articles

img

உலகத் திரைப்பட விழாக்களும் உள்ளூர் சினிமாவும் -இயக்குநர் எம்.சிவக்குமார்

உலகத் திரைப்பட விழாக்களைப் பற்றி நினைக்கும்போது, 35 ஆண்டுகளு க்கு முன்பு திரைப்படக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் முதன்முதலாக கலந்துகொண்ட அனுபவம் நினைவுக்கு வருகிறது. அப்போதெல்லாம் உலகத் திரைப்பட விழா என்றால் தில்லியில் மட்டுமே நடக்கும். ஓர் ஆண்டு தில்லி யிலும், அடுத்த ஆண்டு இந்தியாவின் பெருநகர் ஒன்றிலும், மீண்டும் அடுத்த ஆண்டு தில்லியிலும் நடத்தப்படும். தில்லியில் நடத்தப்படும் விழா போட்டி விழாவாகவும், பெருநகரங்களில் நடத்தப்படும் விழா போட்டியில்லாத விழாவாகவும் இருக்கும்.

மாறிவரும் போக்குகள்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன், இந்திய உலகத் திரைப்பட விழாவுக்கான நிரந்தர இடமாக கோவா அறிவிக்கப்பட்டு, இப்போது கோவாவில் மட்டுமே அதிகாரப்பூர்வமான இந்திய உலகப்பட விழா நடத்தப்படுகிறது.

கடந்த இருபது ஆண்டுகளில் பல மாநிலங்கள் தங்கள் தலைநகரங்களில் உலகத் திரைப்பட விழாக்களை நடத்த தொடங்கியுள்ளன. கொல்கத்தா,  திருவனந்தபுரம், மும்பை, பூனா, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் என்று பல நகரங்கள் இப்போது ஒவ்வொரு ஆண்டும் சர்வதேசத் திரைப்பட விழாக்களை நடத்துகின்றன. இதன் காரணமாக இந்திய அரசின் அதிகாரப்பூர்வ திரைப்பட விழாவின் கவர்ச்சி குறைந்துவிட்டது என்பது உண்மைதான்.

அனுமதி அட்டைகளின் மதிப்பு

முன்பெல்லாம் தில்லி உலகத் திரைப்பட விழாவிற்கு டெலிகேட் அட்டை கிடைப்பது மிகவும்  அரிதாக இருந்தது. சினிமாத் துறையோடு சம்பந்தப் பட்டவர்களுக்கும், திரைப்படக் கல்லூரி மாணவர்க ளுக்கும், சினிமா பற்றி எழுதுபவர்களுக்கும், பிலிம் சொஸைட்டி இயக்கத்தைச் சார்ந்தவர்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

மாறிவரும் ரசிகர் அனுபவம்

இப்போது நிலைமை மாறிவிட்டது. கான்ஸ், பெர்லின், வெனிஸ் போன்ற நட்சத்திர உலகத் திரைப்பட விழாக்களைத் தவிர மற்ற திரைப்பட விழாக்களில், பல நேரங்களில் திரையிடலின்போது அரங்கின் இருக்கைகள் நிரம்புவதில்லை. பழைய காலங்களில் தில்லி திரைப்பட விழா என்றாலே, ஜனவரி மாதத்தின் கடுங்குளிரையும் மீறி, ஒருவித கொண்டாட்டமும், பேரானந்தமும், விஷேசத்தன்மை யும் நிலவும். திரைப்பட விழா தொடங்குவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே திரையிடல் தொடங்கி விடும். மொத்தம் 17 நாட்களில் தீவிர சினிமா ரசிகர்கள் 60 முதல் 80 படங்களைப் பார்த்துவிடுவர். நாளொன்றுக்கு 4-5 படங்களைப் பார்ப்பார்கள்.

டிஜிட்டல் யுகத்தின் தாக்கம்

டிவிடி, புளு ரே, ஒடிடி, (DVD, Blue Ray, OTT) பதிவிறக்கம் காரணமாக உலக சினிமா பார்க்கும் கூட்டம் அதிகமாகிவிட்டது. குறும்படம், ஆவணப்படம் எடுக்கும் இளைஞர்கள், மாணவர்கள் பலர் உலகப் படங்களைத் தேடித் தேடிப் பார்க்கின்றனர். இவர்களுக்குப் பரவலாக்கப்பட்ட உலகப்பட விழாக்கள் பயனுள்ளதாக அமைகின்றன.

கிராமப்புறங்களுக்கு  உலகப்பட விழாக்கள்

இத்தகைய உலகப்பட விழாக்களை மேலும்  பயனுள்ளதாக, சிறு நகரங்களுக்கும் கிராமங்க ளுக்கும் கொண்டு செல்லவேண்டும். அத்தகைய பணியைத்தான் தற்போது, தமுஎகச செய்து கொண்டிருக்கிறது. இன்னும் பத்தாண்டுகளில் உலகப் பட விழாக்கள் உள்ளூர்களுக்கு எடுத்துச் செல்லப்படும்போது, அது நம் தேசிய சினிமாவிலும், பிராந்திய சினிமாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத்தான் போகிறது.

உலகத் திரைப்பட  விழாக்களின் தோற்றம்

முதல் உலகத் திரைப்பட விழா, சினிமா தோன்றி 37 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நிகழ்ந்தது. முதல் உலகத் திரைப்பட விழாவை நடத்தியவர் இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி. அவர் 1932-ல் வெனிஸ் நகரில் முதல் உலகத் திரைப்பட விழாவை நடத்தி னார். தேசிய சினிமாவை வளர்ப்பதற்காக ஏராளமான நிதி ஒதுக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக உலகத் திரைப்பட விழா நடத்தப்பட்டது. ஒரு விதத்தில் ஹாலிவுட் சினிமாவின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் இப்படவிழா நடத்தப்பட்டது.

இந்தியாவில் உலகத் திரைப்பட விழாக்கள்

இந்தியாவைப் பொறுத்தவரை முதல் உலகத் திரைப்பட விழா 1952ஆம் ஆண்டு மும்பையில் நேரு அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. இதன் துவக்க நிகழ்ச்சியாக சினிமாவைத் தோற்றுவித்த லூமியர் சகோதரர்கள் முதன்முதலில் (1895-ல்) பம்பாயில் திரை யிட்டுக் காட்டிய  திரைப்படம் திரையிடப்பட்டது. இப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட படங்கள் இரு வாரங்கள் கழித்து, தில்லி, கல்கத்தா மற்றும் சென்னைக்கும் கொண்டு செல்லப்பட்டன.

இன்றைய நிலை

இன்று இந்தியா முழுவதும், பல மாநில அரசுகளும், பல தனியார் அமைப்புகளும் பல உலகப்பட விழாக்களைப் பல இடங்களில் நடத்து கின்றன. ஆவணப்படங்களுக்காக மட்டுமே உலகப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அது போல், குழந்தைகள் படம், பெண்கள் பற்றிய படம், உடல் ஊனமுற்றோரைப் பற்றிய படம், அரவாணி களைப் பற்றிய படம், எய்ட்ஸ் (HIV) நோயாளிகள் குறித்த படம் என பல பிரிவுகளில் உலகப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன.

எதிர்காலம்

பெரும்பாலும் இப்படவிழாக்கள் பெருநகரங்களில் மட்டுமே நடத்தப்படுகின்றன. இப்படவிழாக்களை சிறு நகரங்களுக்கும், கிராமங்களுக்கும் கொண்டு செல்வதுதான் அடுத்தக்கட்ட பரவலாக்கச் செயலாக இருக்க முடியும். இப்பணியை அரசாங்கமோ, தனி யார் அமைப்புகளோ செய்யும் என எதிர்பார்க்கா மல் பண்பாட்டுத் தளத்தில் இயங்கும் முற்போக்கு எண்ணம் கொண்ட கலைஞர்களும் ஊழியர்க ளும்தான் செய்ய வேண்டும். அந்த அடிப்படையில் தான், தமுஎகச இப்போது திருவாரூர் தைலம்மை திரையரங்கில் செப்டம்பர் 18 முதல் 22 வரை 8ஆவது உலக திரைப்பட விழாவை நடத்துகிறது. இதற்கு முன், பட்டுக்கோட்டை, கம்பம், திருப்பூர், திருவண்ணா மலை, புதுக்கோட்டை போன்ற இடங்களில் தமுஎகச நடத்தியுள்ளது.

உள்ளூர்களை நோக்கி

சினிமாவின் அடிப்படை நோக்கமே உலகை உள்ளூருக்குக் கொண்டுவருவதும், உள்ளூரை உலகுக்குக் கொண்டு செல்வதும்தான். அதுபோல உலகப்பட விழாக்களின் நோக்கமும், உலகப் படங்களை உள்ளூருக்கு கொண்டுவருவதும், உள்ளூர்ப் படங்களை உலகுக்குக் கொண்டு செல்வ தும்தான். சமீபத்தில் வெளியான, வினோத் ராஜின் “கொட்டுக்காளி” இதைப் பறைசாற்றும் விதமாக உள்ளது. அவ்வாறு உலகப்பட விழாக்களைக் கிரா மங்களுக்கும் சிறு நகரங்களுக்கும் கொண்டு செல்லும்போது, நம்மூரில் படம் எடுப்பவர்கள் ஒன்று உலகத் தரத்துக்கு உள்ளூர்ப் படங்களை எடுப் பார்கள், இல்லையேல் வேறு தொழில் பார்க்கப் போய்விடுவார்கள்.

சினிமாவின் அடிப்படை நோக்கமே உலகை உள்ளூருக்குக் கொண்டுவருவதும், உள்ளூரை உலகுக்குக் கொண்டு செல்வதும்தான். அதுபோல உலகப்பட விழாக்களின் நோக்கமும், உலகப் படங்களை உள்ளூருக்கு கொண்டுவருவதும், உள்ளூர்ப் படங்களை உலகுக்குக் கொண்டு செல்வதும்தான். 

இயக்குநர் எம்.சிவக்குமார்

தமுஎகச மாநிலக்குழு உறுப்பினர்