articles

img

இரு சமுதாயங்களின் வாழ்வும் பொருளும் இருண்ட நிலைதானே! - என்.சுப்பிரமணியன்

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாட்டில் விவசாயிகள் மற்றும் விவசாய கூலி தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க தொழில் வளர்ச்சி இதுவரை ஏற்படவில்லை, மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் தலித் மக்கள் 32 சதவீதம் ஆவர். பிற்படுத்தப் பட்ட மக்களும் ஏறக்குறைய சம அளவு சதவீதத்தில் உள்ளனர். இந்த இரு சமுதாய மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதார மும்  இருண்ட நிலையில்தான் உள்ளது, பெரும்பாலும் இரு சமுதாய மக்களும் விவசாயம் மற்றும் விவசாயக் கூலி வேலையையே நம்பி உள்ளனர். அதனால் இம்மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே தான் இதுவரை இருந்து வருகிறது என்பதே திண்ணமான உண்மை. இப்படி வாழ்வாதரமே கேள்விக் குறியாக வாழ்ந்து வரும் நிலையில் அவர்களுக்குள் பல்வேறு இன்னல்களையும், சாதிப்பாகுபாட்யும் சில புல்லுருவிகளும், சாதி ஆதிக்க சக்திகளும் திட்டமிட்டு உருவாக்குகின்றனர். தலித் மக்கள் மீது வன்மத்துடன் தாக்குதல் நடத்தும் நிலைக்கு தூபம் போட்டு சூழ்ச்சி வலையில் ஒரு சமூகத்தினரை  வீழ்த்தி, தாங்கள் வெற்றி பெற்று விட்டதாக நினைத்து கொண்டு சாதிய கொடுமைகளை ஆங்காங்கே கொழுந்து விட்டு எரிய வைத்து, இரு சமூக மக்களையும் மோதவிட்டு, அதில் குளிர் காய்ந்து வருகின்றனர். இந்த இரு சமூக பாகுபாடு–மோதல்களால் இரு சமுதாய மக்களும் வாழ்வாதாரம் இழந்து, பொருளாதார நிலையில் தாழ்ந்தே இருக்கின்றனர். 

குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் தலித் மக்கள் மாற்று சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் காலங்காலமாக பொதுப் பாதைகளில் நடப்பதற்கு அனுமதிப்பதில்லை; செருப்பு அணிய அனுமதியில்லை; பொதுக் குளம், ஏரிகளில் நீர் எடுப்பதற்கும், குளிப்பதற்கும் அனுமதிப்பதில்லை; பொது கோயில்களில் உள்ளே சென்று சாமி தரிசனம் செய்வதற்கு உள்ளே விடாத நிலை தற்போது வரை நீடித்து வருகிறது, குடிதண்ணீரில் மலம் கலக்கும் அவல நிலையும் ஏற்பட்டு உள்ளது.இதுமாதிரியான சாதியப் பாகுபாட்டால் ஆங்காங்கே இருதரப்பு மோதல் ஏற்பட்டு பிரச்சனைகள் அபாய நிலைக்குச் சென்று, இரு தரப்பு மக்களும் அமைதி இழந்து வருகின்றனர். 

காலில் செருப்பு அணியும் போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு, மே 12 அன்று விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், மயிலம் அருகே சின்ன தெற்கும் கிராமத்தில் ஒரு சிறுவன் தங்கள் பகுதியில் செருப்பு காலுடன் சைக்கிளில் சென்றுள்ளதை பொறுத்துக் கொள்ளாமல் சாதி ஆதிக்க  சக்திகள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். அதனை எதிர்த்து விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2-ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனைத்து தரப்பு மக்களை திரட்டி, தற்போது சிபிஎம் மாநில செயலாளராக இருக்கும் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அப்பகுதியில் காலில் செருப்பு அணிந்து சைக்கிள் ஓட்டும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது, அதன் விளைவாக அந்த பிரச்சனை அப்பகுதியில் சுமூக நிலைக்கு வந்தது.  ஆனாலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களில் இன்றளவும் தலித் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதும், அவர்கள் மீது சாதி ஆதிக்க சக்திகள்  காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து எதிர்த்து, தலித் மக்களுக்கு ஆதரவாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி தலித் மக்களுக்கான உரிமை மற்றும் நியாயங்களை பெற்றுத் தந்து வருகிறோம்.ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் பாண்டூர், காங்கேயனூர் போன்று பல்வேறு இடங்களில் ஏற்பட்ட தீண்டாமைப் பிரச்சனைகள் போல் மாவட்டத்தில் எண்ணற்ற பிரச்சனைகளை முன்னெடுத்து வெற்றி பெற்று உள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

பேருந்து நிழற்குடையிலும் சாதி

இதேபோன்று விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், ராம்பாக்கம் கிராமத்தில் தலித் மக்கள் வசிக்கும் பகுதி ஒரு சில கிலோமீட்டர் தள்ளி உள்ளது. அவர்கள் வெளி ஊர்களுக்கு செல்வதற்கு பேருந்து ஏற வேண்டுமானால் சாலை அமைந்துள்ள சாதி ஆதிக்கப் பகுதிக்குள் வந்து, வெய்யில், மழை என்று பாராமல் கால்கடுக்க நின்று பேருந்து ஏறவேண்டும், இந்நிலை மாற அந்த பகுதியில் தலித் மக்கள் அமர்ந்து பேருந்து ஏறும் வகையில், அரசு நிர்வாகம் பேருந்து நிழற் குடை அமைக்க முன்வந்தது, இதனை சாதி ஆதிக்க சக்திகள் தடுத்து எதிர்த்து வருகின்றனர். அதனால் அந்த திட்டம் கைவிடப்பட இருந்த நிலையில் சிபிஎம் கட்சி தலையிட்டு மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றது, ஆனாலும் அது அரசு ஏனோ கிடப்பில் போட்டு உள்ளது என்பது வேடிக்கையான செயல்,  சமீபத்தில் விழுப்புரம் அருகே மேல்பாதி கிராமத்தில் சாதி பாகுபாட்டினர் பகுதியில் உள்ள இந்து

அறநிலையத்துறைக்குச் சொந்தமான திரௌபதி அம்மன் கோயிலில் நடந்த திருவிழாவின் போது அதே பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் சாமி கும்பிட உள்ளே சென்றுவிட்டார் என்பதால் அவரையும், அவரது குடும்பத்தினரையும் சாதி ஆதிக்கச் சக்திகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கினர். இன்றளவும் அவர்கள் விட்டுச் கொடுக்காததால், தலித் மக்கள் கோயில் உள்ளே செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. அந்தப் பிரச்சனையில் அரசு தலையிட்டு சுமூக நிலை ஏற்படுத்தாமல்,  அந்த இரு சமுதாய மக்கள் மத்தியில் இன்றளவும் அமைதி மற்றும் பாதுகாப்பு அற்ற நிலை நீடித்து வருகிறது. இந்தப் பிரச்சனையில் மார்க்சிட் கம்யூனிஸ்ட் கட்சி தலையிட்டு இரு சமூதாய மக்களின் ஒற்றுமையை பாதுகாக்கவும், தலித் மக்கள் கோயில் உள்ளே செல்லவும் தற்போது வரை போராட்டம் நடத்தி வருகிறது.  இனிவரும் காலங்களில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி நாட்டின் எந்த மூலையிலும் பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் சாதிய பாகுபாட்டால் பாதிக்கப்பட கூடாது; அதன் மூலம் பாதுகாப்பு, அமைதி, வாழ்வாதாரம் இழந்து விடாமல் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என்றும், சாதிய புல்லுருவிகளால் இரு சமுதாய மக்களிடையே சாதி பாகுபாடு மோதல்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும்; பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் உரிமைகள் நிலை நாட்டப்பட வேண்டும். இந்த நிலை மாற வேண்டுமானால், நாட்டின் சமூகக் கட்டமைப்பை மாற்றுவதற்கான நீண்ட போராட்டத்தில் ஒன்றுபட்டு கரம் கோர்ப்போம்!