ஷாஜாதி : அரசை கதிகலங்க வைத்த வீரமங்கை எஸ்.வாலண்டினா
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் இரயில்வே தொழிலாளி குடும்பத்தில் பிறந்த ஷாஜாதி, இந்திய விடுதலைப் போராட்டத்திலும், தொழிற்சங்க இயக்கத்திலும் துணிச்சலுடன் பங்கேற்ற வீரமங்கை. பெண்கள் அரசியல் இயக்கங்களில் கலந்து கொள்வது அரிதான காலத்தில், காவல்துறை அடக்குமுறைகளையும், சிறைக் கொட்டடிகளில் உண்ணாவிரதப் போராட்டத்தையும் துணிவுடன் எதிர்கொண்டவர். ரயில் மறியலும் காவல்துறை திகைப்பும் பிரிட்டிஷ் அரசு 300க்கும் மேற்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களை மூடுவதற்கான ஏற்பாடுகளை செய்தபோது, ஷாஜாதி பெண்களை திரட்டி ரயில் மறியல் போராட்டம் ஒன்றை அறிவித்தார். தந்திரமாக திட்டமிட்டு, பெண்களை ஆங்காங்கே தலைமறைவாக நிற்கச் சொல்லி, ரயில் வந்தபோது சமிக்ஞை கொடுத்தார்.
150க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென போராட்டத்தில் குதித்ததால் காவல்துறை திகைத்து நின்றது. 1942 முதல் 1943 வரை நடைபெற்ற அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்ட ஷாஜாதி கைது செய்யப்பட்டார். பூரண சுதந்திரத்திற்கான குரல் பல்வேறு அமைப்புகள் விடுதலைக்காகப் போராடினாலும், கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே “பூரண சுதந்திரம்” என்ற கோரிக்கையை முன்வைத்து போராடியது. இக்கோரிக்கை ஷாஜாதியை வலுவாக ஈர்த்தது. விடுதலைப் போராட்டத்தில் எம்.கல்யாண சுந்தரம், ஏ.கே.கோபாலன், கே.அனந்தநம்பியார், எம்.ஆர்.வெங்கட்ராமன், கே.பி.ஜானகிஅம்மாள், பாப்பா உமாநாத் போன்ற தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது. 1944-இல் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். தலைமறைவு வாழ்க்கையும் சிறை வாசமும் 1948-இல் கட்சி தடை செய்யப்பட்டபோது, ஷாஜாதி தலைமறைவாக இருந்து, கடிதங்கள், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து கட்சிப் பணிகளை தொடர்ந்தார். 1948 முதல் 1950 வரை இரண்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும், 1950 முதல் 1952 வரை இரண்டு ஆண்டுகள் சிறை வாழ்க்கையும் அனுபவித்தார். சிறையில் சந்தித்த மணலூர் மணியம்மா, “ரயில்வே நிர்வாகத்தையே கதிகலங்க வைத்த ஷாஜாதியா நீ?” என வியந்து கேட்டார். சிறைச்சாலை சீர்திருத்தப் போராட்டம் சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்கு தனியான குளியல் அறை இல்லாததையும், குழந்தைகளை பராமரிப்பதற்கு முறையான ஏற்பாடுகள் இல்லாததையும் எதிர்த்து மணலூர் மணியம்மாவுடன் இணைந்து போராடினார்.
ஷாஜாதியின் 16 நாள் உண்ணாவிரதத்தால் தனி குளியலறையும், குழந்தைகளுக்கு நல்ல உணவும் பராமரிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. கம்யூனிஸ்ட் காதலும் தியாக வாழ்க்கையும் தோழர் சி.கோவிந்தராஜன் என்ற இளம் கம்யூனிஸ்ட்டை காதலித்து, 1952 நவம்பர் 30-இல் எம்.கல்யாணசுந்தரம் தலைமையில் திருமணம் செய்தார். குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்த போதும், கட்சித் தலைவர்களின் முயற்சியால் அவரது ஒரு அண்ணனின் ஆதரவு கிடைத்தது. இருவரும் முழுநேர கட்சி ஊழியர்களாக வாழ்க்கையைத் தொடங்கி, பல நாட்கள் வெறும் கடலையும் தண்ணீரும் சாப்பிட்டு உறங்கிய நாட்களும் உண்டு. மாதர் சங்கத்தின் முன்னோடி 1973-இல் திண்டுக்கல்லில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தொடங்கப்பட்டபோதும், திருவாரூரில் நடந்த முதல் மாநில மாநாட்டிலும் அமைப்பு தலைவர்களில் ஒருவராக இருந்தார். 1981-இல் சென்னையில் நடைபெற்ற மாதர் சங்க அகில இந்திய முதல் மாநாட்டில் சுசிலா கோபாலன், அகல்யா ரங்கனேகர் ஆகியோருடன் தலைமைக்குழுவில் இடம் பெற்றார். போராட்டங்களும் பெண்களுக்கான குரலும் கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கிராமம் கிராமமாகச் சென்று, தலித் மக்கள் வீடுகளில் தங்கி பணியாற்றினார்.
1992-இல் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் நடந்த பாலியல் வன்முறை-கொலை வழக்கிலும், முத்தாண்டிகுப்பம் காவல் நிலைய பெண் பாலியல் வன்முறை வழக்கிலும் தொடர் போராட்டங்களை நடத்தினார். நெய்வேலியில் வரதட்சணை எதிர்ப்பு மாநாட்டையும் நடத்தினார். வாழ்க்கையின் இறுதிக் காலம் 2004 முதல் நினைவு மறதி நோயால் பாதிக்கப்பட்ட ஷாஜாதிக்கு, கணவர் சி.கோவிந்தராஜன் தினமும் செய்தித்தாள் படித்துக் காட்டி விவாதித்தார். 2008 ஜனவரி 26-இல் சி.கோவிந்தராஜன் இறந்த பத்து நாட்களுக்குள், பிப்ரவரி 5-இல் 80 வயதில் ஷாஜாதியும் இறந்தார். வாழ்நாள் முழுவதும் மங்காத அன்போடு வாழ்ந்த அவர்கள், இறப்பிலும் பிரியாத உறவைக் காட்டினர். எத்தனை இடர்பாடுகள், அடக்குமுறைகள் வந்த போதும் அடிபணியாமல் நெஞ்சுறுதியோடு போராடிய ஷாஜாதியின் வாழ்க்கை, இன்றைய தலைமுறைக்கு ஒரு மகத்தான படிப்பினையாக நிற்கிறது. இரயில்வே நிர்வாகத்தையே நடுங்க வைத்த அந்த வீரமங்கையின் போராட்ட வரலாறு என்றென்றும் நம் நெஞ்சங்களில் நிலைத்திருக்கும்!