‘தகுதி’ என்ற பதத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததிலிருந்து விளைந்த குறுகிய பார்வை மற்றும் கருத்துகள் இவை.
தகுதி என்பது ஒரு கருத்தாக்கம்; அதை மோசடி என்றுகூட கூறலாம். பல தளங்களில் ‘தகுதி’ என்பது போட்டித் தேர்வுகளில் ஒருவரது செயல்பாடு என்ற வெகுளித்தனமான கண்ணோட்டம் நிலவுகிறது. இந்த கண்ணோட்டம், சாதிய பாகுபாடுகள், பெற்றோ ரின் வெளிப்பாடு [exposure], படித்த பள்ளிகள், வாழும் சூழல் மற்றும் குழந்தைப் பருவ புறக்கணிப்பு மற்றும் முறைகேடு போன்ற இதர எதிர்மறை தாக்கங்கள் குறித்து மௌனமாக இருக்கிறது. கிராமத் தில், தலித்குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தைக்கு, தில்லியில் மேல் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்த ஒரு குழந்தையை விட 10 மடங்கு குறைந்த வாய்ப்பும் வளங்களுமே இருக்கும். பின்னது தில்லியின் சிறந்த பள்ளிகளுள் ஒன்றில் சேர்ந்து, அதன் பெற்றோர் அதற்கான எதிர்காலப் பாதையை ஏற்கனவே தேர்ந் தெடுத்து முன்கூட்டியே தயாராகும் ஆதாயத்தைப் பெற்றுவிட, முன்னது பெரும்பாலும் சுமாரான அடிப் படை வசதிகள் கொண்ட பள்ளியில், பகுதி நேரம் பெற்றோருடன் வேலை பார்த்தபடியேசேர்ந்திருக்கும்.
இவ்வாறான நிலையில் தகுதியையோ திறமை யையோ எவ்வாறு அளப்பீடு செய்ய முடியும்? இவ்விரு குழந்தைகளையும் ஒரே தேர்வை எழுத வைத்து, அதில் வாங்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்க ளது விண்ணப்பம் குறித்து முடிவு செய்வதென்பது பெரும் அநீதி அல்லவா? கோடிக்கணக்கான குழந்தை கள் மற்றும் பதின்பருவத்தினரின் எதிர்காலத்தை நீட் போன்ற – பயிற்சி பெறக்கூடிய, ஒரு ஒற்றைப் போட்டித் தேர்வுடன் இணைப்பது நியாயமற்றதாகும். இது, நிலவும் பிளவுகளை மேலும் விரிவுபடுத்தி, சமமின்மையை நிலைக்கச்செய்யும்.
தூய தகுதி எனும் கட்டுக்கதை
அனைத்து தேர்வு அளவுகோல்களிலும் எதேனும் முரண்பாடு இருக்கும். தூய தகுதி என்பது ஒரு கட்டுக்கதை, கற்பனாவாதக் கருத்து. என்றாலும், கொள்கை இயற்றுபவர்கள் இதுபோன்ற முரண்பாடு களையும் உள்ளார்த்த சார்புகளையும் முடிந்த அளவு குறைக்கும் வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும். இதைத்தான், மருத்துவக் கல்விக்கான நுழைவுத்தேர்வுகளை அழித்து, தமிழ் நாட்டு மாணவர்களுக்கான ஒரு பொது, தளர்த்தப்பட்ட பாடத் திட்டமான சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தி, கலை ஞரின் தலைமையிலான திமுக அரசு செய்தது. எளிய பாடத்திட்டம் ஆடுகளத்தினை ஓரளவு சமன்படுத்த உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீட் குறித்து சில ஆய்வுகளே மேற்கொள்ளப் பட்டிருந்தாலும், உலகமெங்கிலும், தகுதி எனும் கொள்கைக்கு நுழைவுத் தேர்வுகள் எதிரானவை என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டிருக்கின்றன. ஏ.கே.ராஜன் குழுவறிக்கை யின்படி, 2010இல் ஆங்கில வழிக் கல்வி பயின்ற 80.2 விழுக்காடு மாணவர்களும், தமிழ்வழிக் கல்வி பயின்ற 19.79 விழுக்காடு மாணவர்களும் தமிழ் நாட்டிலுள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதிக்கப் பட்டிருந்தனர். ஆனால், நீட் அறிமுகப்படுத்திய பின், 2017இல் அனுமதி பெற்ற 98.41 விழுக்காடு பேர் ஆங்கிலவழி கல்வி பயின்றவர்கள். தமிழ்வழிக் கல்வி பயின்ற மாணவர்களில் 1.6 விழுக்காடு மட்டுமே கல்லூரி யில் இடம் பிடித்தனர்.
முதல் தலைமுறை போட்டியாளர்கள் வீழ்ச்சி
எடுத்துக்காட்டாக, நீட்டிற்கு முந்தைய மற்றும் பிந்தைய தரவுகள் இத்தேர்வு முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு இல்லாமல் முதல்தலைமுறை யல்லாத பட்டதாரிகளுக்கு பெருமளவு சாதகமாக அமைந்துள்ளதைக் காண்பிக்கின்றனர். 2010-2011இல், மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்த முதல் தலைமுறை போட்டியாளர்களின் விழுக்காடு 24.61 விழுக்காடாக இருந்தது (முதல் தலைமுறையல்லாத போட்டியாளர்களின் விழுக்காடு 75 விழுக்காடாக இருந்தது). 2017ல், நீட்டிற்குப் பிறகு, இந்த விழுக்காடு வேகமாக சரிந்து, முதல் தலைமுறை மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடிப்பது 14.46 விழுக்காடாகி, மீதி பெரும் பாகமான 85.54 விழுக்காடு இடங்கள் முதல் தலைமுறையல்லாத மாணவர்க ளுக்கு விடப்பட்டது. அதேபோல், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் பெரும்பாலான மாணவர்கள் சிபிஎஸ்இ பின்புலத்திலிருந்து வருவதாகவே தெரிகிறது - பெரும் பாலான சிபிஎஸ்இ பள்ளிகள் அதிக கட்டண முடையவையாக உள்ளன. அதே நேரம், சிபிஎஸ்இ பள்ளிகளில் படிப்பதை நிர்பந்திப்பது, நமது குழந்தை கள், ஆளும் பாஜக அரசு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) பாடத்திட்டத்தில் திணித்துவரும் பிரச்சாரத்தை, கற்றுக்கொள்ள வழி செய்யும்.
தி வாஷிங்டன் டைம்ஸ் மற்றும் புளூம்பெர்க் நடத்திய ஒரு ஆய்வு, பெரும்பணக்காரக் குடும்பத்திலிருந்து (உச்சி 1 விழுக்காடு) வரும் ஒருவர் ஐவி லீக் பள்ளியில் படிப்பதற்கான வாய்ப்பு, வறிய குடும்பத்திலிருந்து (கீழ் 20 விழுக்காடு) வரும் ஒருவரை விட 77 மடங்கு அதிகம் என்று காட்டுகிறது.
வசதி படைத்த பின்புலத்திலிருந்து வருபவர்க ளால், வருடத்திற்கு 1 இலட்சம் வரை கட்டணம் வசூ லிக்கும் தனியார் சிறப்பு பயிற்சி பெற முடியும். 2005இல் நடந்த ஒரு ஐஐடி ஆய்வு, ஐஐடி-க்கு தேர்ச்சி பெற்றதில் 95 விழுக்காடு மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளுக்குச் சென்றதாகவும், அதில் 75 விழுக்காடு நகர்ப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரி வித்தது. அதிர்ச்சியூட்டும் விதமாக, பத்தாண்டுகளுக்கு முன்பு வரை ஐஐடி சென்றவர்களில் ஆறில் ஒருவர் (1/6) கோட்டாவிலுள்ள பன்சால் வகுப்புகள் எனும் ஒரு பயிற்சி நிறுவனத்திலிருந்து வந்தவர்கள். இத்த கைய நிறுவனங்கள் சில, வருடத்திற்கு 1 இலட்சத்தி லிருந்து 2 இலட்சம் வரை வசூலிக்கின்றன. இது பெரும்பான்மை இந்தியர்களால் செலுத்தவியலாத ஒரு தொகை. எனவேதான், ஐஐடியில் அனுமதிக்கப் படுபவர்களில் வெறும் 2.86 விழுக்காடு மாணவர்களே நலிந்த/கிராமப்புற, படிக்காத குடும்பத்திலிருந்து வருப வர்கள். அகில இந்திய பொறியியல் நுழைவுத் தேர்வில் (AIEEE) வெற்றி பெற்றவரான ஆசிரியர், 2000ங்களின் நடுவில், நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் சேர்ந்த மாணவர்களில் 70 விழுக்காடு சென்னையைச் சேர்ந்தவர்கள், அதிலும் குறிப்பான சில பள்ளிகளி லிருந்து வந்தவர்கள் என்று கூறுகிறார்.
தமிழ்நாட்டின் கிராமப்புறத்தில், மிகவும் வறிய தலித் குடும்பத்தில் பிறந்த அனிதா, சிறுவயதிலேயே தனது தாயை இழந்து விட்டார்; அவரது தந்தை ஒரு கூலித் தொழிலாளி. இத்துனை உள்ளார்ந்த சார்புகளை யும் மீறி, பள்ளித் தேர்வுகளில் 1200க்கு 1176 எடுத்து முதல் 0.3 சதவீதத்தில் தேர்ச்சி பெற அனிதாவினால் முடிந்தது. நீட் இல்லாது போயிருந்தால், அவரது பள்ளி மதிப்பெண்கள் கொண்டே, தமிழ்நாட்டின் தலை சிறந்த மருத்துவக் கல்லூரியொன்றில் படித்து, தனது சமூகத்தில் முதல் மருத்துவராக வந்திருப்பார். நீட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அனிதாவை தடுத்தது அவரது திறனின்மையா அல்லது வாய்ப்புகள், வளங்கள் மற்றும் நேரப் பற்றாக்குறையா? கண்டிப்பாக அது நேர, வள மற்றும் வாய்ப்புகள் பற்றாக்குறையே. தனது கனவை நோக்கி முன்னேறும் வாய்ப்பை அவருக்கு அளித்திருந்தால், பயிற்சி நிலையத்தின் உதவி கொண்டு நீட் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றவரை விட சிறப்பாக செயலாற்றும் நிலையில் அனிதா இருந்தி ருப்பார். ஆனால், நீட் தேர்வு கொண்டு நாம் அனிதாவிற்கு மட்டுமல்லாது ஒரு முழு சமுதாயத்தின் இலட்சியத்திற்கே துரோகம் இழைத்திருக்கிறோம். நீட் தொடர்பான தற்கொலைகள், பதற்றம் காரணமான வையன்று; அவை இலட்சியம் மற்றும் நம்பிக்கை பறிக்கப்படுவதன் விளைவாக நிகழ்பவை. இதனா லேயே, பெரும்பாலான நீட் இறப்புகள் கிராமப்புற மற்றும் விளிம்புநிலை பின்புலம் கொண்டவர்களி டையே நிகழ்கின்றன.
உலகில் குறைந்து வரும் நுழைவுத் தேர்வு சார்பு
நீட் தேர்வின் தொடர்ச்சி தமிழ்நாட்டில் வழக்க மாக உருவாவதை விட நகர்ப்புறத்திலிருந்து அளவிற் கதிகமான மருத்துவர்களை உருவாக்கி, கிராமப் புறத்தில் மருத்துவர்களுக்கான பற்றாக்குறைக்கு இட்டுச் செல்லும், மேலும், நீட் ஆயிரக்கணக்கான கிராமப்புற, விளிம்புநிலை மாணவர்களின் கனவு களையும் சிதைக்கும்.
கூட்டாட்சிக்கெதிரான நீட்
தமிழ்நாடு இந்திய மாநிலங்களின் சுகாதார விளைவுகளின் தரவரிசையில், தொடர்ந்து முதல் 3 இடங்களில் இருந்து வருகிறது. தமிழ் நாடு, மக்கள் தொகைக்கு அதிகமான மருத்துவர்கள் இருக்கும் மாநிலமாக மட்டுமல்லாமல், மருத்துவர்களின் சிறந்த இடஞ்சார்ந்த நியமனப் பகிர்வு [spatial distribution] உடைய மாநிலமாகவும் உள்ளது. இவை நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்தல், சாதி அடிப்படை/இட ஒதுக்கீடு (கிராமப்புற/அரசுப் பள்ளி மாணவர்க ளுக்கான இட ஒதுக்கீடு) மற்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் மருத்துவப் பல்கலைக்கழகங்கள் தொ டங்குவது போன்ற தலையீடுகளினால் சாதித்தவை. அதுவும், தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை, இந்தியாவின் மருத்துவச் சுற்றுலா மையமாக விளங்கு கிறது. இதுபோன்று சுகாதாரத் துறையில் பொறாமைப் படக் கூடிய அளவிற்கான முன்னேற்றத்தைக் கண்டுள்ள மாநிலம், ஒன்றிய அரசினால் அதன் வெற்றி கரமான முன்னேற்ற மாதிரியிலிருந்து விலகுமாறு நிர்பந்திக்கப்படவேண்டும்?
மாறாக, தமிழ்நாடு இந்தியாவிற்கான முன்மாதிரி யாக ஆக்கப்பட்டு, ஒன்றிய அரசு தமிழ்நாடு மாதிரி யை பிற மாநிலங்கள் பின்பற்றுமாறு பரிந்துரைக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடுகள் போன்ற பன்முகத்தன்மை கொண்டநாடு இந்தியா; மாநிலங்களுக்கிடையிலான முன்னேற்ற நிலைகளில் பெரும் வேறுபாடு உள்ளது. உதாரணமாக, தமிழ்நாட்டில், ஜார்க்கண்டை விட 32 மடங்கு மக்கள் தொகைக்கு அதிக மருத்துவர்கள் இருக்கிறார்கள். மாநிலங்களிடையே இத்தகைய வேறு பாடுகள் நிலவும்போது, ஒன்றிய அரசு இத்தகைய பன்முகத்தன்மைவாய்ந்த நாட்டிற்கு எவ்வாறு ஒரே சேர்க்கை வழிமுறையை உருவாக்க முயற்சிக்க முடியும்? பொதுச் சுகாதாரம் மாநிலப் பட்டியலிலும், கல்வி ஒருங்கியல் பட்டியலிலும் இருக்கும் நிலையில், தமிழ் நாடு அரசு சட்டசபையில் இயற்றிய சட்டத்தினை குடியர சுத் தலைவர் பாராட்டி அதற்கு தனது ஒப்புதலையும் தருவதே நியாயம். தமிழ்நாட்டில் நீட் தேர்வு இனியும் தொடர்வது, நீதியைக் கேலிக்கூத்தாக்கி, கூட்டாட்சி முறையை அவமதிப்பதாகும்.