‘சைலாக் போன்ற மனநிலையில் டாஸ்மாக் நிறுவனம் இருக்கக் கூடாது!’
ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகம் ‘வெனிஸ் நகரத்து வணிகன்’. அந்த நாடகத்தில், அந்தோணியா என்ற வியாபாரி தனது நண்பனின் பணத்தேவைக்காக சைலாக் என்பவனிடம் கடன் பெறுகிறான். சைலாக் ஒரு விசேஷமான நிபந்தனை வைக்கிறான்: குறிப்பிட்ட காலத்தில் பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால், அந்தோணி யாவின் உடலிலிருந்து ஒரு பவுண்ட் சதையை எடுத்துக் கொள்வேன் என்கிறான். அந்தோணியாவால் குறித்த காலத்தில் கடனைச் செலுத்த முடியவில்லை. ஒப்பந்தப்படி ஒரு பவுண்ட் சதையைக் கேட்டு சைலாக் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தான். நீதிபதிகள் அந்தோணியாவுக்குக் கருணை காட்டும்படி வேண்டுகிறார்கள். ஆனால் சைலாக் மறுத்துவிட்டான். ‘இது தனக்கு உரிமை யான சதை’ என்று நீதிமன்றத்தில் வாதிட்டான். அந்தோணியாவின் மனைவி போர்சியா, வழக்கறி ஞர் வேடம் போட்டு அந்தோணியாவுக்காக வாதாடி னாள். அவள் சொன்னாள்: “ஒப்பந்தப்படி அந்தோணி யாவின் ஒரு பவுண்ட் சதையை சைலாக் எடுத்துக் கொள்ளட்டும். ஆனால் ஒரு சொட்டு இரத்தம் கூடச் சிந்தக் கூடாது. எலும்பும் சேதமாகக் கூடாது.” ஒப்பந்தத்தில் சதை மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள் ளது என்று கூறினாள். இப்படியாக அந்தோணியா காப்பாற்றப்பட்டான். சைலாக் தண்டிக்கப்பட்டான். இந்த நாடகத்தில் சைலாக் நீதிமன்றத்தில் இப்படிப் பேசுகிறான்: “அந்த அடிமை என்னுடையது என்பதை நான் உங்களுக்குப் பதிலாகச் சொல்கிறேன். நான் அவனிடம் கேட்பது ஒரு பவுண்ட் மாமிசம். அது நான் கடனாகப் பணம் கொடுத்து வாங்கியது. அது எனது சொத்துரிமை. இதை நீங்கள் மறுத்தால் உங்கள் சட்டத்தின் மீதுதான் களங்கம். வெனிஸ் நகரத்தின் சட்டங்களில் எந்த வலிமையும் இல்லாமல் போய் விடும்.”
திமன்றத்தின் குறிப்பிடத்தக்க தீர்ப்பு
தமிழ்நாடு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு எதிராக டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) தொடுத்த வழக்கில், நீதிமன்ற வாதத்தின்போது தனது தரப்பை நியாயப்படுத்த சைலாக் பேசிய வசனங்களை முன்னுரையாக வைத்துத் தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அந்தத் தீர்ப்பில், “சைலாக் போல் டாஸ்மாக் நிர்வாகத்தின் செயல்பாடு உள்ளது. தனது ஊழி யர்கள் மீது மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறது” என்று தீர்ப்பின் முதல் பாராவில் குறிப்பிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் ஊழியர்களை வெனிஸ் நகரத்து அடிமை போல் நடத்தக் கூடாது என்று நீதிமன்றம் டாஸ்மாக் நிர்வாகத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ளது.
டாஸ்மாக்கின் பணி
தமிழக அரசு மது விலக்கைத் தளர்த்திய நிலை யில், 40 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நிறுவனம் டாஸ்மாக். “உள்நாட்டில் தயாராகும் வெளிநாட்டு மதுபானங்களை” விற்பனை செய்வது தான் ‘தமிழ்நாடு அரசு மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் லிமிடெட்டின்’ (டாஸ்மாக்) முக்கியப் பணி. ஆரம்பத்தில் அரசு தனியாருக்குப் பார்களையும், மதுபானக் கடைகளையும் ஏலத்தில் விட்டது. பின்னர், அரசே சில்லரை விற்பனைக் கடைகளை நடத்து வது என்று 2003இல் முடிவு செய்து, தமிழகம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனம் சில்லரை விற்பனைக் கடை களைத் திறந்தது. தற்போது சுமார் 4,800 கடைகள் 23,986 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றன.
உரிமை மறுக்கப்பட்ட ஊழியர்கள்
பல ஆண்டுகளாகப் பணிபுரியும் இந்த ஊழி யர்களை இதுவரை அரசு நிரந்தரப்படுத்தவில்லை. கடந்த 2024-25 நிதியாண்டில் டாஸ்மாக் விற்பனை மூலம் வந்த வருவாய் சுமார் ₹50,000 கோடி. இந்த வருவாயை உருவாக்கித் தந்ததில் டாஸ்மாக் ஊழி யர்களின் உழைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. இதை நீதிமன்றம் தனது தீர்ப்பிலும் சுட்டிக் காட்டியுள்ளது. பல்லாண்டுகள் பணிபுரிந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்தாதது மட்டுமின்றி, இவர்களுக்கு எவ்வித தொழிலாளர் நலச்சட்டங்களும் பொருந் தாது என்பதே டாஸ்மாக்கின் வாதம். அதாவது அரசின் வாதம். ஊழியர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதில் அரசு, ‘மாடல் எம்ப்ளாயராக’ (முன்னுதார ணமான முதலாளியாக) செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால் டாஸ்மாக் அவ்வாறு செயல்படவில்லை என்பதும் இந்தத் தீர்ப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
சட்ட மீறலுக்குத் துணைபோன தொழிலாளர் துறை
டாஸ்மாக் ஊழியர்களுக்கு எந்தச் சட்டமும் பொருந்தாது என்பதே அரசின் நிலை. கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் டாஸ்மாக்கில் பணி புரியும் ஊழியர்களுக்குப் பொருந்தும். இச்சட்டப்படி வாரத்தில் ஒரு நாள் விடுப்பு வழங்க வேண்டும். இச்சட்டப்படி வார விடுப்பு வழங்கினால், சட்டத்தின் இதர உரிமைகளும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் என்று கருதிய அரசு, ‘கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம்’ டாஸ்மாக் நிர்வாகத்திற்குப் பொருந்தாது என்று தொழிலாளர் துறை மூலம் அரசாணை வெளியிட்டது. அதேபோல், தேசிய மற்றும் பண்டிகை விடுமுறைச் சட்டப்படி மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்திற்கு விடுப்பு வழங்க வேண்டும். இச்சட்டமும் டாஸ்மாக் ஊழியர்களுக்குப் பொருந்தாது என்று அரசாணை வெளியிடப்பட்டது. வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. நீதிமன்றம் ‘தேசிய மற்றும் பண்டிகை விடு முறைச் சட்டம் டாஸ்மாக்கிற்குப் பொருந்தும்’ என்று தீர்ப்பளித்தது. ஆனால் சட்டப்படி விடுமுறை வழங்க அரசு தயாராக இல்லை. அதற்குப் பதிலாக மே 1ஆம் தேதி மதுக்கடைகளை மூடி, மது தடை செய்யப்பட்ட நாளாக அறிவித்தது.
உரிமையை நிலைநாட்ட சிஐடியு வழக்கு
50 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களும் சட்டப்படி நிலையாணை உருவாக்கித் தொழிலாளர் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவ டிக்கை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட சட்டத்தைக் கூட டாஸ்மாக் நிர்வாகம் அமலாக்கத் தயாராக இல்லை. நிர்வாகமே ‘மோசடி நடவடிக்கைகளைத் தடுத்தல் மற்றும் கண்டுபிடிப்பதற்கான விதி தொகுப்பு - 2014’ஐ உருவாக்கி, அந்த விதிகளின் படிதான் நடவடிக்கை எடுப்போம் என்று கூறியது. இந்நிலையில், சட்டப்படி டாஸ்மாக்கிற்கு நிலை யாணை உருவாக்கப்பட வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சட்ட நடவடிக்கை மேற்கொண்டது. இணை தொழி லாளர் ஆணையர், டாஸ்மாக் நிறுவனத்திற்கு நிலை யாணைகள் சட்டம் பொருந்தும் என்ற முடிவிற்கு வந்தார். ஆனால் நிலையாணை உருவாக்கும்படி கூறாமல், ‘மதில் மேல் பூனை’ போல் தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
இதை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் நீதியரசர் டாக்டர் ஏ.டி. மரியா கிளீட்டி அளித்த தீர்ப்புதான் சைலாக் பேசிய வசனங்களுடன் துவங்கியுள்ளது. 141 பக்கங் கள் கொண்ட தீர்ப்பில் டாஸ்மாக் நிர்வாகத்தின் சட்ட மீறல்களை விரிவாகச் சொல்லியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக டாஸ்மாக் நிர்வாகம் தொழிலாளர்கள் மீது சட்டத்திற்குப் புறம்பாக மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பற்றி தீர்ப்பு விரி வாகக் கூறியுள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் சட்டவிரோ தமாகச் செயல்படுகிறது என்று பலமுறை நீதிபதிகள் தீர்ப்பளித்த பின்பும், அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் அந்தத் தீர்ப்புகளைக் கண்டுகொள்ளவில்லை. நீதி மன்றத் தீர்ப்புகளின் அவமதிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இணை ஆணையருக்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். இறுதியாக, டாஸ்மாக் நிறுவனத்திற்கு நிலை யாணைகள் சட்டம் பொருந்தும் என்று தீர்ப்பளித்துள் ளார். மாடல் எம்ப்ளாயராகச் செயல்பட வேண்டிய அரசு நிர்வாகம், சட்டத்தை மீறிச் செயல்பட்டதைக் கண்டித்து ₹1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதத் தொகையைச் சிஐடியு சங்கத்திற்கு அளிக்க வும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பைபிள் வசனத்துடன் நிறைவு
இறுதியாக நீதிமன்றம் தனது தீர்ப்பை பைபிள் பழைய ஏற்பாட்டில் உள்ள வசனத்தைக் கூறித் தீர்ப்பை நிறைவு செய்துள்ளது: “நான் என் இருதயத்திற்கேற்ப நல்ல வழி நடத்துபவர்களை உங்களுக்குத் தரு வேன். அவர்கள் உங்களை அறிவாலும், புத்தியா லும் வழி நடத்துவார்கள்.” பைபிளில் சொன்னதுபோல் நீதிமன்றம் அரசுக்கு நல்ல வழிகாட்டுதலைச் சொல்லியுள்ளது. எச்சரிக்கை யும் விடுத்துள்ளது. இதையாவது அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் கடைப்பிடிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதுதான்.