articles

img

மாநிலங்களின் உரிமைகள் தான் மக்களின் உரிமைகள் - பேரா.மு.நாகநாதன்,எம்.ஏ.,எம்.எல்.,பிஎச்.டி.,டி.லிட்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் “மாநில உரிமை பாதுகாப்பு மாநாடு” 
(ஜூலை 23-மதுரை) சிறப்புக் கட்டுரை - 3

‘‘வலிமையான ஒரு ஒன்றிய அரசும், வலிமையான மாநில அரசுகளும் அமைவதால் பிளவு ஏற்படாது என்று இக்குழு கருதுகிறது. இரண்டுமே வலிமையாக அமைய வேண்டும். ஒன்றிய அரசிற்கும், மாநில அரசிற்கும் உள்ள உறவு ஒட்டுமொத்த உடலுக்கும், அதனுடைய இதர உறுப்புகளுக்கும் உள்ள தொடர்பு போன்றதாகும். உடல் நலமாக இருப்பதற்கு அதனுடைய உறுப்புகள் வலிமையாக  அமைய வேண்டும். இன்றைக்குக் காணப்படுகின்ற பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் அதிகாரக் குவியலும், அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவதுமே ஆகும்’’

நேற்றைய தொடர்ச்சி...

1973இல் ‘அனந்தப்பூர் சாகிப் தீர்மானம்’ என்றழைக் கப்படுகின்ற ஒரு அரசியல் தீர்வை பஞ்சாப் மாநிலத் தின் அகாலிதளம் அளித்தது.  இத்தீர்மானத்தில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரமும் சுயாட்சியும் வழங்கப்பட வேண்டும் என்று  வலியுறுத்தப்பட்டது. 1985ஆம் ஆண்டு இராஜிவ் காந்தி-லோங்கோவால்  ஒப்பந்தத்தின்படி  மேற்கூறிய அனந்தப்பூர் சாகிப் தீர்மானத்தை, நீதிபதி சர்க்காரியா அவர்களின் தலை மையில் அமைந்த குழுவின் பரிந்துரைக்கு அனுப்ப முடிவுசெய்யப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கை யும் மேற்கொள்ளப்படவில்லை. 1983ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்து போது, ஒன்றிய-மாநில உறவுகளை ஆய்வு செய்வ தற்கு சர்க்காரியா குழு அமைக்கப்பட்டது. சர்க்காரியா ஆணையம் அமைத்ததே ஒரு விநோதமான அரசியல் நிகழ்வாகும். 1983இல் கர்நாடக முதலமைச்சர் இராம கிருஷ்ண ஹெக்டே, தென் மாநில முதலமைச்சர்கள் மாநாட்டினை பெங்களூரில் கூட்டினார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஆந்திர முதலமைச்சர் என்.டி.இராமாராவ், பாண்டிச்சேரி முதலமைச்சர் டி.இராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்னக மாநிலங்கள் எட்டாவது நிதிக்குழுவிற்கு ஒரு பொதுவான  அணுகுமுறையைக் கடைபிடித்து, மாநிலங்களுக்கு அதிக  வரிவருமானங்களைப்  பெற்றுத் தரலாம் என்று முதல்வர்கள் முடிவு செய்தனர். 

இரவோடிரவாக  சர்க்காரியா குழு அமைப்பு

கர்நாடக முதல்வர் இராமகிருஷ்ண ஹெக்டே மாநாட்டின் இறுதி உரையில், ஒன்றிய-மாநில உறவு களை ஆய்வதற்காக இராஜ மன்னார் குழுப் போன்று ஒரு குழுவினை தென்னக மாநிலங்கள் சார்பில் நியமிக்க முடிவு செய்துள்ளோம் என்று அறிவித்தார். உடனடியாக இந்தத் தகவல் ஒன்றிய அரசின் காதுக்கு எட்டியது. அவர்கள் இரவோடு இரவாக சர்க்கா ரியா குழுவினை அமைத்துவிட்டார்கள். இந்திய அரசியல் சட்டத்தின்படி பொதுப் பட்டியலில் உள்ள  அதிகார எல்லையைப் பயன்படுத்தி ஒரு குழுவை ஒன்றிய அரசு முதலில் அமைத்துவிட்டால், மாநில அரசு மீண்டும் அதே பணியைச் செய்வதற்கு  மற் றொரு குழுவை நியமிக்க முடியாது. எனவே, சர்க்காரி யா குழு அமைத்த உடனேயே  இராமகிருஷ்ண ஹெக்டேவின் முயற்சி தானாகவே செத்துவிட்டது. இருப்பினும், நீதிபதி சர்க்காரியா குழு, மாநில அரசுகள் சிறப்பாகத் தனது கடமைகளை ஆற்ற முடி யாமல் இருப்பதற்கு காரணம் ஒன்றிய அரசின் அதி காரக்குவிப்பே என்று சுட்டி, இந்நிலை மாறுவதற்குப் பல பரிந்துரைகளையும் வழங்கியது. சர்க்காரியா குழுவின் அறிக்கையில், ‘‘இந்த அறிக்கையின் பல பகுதிகளில் குறிப்பிட்டுள்ளவாறு இந்தியாவில் பொது வாகப் பெருமளவில் அதிகாரக் குவிப்பு நடைபெற்று வருகிறது. இதைத் தடுப்பதற்குப் பயனுள்ள வகையிலும் மனசாட்சியுடனும் எல்லா நேரங்களிலும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அளவுக்கு மீறிய அதிகாரக் குவியல்களால் (Undue powers) ஒன்றிய அரசுக்கு இரத்தக் கொதிப்பும், மாநில அரசு களுக்கு இரத்த சோகையும் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவு என்னவெனில், நோயுற்ற தன்மையும், திறமையின்மையும்தான் இதன் வெளிப்பாடாக உள்ளது. உண்மையில் அதிகாரக் குவியல் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதிகப் படுத்துகிறது’’ (Since, for reasons explained elsewhere in this report, there is a general ten dency towards greater centralization of powers, there is a special need in a country like India for a conscious and purposive effort to counter it all the time. There is considerable truth in the saying that undue centralization leads to blood pressure at the centre and anaemia at the periphery. The inevitable result is morbidity and inefficiency. Indeed, centralization does not solve but aggra vate the problems of the people) என்று துல்லிய மாகப் குறிப்பிட்டுள்ளது. 

வெங்கடாச்சலய்யா குழுவின் சுட்டிக்காட்டல்

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, இந்திய அரசியல் சட்ட அமைப்பை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, நீதிபதி வெங்கடாச்சலய்யா தலைமை யில் ஒரு குழு (The National Commission to Review the Working of the Constitution) 2000-இல் அமைக்கப்பட்டது. இக்குழுவில் ஓய்வு பெற்ற  உச்ச நீதிமன்ற  நீதிபதிகள், சர்க்காரியா, ஜீவன் ரெட்டி, கோட்டப்பள்ளி புன்னையா, வழக்கறிஞர்கள் சோலி ஜெ.சோரப்ஜி, கே. பராசரன், நிர்வாகத்துறையைச் சார்ந்த டாக்டர் சுபாஷ் சி.கஷ்யப், சி.ஆர்.இரானி, டாக்டர் அபித் உசேன், சுமித்ரா ஜி.குல்கர்னி ஆகி யோர் உறுப்பினர்களாக இருந்தனர். பல தேசிய பிரச்ச னைகளில் இக்குழுவினருக்குள்  ஒருமித்த கருத்து உருவாகவில்லை. இருப்பினும், ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பை இக்குழுச் சிறந்த முறையில் சுட்டிக்காட்டியது. ‘‘வலிமையான ஒரு ஒன்றிய அரசும், வலிமையான மாநில அரசுகளும் அமைவதால் பிளவு ஏற்படாது என்று இக்குழு கருதுகிறது. இரண்டுமே வலிமையாக அமைய வேண்டும். ஒன்றிய அரசிற்கும், மாநில அரசிற்கும் உள்ள உறவு ஒட்டுமொத்த உடலுக்கும், அதனுடைய இதர உறுப்புக ளுக்கும் உள்ள தொடர்பு போன்றதாகும். உடல் நலமாக இருப்பதற்கு அதனுடைய உறுப்புகள் வலிமை யாக  அமைய வேண்டும். இன்றைக்குக் காணப்படு கின்ற பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணம் அதிகா ரக் குவியலும், அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவ துமே ஆகும்’’ (The Commission feels that there is no dichotomy between a strong Union and a strong States. Both are needed. The relationship between the Union and the States is a relationship bet ween the wholebody and its parts. For the body being healthy, it is necessary that its parts are strong. It is felt that real source of many of our problems is the tendency of centralization of powers and misuse of authority) என்று இக்குழு கருதுகிறது.   

பூஞ்ச் குழுவின் அமைப்பும்  ஆய்வு வரையறையும்

நீதிபதி பூஞ்ச் குழு ஒன்றிய அரசால் 2007-இல் ஒன்றிய-மாநில உறவுகளை ஆய்வதற்கு நியமிக்கப் பட்டது. அதிலுள்ள மூன்று உறுப்பினர்கள் ஒன்றிய அரசில் பணியாற்றிய உயர் அலுவலர்கள். 4-ஆவது உறுப்பினரான பேராசிரியர் அமரேஷ் பக்ஷி ஒரு சிறந்த பொருளாதார அறிஞர். ஒன்றிய-மாநில உறவுகளைப் பற்றி நடுநிலையோடு கருத்து கூறியவர். இக்குழு  அமைக்கப்பட்ட சில வாரங்களிலேயே மறைந்து விட்டார்.  நீதிபதி பூஞ்ச் குழுவின் ஆய்வு வரையறைகளை (ToR) விநோதமான முறையில் 2005-ஆம் ஆண்டி லேயே முடிவு செய்துவிட்டார்கள். ஆனால் 2007 இல்தான் இக்குழுவினை நியமித்தார்கள். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான பிரிவுகள் ஒன்றிய-மாநில உறவுகளைச் சீரமைப்பதற்குப் பதிலாக ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பிற்கு வித்திடும் வகையில்தான் அமைந்தது.  தமிழ்நாட்டில் பூஞ்ச் ஆணையம் எழுப்பிய வினாக்க ளுக்கு விடையளிக்க அன்றைய முதல்வர் கலைஞர்,  அன்றைய மாநிலத் திட்டக்குழுவின் துணைத்தலை வராக இருந்த பேராசிரியர் மு.நாகநாதன் தலைமை யில் ஒரு குழுவினை அமைத்தார். பூஞ்ச் ஆணை யம் எழுப்பிய அனைத்து வினாக்களுக்கும் பதிலளித்து விட்டு, 1974-இல் தமிழகச் சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மாநில சுயாட்சி தீர்மானத்தின் கருத்துரை யையும் இணைத்து ஒன்றிய அரசிற்கு அனுப்பப் பட்டது. இது தொடர்பாக மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் இதுவரை எந்தப் பரிந்துரையையும் ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை. மாறாக, 2014இல் பதவியேற்ற பிரதமர் மோடி, மாநில அதிகாரங்களுக்கு உட்பட்ட துறைகளில் தன்னிச்சை யாகப் பல திட்டங்களை அறிவித்துக் கொண்டே வருகிறார். இத்திட்டங்கள் பெருமளவில்  தொடர்ந்து தோல்வியுற்று வருகின்றன. 

மாநில உரிமைகள்  படிப்படியாகப் பறிப்பு

சான்றாக, சீர்மிகு நகரத் திட்டம் (Smart City Schemes) என்ற பெயரில் தொடங்கப்பட்ட திட்டத்தின் வழியாக இந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்குப் பல்லாயிரம் கோடி  நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் பெரும் தோல்வியைச் சந்தித்தது, ஊழலையும் ஊக்கு வித்தது.  2004-ஆம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் பொறுப்பேற்று காங்கிரசுத் தலைமையில் ஒரு கூட்டணி ஆட்சி அமைந்தது. இடதுசாரி கட்சிகள், திமுக உட்பட மாநிலக் கட்சிகள், வறுமையை ஒழிப்பதற்காக ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை வலி யுறுத்தின. இதனடிப்படையில்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமாக (MGN REGS) அறிவிக்கப்பட்டுப் பல மாநிலங்களில் பல கோடி குடும்பங்கள் பயன் பெற்றன. இந்தத் திட்டத்தில் ஊரகப் பெண்கள் அதிக அளவில் பயன் பெற்றனர். ஊரக ஏழைக்குடும்பங்கள் பயன்பெறும் இத்திட்டத் திற்கான நிதி ஒதுக்கீட்டை மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. பாஜக ஆட்சியில் கல்வி, பொதுச் சுகாதாரம் ஆகிய துறைக ளுக்கு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 2 விழுக்காட்டு அளவுகூட நிதி ஒதுக்கப்படவில்லை. ஆனால் இத்துறைகள் சார்ந்த மாநில அதிகாரங்கள் படிப்படி யாகப் பறிக்கப்பட்டு வருகின்றன. சான்றாக, நீட் முதல் நெக்ஸ்ட் தேர்வு வரை ஏழை எளிய மாணவர்களுக்கு எதிராகத் தன்னிச்சையான அறிவிப்புகள் வழியாக ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.    எந்த ஒரு திட்டமும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு இல்லாமல் வெற்றியடைய முடியாது. மாநில அரசு களின் சமூகப் பொருளாதாரத் திட்டங்களுக்கான நிதி யைக் குறைத்து தேவையற்ற முறையில் ஒன்றிய அரசு அத்திட்டங்களைத் தன் கையில் எடுத்துக்கொண்டு தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகிறது.  கடந்த ஒன்பது ஆண்டுகளில் அரசுத் துறை வங்கி களின் வழியாகப் பத்து இலட்சம் கோடி அளவிற்குப் பெரு முதலாளிகளுக்குக் கடன் அளிக்கப்பட்டது. மைய வங்கி (Reserve Bank) வைப்பு நிதியிலிருந்து 1.5 இலட்சம் கோடி ரூபாயை ஒன்றிய அரசு  எடுத்தது. இது பொருளாதார முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. ஆனால், இந்நிதி யாருக்குப் பயன்பட்டது எங்கே சென்றது என்பது புரியாத புதிராகவே உள்ளது. 

நிதியாதாரங்கள் பகிர்வில் தன்னிச்சை முடிவு

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவான போது, ஒன்றிய  அரசிற்கு அதிக அளவு நிதியாதாரங்களை அளிக்கக்கூடிய வரிகளும், மாநில அரசிற்குக் குறைந்த அளவு நிதியாதாரங்களை அளிக்கக்கூடிய மறைமுக வரிகளும் வழங்கப்பட்டன. மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறையை ஆய்வு செய்து  ஒன்றிய அரசின் நிதியிலிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கு அரசமைப்புச் சட்ட விதி (280) இணைக்கப்பட்டது. 280ஆவது விதியின் படிதான் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிதி ஆணையம் (Finance Commisson) அமைக்கப்படுகிறது. இதுவரை 14 நிதி ஆணையங்கள் அமைக்கப்பட்டு மாநிலங்களுக்கு  நிதியாதாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டாலும் மாநிலங்களின் நிதிப்பற்றாக் குறையைக் குறைப்பதில் தோல்வியைத்தான் நிதி  ஆணையங்கள் சந்தித்துள்ளன. இதற்கு முதன்மை யான காரணம், நிதிக்குழுவை அமைக்கும் முன்பு மாநில அரசுகளைக் கலந்து ஆலோசிக்காமல் ஆய்வு வரையறையை ஒன்றிய அரசு தன்னிச்சையாக முடி வெடுத்து அறிவித்துவிடுகிறது. இதன் காரணமாக, மாநிலங்களின் முழுமையான நிதிக் கோரிக்கைகள் ஏற்கப்படுவதில்லை.   இச்சூழலில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்த மறைமுக வரிகளை ஒன்றிணைத்துச் சரக்கு சேவை வரி  என்கிற வரியை ஒன்றிய அரசு சட்டத்திருத் தத்தின் வழியாக எடுத்துக்கொண்டது. இந்தச் சரக்கு சேவை வரி விதிப்பு முறையால் இந்தியாவில் சிறு குறு, நடுத்தரத் தொழில்கள் பெருமளவில் நலிவைச் சந்தித்து வருகின்றன. சிறு குறு, நடுத்தரத் தொழில்க ளில்தான்  ஏறக்குறைய 20 கோடி தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் இந்த வரிச்சுமையால் பாதிக்கப்படுகிறது. 

வளர்ச்சிக்கு தீங்கிழைக்கும் அதிகாரக் குவிப்பு

இந்தியாவில் மறைமுக வரிகளின் சுமையால் 66 விழுக்காட்டு ஏழை, நடுத்தரப் பிரிவு மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதைப் பல புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இதன் விளைவாக, ஏழை நடுத்தரக் குடும்பங்களின் சேமிப்பு முற்றிலும் சூறையாடப்பட்டு வருகிறது. 2020ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, குடும்ப சேமிப்பு (Household Savings) அளவு 7 விழுக்காட்டு அளவிற்குக் குறைந்து  உள்ளது. 1960களில் குடும்ப சேமிப்பு 24 விழுக்காட்டு அளவிற்கு இருந்தது. நாட்டின் சேமிப்புதான் மூலதன உருவாக்கம் ஆகும். தனியார்த் துறை, பொதுத் துறை சேமிப்பை விடக்  குடும்ப சேமிப்பு தான் 1950 களில் இருந்து தொடர்ந்து பெருகி வந்தது. தற்போது பொதுத் துறை தனியார் துறைகளின் சேமிப்பும் 5 விழுக்காட்டு அளவிற்குக் குறைந்துள்ளது. இது  ஒட்டு மொத்தமாக நாட்டினுடைய மூலதன உருவாக் கத்தைத் தடுத்துவிடுகிறது.  இதன் காரணமாகத்தான் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் உள்நாடு வெளிநாடுகளில் இருந்து பல இலட்சம் கோடி ரூபாய்க் கடனைப் பெறவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றன. இவ்விதக் கடன்களையும், வட்டிச்சுமைகளையும் மக்கள் நிகழ் காலத்திலும், எதிர்காலத்திலும் சுமக்க வேண்டிய கொடுமையான சூழலுக்குத் தள்ளப்பட்டு வரு கின்றனர். ‘‘பொதுக்கடன் என்பது எதிர்கால தலை முறையின் மீது விதிக்கப்படும் வரி’’ என்று பொருளிய லில் குறிப்பிடப்படுகிறது. 

ஒன்றிய அரசின் அதிகாரக் குவிப்பு அனைத்துத் துறைகளிலும் பல பொருளாதாரப் பாதிப்புகளை ஏற் படுத்தி வருகின்றது. இந்திய நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில்தான் ஒன்றிய  அரசின் அதிகாரக் குவிப்பு கள் பயன்படுகின்றன என்பதை மேற்கூறிய கருத்துக ளும், புள்ளிவிவரங்களும் விளக்குகின்றன.  மக்களாட்சியும், கூட்டாட்சி இயலும் இணைந்து செயல்பட மாநிலங்கள் தன்னுரிமைகள் பெற வேண் டும். ஏற்கெனவே ஒன்றிய அரசில் அறைகளில்  உறங்கிக் கொண்டிருக்கும் ஒன்றிய-மாநில உறவுகள்  பற்றி ஆய்வுக்குழுக்களின் அறிக்கைகளின் பரிந்துரை களை ஏற்று, புதிய அரசமைப்புச் சட்டத்திருத்தங்களை மேற்கொண்டு மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும். மாநிலங்களின் உரிமைகள் தான் மக்களின் உரிமைகள் ஆகும். எனவே, மாநிலங்க ளின் உரிமைகளை இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பாக மாற்றினால்தான் இந்தியா வின் ஒற்றுமை பாதுகாக்கப்படும். பன்முகத் தன்மை கள் போற்றப்படும். மதவாத அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்.