகிய 5 இளம் தோழர்கள் அதேஇடத்தில் துப்பாக்கிக் குண்டுக ளுக்குப் பலியானார்கள். அனந்தன் நம்பியாரை குற்று யிரும் குறையுயிருமாக்கியது.

250-க்கும் மேற்பட்ட தொழிலாளிகள் படுகாயப் படுத்தப்பட்டனர். நம்பியாரின் தாயின் வலது கை அடித்து முறிக்கப்பட்டது. 

இவ்வளவு அட்டூழியங்களையும் புரிந்த ஆயுதப் படை, சங்கத்தின் சொத்துக்களையும் சூறையாடியது. நம்பியாரை முதல் குற்றவாளியாகக் கொண்டு 273  தொழிலாளிகள் மீது சதி வழக்கு போட்டது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பொன்மலை காலனி யில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. யாரும் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. தங்கள் குடும்பத் தலைவருக்கு என்னவாயிற்றோ என்ற பதை பதைப்பில் தொழிலாளிகளின் குடும்பத்தினர் துடித்துக் கொண்டிருந்தனர்.

பொன்மலையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அறிந்ததும் அகில இந்திய ரயில்வே ஊழியர்  சம்மேளனத்தின் அப்போதைய தலைவராக இருந்த எஸ்.குருசாமி திருச்சிக்கு விரைந்து வந்தார். போலீஸ் தாக்குதல்களை நிறுத்தும்படியும், தொழிலாளிகளின் கோரிக்கைகளை ஏற்கும்படியும் அவர் நிர்வாகத்தை வற்புறுத்தினார்.  திருச்சி மத்திய சிறையில் அடைக் கப்பட்டிருந்த ரயில்வே தொழிற்சங்கத் தலைவர்க ளை அரசாங்க அனுமதி பெற்று சந்தித்துப் பேசினார். 

தொழிலாளர்களின் மீது மிகக் கடுமையான தாக்குதல்களை நடத்திய பின்னரும்கூட அவர்க ளின் போராட்ட உணர்வு மழுங்கவில்லை என்பதை யும், வேலைநிறுத்தம் தொடர்ந்து முழுவேகத்துடன் நடைபெறுவதையும் கண்ட ஆங்கிலேய ரயில்வே நிர்வாகம், எஸ்.குருசாமி மூலம் சில வாக்குறுதிகளை அளித்தது. தண்டனை வழங்கும் முன் விசாரிக்கப் பட வேண்டும் என்பது தொழிலாளிகளின் உரி மையாயிற்று.

பின்னர் அறிவிக்கப்பட்ட முதல் ஊதியக்குழு, ஊதிய விகிதங்களை மாற்றியமைத்தது. அக விலைப்படி கணிசமாக உயர்த்தப்பட்டது. ரயில்பாதை  (ஓபன் லைன்) காங்கி ஊழியர், ஸ்டேஷன் மாஸ்டர், பாயின்ட்ஸ்மேன் போன்ற இதர பல பிரிவினருக்கும் 8 மணி நேர வேலை என்பது உறுதியாக்கப்பட்டது. 

273 பேருக்கு எதிராக போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. இது சாதாரண வெற்றி யல்ல. பொன்மலை தியாகிகள் ஐவரும், அவர் தம் சக தோழர்களும், தலைவர்களும் சிந்திய ரத்தத்தில் கிடைத்த வெற்றியாகும். 

ஆர்.ராஜா  கட்டுரையாளர் : சிபிஎம் திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர்