ஏடுபுகழ் கொண்டதுநம் நாடு-அது
எண்ணற்ற மொழிவழங்கும் வீடு-
தினம் பாடுபுகழ் பண்பாடு கலைகள் -
இவை பயிலுகின்ற பன்முகத்தின் விலைகள்!
போர்முகத்தில் விடுதலையின் காற்று-
தியாகப் பொலிவுடனே பெற்றதையேப் போற்று
-மத வேர்முகத்தில் ஒற்றுமைக்கு இடையூறு
-அதை வேரறுக்க வேண்டியதை நீகூறு!
ஏழைகளை ஏமாற்றும் ஆட்சி-கார்ப்பரேட்
ஏற்றம்பெற அள்ளித்தரும் காட்சி-
மதப் பீழைகளை அரங்கேற்றும் கட்சி-ஒற்றுமையைப்
பின்னுக்குத் தள்ளிவிடும் சூழ்ச்சி! வெங்காயம்
என்பதொன்றிய அரசு! -தோல்
உறித்திடின் ஏதுமற்ற தரிசு!-மாநிலம் பங்கிடின்
என்னவாகும் நாடு-அது
பலநூறு சுக்காகும் கூடு! கடவுள்மதம்
இவர்கள்தனிச் சொத்தா?-அதில்
கலகம்செயும் வேலைதான்
சத்தா!-மதக் கடவுளிலும்
வேற்றுமையைக் காட்டும்- உண்மைக்
கடவுளையே அறியாமல் முட்டும்!
கருணையிலா ஆட்சியதை ஒழித்திடு! -
மக்கள் கவலையைக் காணுமாட்சி எழுப்பிடு! -
நாட்டை அருள்நயந்த சன்மார்க்கர் ஆளட்டும்!-உயிர்
அத்துணையும் பேதமற்று வாழட்டும்!