கல்கியின் “தியாக பூமி” தொடர்கதை ஆனந்த விகடனில் 1939-ல் வெளிவந்தது. அப்போதே அது படமாக்கப்பட்டும் வந்தது. தொடர் முடிந்த அடுத்த வாரமே-அந்த ஆண்டு மே 20- படமும் வெளியானது. தொடர்கதைக்கு ஓவியங்கள் போடாமல் படக் காட்சிகள் போடப்பட்டன. கதையும் விரும்பிப் படிக்கப்பட்டது, படமும் நன்கு ஓடியது. வெளியான போது கல்கியின் அரசியல்குருவாகிய ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது மெட்ராஸ் மாகாணத்தில். இரண்டாம் உலகப்போர் துவங்கியதால் அந்த அரசு ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஆங்கிலேய ஆட்சியாளர்கள் படத்தை தடை செய்துவிட்டனர். காரணம், படத்தில் சுதந்திரப் போராட்டக் கனல் இருந்தது. ஒரு சினிமாவைக் கண்டு பயந்தவர்கள்தாம் ஏகாதிபத்தியவாதிகள்!
கதை நடக்கும் காலகட்டத்தை கதைப்போக்கில் குறிப்பவர் கல்கி. இது 1918 சித்திரையில் துவங்கி 1930கள் துவக்கத்தில், காந்தி தலைமையிலான காங்கிரஸ் தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை துவக்கிய காலத்தில் முடிகிறது. இந்தக் கதையின் நாயகி சாவித்திரி. அவள் கணவன் நாயகன் அல்ல, எதிர்நாயகன். கதையின் மையப் பாத்திரம் சாவித்திரி யின் தகப்பனாராகிய சம்பு சாஸ்திரிகள். அவர் வழி யாகவே காவிரி படுகையின் நிலப்பிரபுத்துவ கிராமப்புற வாழ்வு நம் முன் விரிகிறது. “தஞ்சாவூர் ஜில்லாவில் குடமுருட்டி பாசனத்தில் உள்ளது நெடுங்கரைக் கிராமம்”. கிராமம் என்றால் அக்கிரகாரம், குடியானவத்தெரு,சேரி என்று மூன்று பகுதிகள். இந்த கிராமத்தில் பத்து வேலி நிலத்துக்குச் சொந்தக்காரர் சம்பு சாஸ்திரிகள். அவருடைய “பட்டிக்காரன் நல்லான்”. அதாவது அவருக்காக விவசாயத்தை மேலாண்மை செய்கிற குடியானவன். நிலத்தில் உழுது உழைப்பவர்கள் சேரி மக்கள். அக்கிரகாரத்தில் உள்ள இதர வீட்டுக்காரர்களுக்கு இவ்வளவு இல்லாவிட்டாலும் சொந்த நிலமும், அவரவருக்கென பட்டிக்காரனும் உண்டு. இந்த சுகஜீவனக்காரர்கள் சீட்டுக் கச்சேரியில் தீவிரமாக இருக்கிறார்கள். ஊடே சம்பு சாஸ்திரிகளின் குடும்பம் இழுபடுகிறது. “இந்த வருஷம் கல்யாணம் பண்ணாமற்போனா அப்புறம் பெண்ணை ஆத்திலே வைச்சுக்க வேண்டியதுதான்” என்று சம்பு சாஸ்திரிகளின் மகள் சாவித்திரி தலை உருளுகிறது. அந்தக் காலத்தில் பிராமணப் பெண்பிள்ளைகளுக்கு 12 வயதுக்குள்ளேயே மணமுடித்துவிட வேண்டும். அதற்கு மேலே போனால், ருதுவடைந்து விட்டால் மணக்க மாட்டார்கள். பால்ய விவாகமே விதி. வருண, இனத் தூய்மைக்காக இந்த ஏற்பாடு. அலைந்துதிரிந்து ஒரு பி ஏ படித்த மாப்பிள்ளையை நிச்சயித்தார் சம்பு. சம்பந்தி அம்மாளோ இவரிடமிருந்து ஏகமாய் பணம் பிடுங்கினாள். அந்தக் காலத்து ஐந்துநாள் திருமணத்தில் அக்கிரகாரமே ஆளுக்குக் கொஞ்சமாய் பிடுங்கித் தின்றது. மிராசுதார்கள் உழவர்களைச் சுரண்டி னார்கள் என்றால், திருமணத்தைச் சாக்கிட்டு மிராசு களுக்குள்ளேயும் சுரண்டல் நடந்தது. பெண்ணும் ஆணும் சந்தைப் பொருளாய் விலை பேசப்பட்டனர்.
அக்கிரகாரத்திற்குள் தீண்டாதவங்களா..?
இவர்கள் மத்தியில் சம்பு இளகிய மனம் கொண்ட வர். ஒரு நாள் பெருவெள்ளத்தில் குடமுருட்டி உடைப்பெ டுத்துப் பெருக, சேரி மூழ்கியது. அவர்கள் மீது இரக்கம் கொண்டு தன் மாட்டுக் கொட்டகையில் தங்க இடம் கொடுத்தார். அவ்வளவுதான் அக்கிரகாரத்தில் ஒரு கோஷ்டி வந்து “தீண்டாதவங்களை எப்படிங்காணும் அக்கிர காரத்திற்குள் விட்டீர்” என்று துளைத்தெடுத்தனர். இந்து வாகிய சம்பு சாஸ்திரிகளை மிரட்டிய இவர்கள் யார்? இவர்கள்தாம் அன்று சனாதனிகள் எனப்பட்டனர்,
அதாவது கறாரான சாதியவாதிகள்.
வெறும் பேச்சு அல்ல. அதன் செயல்ரூபம் படுபயங்க ரம். “ஊரார் அவரைச் சாதிப் பிரஷ்டம் செய்தார்கள். அவர் வீட்டுக்கு நீர் நெருப்புக் கொடுக்கக் கூடாதென்றும், அவர் வீட்டில் நடக்கும் சுபாசுப காரியங்களுக்குப் போகக் கூடாதென்றும் கட்டுப்பாடு செய்தார்கள்”. கிராம வாழ்வில் இதனினும் வேறுகொடுமை இருக்க முடியாது. சனாதனத்தின் ஒர் அம்சமாகிய தீண்டாமை தனது கோரமுகம் காட்டியது. 1938-39ல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் மெட்ராஸ் மாகாணத்தில் “ஹரிஜன சேவா” இயக்கத்தையும், அதன் ஒரு பகுதியாக அவர்களின் ஆலய நுழைவுப் போராட்டத்தை யும் நடத்தி வந்தது. அந்தச் சூழலில் அக்கிரகாரத்திற்குள் அவர்களை அனுமதித்ததாகக் கதை புனைந்தது இலக்கியத்திலும் அதைத் துணிவோடு எடுத்து வந்ததைக் காட்டுகிறது. 1939 ஜுலையில் மதுரை மீனாட்சி கோயி லில் ஆலயப் பிரவேசம் வெற்றிகரமாக நடந்ததும் குறிக்கத் தக்கது. கலை இலக்கியத்தின் சமூகத் தூண்டுதல் மற்றும் பயன்பாட்டிற்கு இதுவொரு நல்ல எடுத்துக்காட்டு.
புருஷனுக்கு ஜீவனாம்சம் தருகிறேன்
பிறந்தகத்திலும் அந்தச் சின்னப் பெண் சாவித்திரி நன்றாக வாழவில்லை, புகுந்தகத்திலும் அதே நிலை. நிறைமாத கர்ப்பிணியாய் விரட்டியடிக்கப்பட்டாள். சென்னையில் ஒரு மருத்துவமனையில் பிரசவம் நடந்தது. அந்த அபலை நினைத்தாள்: “கல்யாணம் செய்ததற்குப் பதில் என்னைப் படிக்க வைத்து இதோ இந்த ஆஸ்பத்திரியில் உள்ள நர்ஸுகளைப் போல் என்னையும் ஒரு நர்ஸாகச் செய்திருக்கப் படாதா..? சுயமாகச் சம்பாதித்து ஜீவனம் செய்வதைப் போல் உண்டா? பெண் ஜன்மம் எடுத்தவர்களில் இவர்கள் அல்லவா பாக்கியசாலிகள்?” மாதர் விடுதலை உறுதியாவது அவர்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெறுவதில் உள்ளது என்று அந்த1930 களிலேயே சொன்னவர் கம்யூனிஸ்டு சிங்காரவேலர். அந்தச் சிந்தனை இங்கே கச்சிதமாக வெளிப்பட்டுள்ளது. இதன் உச்சம் சாவித்திரி நீதிமன்றத்தில் வாதிடுவது. இப்போது அவள் தனது அத்தையின் சொத்து மூலமாகப் பெரிய பணக்காரி. அவள் தன்னோடு குடும்பம் நடத்த வேண்டும் என்று கணவன் ஸ்ரீதரன் வழக்கு தொடுத்திருப்பான். அவன் அந்தக் காலத்தில் தன்னைப் படுத்திய பாட்டை யெல்லாம் நினைத்தவள் அதற்கு மறுத்து, தனக்கு விவாக ரத்து வேண்டும், அதற்காக “புருஷனுக்கு ஜீவனாம்சம் தருகிறேன்” என்று கூறுவாள். அந்தக் கால இந்து சட்டத்தின்படி விவாகம் ஒரு புனிதச் சடங்கு என்பதால் ரத்து என்பதே கிடையாது. மனைவி கண வனுக்கு சாகும்வரை மனைவி, ஆனால் அவன் எத்தனை மனைவிகளையும் கொண்டிருக்கலாம்! அந்தக் கொடுமை யான காலத்தில்தான் சாவித்திரி இப்படி வெகுண்டெழு வாள். இங்கே அவளது பெயரைக் கவனியுங்கள் புரு ஷனின் உயிரை மீட்க எமனோடு போராடியவள்! அந்தக் கண வன் தரங்கெட்டவனாக இருந்ததால் விவாக ரத்து வேண்டும் எனும் புதுயுக சாவித்திரி! இந்து சட்டத்தை இந்துப் பெண்களுக்கு நியாயம் வழங்கும் வகையில் திருத்த வேண்டும் என்று சட்ட அமைச்சர் அம்பேத்கர் முயன்ற போது அதைக் கடுமையாக எதிர்த்த வர்கள் ஆர்எஸ்எஸ் பரிவாரத்து சனாதனிகள். இது நடந்தது 1949-ல். ஆனால் அதற்கு பத்துஆண்டுகளுக்கு முன்பே இப்படி பெண்ணுரிமைக்காக தொடர்கதையும் சினிமாவும் தந்தவர் தமிழகத்து கல்கி!
காங்கிரசுக்கு வெளியே பெண்ணுரிமை
அவருள் ஏற்பட்ட இந்த தாக்கத்திற்கு காங்கிரசுக்கு வெளியே நடந்த பெண்ணுரிமைப் போராட்டம் ஒரு காரணம் என்பதை மறைக்கமல் இந்தக் கதையில் பதிவு செய்தி ருக்கிறார். “பெண்களுக்கு ஆண்களுடன் சமஉரிமை வேண்டும் என்ற கிளர்ச்சி ஆங்காங்கு நடந்து கொண்டு தான் இருந்தது...பாரதத் தாயின் புதல்விகளுக்கு வழிகாட்ட முன்வந்தவர்கள் ‘உங்கள் சுதந்திரத்துக்காகப் போரா டுங்கள்’, ‘ஆண்களுடன் சமஉரிமைக் காகச் சண்டை பிடி யுங்கள்’ என்றெல்லாம் உபதேசித்து வந்தார்கள்” என்று படைப்பாளி வாக்காகவே வருகிறது. இது பெரியாரின் சுயமரியாதை இயக்க நடவடிக்கைகளைக் குறிக்கிறது என ஊகிக்கலாம். ஆனால் பெண்ணுரிமைக்கு “புதிய ஸவரூபத்தைக் கொடுத்தவர் காந்தி மகான். சிறையில் சுதந்திரத்தைக் காணுங்கள், தாயின் அடிமைத்தனத்தை நீக்குங்கள் உங்கள் அடிமைத்தனம் தானே விலகிப் போகும் என்றார்” என்று தான் சார்ந்திருந்த காங்கிரசின் அரசியல் போராட்ட முன்னுரி மையை படைப்பில் எடுத்துரைத்தார். அதுவே தனது கதா நாயகி சாவித்திரியின் மனதில் அழுத்தமாக விழுந்தது என்றார். கதையில் இந்த காந்தியத்தை லாவகமாக இணைக்கி றார். அன்றைய சட்டப்படி கணவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னதும், அதிலிருந்து தப்பிக்க சுதந்திரப் போராட்டத்தில் குதித்து கைதாகிறாள் சாவித்திரி. பார்த்தால், கணவன் ஸ்ரீதரனும் அதே போலக் கைதாகி வருகிறான்! “அவர்களுடைய ஆத்மாக்கள் ஒன்றையொன்று மணந்து கொண்டன” என்று கதையை முடிக்கிறார் கல்கி. நடந்தது என்னவோ அதுதான். சுதந்திரத்திற்குப் பிறகு தான் 1952 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு தான், கம்யூனிஸ்டு கட்சி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி யாக அமர்ந்த பிறகுதான், 1955-56-ல்தான் புதிய இந்து திரு மணச் சட்டம் வந்தது. அதில்தான் இந்துப் பெண்ணுக்கு விவாக ரத்து உரிமை கிட்டியது, பலதார மணமும் தடை செய்யப்பட்டு அவள் நிம்மதி பெருமூச்சு விட்டாள். பெண் விடுதலையை மறைத்த சனாதன இருளை விலக்கி, வாசகர் நெஞ்சில் வெளிச்சம் பாய்ச்சிய கதைக்காரர் கல்கி.