articles

img

மன்னர் கால செங்கோல் மக்களாட்சியில் எதற்கு? - மதுக்கூர் இராமலிங்கம்

பழங்குடியின பெண்ணான இந்தியாவின் முதல் குடிமகள் திரௌபதி முர்மு அவர்களை புறக்கணித்துவிட்டு, மகாத்மா காந்தி படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட சாவர்க்கர் பிறந்தநாளில் இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க இருப்பது கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.  குடியரசுத் தலைவர்தான் புதிய கட்டடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒட்டு மொத்தமாக வலியுறுத்தின. இந்திய அரச மைப்புச் சட்டம் பிரிவு 79இல் ஒன்றிய அரசுக்கு ஒரு நாடாளுமன்றம் இருக்கும். அது குடியரசுத் தலைவர் மற்றும் இரு அவைகளை கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன்படி நாடாளுமன்றத் தின் தலைவர் குடியரசுத் தலைவரே ஆவார். அத னால்தான் நாடாளுமன்ற கூட்டத் தொடர் துவங்கும் போது இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியர சுத் தலைவர் உரையாற்றுகிறார். 

ஆனால் புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டபோதும் அப்போதைய குடியர சுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் புறக்கணிக்கப் பட்டார். இப்போது திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலை வரையே அழைக்காமல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சனா தன கருத்தியலையும், வெறுப்பு அரசியலையும் பரப்பிய சாவர்க்கர் பிறந்த நாளில் அந்த கருத்திய லின் வாரிசாக விளங்குகிற பிரதமர் மோடி அதை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது நாடு முழு வதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் நாடாளுமன்ற அமைப்பையே ஏற்காதவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள். ஜனாதிபதி ஆட்சி முறை போன்று ஒற்றை ஆட்சி முறை வேண்டு மென்பவர்கள்.  குடியரசுத் தலைவரை புறக்கணிப்பதைக் கண்டித்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உட்பட 19 கட்சி கள் கூட்டாக நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக் கணிப்பதாக கூட்டாக அறிவித்துள்ளன. பிஆர்எஸ்-சும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.  ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  சாவர்க்கர் பிறந்தநாளில் மோடிதான் நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பார். இதில் எந்த மாற்ற மும் இல்லை என்று ஆணவம் காட்டுகிறார். 

அமித்ஷா உருட்டு

இதில் ஒரு புது உருட்டாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகில் சோழர் கால செங்கோலை நிறுவப் போவதாக அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். சோழர் கால செங்கோல் இவர்களிடம் எப்படி வந்தது என்று கேட்டால் அதற்கு ஒரு கதை சொல்கிறார்கள்.  இந்தியத் திருநாடு விடுதலை பெற்றபோது அந்நியரிடமிருந்து இந்தியர்கள் கைக்கு அதிகாரம் மாறுவதை குறிக்க என்ன செய்யலாம் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து அப்போதைய பிரதமர் நேரு, ராஜாஜியிடம் ஆலோசனை கேட்டாராம். சோழர் ஆட்சிக் காலத்தில் செங்கோல் பரிமாற்றம் செய்தது போல இப்போது செய்யலாம் என்று ராஜாஜி ஆலோ சனை கூறினாராம். 

இந்திய விடுதலை என்பது மன்னராட்சிக் காலம் போல இரண்டு மன்னர்களுக்கு இடையில் நடந்த அதிகார மாற்றம் அல்ல. மாறாக, லட்சக்கணக்கா னோர் ரத்தம் சிந்தி, தூக்கு மேடை ஏறி துப்பாக்கிக்  குண்டுகளை நெஞ்சில் தாங்கி பெற்ற விடுதலை அது.  இதை பிரதிபலிக்கும் வகையில் விடுதலைத் திருநாள் அமைந்திருக்க வேண்டும். ஆனால் ‘சக்கரவர்த்தி திருமகன்’ எழுதிய ராஜாஜியின் மூளையில் இத்தகைய ஆலோசனைகள் உருவாகியிருக்க வாய்ப்பில்லை. அவர் செங்கோலை கைமாற்றிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். இதை அப்போதைய பிரதமர் நேரு  ஏன் ஏற்றார்? என்றும் தெரியவில்லை.  செங்கோல் ஏற்பாடு செய்யும் பொறுப்பை ராஜாஜி யிடமே நேரு ஒப்படைத்தாராம். அவர் அப்போதைய திருவாவடுதுறை ஆதீனத்தை தொடர்பு கொள்ள, சைவச் சின்னம் பொறித்த செங்கோல் ஒன்றை ஏற்பாடு செய்து கொடுத்து தன்னுடைய ஆதீனத்திலி ருந்து ஆதீன கட்டளை தம்பிரான் ஒருவரையும் அனுப்பி வைத்தாராம். 

சோழர் செங்கோலா?  உம்மிடி பங்காரு செங்கோலா?

இந்த செங்கோலுக்கும் சோழர் காலத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மாறாக, சைவ சமயத்தை பெரிதும் சார்ந்து நின்ற சோழர் கால செங்கோலை மாதிரியாகக் கொண்டு சென்னையில் நகைக்கடை வைத்திருந்த உம்மிடி பங்காரு செட்டி நகைக்கடை யினர் இந்த செங்கோலை செய்து கொடுத்துள்ளனர். நகைக்கடையில் செய்யப்பட்டுள்ள செங்கோல் மாதிரி தான் இது. ஆனால் அமித்ஷா ஏதோ ராஜராஜ சோழரிட மிருந்து இந்த செங்கோல் பெறப்பட்டது போல பில்டப் கொடுக்கிறார்.  உம்மிடி பங்காரு நகைக் கடையில் செய்யப்பட்ட செங்கோலை திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் இந்தியாவில் கடைசி வைசிராய் மவுண்ட் பேட்டன் கையில் கொடுத்து வாங்கி, அதன் பின் புனித நீர் தெளித்து பிரதமர் நேருவிடம் திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் தரப்பட்டதாம்.  இந்த செங்கோல் கைமாறும் போது எந்த பாடலை இசைப்பது என்று கேட்டதற்கு திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் திருஞான சம்பந்தர் பாடிய ‘கோளறு பதிக’த்தை  பாடுக என்றாராம். இதன்படி கோளறு பதிகமான “வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்” என்பது துவங்கி “அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே” என்ற வரிகள் வரை பாடப்பட்டு செங்கோல் பிரதமர் நேருவிடம் தரப்பட்டதாம். 

இதற்கான ஆலோசனைகளை திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஏன் கேட்டார்கள் என்று தெரியவில்லை. அவர் ஒன்றும் விடுதலைப் போராட்ட வீரர் அல்ல. மக்கள் ரத்தம் சிந்தி போராடிக் கொண்டிருந்தபோது நெய்யும், பருப்பும் சேர்த்து ஒரு குறையும் இல்லாமல் உண்டு களித்தவர்தான் ஆதீனம். ஆனால் ராஜாஜி சாமர்த்தி யமாக இவரை கோர்த்துவிட்டிருக்கிறார்.  சிவபெருமானை வணங்குவோர்களுக்கு கோள் எனப்படும் கிரகங்களின் பெயர்ச்சியால் எந்த துன்பமும் ஏற்படாது என்பதுதான் இந்த பதிகத்தில் உள்ள பதினொரு பாடல்களின் பொருள். அதிலும் இந்த பதிகத்தை ஓதுபவர்கள் வானுலகில் ஆட்சி செய்வார்கள். இது எனது ஆணை என ஞான சம்பந்தர் கூறுவது போலத்தான் பாடல் அமைந்துள்ளது. இந்தி யாவில் பெரும் போராட்டத்திற்கு பிறகு பெற்ற விடு தலையை ஏதோ கோவில் குடமுழுக்கு போல மாற்றி யிருக்கிறார்கள். 

இது என்ன சைவ சமய ஆட்சியா?

இந்தியாவில் எத்தனையோ சமயங்கள் உண்டு.  இந்த செங்கோல் கூட ஒட்டுமொத்த இந்து மதத்தை யும் குறிக்கவில்லை. அதில் ஒரு பிரிவான சைவத்தை மட்டுமே குறிக்கிறது. இதை வைணவர்கள் கூட ஏற்க மாட்டார்கள். இந்த செங்கோலில் இடம் பெற்றுள்ள நந்தி உருவம் நீதியை குறிக்கிறது என்கிறார் அமித்ஷா. திருபுன்கூர் கோவிலுக்கு சிவபெருமானை தரிசிக்கச் சென்ற நந்தனாருக்கு நந்தி எத்தகைய நீதியை  வழங்கியது என்பதை புராணங்களை படித்தால் தெரிந்து கொள்ளலாம். கோவிலுக்கு வெளியே நிறுத் தப்பட்ட நந்தனாருக்கு சிவன் சிலை தெரியவில்லை யாம். அவர் கண்ணீர் விட சிவபெருமானே ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்’ என்று கூற நந்தி சற்று நகர்ந்ததாம். இதனால்தான் திருபுன்கூர் கோவிலில் நந்தி சிலை இப்போதும் சற்று விலகியிருக்கிறதாம்.  புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் இருபது ஆதீன கர்த்தர்களும் பங்கேற்கப் போகிறார்களாம். இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கிய சிற்பிக ளின் வாரிசுகளா இவர்கள்? இந்த செங்கோலை பிரதமர் மோடி நிறுவுவதற்கு முன்னால் கங்கையின் புனித நீரால் கழுவப் போகிறார்களாம். அப்போது பாடப்பட்ட கோளறுபதிகத்தை இப்போதும் பாடப் போகிறார்களாம். 

எதிர்க்கட்சிகள் யாரும் இந்த நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை. குடியரசுத் தலைவருக்கும் அழைப் பில்லை. ஆனால் மடாதிபதிகளை கூட்டி வைத்து புனித நீராட்டு விழா நடக்கப் போகிறது.  முதல் சுதந்திர திருநாளின் போது இசை மேதை டி.கே.பட்டம்மாள் மகாகவி பாரதியார் எழுதிய ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்’ என்று. தன் மணிக்குரலால் தேசத்தின் விடுதலையை அறிவித்தார். அந்த பாடல் பாஜகவினருக்கு நினைவுக்கு வரவில்லை. மாறாக, அகமதாபாத் அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோலை புதுப்பித்து எடுத்து வருகிறார்கள். மன்னர் மானியம் ஒழிக்கப்படக்கூடாது என்று போரா டிய ஜனசங்கத்தின் வாரிசுகள் மன்னராட்சிக் காலத்து வழமைகளை மீண்டும் கொண்டு வர முயல் கிறார்கள்.  கண்ணகிக்கு தவறான தீர்ப்பு வழங்கிய பாண்டிய நெடுஞ்செழியன் ‘மன்பதை காக்கும் தென்புலக் காவல் என் முதல் பிழைத்தது’ என்று வருந்தி நீதிக்காக உயிர்விட்டதாகவும், தன்னுடைய செங்கோல் வளைந்து விட்டது என்று புலம்பியதாகவும் சிலப்பதி காரம் பேசும். செங்கோல் மரபு என்பது சோழர்க ளுக்கு மட்டுமே உடையது அல்ல, அன்றைய பாண்டிய,  சேர  மன்னர்கள் அனைவருக்கும் உரியது. எனவே இது  சோழ பாரம்பரியம் என்று உருட்டுவது பொருத்த மல்ல, மேலும் பாண்டிய நெடுஞ்செழியன் போலவா பாஜகவினர் நீதி வலுவாமல் ஆட்சி செய்கின்றனர். நீதியை ரப்பர் பேண்ட் போல தங்கள் இஷ்டத்திற்கு வளைப்பவர்கள் இவர்கள்.

செங்கோன்மை என்ற ஒரு அதிகாரத்தையே வள்ளு வர் படைத்துள்ளார். அதில் ஒரு குறள்,  ‘இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை முறை காக்கும் முட்டாச்செயின்’ என்பதாகும். முறை தவறாமல் மன்னன் செங்கோல் செலுத்தி வந்தால் அதுவே அவனை காத்து நிற்கும் என்பது இதன் பொருள். இது தமக்கு பொருந்துமா என்பதை பிரதமர் நரேந்திர மோடி ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும். இக்குறளின் பொருள் என்னவென்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வேண்டுமானால் கேட்டுத் தெரிந்து கொள்ளட்டும்.

வள்ளுவர் ஏந்திய செங்கோல்

மன்னர்க்கு இலக்கணமாக இறைமாட்சி அதி காரத்தில் ‘கொடைஅளி, செங்கோல், குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க்கு ஒளி’ என்கிறார் வள்ளுவர். அதாவது இலவசமாக தானம் செய்தல், அடுத்தவர் கருத்துக்கு மதிப்பு அளித்தல், சிறந்த அர சாட்சி, மக்களை காத்தல் இவை நான்கும் மன்னர்க்கு  அழகு என்கிறார். இந்த நான்கில் ஒன்றேனும் பொருந் துமா இன்றைய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு?  மதச்சார்பற்ற அரசியல் சாசனத்தின் சின்னம்தான் நாடாளுமன்றம். அதை ஒரு மதச்சின்னமாக மாற்ற  முயல்வதன் முன்னோட்டம்தான் இப்போது நடக்கும்  அத்துமீறல்களும், அராஜகங்களும். இப்போது தூக்கி நிறுத்தப்பட வேண்டியது பழைய இத்துப்போன மன்னர் கால செங்கோலே அல்ல. மதச்சார்பற்ற அரசியல் சாசன விழுமியங்களைத்தான். ஆட்சியாளர்கள் சனாதன ஆட்சிக் காலத்திற்கு வரலாற்றுச் சக்கரத்தை திருப்ப துடிக்கலாம். ஆனால் மக்களாட்சி மாண்பு கொண்ட நவீன இந்தியா அதைப் புறந்தள்ளும்.