articles

img

மோடி அரசு 11 ஆண்டுகளாக நாட்டை பாழ்படுத்தியுள்ளது - க.கனகராஜ்

மோடி அரசு 11 ஆண்டுகளாக நாட்டை பாழ்படுத்தியுள்ளது - க.கனகராஜ்

“2014-ல் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான ஒன்றிய அரசு மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வெறுப்பு அரசியலை வளர்ப்பதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயன்றது” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் கட்சியின் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தையொட்டி நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் ஞாயிறன்று தெரிவித்தார். வெளியுறவுக் கொள்கையில் மோடி அரசின் தோல்வி “பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது எந்த நாடும் நமக்கு ஆதரவாக பேசவில்லை. நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு, இலங்கை, ஆப்கானிஸ்தான் என நம்மை சுற்றியுள்ள அண்டை நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இலங்கையில் இந்தியாவைச் சேர்ந்த 102 மீனவர்கள் சிறையில் உள்ளனர். 210 படகுகளை அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்” என்று அவர் சுட்டிக்காட்டினார். எல்லைப் பாதுகாப்பு கேள்விக்குறியானது “ஏப்ரல் 12-ல் நடந்த தீவிரவாத தாக்குதலில் இந்தியாவிற்குள் 200 கிமீ தூரம் உள்ளே நுழைந்து தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் எல்லைப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது” என்று அவர் வேதனை தெரிவித்தார். வானளாவிய விலைவாசி உயர்வு “இந்திய ரூபாயின் மதிப்பு மிகப் பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்களின் விலை உயர்வு விண்ணைத் தொடுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. காஸ் சிலிண்டர் விலை ரூ.900 அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது” என்று அவர் குற்றம்சாட்டினார். லட்சக்கணக்கான வேலையிடங்கள் காலியாக! “ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் லட்சக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ரயில்வேயில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் உள்ளன. ராணுவத்திலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான காலி பணியிடங்கள் உள்ளன. பொதுத்துறை வங்கியில் முன்பு 13 லட்சம் நிரந்தர பணியாளர்கள் இருந்தனர். இப்போது 9 லட்சம் நிரந்தர பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். பல பணியிடங்கள் ஒப்பந்த முறை மற்றும் அவுட்சோர்சிங் முறையில் நிரப்பப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கு அநீதி “நெல்லுக்கு உரிய விலையை ஒன்றிய அரசு கொடுக்க மறுக்கிறது. இடுபொருட்கள் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. வேலை நாட்களும் குறைக்கப்பட்டுவிட்டது” என்று அவர் சுட்டிக்காட்டினார். மொழித் திணிப்பும் கூட்டாட்சி சிதைப்பும் “இந்தி, சமஸ்கிருத மொழித் திணிப்பில் மோடி அரசு மூர்க்கமாக செயல்படுகிறது. கூட்டாட்சித் தத்துவத்தை சிதைக்கும் வகையில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பேரிடர் கால நிதி, ஜிஎஸ்டி வரி நிலுவைத் தொகை, கல்வி நிதி ஆகியவற்றை ஒன்றிய அரசு தர மறுக்கிறது” என்று அவர் விமர்சித்தார். கொரோனா சாவுகளை மறைத்த அரசு “கொரோனா காலத்தில் 20 லட்சம் சாவுகளை ஒன்றிய அரசு குறைத்துக் காட்டியுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அரசை பொறுத்தவரை துறைகள் தோறும் வெளிப்படைத் தன்மை இல்லை. பாசிசப் பாதையில் செல்லும் பாஜக அரசு நாட்டை 11 ஆண்டு காலம் பாழ்படுத்தியுள்ளது” என்று அவர் கடுமையாக விமர்சித்தார். தமிழக அரசுக்கான கோரிக்கைகள் தமிழக அரசு குறித்து பேசிய கனகராஜ், “வீட்டு சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை கட்டண உயர்வை கைவிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. மாதம்தோறும் மின் கணக்கீடு நடத்தப்பட வேண்டும். தனியார் துறையிலும் இட ஒதுக்கீட்டை அமலாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி ஆணவ படுகொலைக்கு சட்டம் இயற்ற வேண்டும். பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். பேட்டியின்போது மாநில செயற்குழு உறுப்பினர் க.சுவாமிநாதன், மாவட்ட செயலாளர் க.ஸ்ரீராம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மோகன், எம்.சுடலைராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.