வளர்ச்சியின் நாயகன் (விகாஷ் புருஷ்) எனும் மோடியின் முகமூடி கிழிந்து தொங்கு கிறது. இரட்டை எஞ்சின் ஆட்சியில் இரண்டு எஞ்சின்களும் பழுதாகி மோடி சர்க்காரின் ஓட்டை வண்டி நடுவழியில் நிற்கிறது. ஆனாலும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் வசனத்தை போல, மன் கீ பாத்தில் அவரது வாய் மட்டும் காது வரை நீள்கிறது. ஆட்சிக்கு வரும் போது வாக்குறுதிகளாக சொன்னதை யெல்லாம் மறந்து விட்டு தற்போது மக்க ளுக்கு வாய்க்கரிசி போடுகிற வேலையை கச்சிதமாக செய்கிறார் பிரதமர் மோடி. அனைத்துத் துறைகளிலும் தோற்றுப் போன மோடியின், அவரது ஆட்சியின் அவலங்களின் பட்டியல் நீளமானது. அவற்றை ஒவ்வொருவருக்கும் எடுத்துச் செல்வோம்.
வேலைவாய்ப்பும் மோடியின் மோசடியும்
ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன் என சத்தியம் செய்தார். ஆனால் இப்போது பிரதம மந்திரி ரோஜ்கார் மேளா எனும் பெயரால் அடுத்த பதினெட்டு மாதங்களில் பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்கிறார். கோடி கோடி என கூவிவிட்டு இந்திய இளைஞர்களை தெருக்கோடியில் நிறுத்தியதே அவரது சாதனையாகும். ஒன்றிய அரசு துறைக ளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியி டங்களை நிரப்பாமல் அனைத்தையும் ஒப்பந்தத் தொழிலாளர் எனும் முறைக்கு மாற்றுவதே அவரது திட்டமாகும். அக்னி பாத் அதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை என்பது உச்சத்தில் இருப்பதாக ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பொரு ளாதார கண்காணிப்பு மையமே (CMIE) தரவுகளை வெளியிட்டுள்ளது. புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கா மல், இருக்கும் வேலைகளையும் ஒழித்துக் கட்டி விட்டு, உலக பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது இந்தியா என ஜி20 இல் கதை விடுபவர்கள் உண்மையில் 420 தான். (ஏமாற்றுக்காரர்கள்)
42 ஆக சுருங்கிய 100
கிராமப்புற வேலை உறுதித் திட்டத் தின் படி குறைந்தது 100 நாட்களாக வேலை அளிக்கப்பட வேண்டும். அதை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் எனும் கோரிக்கை வலுத்து வரும் சூழலில் 100 நாட்களையும் குறைத்து வெறும் 42 நாட்க ளுக்கு மட்டுமே வேலை கிடைக்கும் வகை யில் இத்திட்டம் கடந்த சில ஆண்டுக ளாகவே சுருக்கப்பட்டு விட்டது. இந்நிலை யில் வரும் நிதியாண்டில் வேலை அளிக்கப்படும் நாட்களை மேலும் எவ்வாறு குறைக்கலாம் என்பதற்கான குறுக்கு வழியை ஆராய்ந்து கொண்டி ருக்கிறார் திருவாளர் மோடி. ஆண்டுக்கு இரண்டு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு அவசியம் எனும் நிலைமையில் வெறும் 60,000 கோடி நிதியை ஒதுக்கி விட்டு ஒதுங்கி நிற்கிறது ஒன்றிய அரசு. கிராமப் புற ஏழை உழைப்பாளிகளின் பசியைப் பற்றி கவலைப்பட மாட்டாராம். ஆனால் இவரை ஏழைத்தாயின் மகன் என ஊர் கொண்டாட வேண்டுமாம். உண்மையில் ஏழைத்தாயின் மகனல்ல; கார்ப்பரேட் நிறுவனங்களின் தத்துப்பிள்ளையே இவர்.
ஏறும் விலைவாசியை கண்டுகொள்ளாத சுகவாசி
நாடு நாடாகச் செல்லும் மோடியின் விமானங்களுக்கு போட்டியாக வானில் பறக்கிறது விலைவாசி உயர்வு. அத்தி யாவசியப் பொருட்கள் உட்பட அனைத் தின் விலையும் நாளும் நாளும் அதி கரிக்கிறது. பிரதமராக மோடி நாடாளுமன் றத்திற்குள் கால் எடுத்து வைத்த நாளில் ரூ.400/- ஆக இருந்த சமையல் எரிவாயு உருளையின் விலை தற்போது ரூ.1200/- ஆக அதிகரித்துள்ளது. அதா வது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.100/- விலையேற்றம் என எட்டு ஆண்டு களில் ரூ.800/- உயர்வு. பெட்ரோல், டீசல் விலையும் அவரது ஆட்சியில் இரு மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையில் ஒன்றிய அரசின் வரியாக கடந்த எட்டு ஆண்டுக ளில் கிடைத்தது ரூ.27 லட்சம் கோடி . ஜி.எஸ்.டி வரியின் மூலம் கிடைத்தது இதுவரை ரூ.13 லட்சம் கோடி. இந்த இரண்டையும் மட்டும் கூட்டினால் ரூ.40 லட்சம் கோடி வருகிறது. அதாவது ஒவ்வொரு இந்தியரின் பணத்திலிருந்தும் இதுவரை ரூ.28,000/- தொகை வரி எனும் பெயரால் கறாராக வசூலிக்கப்பட்டி ருக்கிறது. ஆனால் விலைவாசி அதி கரிப்பிற்கு ஏற்ப தொழிலாளர்களின் ஊதி யத்தில் உயர்வு ஏதும் அளிக்கப்பட வில்லை. குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000/- கிடைக்காமல் ஒருவரால் குறைந்தபட்ச தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஆனால் தற்போது அளிக்கப்பட்டு வரும் தேசிய சராசரி ஊதியம் (National Floor wage) என்பது வெறும் 5340/- ஆக மட்டுமே உள்ளது. குறைந்தபட்சகூலிச் சட்டத்தை (Minimum Wages act 1948) அமலாக்க வேண்டும் என்பதில் மோடிக்கும், ஒன்றிய அரசுக்கும் விருப்பமில்லை.
வளமானவர்களின் வசந்தமும், எளியவர்களின் துயரமும்
வலுத்தவனே வாழ்வான் என்பதை போல வளமானவர்களுக்கே வாழ்க்கை என்பதே மோடி ராஜ்ஜியத்தின் சாதனை. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான பொருளாதார இடைவெளி விகிதம் கடந்த சில ஆண்டுகளாகவே அதிக ரித்துக் கொண்டே வருகிறது. ஒரு சத வீதம் பெரும் பணக்காரர்களிடம் 40 சத வீதம் வளங்கள் குவிந்துள்ளன. முதல் பத்து பணக்காரர்களின் சொத்து மட்டும் ரூ.27.5 லட்சம் கோடி. அதில் அதானி யின் பங்கு மட்டும் 16 லட்சம் கோடி. 2014 இல் டாலர் பில்லியனர்கள், அதாவது சுமார் 8300 கோடி சொத்து உள்ளவர்கள் எண்ணிக்கை வெறும் 40. தற்போது அது 166 ஆக அதிகரித்துள்ளது. மறுபுறத்தில் வறுமை தாண்டவமாடுகிறது. அனூப் சத்யபதி கமிட்டி அறிக்கை யின்படி, நாளொன்றுக்கு ரூ.375 க்கும் குறைவான ஊதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து தற்போது அது 23 கோடியாக இருப்பதா கவும், இவர்கள் வறுமை நிலையில் வாடுவ தாகவும் விபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளில் 4 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் தரவுகளின்படி ஒவ்வொரு நாளும் 112 கூலித் தொழிலா ளர்களும், 34 வேலை கிடைக்காதவர்க ளும் தற்கொலையை நாடுவதாக நிலைமை மோசமடைந்து வருகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் மோடி அரசின் பொருளாதாரக் கொள்கை கள் பரமபத விளையாட்டில் உள்ளதை போல பணக்காரர்களுக்கு ஏணியாகவும், ஏழைகளுக்கு பாம்பாகவும் உள்ளது.
அதானி + மோடி = ‘மோதானி’ சர்க்கார்
அண்மையில் ஒன்றிய அரசு புதிய திட்டமொன்றை அறிவித்திருக்கிறது. அதாவது பயன்பாட்டில் இல்லாத நிலங்களை தனியாருக்கு விற்பதற்கு ஏது வாக ஒரு ”நிலவங்கி” உருவாக்கப்படு மாம். அதன் மூலம் கண்டறியப்படும் நிலங்கள் ஏலம் விடப்படுமாம். கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை செய்வதற்கு பதிலாக நாட்டையே மொத்தமாக குத்தகைக்கு விடுவதற்கான வழியை கண்டுபிடித்து விட்டார்கள். மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது 2006ஆம் ஆண்டில் 15,946 ஏக்கர் நிலங்களை ஒரு ச.அடி ரூ.1.32 எனும் விலையில் அதானிக்கு தாரை வார்த்தி ருக்கிறார். அதை முன் அனுபவமாகக் கொண்டு தற்போது தேசத்தை விற்க துணிந்திருக்கிறார். ஏற்கனவே பொ துத்துறை நிறுவனங்களை சீரழித்தா யிற்று. விமான நிலையங்களையும், துறை முகங்களையும் தனது நண்பர்களுக்கு சீதனமாக கொடுத்தாகிவிட்டது. வங்கி களில் உள்ள மக்கள் சேமிப்பை கடன்க ளாக அளித்து விட்டு அவற்றை வராக் கடன்களாக அறிவித்தாகி விட்டது. மிச்ச மிருப்பது நிலம் தானே. அவற்றையும் கொடுத்து விட்டால் வந்த வேலை முடிந்து விடுமல்லவா. அதை கச்சிதமாக செய்து கொண்டிருக்கிறார் மோடி. பொதுவாக மக்களாட்சியை பற்றி குறிப்பிடும் போது மக்களால் மக்க ளுக்காக மக்களே நடத்துவதாகும் என குறிப்பிடுவர். ஆனால் தற்போது நடப்ப தோ, பாஜகவால் மோடி தலைமையில் கார்ப்பரேட்டுகளுக்காக நடத்தப்படும் ஆட்சியாகும். பெரும் கார்ப்பரேட் கம்பெ னிகளுக்கு சாதகமாகவே, தொழிலாளர் நலச்சட்டங்களை நீர்த்துப் போகச் செய்வது, வேளாண் சட்டத்திருத்தம் எனும் பெயரால் விவசாயத்தை சீரழிப்பது ஆகிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
இத்தகையதொரு மோசமான ஆட்சியை தூக்கியெறிய வேண்டும் என்பதே நம் ஒவ்வொருவரின் இலக்கும் கடமையும் ஆகும். ஏதேச்சதிகார, இந்துத்துவ அடிப்படைவாத, மக்கள் விரோத அரசை தூக்கியெறிவோம் எனும் முழக்கத்தோடு வருகிற ஏப்ரல் 5 இல் பல லட்சம் தொழிலாளர்களும், விவசாயி களும், விவசாயத் தொழிலாளர்களும் தில்லியை முற்றுகையிடுகின்றனர். அவர்கள் ஒன்றிணைந்து நின்று மோடியே வெளியேறு எனும் ஒற்றை முழக்கத்தை உரத்து எழுப்பவிருக்கின்றனர். அந்த ஒலி பேரொலியாக மாறட்டும். தேசமெங் கும் எதிரொலிக்கட்டும். மோடியே வெளி யேறு. இது எங்கள் தேசம்.