மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ரவி திருப்பி அனுப்பியதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அதிரடியாக மீண்டும் அந்த மசோதாவை சட்ட மன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைத்த கையோடு, ஏப்.10 திங்களன்று, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க கால நிர்ணயம் செய்ய வலியுறுத்தும் தீர்மா னத்தை நிறைவேற்றியது. முற்பகலில் இப்படிப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், பிற்பகலில், தான் பல மாத காலமாக கிடப்பில் போட்டிருந்த ஆன் லைன் சூதாட்டத் தடை மசோதாவுக்கு வேறு வழி யின்றி ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிட்டி ருக்கிறார் ஆளுநர் ரவி. தமிழ்நாட்டின் மக்கள், மாநில அரசு, அரசியல் கட்சிகள் ஆகியவை இடைவிடாமல் உருவாக்கிய கடும் எதிர்ப்பு மற்றும் அரசியல் அழுத்தத்திற்கு அடிபணிந்தி ருக்கிறார் ஆளுநர் ரவி.
தொடர் அடாவடிகள்
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் - பாஜகவின் செயல்திட்டத்தை, ஆளுநர் பதவியின் அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு சூழ்ச்சிகரமாக நிறைவேற்ற தொடர்ந்து முயற்சித்து வருபவர்தான் ஆளுநர் ஆர்.என்.ரவி. இவரது அடாவடிகள் கடந்த பல மாதங்க ளாக மிகவும் தீவிரமடைந்துள்ளன. கோயம்புத்தூரில் நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் அரசியல் செய்ய முயற்சித்து கண்டிக்கப் பட்ட இவர், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தமிழ்நாட்டில் அரசியலில் மூக்கை நுழைத்து பாஜக ஊதுகுழலாகவே நடந்து கொண்டு வருகிறார். தமிழ்நாடு என்பதை மறுதலித்து, தமிழகம் என்று தான் அழைக்க வேண்டும் எனப் பேசி பெரும் சர்ச்சையை கிளப்பினார். தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட வரலாற்றையோ, தமிழ்நாடு அமைவ தற்காக நடைபெற்ற பிரம்மாண்டமான போராட்டங்கள் மற்றும் உயிர்த் தியாகங்களையோ, மொழிவழி தேசிய உரிமையையோ ஏற்காமல் முற்றாக புறம் தள்ளி, தமிழ்நாட்டையும், மக்களையும் இழிவுபடுத்தி னார். அதுமட்டுமல்ல; பொங்கல் விழா அழைப்பித ழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதிலாக தமிழக ஆளுநர் என்றே அச்சிட்டார். அழைப்பிதழில் தமிழ்நாடு அரசின் இலச்சினைக்கு பதிலாக ஒன்றிய அரசின் இலச்சினையை அச்சிட்டு அனுப்பினார். இதற்கு வலுவான கண்டனம் எழுந்தபின்னர், குடியரசுதின அழைப்பிதழில் அனைத்தையும் மாற்றினார். இது 2023 ஜனவரியில் நடந்தது.
அதே ஜனவரியில் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் துவங்கியபோது, அமைச்சரவை தயாரித்து, ஒப்புதல் அளித்த அறிக்கையில் தானடித்த மூப்பாக சில வாக்கியங்களை தவிர்த்தும், திரித்தும் வாசித்த ஆளுநர் அரசமைப்பு சட்டத்தையும் தார்மீக நெறிகளை யும் அப்பட்டமாக மீறினார். பெரியார், அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் கலைஞர் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்க ளையும் சுயமரியாதை, பல்லுயிர் ஓம்புதல், திராவிட மாடல், உள்ளடக்கிய வளர்ச்சி, பெண்ணுரிமை போன்ற தமிழ்நாடு அரசின் கொள்கைகள் குறித்த வாச கங்களையும் வாசிக்காமல் தவிர்த்தார். தமிழ்நாடு மாநிலம், தமிழ்நாடு அரசு ஆகிய - அரசமைப்பு சட்டத்தின் படி ஒப்புக்கொள்ளப்பட்ட பெயர்களையும் உச்சரிக்க மறுத்தார். இதன் மூலம் ஆளுநர் எனும் தனது கடமையிலிருந்தும், அரசமைப்புச் சட்ட வழி காட்டுதலிலிருந்தும் மீறினார். ஆளுநராக தொடர்வ தற்கான தார்மீக உரிமைகளை அவர் இழந்தார்.
சட்டமன்றத்தில் அராஜகம்
அதுமட்டுமல்ல, தமிழ்நாடு அமைச்சரவை தயாரித்த அறிக்கையை மறைத்தும், திரித்தும் அவர் வாசித்துக் கொண்டிருந்தபோது, முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்களும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் அமைதியாக கேட்டுக் கொண்டி ருந்தனர். அதைத் தொடர்ந்து, ஆளுநர் ரவி வாசித்த திரிக்கப்பட்ட உரைக்கு மாறாக, அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்த உரையையே சட்ட மன்றம் நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சர் முன்மொழிந்து, நிறைவேற்றப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆளுநர் ரவி, முதலமைச்சர் பேசத் துவங்கிய போது, அவை நாகரிகம் எதுவுமின்றி தன்னிச்சையாக வெளியேறிச் சென்று தமிழ்நாட்டின் சட்டமன்றத்தை இழிவுபடுத்தி னார். தேசிய கீதத்தையும் அவமதித்தார்.
மார்க்ஸ் மீது ஆத்திரம்
2023 பிப்ரவரி மாதத்தில் ஆளுநர் ரவி, ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது சம்பந்தமே இல்லாமல் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மாமேதை கார்ல் மார்க்சையும், மார்க்சிய தத்துவத்தையும் வாய்க்கு வந்தபடி அவதூறு பேசினார். மார்க்சிய தத்துவம் அந்நியத் தத்துவம் என்று இழிவுபடுத்தினார். மார்க்சியம் இந்தியாவை சிதைத்து விட்டது என்று ஏகடியம் பேசினார். மனித குல வரலாற்றில் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல், ஒடுக்குமுறைக் கொடுமைகளிலிருந்து உழைப்பாளி வர்க்கத்தை மீட்டு சுரண்டலற்ற பொதுவுடைமை சமூகத்தை அமைக்க வழிவகுக்கும் மார்க்சியத் தத்து வத்தை அடாவடித்தனமாக விமர்சித்ததன் மூலம் ஆளுநர் ரவி தான் ஆளும் வர்க்கத்தின் ஒரு ஏஜெண்ட் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தினார். அவரது கருத்து தமிழ்நாடு முழுவதும் இடதுசாரிக் கட்சிகளின் தோழர்கள் மட்டுமல்ல, அனைத்து முற்போக்கு, ஜன நாயக இயக்கங்களின் கண்டனத்தையும் ஈர்த்தது. மாமேதை மார்க்சும், மார்க்சியத் தத்துவமும் மனித குலத்தின் முழுமையான விடுதலைக்கு இன்றளவும் எப்படியெல்லாம் அடிப்படையாக இருந்து வரு கின்றன என்பதை பல்வேறு கட்சிகளின் தலை வர்களும், எழுத்தாளர்களும் அறிக்கை வாயிலாகவும், கட்டுரை வாயிலாகவும் விரிவாக எடுத்துரைத்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அன்று முதல் இன்று வரை ஆளுநர் ரவி எங்கு சென்றாலும் கருப்புக் கொடி காட்டி தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றது.
இதுபோன்ற கருத்துகள் மட்டுமல்ல, “ரிஷிகளா லும், சனாதன தர்மத்தாலும் உருவானதுதான் பாரதம்” என்ற கருத்து முதல் சங்க காலத்திலேயே இந்துத்துவா கருத்தாக்கம் உருவாகிவிட்டது; திருக்குறள் மொழிபெயர்ப்பில் ஜி.யு.போப் தனது கருத்துக் களை திணித்துவிட்டார் என்பது உள்பட ஆளுநர் ரவி வரம்பு மீறி, உண்மைகளை திரித்து தொடர்ந்து திட்டமிட்ட சர்ச்சைகளை கிளப்பி வருகிறார். ஆளுநர் என்பதற்கு அரசியல் சாசனம் வகுத்துள்ள பணிகளைச் செய்வதற்கு மாறாக, தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக போட்டி அரசி யல் நடத்தி வருகிறார்.
ஆன்லைன் சூதாட்ட மசோதா
ஆன்லைன் சூதாட்டத்தின் விளைவாக இதுவரை யிலும் தமிழ்நாட்டில் சுமார் 60 பேரின் உயிர்கள் பறி போயுள்ளன. இதை முன்னுணர்ந்து ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை ஒழுங்கு படுத்த ஆலோசனைகள் அளித்திட அமைக்கப்பட்ட நீதியரசர் கே.சந்துரு தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழ்நாடு அரசு, 2022 ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதைத் தொடர்ந்து 2022 அக்டோபரில் ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதா, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளு நரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. ஆளுநரிடம் நேரில் சந்தித்து மாநில அரசின் தரப்பில் தெளிவான விளக்கங்களும் தரப்பட்டன. ஆறுமாத காலம் அந்த மசோதாவை கிடப்பில் போட்ட ஆளுநர், 2023 மார்ச் 6 அன்று இப்படி ஒரு சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்து, மசோதாவை திருப்பி அனுப்பினார். முன்னதாக ஆன்லைன் சூதாட்டம் நடத்தும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து பேசியிருந்தார்கள் என்பது கவனிக்கத்தக்கது. ஆளுநரின் இந்தச் செயல் தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது. இந்த பிரச்சனை நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. அப்போது பதிலளித்த ஒன்றிய தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை அமைச்சர், ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றுவதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு எனத் தெரி வித்தார். இந்த நிலையில் மார்ச் 23 அன்று தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
இந்த மசோதா மட்டுமல்ல, தமிழ்நாடு சட்ட மன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டுள்ளார். இதுதொடர்பான விமர்சனங்கள் வலுத்து வந்த நிலையில், 2023 ஏப்ரல் 6 அன்று, குடிமைத் தேர்வு எழுதும் மாணவர்களிடையே உரையாற்றிய ஆளுநர், அரசு அனுப்பும் மசோதாக்களை கிடப்பில் போட்டாலே அதற்கு ஒப்புதல் இல்லை என்றுதான் அர்த்தம் என அடாவடியாகப் பேசினார். அதுமட்டு மல்ல, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் அந்நிய நாட்டு சக்திக ளின் கை இருப்பதாகவும் புதுச்சரடு ஒன்றை அவிழ்த்து விட்டார். இந்த இரண்டு கருத்துகளும் ஆளுநர் ரவியின் மிக மோசமான அடாவடித்தனத்தை அப்பட்ட மாக வெளிப்படுத்தின. அவர் எந்த வகையிலும் அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ள வரம்பில் நிற்கவில்லை. இந்த நிலையில், அவரது அராஜகக் கருத்துக்க ளுக்கு எதிராக ஏப்ரல் 12 அன்று சென்னையில் மாபெரும் போராட்டம் நடைபெற இருந்தது. இத்தகைய பின்னணியில்தான் தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எண்ணத்தின் வெளிப்பா டாக, மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுந ருக்கு கால நிர்ணயம் செய்யும் தீர்மானத்தை சட்ட மன்றம் ஏப்ரல் 10 அன்று நிறைவேற்றியது. இதனால் ஏற்பட்ட அரசியல் அழுத்தத்தின் பின்னணியில், வேறு வழியின்றி அவர் ஏப்ரல் 10 பிற்பகலில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த அறிவிப்பு வெளியானது. மக்களின் வெற்றி
மக்களின் வெற்றி
இந்த மசோதாவுக்கு அவர் ஒப்புதல் அளித்தி ருப்பது முழுக்க முழுக்க கடந்த பல மாத கால மாக தமிழ்நாட்டின் மக்களிடையேயும் அனைத்து மதச்சார்பற்ற முற்போக்கு ஜனநாயக அரசியல் இயக்கங்களிடையேயும் அவரது செயல்பாடுகளுக்கு எதிராகவும், ஆர்எஸ்எஸ்-பாஜக பின்புலத்தில் அவர் நிகழ்த்தி வரும் ஆதிக்க அரசியல் அட்டூழியங்களுக்கு எதிராகவும் எழுந்துள்ள ஆவேசத்திற்கு கிடைத்த வெற்றியே. தற்போது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா வுக்கு அளித்துள்ள ஒப்புதலை ஆறு மாதத்திற்கு முன்பே அளித்திருந்தால் அறுபது பேரின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆனால் அநியாயமாக அவர்களது உயிர் பறிபோக ஆளுநரின் அடாவடியான தாமதமே காரணமானது. இதுபோலத்தான் அனைத்து மசோதாக்களும் இவரது ஒப்புதல் கிடைக்காமல் வேறு வேறு விளைவுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இவரது இத்தகைய அரசியல் சாசன விரோத அணுகு முறையால் தமிழ்நாட்டின் மக்களும் அவர்களது நலன்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது ஆன்லைன் சூதாட்ட தடுப்பு மசோதா விவகாரத்தில் தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்பும் கொதிப்பும் மேலும் வலுவடைந்த பின்னணியிலேயே ஆளுநர் ரவி அடிபணிந்துள்ளார். எனினும் ஆளுநர் ரவியின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகள் இனியும் தொடரவே செய்யும். ஏனென்றால் அடிப்ப டையில் அவர் ஆர்எஸ்எஸ் -பாஜகவின் இந்துத்துவா அரசியலை தமிழ்நாட்டில் அரங்கேற்றி வருகிறார். எந்த விதத்திலும் அவர் ஆளுநராக தொடர்ந்து நீடிப்ப தற்கான அருகதை அற்றவர். எனவே அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.