articles

img

விபிசியின் நுட்பமான அவதானிப்பு -

தோழர் வி.பி.சிந்தன் நாகை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டதை நினைவில் கொண்டிருப்போர் எண்ணிக்கை, இன்றைய தினம் குறைவாகத்தான் இருக்கக்கூடும்.  1967ல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திமுக தலைமையில் உருவான கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட விபிசி, கிட்டத்தட்ட பன்னிரண்டாயிரத்துக்கும் குறைவான வாக்குகளில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியுற்றார்.  இத்தோல்வி சென்னை நகரத் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதமாகவே அமைந்து விட்டது.  தனிநபர் வழிபாட்டின் கூற்றாக இதைக் கருதலாகாது. விபிசி வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றிருப்பின், நாடாளுமன்ற ஜனநாயகச் செயல்பாடுகளில் சிறப்பானதொரு பங்களிப்பினை கொண்டவராக விளங்கியிருக்கக் கூடுமென்பதோடு, அவரது பணிகளும் அதன் தொடர்ச்சியாகவே அமைந்திருக்கக்கூடும் அல்லது மாறியிருக்கக்கூடும்.   ஏற்கனவே நாற்பதுகளில் துவங்கி நகர தொழிற்சங்க இயக்கத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பங்காற்றலை கொண்டிருந்தாலும், இத்தோல்விக்குப் பிந்திய காலப்பகுதியில் நகரத் தொழிலாளர்களின் இயக்கத்தில் அவர் மையம் கொண்டதோடு,  உறுதிமிக்க  ஸ்தாபனப் பிடிப்பு கொண்ட பல்வேறு தொழிற்சங்க  தலைவர்களை, மாணவர் போராளிகளை உருவாக்கி ஊக்குவித்தார்.  நகர்ப்புற தொழிலாளிகள் மட்டுமின்றி மாதர், மாணவர் அமைப்பினர், மத்தியதர வர்க்க ஊழியர்கள் ஆகியோரின் ஈர்ப்பினை பெற்றவராகவே அவர் திகழ்ந்தார்.  மாற்று இயக்கத்தினரும் விபிசி என்ன சொல்கிறார் என்று கூர்ந்து கேட்பதை பல தருணங்களில் கண்டதுண்டு.  

1974 ரயில்வே பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக பல்வேறு வாயிற்கூட்டங்களில் மட்டுமின்றி அயன்புரம், பெரம்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர் போன்ற பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களிலும் அரங்கக் கூட்டங்களிலும் அவர் நிகழ்த்திய உரை ஒரு உந்து சக்தியாகவே மாறியதை உணர்ந்திருக்கிறேன். வெவ்வேறு மாறுபட்ட அரங்குகளில் வசீகரமான உரை நிகழ்த்தக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடியவர்களில் ஒருவராகவே அவர் விளங்கினார். எந்தப் பிரச்சனையை கையாண்டாலும் அதன் அடித்தளத்தை நுட்பமாக ஆய்வுக்குட்படுத்திக் கொண்ட பின்னரே அதில் கால்பதிக்கக் கூடியவர் அவர்.   1984இல் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றதும் அவரது பணிகள் புதிய பரிணாமத்தைப் பெற்றன. பகுதிப் பணிகளில் வெறும் அரசியல் கட்சிகளின் ஈடுபாட்டோடு நில்லாமல், குடியிருப்போர் அமைப்புகளை இணைப்பதில் ஆர்வமும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார். இது மக்களின் நேரடி பங்களிப்பை ஊக்குவிக்கும் பாங்கினைக் கொண்டது என்பதை பின்னரே உணர முடிந்தது.   வில்லிவாக்கத்தில் பொன்னான் கிணறு தெருவும், தாழங்கிணறு தெருவும் நீர்நிலைகளை பெயரில் கொண்டிருப்பதோடு வற்றாத கிணறுகளைக் கொண்டதாகவும் இருந்தது. பாலியம்மன் கோயில் அருகில் பேராழி எனும் கிணறொன்றும் இருந்து வந்தது. இது தவிர ஓரிரு தெருக்களின் மையத்தில் பெருங்கிணறுகளும் இருந்தன. இக்கிணறுகள் யாவுமே முன்னாளில் இப்பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வந்ததன் மிச்ச சொச்சங்களாகவே விளங்கின. குறிப்பாக திரு.வி.க குறுக்குத் தெருவொன்றில் உள்ள கிணற்று நீரும் பாலியம்மன் கோயிலையடுத்த பேராழி நீரும் சுவைமிக்கதாகவே இருந்ததை இன்றும் பலர் அறிவர்.  

எழுபதுகளில் கடுமையான நீர்ப் பஞ்சம் நகரில் தலைவிரித்தாடிய தருணத்தில் ஐசிஎஃப் தொழிற்சாலையே நாலைந்து நாட்கள் மூடப்பட்டது.  இன்றைய தினம் போல் குடிநீர் லாரிகளும் பெருமளவில் ஓடாத நிலையில், இக்கிணறுகளே பகுதி மக்களின் குடிநீர்த் தேவையை ஓரளவு பூர்த்தி செய்து வந்தன. இக்கிணறுகளையொட்டிய பகுதிகளில் வீட்டு மனைகளை கொண்டிருக்கக் கூடியோர், தங்கள் மனைகளை சட்டத்திற்கு விரோதமாக விரிவாக்கம் செய்யும்வகையில் இக்கிணறுகள் பொதுமக்களுக்கு தொந்தரவாக இருப்பதாகவும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதாகவும் எனவே இவற்றை மூடிட வேண்டும் என்று பல்வேறு தரப்புகளில் முறையீடு செய்து வந்தனர்.  ஏற்கனவே பேராழியும், தாழங்கிணறும் இதே போன்று பகாசுர நிலப்பசிக்கு பலியாகியது.  இந்த நோக்கில்தான் விபிசியிடமும் மனுவொன்று அளிக்கப்பட்டது.   விபிசியின் ஆலோசனையின் பேரில் இக்கிணற்றை தூர்க்கும் முயற்சிகளுக்கு எதிராக மக்களிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்துப் பிரச்சாரத்தை துவக்கியது. இதன் வீச்சை உணர்ந்த வெவ்வேறு கட்சியினரும் கட்சி சார்பற்றோரும் அணி திரண்டனர்.  அன்றைய தினம் சென்னை மாநகராட்சியின் ஆணையராக சாந்தா ஷீலா நாயர் பொறுப்பிலிருந்தார். ஆணையரும் விபிசியும் இக்கிணறுகள் உள்ள பகுதிகளுக்கு நேரடியாக வந்திருந்து மக்களிடம் இக்கிணறுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை விரிவாக விளக்கிப் பேசினர்.  வற்றாத ஊற்றினை கொண்டிருக்கக்கூடிய கிணறுகளை மூடுவது சுலபம் என்றாலும், இன்னொரு தருணத்தில் புதிய நீர் நிலைகளை உருவாக்குவது என்பது சுலபமல்ல என்பதை சலிக்காமல் மக்களிடையே விபிசி எடுத்துக் கூறினார். குறிப்பாக திருவிக குறுக்குத் தெருவில் உள்ள கிணற்றை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை விபிசி மட்டுமின்றி சாந்தா ஷீலா நாயரும் திரளாக கூடியிருந்த மக்களிடையே வலியுறுத்திப் பேசினர்.  மக்கள் உணரும் வகையில் சுற்றுச் சூழலோடு இணைந்த நமது வாழ்முறையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக பேச்சு இருந்தது.  

ஓரிரு வாரங்களுக்குப் பின்னர் வேறொரு நிகழ்ச்சியில் விபிசியை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.  உடனிருந்த தோழர் ஒருவர் கிணறு விவகாரத்தை எழுப்பினார். ‘என்ன ஆச்சு?’ என்றார் விபிசி. ‘‘கிணற்றை மூடுவதை வெற்றிகரமாக நீங்கள் தடுத்து விட்டீர்கள்!’’ என்றார் தோழர்.  விபிசி அவருக்கே உரிய பாணியில் புன்முறுவல் செய்தார். ‘‘என்ன சிரிக்கறீங்களே?’’ என்றார் தோழர். ‘‘நிலைமையை மதிப்பீடு செய்வதில் உணர்ச்சிக் கொந்தளிப்பு இருக்கலாகாது. இருந்தாலும் கிணற்றை பாதுகாப்பது பகுதியிலுள்ள அனைவரின் கடமை என்பதை புரியவைக்க வேண்டிய அரசியல்  கடமையும் உங்களுக்கெல்லாம் இருக்கிறது.  கிணறு முடிஞ்சுடும், ஆனாலும் வேலை தொடரணும்’’ விபிசி முடித்துக் கொண்டார்.   கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாகிவிட்டது. பொன்னான் கிணறு தூர்க்கப்பட்டு பொன்மாரியம்மன் கோயில் அங்கே நிர்மாணிக்கப்பட்டு அன்றாடம் பூசை புனஸ்காரம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.  அதே தருணத்தில் அத்தெரு மக்கள் குடி தண்ணீருக்கு மட்டுமின்றி பொன்மாரியம்மனின் அன்றாட அபிஷேகத்திற்கும் பக்திப் பரவசத்தோடு மெட்ரோ லாரியை எதிர்நோக்கி ஆலாய்ப் பறப்பதை அன்றாடம் பார்த்து வருகையில்தான் விபிசியின் கூற்றை உணர முடிகிறது. சீயாளம் தெரு மையத்தில் உள்ள கிணறொன்றும் பின்னா ளில்  தூர்க்கப்பட்டு அருகாமையில் திருச்சபையொன்றும் செயல்பட்டுவந்தது. அதன் பெயர் ஜீவ ஊற்று.  

- ராமச்சந்திர வைத்தியநாத்